1983 கறுப்பு யூலை பேரழிவின் பின்னரான மே தினம்: இலங்கையின் இனக்குழுமப் பிரச்சினைக்கான தீர்வு யாது?
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
14 நிமிட வாசிப்பு

1983 கறுப்பு யூலை பேரழிவின் பின்னரான மே தினம்: இலங்கையின் இனக்குழுமப் பிரச்சினைக்கான தீர்வு யாது?

June 13, 2025 | Ezhuna

‘அரசறிவியல் கலைக்களஞ்சியம்’ (Encyclopedia Of Political Science) என்னும் தலைப்பில் அமையும் இத் தொடரில் அரசியல் கோட்பாடுகள் (Political Theories), அரசியல் விஞ்ஞான எண்ணக்கருக்கள் (Concepts) சமகால அரசியல் விவாதங்கள் என்பன குறித்த கட்டுரைகள் வெளியிடப்படவுள்ளன. பொதுவெளியில் (Public Sphere) நடைபெறும் அரசியல் விவாதங்களை ஆரோக்கியமுடையனவாக ஆக்குவதற்கு, அரசியல் கருத்தாக்கங்கள் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்துவதும், சமூகத்தின் பல மட்டங்களிற்கும் அரசியல் அறிவை எடுத்துச் செல்வதும் அவசியமான பணி என நாம் உணருகின்றோம். தமிழ் அரசியல் சூழலில் நிலவும் கோட்பாட்டு வறுமையை (Theoretical Poverty) நீக்குவதற்கு இக் கட்டுரைத் தொடர் உதவும் என்பது எமது நம்பிக்கை. தமிழ்ச் சமூகத்தில் அறிவியல் மூலதனம் (Intellectual Capital) ஒரு சிறு மேட்டிமைக் குழுவிடம் (Elite Group) குவிந்திருப்பதை நீக்கி, அறிவுச் செல்வத்தின் மறுபங்கீட்டின் மூலம் சமூக விடுதலை, ஜனநாயக மயப்படுத்தல், அடிமட்டத்தினர் அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய இலக்குகளை அடைதல் இத் தொடரின் நோக்கமாகும்.

ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க

1984 மே 1 ஆம் திகதிய ‘Lanka Guardian’ இதழில் நியூட்டன் குணசிங்க அவர்கள் ‘May Day after the July Holocaust’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். கறுப்பு யூலை 1983 இன் பின்னரான முதலாவது மே தினத்தின்போது தமது மனதில் தோன்றிய கருத்துகளை நியூட்டன் குணசிங்க அவர்கள் இக்கட்டுரையில் முன்வைத்தார். இலங்கையின் இனக்குழுமப் பிரச்சினைக்கான தீர்வு யாது? என்பதை ஆராயும் இக்கட்டுரை இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய கோட்பாட்டு ஆய்வில் மிக முக்கியமான ஒரு பங்களிப்பாகும். இக்கட்டுரையின் தமிழாக்கம், இது எழுதப்பட்டு ஏறக்குறைய 42 ஆண்டுகள் கழிந்தபின் வெளியிடப்படுகிறது.

கோட்பாட்டுக் குழப்பம்

1983 யூலை பேரழிவுக்குப் பின்னரான காலத்தில் இலங்கையின் இடதுசாரி ஜனநாயக சக்திகள், தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகக் கோட்பாட்டுக் குழப்பத்திற்கு (Theoretical Disarray) உள்ளாகியிருப்பதாகக் குறிப்பிடும் நியூட்டன் குணசிங்க அவர்கள் கட்டுரையின் முதற் பந்தியிலேயே தெளிவான முறையில் தமது வாதத்தை முன்வைக்கிறார். இனி அவரது கட்டுரைக்குள் செல்வோம்.

இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகமுக்கியமான திருப்புமுனையாக அமைந்த வரலாற்று நிகழ்வு என்றால் அது 1983 இன் தமிழருக்கு எதிரான யூலை வன்முறைகள் தான் (Anti-Tamil Riots of July 83) என்பது இப்போது தெளிவாகியுள்ளது. யூலை 83க்கு முன்பு இலங்கைச் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட வகைச் சமநிலை (Particular Equilibrium) இருந்து வந்தது. அந்தச் சமநிலை முற்றாகவே குலைக்கப்பட்டுவிட்டது. அச்சமநிலை மீண்டும் உருவாகும் என நாம் எதிர்பார்க்க முடியாது. புதிய சமநிலை இன்றும் உருவாகவில்லை. பொதுமக்கள் மத்தியில் இன்று இனத்துவ உணர்வுகள் (Ethnic Consciousness) தூண்டப்பட்டுள்ளன. அவை கொதிநிலையில் உள்ளன. இலங்கையின் இடதுசாரி ஜனநாயக சக்திகள் தெளிவற்றுக் குழப்பத்தில் உள்ளன. பழைய இடதுசாரிகள் (Old Left), இலங்கையில் இனப்பிரச்சினை என ஒன்றும் கிடையாது; எல்லாவற்றுக்கும் பொருளாதாரப் பிரச்சினைதான் காரணம் என்று போதனை செய்வதோடு பொருளாதார வர்க்கக் கோஷங்களை உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .

வரலாற்றுத் தருணம்

இலங்கையில் இனப்பிரச்சினை என ஒன்று கிடையாது, யாவற்றுக்கும் அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினையிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்ற வாதம் தவறானது என்பதை அழுத்திக் கூறும் நியூட்டன் குணசிங்க அவர்கள், 1983க்கு பின்னரான கட்டம் முக்கியமான ‘வரலாற்றுத் தருணம் (A Moment in History) எனக் குறிப்பிடுகிறார். இவ்வரலாற்றுத் தருணம், ‘சமகால வரலாற்றின் ஒரு சந்திப்புப் புள்ளி’ (Contemporary Conjuncture) எனவும் குறிப்பிடுகிறார். ‘வரலாற்றுத் தருணம்’, ‘சமகால வரலாற்றின் ஒரு சந்திப்புப் புள்ளி’ என்ற தொடர்கள் வெற்று வார்த்தைகள் அல்ல; அர்த்தச் செறிவுடைய தொடர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கட்டுரையின் இரண்டாவது பந்தி ‘சமகால வரலாற்றின் ஒரு சந்திப்புப் புள்ளி’ பற்றிப் பின்வருமாறு விளக்கம் தருகிறது.

