19ஆம் நூற்றாண்டில் பெருந்தோட்டச் சமூகம்: அடிமைத்தனமும் மீட்சியும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
10 நிமிட வாசிப்பு

19ஆம் நூற்றாண்டில் பெருந்தோட்டச் சமூகம்: அடிமைத்தனமும் மீட்சியும்

June 29, 2026 | Ezhuna

மலையகத் தமிழர்களின் புதிய வரலாற்றை இருபத்தோராம் நூற்றாண்டு அரசியல், பண்பாட்டுச் சூழலுக்கேற்ப எழுத வேண்டிய தேவை இன்றியமையாதது ஆகும். இவர்களின் 200 ஆண்டுகால வாழ்வு, இலங்கையின் பெருந்தோட்டங்களில் ஒரு வரலாற்று விபத்தாக நிகழ்ந்திருந்தாலும், இவர்களுக்கென்று ஒரு நெடிய பாரம்பரியம் உண்டு என்பதை மறுக்க முடியாது. இந்த நெடும்பயணத்தில், இவர்கள் நூற்றுக்கணக்கான வன்முறைகளுக்கும், குடியுரிமை பறிப்பு, நிலவுரிமை பறிப்பு உள்ளிட்ட பாகுபாடுகளுக்கும் ஆளாகினர். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தங்களால் இவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர். எஞ்சியவர்கள் இலங்கையின் ஏனைய சமூகங்களால் அடிமைக் குடிகளாகவே பார்க்கப்பட்டனர். ஆயினும், இத்தகைய அவலங்களுக்கு மத்தியிலும், இந்த மக்கள் தமது தனித்துவமான மொழி, பண்பாடு, உற்பத்தி முறை, கூட்டு உளவியல் ஆகியவற்றைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வகையில், இந்நூற்றாண்டின் கண்ணோட்டத்தில், அவர்களது தனித்துவமான இருப்பை நிலைநிறுத்தும் முகமாக அவர்களுக்கான ஒரு புதிய அரசியல் – பண்பாட்டு அடையாளத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உணரப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு ‘மலையகத் தமிழர்களின் அரசியலும் பண்பாடும்’ எனும் இத்தொடர் எழுதப்படுகின்றது

18 ஆம் நுாற்றாண்டு காலப்பகுதியில் நாட்டின் மிகப்பெரும் வதிவிடத் தொழிலாளர் சமூகமாகத் தோட்டத் தொழிலாளர்களே விளங்கினர். தென்னிந்தியாவிலிருந்து நிலமற்ற ஏழைகள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு விவசாயிகள் தேயிலை, கோப்பி, தென்னை மற்றும் இறப்பர் தோட்டப் பணிகளுக்காக பிரித்தானியப் பெருந்தோட்ட உரிமையாளர்களால் அழைத்து வரப்பட்டனர். இக்குடியேற்றத் தொழிலாளர்களினதும் அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவர்களினதும் எண்ணிக்கை 1891 இல் 2,35,000 ஆகவும், 1921 இல் 5,00,000 ஆகவும், பின்னர் 1931 ஆம் ஆண்டில் 7,00,000 ஆகவும் பாரிய வளர்ச்சி கண்டது.

பெருந்தோட்ட உரிமையாளர்கள் ஆள்திரட்டும் பணிகளுக்காக கங்காணிகளுக்கு முற்பணங்களை வழங்கியதுடன், தொழிலுக்கு வரும் ஒவ்வொரு தொழிலாளிக்காகவும் கங்காணிகளுக்கு தினசரி ஒரு தொகை பணம் வழங்கப்பட்டது. இது ‘பென்ஸ் காசு’ என அழைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் தொழிலாளர்களுக்கான அரிசி விநியோகம், குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் கடைகளை நடத்துதல் போன்ற பணிகளை கங்காணிகள் மேற்கொண்டனர். எனினும், தோட்ட முகாமையாளருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாகச் செயற்படுவதே அவர்களின் பிரதான பணியாக இருந்தது. தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக மாறும் வரை இந்நிலை நீடித்த போதிலும், கடன் வழங்குபவர் மற்றும் கடை உரிமையாளர் என்ற அவர்களின் பாத்திரம் தொடர்ந்தும் நீடித்தது.

