“அவர்களின் இந்த (யாழ்ப்பாண) மண்ணிற்கு உள்ளே, அவர்கள் கனவிலும் கண்டிருக்க முடியாத உள்ளத்தை உவகையாக்கும் மதிப்புமிக்க தொல்வரலாற்றுச் சான்றுகள் புதைந்து கிடக்கின்றன என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.”
Paul E. Pieris
Ceylon Daily News
22-02-1919.
“பண்டைய கிரேக்கர்களும், உரோமர்களும் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்த தொலமியால் கௌரூலா என்றும், பெரிப்பிளஸ்ஸின் ஆசிரியரால் கமாரா எனவும் குறிப்பிடப்படும் நகரம் கந்தரோடை என்பதில் எனக்கு எதுவிதமான ஐயப்பாடும் கிடையாது.”
C. Rasanayagam
1926.
“(கந்தரோடை அகழ்வுகளில்) ஒரு ஸ்தூபியின் கீழே அகழாய்வு செய்யப்பட்டபோது அங்கே புதைக்கப்பட்ட ஓர் ஈமக் கிண்ணத்தில் அழுகிய எலும்பு காணப்பட்டது…அந்த ஸ்தூபியின் கீழே அழுகிய நிலையில் மற்றுமொரு எலும்புத் துண்டும் காணப்பட்டது.”
C.E. Godakumbura
7th November 1967.
1968: p. 72.
“கந்தரோடையில் குடியேற்றம் பெற்ற மக்கள் தென்னிந்திய மக்களின் கலாசார சமுதாயச் சூழலின் வழித்தோன்றல்களாகவோ அல்லது அவர்களோடு நெருக்கமான கலாசார உறவைக் கொண்டவர்களாகவோ இருந்திருக்க வேண்டும்.”
Vimala Begley
1973.
அறிமுகம்
யாழ்ப்பாணத்திலுள்ள 3.2 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட கந்தரோடைக் கிராமம் அனைத்துமே ஒரு தொல்லியல் மையம்தான். கந்தரோடைக் கிராமத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்: (1) மக்களின் வதிவிடப் பகுதி, (2) தென்மேற்காக அமைந்த பனந்தோப்பு. இந்தக் கிராமத்தின் மிகப்பழமையான நகரம் அதன் நடுவே இரண்டு மீட்டர் உயரத்தில் 25 ஹெக்டயர் (62 ஏக்கர்) பரப்பளவில் அமைந்த மேட்டு நிலமாகும். அதன் பள்ளமான பரப்பு நெல்வளரும் செழிப்பான விளைச்சல் நிலம். அந்த விளைநிலத்தினருகே 40 ஏக்கர் பரப்பளவிலான கந்தரோடைக் குளம் காணப்படுகிறது. அக்கிராமத்தினூடாகச் செல்லும் வழுக்கை ஆறு எனப்படும் கடற்கால்வாய் தென்மேற்காக வளைந்து, மேற்கே கல்லுண்டாய் வழியாக நாவாந்துறைக்கருகே யாழ்ப்பாணக் கடலேரியில் சங்கமமாகிறது.
கந்தரோடையின் வரலாற்று முக்கியத்துவம் இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில்தான் மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், இது இத்தனை பழமையான நடுவம் என்பதை எவருமே எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள். 1916 ஆம் ஆண்டில் வட இலங்கையில் தொல்லியல் மேலாய்வுகளை மேற்கொண்ட வடமாகாண அரசாங்க அதிபராகவிருந்த ஜே.பி. லூயிஸ், யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய இடங்களிலிருந்த புராதனக் கட்டட அழிபாடுகளைக்கொண்டு இந்த இரு இடங்களும் வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்ட குடியேற்ற மையங்களாக இருந்திருக்க வேண்டும் என அறிவித்திருந்தார். 1917-1919 ஆண்டுகளில் ஸேர். போல் எட்வார்ட் பீரிஸ் இங்கே அகழாய்வுகளை மேற்கொண்டு “கந்தரோடை ஒரு சிறிய அளவினதான அநுராதபுரம்” என அறிவித்தார் (Pieris, P. E. 1919).