சமகால வரலாற்றின் ஒரு சந்திப்புப் புள்ளியாக அமையும் இன்றைய நிலையின் அடிப்படைக்கூறுகளை நாம் பகுப்பாய்வு செய்தல் அவசியமானது. இலங்கையின் இரண்டு இனத்துவக் குழுமச் சமூகங்கள் (Ethnic Formations) கடந்த சில ஆண்டுகளில் ஒன்றில் இருந்து மற்றது பிரிந்து, இரண்டும் வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கிடையே உறவுகள் முற்றாகவே துண்டிக்கப்பட்ட நிலை (Virtual Rupture) காணப்படுகிறது. வர்க்கங்களுக்கிடையிலும், சமூக அடுக்குகளிடையேயும் குறிப்பிட்ட வகை முரண்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் சிங்களச் சமூகத்தில் உருவாகியுள்ளன.  தமிழ்ச் சமூகத்தின் உள்ளக வர்க்க முரண்பாடுகளும், சமூக அடுக்குகளின் (Social Strata) வேறுபாடுகளும் வேறுபட்ட முறையில் உருவாகியுள்ளன. தமிழ்ச் சமூகத்தில் தொழிலாளி – முதலாளி முரண்பாடுகளும் நில உடைமையாளர் – விவசாயப் பட்டாளிகள் முரண்பாடுகளும் உள்ளன. இத்தகைய உள்ளக முரண்பாடுகளும், வர்க்க முரண்பாடுகளும் (Class Contradictions) தமிழ்ச் சமூகத்தில் உரத்துப் பேசப்படுவதில்லை. அவை அடக்கி வாசிக்கப்படுகின்றன. ஆழத்தில் அமுங்கிப் போயுள்ளன. இதற்கான வலிதான காரணம் ஒன்று உண்டு. தமிழ்ச் சமூகம் தனது கூட்டு இருப்பும், தாம் ஒரு சமூகமாக நிலைத்திருக்க முடியுமா என்பதும் ஆபத்துக்குள்ளாகியிருப்பதை உணர்கிறது (Perceives a Danger to It’s Collective Social Existence). ஆனால் சிங்கள இனத்துவக் குழுமச் சமூகத்தின் நிலை வேறானது. அச்சமூகத்தில் ஆழமான சமூகப்பிளவுகள் வெளிப்பட்டுள்ளன. வர்க்க வேறுபாடுகள் காரணமாக எழும் உணர்வுநிலை சிங்களச் சமூகத்தில் கூர்மை பெற்றுள்ளது. ஆளும் உயரடுக்குக்கும் (Ruling Stratum) பொதுமக்களுக்கும் இடையிலான பிளவுகள் தொடருகின்றன. ஆனால் பொதுமக்கள் மத்தியில் இன்றைய பிரச்சினைகளுக்கான காரணங்கள் பற்றிய பொய்யான விளக்கம் ஒன்று பரவலாக உள்ளது. தமது இன்றைய துன்பங்கள் யாவற்றுக்கும் காரணம் இந்நாட்டில் சலுகைகள் பெற்ற இனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் நியாயமற்ற கோரிக்கைகள் தாம் எனச் சிங்கள மக்கள் சிந்திக்கிறார்கள். இனப்பகை என்ற பொய்யான திசையில் (False External Direction) அவர்களது சிந்தனை மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிங்களவர், தமிழர் ஆகிய இரு சமூகங்களிலும் வர்க்க முரண்பாடுகளைவிட, இனத்துவ முரண்பாடுகள் (Ethnic Contradictions) முதன்மை பெற்றுள்ளன. அல்தூசரின் வார்த்தைகளில் இதனை வருணிப்பதாயின் ‘மேல் நிர்ணயம்’ (Over Determination) நிகழ்ந்துள்ளது. வர்க்க முரண்பாடுகளை, இனத்துவ முரண்பாடாக இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிட்டு முதன்மை முரண்பாடாக இனத்துவ முரண்பாடுகள் மேல் நிர்ணயம் செய்கின்றன. மேல் நிர்ணயம் என்பது இவ்விடத்து அமைப்பியல் மேலாதிக்கத்தைக் (Structure in Dominance) குறிப்பிடுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட சமூக உருவாக்கம் வரலாற்றின் ஒரு கட்டத்தில் (At a Point of Time) பல்வித முரண்பாடுகளின் சேர்க்கையாக அமையும் அமைப்பியல் மேலாதிக்க நிலையைக் குறிப்பதாகும்.

மேல் நிர்ணயம் என்னும் அல்தூசரின் கருத்தாக்கம்

பிரஞ்சு தேசத்தின் அமைப்பியல் மார்க்ஸியச் சிந்தனையாளரான அல்தூசரின் ‘மேல் நிர்ணயம்’ (Over Determination) என்ற கருத்தாக்கத்தை, இலங்கையில் 1983 யூலை வன்முறைக் கலகத்திற்குப் பின்னரான சூழமைவை விளக்குவதற்கு நியூட்டன் குணசிங்க அவர்கள் பிரயோகிப்பதை இங்கே நாம் காண்கிறோம். 1983 கறுப்பு யூலை இலங்கையின் வரலாற்றின் ஒரு முக்கிய கட்டமாகும். இவ்வரலாற்றுக் கட்டத்தில் சிங்களவர், தமிழர் ஆகிய இரு சமூகங்களினதும் உள்ளக முரண்பாடுகள் (Internal Contradictions) இனத்துவ முரண்பாடுகள் என்னும் காரணியால் மேல் நிர்ணயம் செய்யப்படுவதை நியூட்டன் குணசிங்க விளக்கிக் கூறியிருப்பதை எமது வார்த்தைகளால் அடுத்து எடுத்துக் கூறுவோம்.