தொழில் கட்டுப்பாட்டாளரான பி. ரிட் என்பவர், “இலங்கைவாழ் இந்தியத் தொழிலாளர்கள் கடனிலேயே பிறக்கிறார்கள், கடனிலேயே வாழ்கிறார்கள், கடனிலேயே மரணிக்கிறார்கள்” என்று அவர்களின் அவல நிலையை விவரிக்கின்றார். இச்சூழலில் கங்காணிகள் ஒரு முக்கிய பங்கு வகித்தனர்; அவர்கள் தோட்ட உரிமையாளர்களிடமிருந்து நேரடியாகப் பணத்தைப் பெற்று தொழிலாளர்களுக்குக் கடன் வழங்குபவர்களாகவும், அத்தியாவசியப் பொருட்களைக் கடனுக்கு விநியோகிக்கும் ஏகபோக உரிமையாளர்களாகவும் திகழ்ந்தனர். 1908 ஆம் ஆண்டு தொழில் ஆணையகத்தின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுவது போல, தொழிலாளர்கள் தங்களின் கடன் சுமை எவ்வளவு என்பதைக்கூட அறிய முடியாதவாறு கங்காணிமார் உண்மைகளை மறைத்தனர். இக்கடன் சுமை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்ததால், பாமரத் தொழிலாளர்கள் மிக எளிதாகப் பல்வேறு மோசடிகளுக்குப் பலியாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதாந்த ஊதியம் வழங்கப்படும் தருணங்களில், கங்காணிகள் தொழிலாளர்களின் கூலியை அபகரித்துக் கொண்டமையால் அவர்களின் கடன் சுமை ஒருபோதும் தீராத ஒன்றாகவே நீடித்தது. ஒரு தோட்டத்திலிருந்து மற்றொரு தோட்டத்திற்கு தொழிலாளர்களை மாற்றுவதற்காக தோட்ட உரிமையாளர்கள் கங்காணிமாருக்கு வழங்கிய முற்பணமானது, அத்தொழிலாளர்கள் முந்தைய தோட்டங்களில் வைத்திருந்த கடன்களை அடைப்பதற்கே பயன்படுத்தப்பட்டது. இக்கடன் தொகையை தொழிலாளர்களிடமிருந்து மீளப்பெற கங்காணிகள் ‘துண்டு முறைமையை’ கையாண்டனர். இம்முறைமையின் ஊடாக தொழிலாளர்கள் கங்காணிகளிடம் நிரந்தரக் கடனாளிகளாக மாற்றப்பட்டனர். 1921 ஆம் ஆண்டளவில் இத்துண்டு முறைமையின் கீழ் நிலுவையில் இருந்த கடன் பாக்கிகளுக்காக தொழிலாளர்கள் மீது சிவில் வழக்குகளும், சில சந்தர்ப்பங்களில் தடுப்புக் காவல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

1927ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டம் நடைமுறைக்கு வரும் வரை, தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் முறையாக நிர்ணயிக்கப்படாமலேயே இருந்தது. இந்த வருமானம் அவர்களின் அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட எக்காலத்திலும் போதுமானதாக அமையவில்லை. நகர்ப்புறத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் தோட்டத்துறையில் நிலவிய தீவிர ஆள் பற்றாக்குறை போன்ற சூழல்களிலும் கூட, தோட்டத் தொழிலாளர்களின் கூலி மட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டும், முறையான பேரம் பேசும் சக்தியற்றும் காணப்பட்ட இத்தொழிலாளர்கள், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அதே நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

1908 ஆம் ஆண்டு தொழில் ஆணையகத்தின் அறிக்கையின்படி (பக். 38), தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் குறித்து ஒரு தோட்டத்துரை பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “இலங்கையில் நான் கழித்த 14 ஆண்டுகளில், ஆண்களுக்கான கூலி 33 சதமாகவும், பெண்களுக்கான கூலி 25 சதமாகவும் எவ்வித மாற்றமுமின்றி ஒரே மட்டத்திலேயே பேணப்பட்டு வந்துள்ளது”. இத்தகைய குறைந்த ஊதியச் சூழலில், தோட்டத் தொழிலாளர்களுக்குச் சந்தை விலையை விட 14% குறைவான விலையில் அரிசி விநியோகிக்கப்பட்டதுடன், ஒரு லயன் அறையும் சிறிய விவசாய நிலமும் இலவசமாக வழங்கப்பட்டன.