“அழிந்து கிடக்கும் கட்டடங்களின் அடையாளங்களாலும், கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகள், கற்றூண்களினாலும், பரவிக்கிடக்கும் ஓடுகளின் துண்டுகளினாலும், கதிரமலை (கந்தரோடை) எனப்படும் இப்பழைய நகரம் மிகவும் விசாலமானதும், அழகிய வீதிகளையும், மாடமாளிகைகள், கூட கோபுரங்களுமுடையதுமாய், கண்ணைக் கவரும் வனப்பு வாய்ந்ததுமாய் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்கலாம்” என வரலாற்றாசிரியர் முதலியார் இராசநாயகம் கந்தரோடை நகரத்தை வருணித்தார் (இராசநாயகம், செ. 1933: 14-15). அக்கால வரலாற்றாசிரியர்களான முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் இருவரும் பண்டைய யாழ்ப்பாணத்தின் தலைநகராகக் கந்தரோடையை இனம் கண்டார்கள்.
தொல்லியலாய்வுகள்
கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாகக் கீழ்க்காணும் ஆய்வாளர்கள் கந்தரோடையில் தொல்லியல் மேலாய்வுகளையும், தொல்லியல் அகழாய்வுகளையும் இலங்கை அரசின் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் மேற்கொண்டிருக்கிறார்கள். இவற்றில் சில ஆய்வுகளின் அறிக்கைகள் இதுவரை வெளிவரவில்லை. ஆய்வுகளில் கண்டெடுத்த தொல்பொருட்களில் பெரும்பாலானவை அநுராதபுர, மற்றும் கொழும்பு அருங்காட்சியகங்களுக்கும், யாழ்ப்பாண அருங்காட்சியகத்திற்கும், சில தனியாரிடமும் சென்றடைந்திருக்கின்றன.
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கந்தரோடையில் தொல்லியல் மேலாய்வுகளையும், அகழாய்வுகளையும் மேற்கொண்டவர்கள்:
போல் பீரிஸ்: 1917, 1919.
கொடகும்புர, C.E: 1966-1967 – அறிக்கை 1968.
விமலா பெக்லி: பெப்ரவரி-மார்ச் 1967.
விமலா பெக்ளி, பென்னெற் புரொன்ஸன்: ஜூன்-ஆகஸ்ட் 1970.
இலங்கைத் தொல்லியல் திணைக்களம்: 1971.
இந்திரபாலா, சிற்றம்பலம், இரகுபதி: 1983.
பொன்னம்பலம் இரகுபதி: 1987.
கிருக்ஷ்ணராஜா: 1994-1995.
புக்ஷ்பரட்ணம், நிமால் பெரேரா: 2011.
பார்பரா ஹெல்விங், நிமால் பெரேரா: 2018-19.
கந்தரோடைத் தொல்லியல் மேலாய்வுகள்
1917-1919 ஆம் ஆண்டுகளில் கந்தரோடையில் போல் பீரிஸ் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளின் பின்னர் அரைநூற்றாண்டுகளாகக் கந்தரோடைத் தொல்லியல் மையம் கவனிப்பாரற்றுக் கிடந்தது. 1956 முதல் 1967ஆம் ஆண்டுவரை இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் ஆணையாளராக (Commissioner of Archaeology) பணியாற்றிய சாள்ஸ் எட்மண்ட் கொடகும்புர (Charles Edmund Godakumbura) தனது பதவிக்காலத்தின் இறுதிப்பகுதியில் கந்தரோடையில் கவனம் செலுத்தினார். 1917-1919 ஆம் ஆண்டுகளில் கந்தரோடையில் தொல்லியலாய்வுகளை மேற்கொண்ட போல் பீரிஸ் முக்கியமாக மேலாய்வுகளையும், சில கிடைமட்ட அகழ்வுகளையுமே (Horizontal excavations) செய்திருந்ததை அறிந்திருந்தார். இவ்விடங்களில் முறையான அடுக்கமைவு அகழ்வுகள் செய்ய வேண்டிய தேவையை உணர்ந்தார். இலங்கை அரசின் அனுமதியோடு, தமிழ்நாட்டில் அரிக்கமேட்டில் தொல்லியலாய்வை மேற்கொண்டிருந்த அமெரிக்க பென்ஸில்வேனியப் பல்கலைக்கழக அரும்பொருட்காட்சியகத்தின் தொல்லியலாளர்களை இலங்கை வந்து பொம்பரிப்பிலும், கந்தரோடையிலும் தொல்லியல் அகழாய்வை நிகழ்த்தித்தருமாறு அழைத்திருந்தார். அத்துடன் 1966 ஆம் ஆண்டில் கந்தரோடையில் தொல்லியல் திணைக்கள அகழாய்வுகளையும் தானே ஆரம்பித்திருந்தார்.
இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆணையாளரான கொடகும்புரவின் அழைப்பை ஏற்றுக்கொண்ட அமெரிக்கப் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத்தினர் முதலில் 1967 ஆம் ஆண்டில் கந்தரோடையில் ஒரு தொல்லியல் மேலாய்வை மேற்கொள்ளுவதாகவும், அது ஆக்கவளமுடையதாக (Productive) இருப்பின் பின்னால் விரிவான அகழ்வை மேற்கொள்ளவும் முடிவடுத்தனர்.
1967 ஆம் ஆண்டு பெப்ரவரி-மார்ச் மாதங்களில் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தின் தலைவராக இருந்த தொல்லியலாய்வாளர் விமலா பெக்லி கந்தரோடை வந்து தொல்லியல் மேலாய்வுகளை மேற்கொண்டார்.

இலங்கையில் அதுவரை காலமும் (1967 வரை) மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் தொல்பொருட்களின் சரியான காலக்கணிப்புகளோ, அல்லது அவற்றின் பண்பாட்டு வளர்ச்சி அடுக்குகளோ (Culture sequences) வரையறுக்கப்படவில்லை. அதன் காரணமாக அதுவரை ஆய்வு செய்யப்பட்ட பிராந்தியங்களின் காலக்கிரமமான வரலாற்று வளர்ச்சியை அதுவரை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் கண்டறிவது இயலாத காரியமாக இருந்தது.
கந்தரோடைக் கிராமம் தெளிவாகப் பிரிக்கக்கூடிய இரு பகுதிகளைக் கொண்டிருந்தது: ஒன்று மக்களின் வதிவிடக் கிராமம், மற்றது அதற்குத் தெற்கேயுள்ள பனந்தோப்பு. அந்தப் பனந்தோப்பில் இருந்த மண்மேடுகள் பௌத்த தாதுகோபங்கள் இருந்த இடங்களாக இருக்கலாம் என போல் பீரிஸ் கருதினார் (Pieris, P.E. 1917: 11-30: 1919: 40-67). பீரிஸ் மேற்கொண்ட சிறிய அளவிலான அகழ்வுகளில் பளபளப்பாக மெருகிட்ட ஓடுகள், சுண்ணாம்புக் கற்கள் என்பன காணப்பட்டன. அக்கிராம மாணவர்களிடமிருந்து முத்திரை குத்திய மற்றும் ரோமாபுரி நாணயங்களையும் பெற்றுக்கொண்டதாகப் பதிவு செய்திருந்தார் (Begley, V. 1967: 23).
விமலா பெக்லி கந்தரோடையில் மேலாய்வுகளை மேற்கொண்ட மாதங்களில் இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆய்வாளர்கள் தெற்கேயிருந்த பனந்தோப்புப் பகுதியில் அகழ்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். அது பற்றிக் குறிப்பிட்ட விமலா பெக்லி “அந்த அகழ்வுகள் சிறிய அளவிலான தாதுகோபங்களின் அடித்தளங்களையும், அக்கட்டடங்களின் துண்டுப்பகுதிகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருந்தன.” (This excavation has so far brought to light the bases and architectural fragments of several small dagobas) எனப் பதிவு செய்திருந்தார் (Vimala Begley, V. 1967:p. 23).