ஒரு சமூகத் தோற்றப்பாடு ஒரேயொரு காரணியால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. குறிப்பிட்டதொரு வரலாற்றுச் சூழமைவில் தோன்றும் குறித்தவொரு சமூகத் தோற்றப்பாடு பல்வேறு முரண்பாடுகளின் குறிப்பிட்ட வகைச் சேர்க்கையான காரணிகளால் (Multiple Causes) தீர்மானிக்கப்படுகிறது. அதாவது சமூகத் தோற்றப்பாடுகள் (Social Phenomena) பொருளாதாரம், அரசியல், கருத்தியல் (Ideology), பண்பாடு ஆகிய பல்வேறு கூறுகளினால் எழும் பல்வேறு முரண்பாடுகளினால் தீர்மானிக்கப்படுகின்றன. அவ்வாறு தீர்மானம் செய்கின்றபோது ஒரு குறிப்பிட்ட முரண்பாடு பிற எல்லா முரண்பாடுகளையும்விட முதன்மையான முரண்பாடாக (Primary Contradiction) அமைந்துவிடுவதோடு, அம்முதன்மையான முரண்பாடு ஏனைய முரண்பாடுகளைப் பின்தள்ளி நிகழ்வுப் போக்குகளின் மீது மேல் நிர்ணயம் (Over Determination) செய்கிறது.

அல்தூசரின் ’மேல் நிர்ணயம்’ என்ற கருத்து புரட்சிகரமான ஒரு எண்ணக்கருவாகும். பழமைவாத மார்க்சிஸ்டுகள் (Orthodox Marxists) பொருளாதாரம் என்ற காரணியையும், பொருளாதார முரண்பாடுகளையும் தீர்மானமானவை என்று கூறிக்கொண்டிருந்த பின்னணியில் பொருளாதாரம் அல்லாத (Non–Economic) காரணியொன்று, முதன்மை முரண்பாடாக மாற்றமுற்று, பிறயாவற்றையும் பின்னிலைக்குத் தள்ளி மேல் நிர்ணயம் செய்வதாக அமைகின்றது என்பதே அல்தூசரின் விளக்கமாகும்.

மேல் நிர்ணயம் என்னும் கருத்தாக்கத்தை சிங்களவர், தமிழர் என்னும் இரு சமூக உருவாக்கங்களின் உள்ளக முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்குகளை விளக்குவதற்குப் பிரயோகிக்கும் நியூட்டன் குணசிங்க அவர்கள், வர்க்க முரண்பாடுகள் (Class Contradictions) அல்ல, இனத்துவ முரண்பாடுகளே (Ethnic Contradictions) கறுப்பு யூலை 1983 இன் பின்னர் முதன்மைக் காரணியாக மாற்றம் பெற்றுள்ளன எனக் குறிப்பிட்டார்.

அமைப்பியல் மேலாதிக்கம்

மேல் நிர்ணயம் என்ற எண்ணக்கருவுடன் தொடர்புடைய பிறிதொரு எண்ணக்கருவான ‘அமைப்பியல் மேலாதிக்கம்’ (Structure in Dominance) என்னும் எண்ணக்கரு ஒரு சமூக உருவாக்கத்தில் பொருளாதார முறைமை, அரசியல் முறைமை, கருத்தியல் முறைமை எனப்பல உபமுறைமைகள் உள்ளமைந்து காணப்படும். இந்த உபமுறைமைகள் ஒன்றோடொன்று கலந்தும், குறுக்கே வெட்டிச் செல்வனவாயும் (Cross Cutting) காணப்படும். இந்நிலையில் சமூக உருவாக்கத்தின் மேலாதிக்கக்கூறாக ஒரு வர்க்கம் அமைந்துவிடலாம் அல்லது ஓர் அரசியல் நிறுவனம் அமைந்துவிடலாம் அல்லது பண்பாட்டுக் கருத்தியல் (Cultural Ideology) அமைந்துவிடலாம். சமூகத்தில் அதிகாரமும், சமத்துவமின்மையும் (Power and Inequality) சமூகக் கட்டமைப்புகள் ஊடாக ஆழமான வேர்களை ஊன்றியிருக்கும். அமைப்பியல் மேலாதிக்கம் என்னும் கருத்தாக்கம் மேற்கண்டவாறு மேல் நிர்ணயம் என்ற கருத்தை விளக்க உதவுகிறது.