பெருந்தோட்டத்துறையில் நிலவிய சுகாதாரச் சூழல் மிகவும் மோசமானதாகக் காணப்பட்டது. இப்பகுதிகளில் மரண வீதமும், குறிப்பாகச் சிசு மரண வீதமும் மிக உயர்ந்து காணப்பட்டன. தொழிலாளர்கள் மத்தியில் நோய்வாய்ப்படும் தன்மை, போசாக்கின்மை மற்றும் கடுமையான வேலைப்பளு போன்ற சவால்கள் நிலவிய போதிலும், தோட்ட உடைமையாளர்கள் அவர்களின் உடல்நலக் குறைபாடுகளைக் கண்டுகொள்ளவில்லை. அத்துடன், அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளோ முறையான மருந்துகளோ போதிய அளவில் வழங்கப்படவில்லை.

பெருந்தோட்டத்துறையில் நிலவிய இக்கட்டான வாழ்வியல் சூழலை 1884 ஆம் ஆண்டில் தோட்டத்துறை மருத்துவ அதிகாரி ஒருவர் இவ்வாறு ஆவணப்படுத்தியுள்ளார்: “இந்தத் தொழிலாளர்களுக்குச் சொந்தமாக எவ்வித உடைமைகளும் இல்லை. அவர்கள் தினக்கூலிகளாகவும், தோட்டங்களிலேயே தங்கி வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர். நோய்வாய்ப்பட்டாலோ அல்லது வேறு காரணங்களாலோ வேலைக்குச் சமூகமளிக்கத் தவறினால், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை”.

மரண விகிதங்கள் குறித்த தரவுகள் அக்காலகட்டத்தில் நிலவிய அவலத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன. 1883 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, 1883-1891 இடைப்பட்ட காலத்தில் பொதுவான மரண விகிதம் 7.42% ஆக இருந்தபோது, தோட்டத்துறையில் அது 21% என்ற அதீத மட்டத்தில் காணப்பட்டது. இந்தியக் குடியேற்றத் தொழிலாளர் கட்டுப்பாட்டாளரின் 1925 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 1920 இல் தோட்டத்துறையின் மரண விகிதம் 1,000 பேருக்கு 52 ஆகப் பதிவாகியிருந்தது. குறிப்பாகச் சிசு மரண விகிதமானது, தேசிய ரீதியாக 182 ஆக இருந்த நிலையில், தோட்டத்துறையில் 1,000 பிறப்புகளுக்கு 224 ஆக மிக உயர்ந்து காணப்பட்டது. இந்த நெருக்கடியான சுகாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டே, பெருந்தோட்ட வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு அந்த ஆணைக்குழு பரிந்துரைத்தது.

தோட்டத் தொழிலாளர்கள் அதிகாலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை உணவு, தண்ணீர் அல்லது ஓய்வு இன்றி உழைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். 1914 இல் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல தோட்டத்தில் மட்டும் 6 தொழிலாளர்கள் பட்டினியால் வீதியில் இறந்து கிடந்ததாக வைத்தியர் கி. ரிவான் பதிவு செய்துள்ளார். போதிய ஊதியமோ உணவோ கிடைக்காததால் 1914 இல் பிட்டகந்த தோட்டத் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். 1924 இல் 19% மரண வீதமும், 1925 இல் 55% சிசு மரண வீதமும் இந்தியத் தொழிலாளர்களிடையே நிலவியதாக இந்திய குடியேற்றத் தொழிலாளர் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இது நாடளாவிய ரீதியில் காணப்பட்ட 20% விகிதத்தை விட மிக அதிகமாகும்.