“எங்களது அப்பிராந்திய மேலாய்வுகளில் மக்களின் வதிவிடம் தாதுகோப மையத்திலிருந்து வடக்கே சில பர்லாங்கு தூரத்தில் கந்தரோடைக் கிராமத்தில் காணப்பட்டது. கிராமத்தின் கரையில் வெட்டப்பட்ட ஒரு கிடங்கில், அக்கிராம ஒழுங்கைகளை அமைத்தபொழுதில் பெற்றுக்கொண்ட பெருந்தொகையிலான மட்பாண்ட ஓடுகளைக் குப்பையாகப் போட்டிருந்தார்கள். இம்மட்பாண்ட ஓடுகள் இரும்புக்கால, ஆரம்ப வரலாற்றுக்கால தென்னிந்திய மட்பாண்டங்களை ஒத்திருந்தன – அவையாவன பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களும், அரிக்மேட்டு வகை ரௌலெற்றெட் மட்பாண்டங்களுமாகும்.” (Vimala Begley, V. 1967: 24).
“அவ்விடத்தில் ஒரு சிறு குழியைத் தோண்டி ஆராய்ந்தபொழுது அக்குழி 12 அடி அழம்வரை வெவ்வேறு காலப்பகுதிகளுக்குரிய மக்களின் வதிவிடக் கழிபொருட்களைக் காட்டியது. அக்குழியின் அடிமட்டக் கன்னிநிலம் வரை அகழ முடியவில்லை. அக்குழியின் மேல் மட்டங்களிலேயே கி.பி. முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளுக்குரிய தொல்பொருட்களைக் காணமுடிந்தது. இவைதவிர இரும்புத் தாது, ‘கோறல்’ கற்கள், லக்க்ஷ்மி பதக்கவில்லைகள் (Lakshmi plaques) என்பன அக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.” (Vimala Begley, V. 1967: 24).
“கந்தரோடைக் கிராமத்திற்கு அப்பாலும் சில மேலாய்வுகளை மேற்கொண்டிருந்தோம். மேற்கே கந்தரோடைக் கிராமத்திலிருந்து கடல்வரை செல்லும் கால்வாய்க்குப் பக்கத்தில் அம்மன் கோயிலுக்குச் சமீபமாகப் பல மண்குன்றுகள் காணப்பட்டன. இன்னும் சற்றுத்தள்ளி பழைய கட்டடங்களின் இடிபாடுகள் காணப்பட்டன.” (Begley, V. 1967). இந்த மேலாய்வின் அறிக்கை பென்ஸில்வேனியப் பல்கலைக்கழக 1967 ஆம் ஆண்டின் கோடைகால அறிவிப்பு வெளியீடாக வெளிவந்தது.


தொல்லியல் ஆய்வுகளை அடிப்படையாகக்கொண்ட கந்தரோடை வரலாற்றியல்
1970 ஆம் ஆண்டு ஜீன்-ஆகஸ்ட் மாதங்களில் அமெரிக்கப் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தின் தொல்லியலாளர்கள் கந்தரோடையில் மேற்கொண்ட அகழாய்வுகளின் கண்டுபிடிப்புகளும், அக்குழுவிற்குத் தலைமை தாங்கிய விமலா பெக்லி 1967 ஆம் ஆண்டு பெப்ரவரி-மார்ச் மாதங்களில் கந்தரோடையில் மேற்கொண்ட மேலாய்வுகளும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினர் 1980-1981 டிசம்பர்-பெப்ரவரி மாதங்களில் கந்தரோடைக்கு அருகாமையிலுள்ள ஆனைக்கோட்டையில், பேராசிரியர் இந்திரபாலாவின் தலைமையில் மேற்கொண்ட அகழாய்வுகளின் கண்டுபிடிப்புகளுமே கந்தரோடை வரலாற்றியலின் (Historiography – வரலாற்று மெய்மை) கருப்பொருளாக அமைகின்றன. இந்த ஆனைக்கோட்டை அகழாய்வு அடுத்து வரும் இயலில் விரிவாகப் பேசப்படும்.