கறுப்பு யூலை 1983 இன் பின்னரான சூழமைவில் இனத்துவ உறவுகளின் கட்டமைப்பு இலங்கைச் சமூகத்தில் மேலாதிக்கம் பெற்றுள்ளதை எடுத்துக் காட்டும் நியூட்டன் குணசிங்க, அதிகாரமும் சமத்துவமின்மையும் இனத்துவ உறவுகளின் கட்டமைப்பினால் தீர்மானிக்கப்படுவதைக் குறித்துக் காட்டுகிறார். இக்காரணத்தால் வர்க்க முரண்பாடுகளின் தீவிரம், இயல்பு, போக்கு என்பன இனத்துவ உறவுக்கட்டமைப்புகளாலேயே தீர்மானம் செய்யப்படுகின்றன. இனத்துவ உறவுக்கட்டமைப்புகள் வர்க்க உறவுகளின்மீது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் செலுத்துகின்றன.

இனத்துவப் பிரச்சினையை மறந்துவிடுங்கள் என்ற கோஷம்

இலங்கையில் கறுப்பு யூலை 1983க்குப் பிந்திய சூழமைவில் இனத்துவ முரண்பாடுகள் முதன்மை பெற்றுள்ளதால், அவை வர்க்க உறவுகள்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இப்பின்னணியில் இனத்துவப் பிரச்சினையை மூடிமறைத்தல் மூடத்தனமான கொள்கையாகும். இம்மூடத்தனமான கொள்கையைப் பின்பற்றும் இடதுசாரிகள் சிலர் ‘இனத்துவப் பிரச்சினையை மறந்து விடுங்கள்’ (Forget Ethnic Issue) என்று கோஷம் எழுப்புகின்றனர். இது முற்போக்குச் சக்திகளை தவறான பாதையில் வழிநடத்திச் செல்வதற்கே உதவும். இனத்துவ முரண்பாடுகளைத் தீர்வு செய்வதற்கு நாம் இனத்துவப் பிரச்சினை பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். பகுத்தறிவுக்குப் பொருத்தமான  அரசியல் தீர்வைப் (Rational Political Solution) பற்றிச் சிந்திக்க வேண்டும். மத்தியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அதிகாரப் பகிர்வு (Devolution of Power) மூலம் பகிர்ந்தளிக்க வேண்டும். அத்தகைய அரசியல் தீர்வு குறித்து தொழிலாளர் வர்க்கத்திற்கும் ஏனைய உழைக்கும் மக்கள் பிரிவினருக்கும் கல்வியறிவூட்டும் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். வெகுஜனங்களிடையே எக்கருத்துகள் கவர்ச்சியுடையனவாய் இருக்கின்றன என்பதைப் பார்த்து, அவற்றின் வழிச் செயற்படுவதை விடுத்து, மக்களைச் சரியான பாதையில் நெறிப்படுத்தல் வேண்டும். தொலைநோக்குடைய தந்திரோபாயத் திட்டத்தை முன்வைத்து, தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியிலும் பிற உழைப்பாளர் வகுப்புகளின் மத்தியிலும் செயற்பட வேண்டும்.

இலங்கையின் அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட உட்பிளவுகளும் புதிய கூட்டுகளும்