1911 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் கலாசார வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கிய காரணியாகக் குறைந்த எழுத்தறிவு மட்டம் விளங்கியது. தேசிய அளவில் எழுத்தறிவு விகிதம் 26.1% ஆக இருந்தபோதிலும், இந்தியத் தொழிலாளர்களிடையே ஆண்களின் எழுத்தறிவு 12.3% முதல் 20% வரை மட்டுமே காணப்பட்டது. குறிப்பாக, பெண்களின் எழுத்தறிவு விகிதம் வெறும் 1.5% என்ற மிகக் குறைந்த மட்டத்திலேயே பதிவாகியிருந்தது.

1904-1906 காலப்பகுதியில் வெறும் இரண்டு தோட்டப் பாடசாலைகளும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மிஷனரிப் பாடசாலைகளும் மட்டுமே இயங்கி வந்தன. தோட்டப் பிள்ளைகளின் கல்வி குறித்த விவகாரம் பிரித்தானிய பொதுச்சபையில் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, காலனித்துவக் குடியேற்ற நாட்டுச் செயலாளர் இது குறித்து தோட்ட முதலாளிமார் சம்மேளனத் தலைவரிடம் விளக்கம் கோரினார். இதற்குப் பதிலளித்த சம்மேளனத் தலைவர், தொழிலாளர் வர்க்கத்தினருக்குக் கட்டாயக் கல்வி வழங்குவதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். 1920 ஆம் ஆண்டு கல்வி கட்டளைச்சட்டம் இயற்றப்பட்ட பின்னரே தோட்டச் சிறுவர்களுக்கு அடிப்படைக் கல்வி வழங்கப்பட்டது; இருப்பினும், அது தேசிய கல்வித் தராதரங்களுக்கு இணையாக இருக்கவில்லை.

தென்னிந்தியாவின் பின்தங்கிய சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த இத்தொழிலாளர்கள் மத்தியில் பிணக்குகளும் சமூகச் சீரழிவுகளும் அதிகளவில் காணப்பட்டன. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒருவித அடிமை முறையிலேயே வைக்கப்பட்டிருந்தனர்.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விடங்கள், உணவு விநியோகம் மற்றும் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் தோட்ட உரிமையாளர்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. குறிப்பாக, அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள அவர்கள் தோட்டக் கங்காணிமாரின் கடைகளையே முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. கடன் சுமை மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியத் தொழிலாளர்கள் 1930ஆம் ஆண்டு வரை ஒரு முறைமைப்படுத்தப்பட்ட வாழ்வியலைக் கொண்டிருக்கவில்லை. அதேநேரம், வெளித்தொடர்புகள் குறைவாக இருந்தமையால் அவர்கள் பிரதான சமூக நீரோட்டத்தோடு இணையவும் முடியவில்லை.

தோட்டக் கங்காணிமார் தொழிலாளர்களைக் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாக்கியதுடன், அவர்களுக்குத் தண்டனைகளையும் வழங்கினர். 1919 ஆம் ஆண்டில் குடியேற்ற தொழிலாளர் ஆணையகம் இத்தகைய தண்டனைகள் குறித்துக் கவனம் செலுத்திய போதிலும், தோட்டத்துரைமார் அதனைப் பொருட்படுத்தவில்லை. மேலும், லயன் குடியிருப்புகளின் நெருக்குவாரமான சூழல் காரணமாகத் தோட்டத்துறையில் சுதந்திரமான இயக்கங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் இல்லாது போயின.

தோட்டத் தொழிலாளர்களின் நலன் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக 1841 மற்றும் 1865 ஆகிய ஆண்டுகளில் எஜமான்-வேலையாள் சட்டங்கள் இயற்றப்பட்டன. இருப்பினும், இச்சட்டங்கள் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான பாதுகாப்பையே உறுதி செய்தன. இதன் பின்னர், 1872ஆம் ஆண்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான மருந்துத் தேவைகள் கட்டளைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 1889ஆம் ஆண்டின் தோட்டத் தொழிலாளர் கட்டளைச் சட்டமானது, குடிவரவுத் தொழிலாளர்களின் ஒப்பந்தக் கோவைகளை மதிப்பதற்கும் அவர்களின் கடன் கொடுப்பனவுகளை முறைப்படுத்துவதற்குமான ஒரு முயற்சியாக அமைந்தது.