இனத்துவ முரண்பாடுகளின் மேல் நிர்ணயம் காரணமாக இலங்கையின் அரசியல் கட்சிகளிடையே உட்பிளவுகள் ஏற்பட்டதையும் அக்கட்சிகள் புதிய கூட்டுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதையும் நியூட்டன் குணசிங்க அவர்கள் எடுத்துக்காட்டுகிறார். அரசியல் கட்சிகளுக்கிடையிலான உறவுகளில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டன. பழைமைவாதிகள் (Conservatives), முற்போக்குவாதிகள் (Progressives) என்ற பழைய முகாம்களுக்குள் பிரிவினைகள் தோன்றின. இப்பிரிவினைகள் இனத்துவப் பிரச்சினை தொடர்பான கொள்கை வேறுபாடுகள் காரணமாக ஏற்பட்ட உட்பிளவுகளாகும். அரசியலில் முன்னர் எதிரெதிர் முகாம்களில் இருந்தோர் இனத்துவப் பிரச்சினை தொடர்பாக தம்மிடையே ஒற்றுமை இருப்பதை உணர்ந்தனர். 1977 இல் ஐக்கிய தேசியக்கட்சி (UNP) அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இணைந்து கொண்ட தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC) ஒரு பழமைவாத அரசியல் கட்சியாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் அக்கட்சி அதிகாரப் பகிர்வை (Devolution of Power) ஆதரித்தது. பிராந்தியச் சபைகளை (Regional Councils) அமைக்க வேண்டும்; அதிகாரப் பகிர்வைச் செயற்படுத்த வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை ஆதரித்துப் பேசியது. மகாஜன எக்சத் பெரமுன (MEP) கட்சியின் தினேஷ் குணவர்த்தன, ஐக்கிய இடதுசாரிக் கூட்டணியின் (United Left Alliance) பங்காளியாக இருந்துகொண்டே அதிகாரப் பகிர்வைத் தீவிரமாக எதிர்ப்பவராக விளங்கினார். முற்போக்குவாதி எனக் கருதப்பட்ட தினேஷ் குணவர்த்தனவின் எம்.ஈ.பி (MEP) கட்சி இனத்துவப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மாநாட்டில் கலந்துகொள்வதைக்கூட நிராகரித்தது; இனத்துவப் பிரச்சினையின் அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்தது. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும், அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால் ஜனதா விமுக்திப் பெரமுனவின் (ஜே.வி.பி) ரோஹண விஜயவீர, நியாயமான அரசியல் தீர்வான அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தி, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆதரவு வழங்குவதற்கு மறுத்தார். அதிகாரப் பகிர்வு யோசனையை வன்மையாக எதிர்த்தார். இனவாதத் துவேசத்தை வெளிப்படுத்தும் முறையில் அறிக்கை வெளியிட்டார். மேலே குறிப்பிட்ட வகையான பிளவுகளும் உட்பிரிவுகளும், வர்க்க முரண்பாடுகளின் (Class Conflict) அடிப்படையில் எழுந்த பிளவுகளும், உட்பிரிவுகளும் எனக் கருத முடியாது. இப்பிரிவினைகள் மேல் நிர்ணயத்தின் (Over Determination) விளைவுகளே ஆகும். முற்போக்குவாதிகள் எனக் கருதப்பட்டு வந்த சிங்கள அரசியல் சக்திகள் இரண்டு அணிகளாகப் பிரிவுபட்டிருப்பதைக் காண முடிகிறது. இவ்விரு அணிகளினதும் கொள்கைகளும் செயற்திட்டங்களும் வேறுபட்டனவாய் உள்ளன.

முற்போக்கு அரசியலின் இரு அணிகள்

1980களில், கறுப்பு யூலை 83 இற்கு முன்னும் பின்னுமான காலத்தில் இலங்கையின் சிங்களச் சமூகத்தில் முற்போக்கு அரசியல் சக்திகள் இரு அணிகளாகப் பிளவுபட்டிருந்தன. இந்த அரசியல் யதார்த்தத்தை தெளிவாகப் புரிந்துகொண்ட நியூட்டன் குணசிங்க, இந்த இரு அணிகளினதும் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார். ஆங்கிலத்தில் நியூட்டன் குணசிங்க இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“Within the ranks of the Sinhala political forces traditionally regarded as ‘progressive’ two mutually opposed lines are emerging”

இக்கூற்றில் உள்ள ‘Two Lines’ என்பதை தமிழில் ‘இரு அணிகள்’ என நாம் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். ஒன்றோடொன்று முரண்படும் கருத்துகளையுடைய இவ்விரு அணிகளையும் அணி-1, அணி-2 எனக் குறிப்பிடும் குணசிங்க அவற்றின் கொள்கைகளையும் நடைமுறைகளையும் விபரிக்கிறார்.

அணி-1 இன் அரசியல் நிலைப்பாட்டை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்: இன்றைய அரசு நவகாலனியத்தின் கருவியாகச் செயற்படுகிறது. அது சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி ஆகியவற்றின் கைப்பொம்மையாகும். அது எமது மக்களை அரசியல்ரீதியில் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியுள்ளது. தேர்தல்களை நடத்தாமல் ஆட்சியில் இருந்து வருகிறது. சுற்றுலாத்துறை வளர்ச்சி என்ற போர்வையிலும், அதுபோன்ற செயற்றிட்டங்கள் மூலமும் எமது பண்பாட்டைச் சீரழித்து வருகிறது. ஆகையால் இந்த அரசை எதிர்த்துப் போராடுவதற்காக முற்போக்கு, தேசபக்த மக்கள் யாவரையும் ஒன்றிணைக்கும் வகையில் ஐக்கிய முன்னணி (United Front) ஒன்றை அமைத்து எமது அரசியல் செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல வேண்டும்.

அணி-2 இன் அரசியல் நிலைப்பாட்டை பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்: இந்த அரசு மேலே குறிப்பிட்டபடி (அணி-1 இன் கருத்துப்படி) பிற்போக்கான கொள்கைகளையும் நடைமுறைகளையும் கொண்டது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால் முற்பாக்கு தேசபக்த சக்திகள் அனைத்தையும் ஒன்றிணைத்த ஐக்கிய முன்னணியை அமைக்க வேண்டும் எனக் கூறப்படுகிறதே? இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். இன்று நாம் வரலாற்று சந்திப்புப் புள்ளி ஒன்றில் (Historical Conjuncture) நிற்கிறாம். இன்றைய சூழமைவில் உருவாக்கப்படும் தேசபக்த ஐக்கிய முன்னணியில் தவிர்க்க முடியாதபடி பெருந்திரளான சிங்கள இனவாத சக்திகள் இணைந்துகொள்ளப் போகின்றன. ‘தேசபக்த ஐக்கிய முன்னணி’ (Patriotic United Front) எனப்படும் இந்த முன்னணியில் மேலாதிக்கம் பெற்ற கருத்தியலாக சிங்கள இனவெறிவாதம் (Sinhala Chauvinism) இருக்கப்போகிறது. இதனால் நாட்டில் இனமுறுகல்நிலையும் அதனால் எழும் அச்சம், பதற்றம் என்பனவும் உச்சநிலைக்குச் செல்லும் இவ்வாறான ஒரு பின்னணியில் இடதுசாரிச்சக்திகளால் வெகுஜனங்களை (Masses) பொருளாதார, வர்க்கப் பிரச்சினைகளின் அடிப்படையில் ஓரணியில் ஒன்று திரட்ட முடியாது. நாட்டில் உருவாகப்போகும் இனமுறுகல்நிலை இன்று ஆட்சியில் அமர்ந்துள்ள தரகு முதலாளித்துவ வகுப்பின் ஆட்சி தொடர்வதற்கு வாய்ப்பான சூழலை உருவாக்கும். ஆகவே நாம் தொழிலாளர் வர்க்கத்தின் நோக்குநிலை நின்று இன்றைய அரசியல் யதார்த்தத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவ்வாறு பார்த்தால், இனமுறுகல் நிலையை இயன்றளவுக்கு தணித்தல் வேண்டும். இதுவே தொழிலாளர் வர்க்க அரசியலின் குறுங்காலத் திட்டமாக இருத்தல் வேண்டும். இதனை நிறைவேற்றுவதன் மூலம் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான சூழலை எம்மால் உருவாக்க முடியும்.