தொழிலாளர்களின் விநியோகச் சங்கிலியைச் சீராகப் பேணுவதையே இத்தகைய சட்ட நடவடிக்கைகள் முதன்மையாக இலக்காகக் கொண்டிருந்தன. இந்திய அரசு, இலங்கையிலுள்ள இந்தியக் குடியேற்றத் தொழிலாளர்களின் நலன் குறித்து இலங்கை அரசுக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்த பின்னரே, அவர்கள் தொடர்பான சட்டவாக்கங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 1919, 1921 மற்றும் 1922 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்கள், 1865 ஆம் ஆண்டின் எஜமான்-வேலையாள் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், 1920 ஆம் ஆண்டின் தோட்டத் தொழிலாளர் கல்விச் சட்டம் மற்றும் 1927 ஆம் ஆண்டின் குறைந்தபட்ச கூலிச் சட்டம் ஆகியவற்றின் ஊடாகத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரத் தொடங்கியது. அத்துடன், இந்திய தேசியவாதச் சிந்தனைகளின் உத்வேகத்தால் பெருந்தோட்டத் துறையில் தொழிற்சங்க இயக்கங்களும் வேரூன்றின.

பெருந்தோட்டத்துறையில் அமர்த்தப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள், முதலாளிமார்களுடனும் கங்காணிகளுடனும் அவ்வப்போது மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். அக்காலகட்டத்தில் நடைமுறையிலிருந்த சட்ட விதிகளின்படி, இத்தகைய மோதல்கள் தண்டனைக்குரிய குற்றங்களாகவே கருதப்பட்டன. அதேவேளை, ஒரு கங்காணி தான் நிர்வகிக்கும் குழுவிலுள்ள தொழிலாளர்களை, தனது விருப்பத்திற்கு ஏற்ப ஒரு தோட்டத்திலிருந்து மற்றொரு தோட்டத்திற்கு இடமாற்றம் செய்யும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்.

போடைஸ் தோட்டத்தொழிலாளரின் வேலைநிறுத்தம் – 1896

1896 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதியிட்ட ‘Times of Ceylon’ பத்திரிகைச் செய்தி மற்றும் இந்தியக் குடியேற்றத் தொழிலாளர் கட்டுப்பாட்டாளரின் 1925 ஆம் ஆண்டு அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், போடைஸ் தோட்டத்தைச் சேர்ந்த 70 தொழிலாளர்கள் ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது தலைமைக் கங்காணியின் அறிவுறுத்தலுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது, குத்தகையாளர் ஒப்பந்த மீறல் காரணமாகவே கங்காணியின் தூண்டுதலால் அரங்கேறியது. 

இந்தக் காலக்கட்டத்தில், தேசம் முழுவதும் தொழிலாளர் பிரிவுகள், நலன்புரி அமைப்புகள், சங்கங்கள், சகாய நிதிச் சங்கங்கள் மற்றும் சீட்டுக் குழுக்கள் எனப் பல்வேறு வடிவங்களில் தொழிலாளர்கள் சிறு குழுக்களாகத் திரளத் தொடங்கினர். மலையகத் தொழிலாளர்களின் இந்த அமைப்பு ரீதியான எழுச்சிக்கு இணையாக, நகர்ப்புறத் தொழிலாளர்களும் படிப்படியாகத் தங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு வந்தனர்.



About the Author

பொன் பிரபாகரன்

பொன்.பிரபாகரன், யாழ். பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவப் பட்டம் பெற்றவர். பட்டப்பின் டிப்ளோமாவை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும், ஊடகவியலில் டிப்ளோமாப் பட்டத்தை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். மேலும், கொழும்பு வணிகப் பள்ளியில் செயற்றிட்ட முகாமைத்துவப் பட்டத்தைப் பெற்றுள்ளார். அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 'காமன் கூத்து'(மலையக தமிழரின் பண்பாட்டு வகைப்பட்ட அரசியல் பொருண்மிய ஆய்வு), 'உப்பு ரொட்டி' (கவிதைத் தொகுப்பு), 'மலையகத் தமிழரின் சமூகவியலும் அரசியலும்' என்பன இவரது நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்