இதனைக் குறிக்கோளாகக்கொண்டு இடதுசாரிகள் செயற்பட வேண்டும்; அவர்களது செயற்பாடுகளின் முதன்மையான விடயமாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாக (Devolution of Power) இருப்பதோடு ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் அமையும் அரசியல் தீர்வாகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய அதிகாரப்பகிர்வு அரசியல் தீர்வுக்கு ஆதரவாக இடதுசாரிகள் பிரசாரம் செய்வதோடு, அரசுக்குள்ளும் அரசுக்கு வெளியேயும் உள்ள அறிவார்ந்த சிந்தனையுடையவர்களின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்; அத்தகையோரை வென்றெடுத்தல் வேண்டும். அதன்மூலம் பேச்சுவார்த்தையின் மூலமான அரசியல் தீர்வைக் கொண்டுவரலாம்.

1984 மே தினம்

“இந்த மே தினம், 1983 இல் தமிழினத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு பிந்திய முதலாவது மே தினம் ஆகும்” என 1984 மே தினத்தின் முக்கியத்துவத்தை அழுத்திக்கூறும் நியூட்டன் குணசிங்க, கோட்பாட்டுக் குழப்பத்தில் (Theoretical Disarray) சிக்குண்டுள்ள இடதுசாரிகளுக்கு ஒரு முக்கியமான செய்தியைத் தெரிவிப்பதுடன் தனது கட்டுரையை நிறைவு செய்கிறார். கட்டுரையின் இறுதிப்பகுதியில் அவர் கூறியிருப்பவை வருமாறு:

“இலங்கையின் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் எதிர்காலம், மேலே நாம் குறிப்பிட்ட அணி-1, அணி-2 என்ற இரு அணிகளில் எந்த அணியின் செயற்பாடுகள் வெற்றியடையப் போகின்றன என்பதிலேயே தங்கியுள்ளது. அணி-1 வெற்றி பெறுமானால் இனமுறுகல்நிலை அதிகரித்து உச்சநிலைக்குச் செல்லும். இதன்விளைவாக ‘மேல் நிர்ணயம்’ என்ற செயல்முறை பலப்படுத்தப்படும்; மக்கள் தவறான பாதையில் வழிநடத்தப்படுவார்கள். அணி-2 வெற்றி பெறுமாயின் இனமுறுகல்நிலை தணிக்கப்படும். அதன்பயனாக ‘மேல் நிர்ணயம்’ என்ற செயல்முறையின் வீரியம் குறைக்கப்படும். வடக்கு – கிழக்கு மக்களிற்கு அரசியல் சுதந்திரங்கள் (Democratic Liberties) வழங்கப்படுதல் சாத்தியமாகும். தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பங்கினர் வாழுகின்ற தென்னிலங்கையில் வர்க்கப் போராட்டத்தை இடதுசாரிகள் முன்னெடுப்பதற்கு வாய்ப்பான சூழல் உருவாகும். நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரிக்கும்போது தொழிலாளர் வர்க்க இயக்கம் புத்துயிர்பெற்று வீரியத்துடன் செயற்படுவதோடு, தொழிலாளி வர்க்கத்தின் உணர்வை (Class Consciousness) வளர்ப்பதற்கான வாய்ப்பு உருவாகுவதோடு வர்க்க முரண்பாடுகளைவிட இன முரண்பாடுகள் முதன்மை பெற்றனவாய் ‘மேல் நிர்ணயம்’ (Over Determination) செய்வதான செயல்முறை வலுவிழக்கும்.”

1984 மே 1 ஆம் திகதிய ‘Lanka Guardian’ இதழில் வெளியான ‘May Day after the July Holocaust’ என்னும் ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கமாக இத்தமிழ்க்கட்டுரை அமைந்துள்ளது. நியூட்டன் குணசிங்க அவர்கள் இக்கட்டுரையை எழுதி, நான்காண்டுகள் கழிந்தபின், 1988 ஒக்டோபர் 31 ஆம் திகதி காலமானார். அவர் மறைவுக்குப் பின்னர் ‘SSA’ நிறுவனத்தால் 1996 இல் வெளியிடப்பட்ட ‘Newton Gunasinghe: Selected Essays’ என்னும் நூலில் குறித்த ஆங்கிலக்கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது (பார்க்க பக். 197-200).



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்