மேலே கூறப்பட்ட ஆய்வுகளோடு 1917-1919 ஆண்டுகளில் போல் பீரிஸ் கண்டெடுத்த தொல்பொருட்களும், 1967 ஆம் ஆண்டில் இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆணையாளராகவிருந்த கொடகும்புர அவர்களது அகழாய்வின் கண்டுபிடிப்புகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. 1980களில் கலாநிதி இரகுபதியின் தொல்லியல் மேலாய்வுகளும், 1994-1995 ஆண்டுகளில் யாழப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செல்லையா கிருக்ஷ்ணராசா கந்தரோடையில் உச்சாப்பனை என்ற இடத்தில் இலங்கைத் தொல்லியல் திணக்களத்தினரின் அனுமதியோடு மேற்கொண்ட அகழாய்வுகளும், 2011 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பரமு புக்ஷ்பரட்ணம் இலங்கைத் தொல்லியல் திணைக்கள உதவி ஆணையாளராகவிருந்த நிமால் பெரேராவுடன் இணைந்து மேற்கொண்ட கந்தரோடை அகழாய்வின் கண்டுபிடிப்புகளும், 2018 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய சிட்னிப் பல்கலைக்கழகத் தொல்லியல் பேராசிரியர் பார்பரா ஹெல்விங் கந்தரோடையில் மேற்கொண்ட அகழாய்வின் தொல்பொருட்களும், 2018 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் டொறியன் புல்லர் மேற்கொண்ட கந்தரோடைத் தொல்தானியங்களின் கதிரியக்கக் கரிம ஆய்வுகளும் இங்கே கூறப்படுகிறது. இக்கண்டுபிடிப்புகள் அனைத்தும் கந்தரோடை வரலாற்றியலின் உருவாக்கத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
கந்தரோடையின் சமீபகால அகழாய்வுகளில் கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அதன் பெறுபேறுகள் இலங்கை அரசின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளால் அறிக்கைகளில் வெளியிடப்படுவதில்லை. அவர்களில் ஒரு சிலர்தான் விதிவிலக்கானவர்கள். கந்தரோடையில் முதன்முதலாக விஞ்ஞான-அறிவியல் ரீதியிலான அகழாய்வை மேற்கொண்ட அமெரிக்கப் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத்தின் தொல்லியளாளர்களை இலங்கைக்கு வரவழைத்ததில் கலாநிதி கொடகும்புர, கலாநிதி சத்தமங்கல கருணரத்தின இருவரினதும் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
காலப்பகுதி I: ஆதி இரும்புக்காலம் – கி.மு. 1350-600.
வரலாற்றிற்கும் முற்பட்டகாலப் பெருங்கற் பண்பாட்டுப் பரவல்
அமெரிக்காவின் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விமலா பெக்லியின் தலைமையிலான குழுவினர் 1970 ஆம் ஆண்டில் ஜூன்-ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கந்தரோடையில் மேற்கொண்ட அறிவியல்பூர்வமான அகழாய்வே வெளிநாட்டவர்களின் முயற்சியால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது அகழாய்வாகும். இந்த அகழ்வில் கண்ட முக்கியமான தொல்பொருட்கள் அமெரிக்காவிற்கு கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பிற்கு (Radiocarbon C-14 Dating) அனுப்பிவைக்கப்பட்டன. விமலா பெக்லியின் விவரமான 1970 ஆம் ஆண்டின் கந்தரோடை அகழாய்வு அறிக்கை அன்றைய அரசினால் தடைசெய்யப்பட்டது. அது இன்றுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் விமலா பெக்லி, 1970 இல் கந்தரோடை அகழாய்வில் கண்டெடுத்த முக்கியமான சில தொல்பொருட்களைப் பற்றி அமெரிக்க கோர்ணல் பல்கலைக்கழகம் 1973 இல் வெளியிட்ட ஒரு நூலில் கூறியிருந்தார் (Begley, V. 1973).
ஆரம்பகாலக் குடியிருப்புகள்: கி.மு. 1350
தென்னாசியாவில் ‘ஹோமோ செப்பியன்ஸ்’ (Homo sapiens) எனப்படும் நவீன மனிதர்களின் சமூகங்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களுள் யாழ்ப்பாணத் தீபகற்பமும் ஒன்றாகும். இப்பிரதேசத்தில் இம்மனிதக் குடியிருப்புகளின் சரியான ஆரம்பகாலத்தை அறிய முடியாது போனாலும், இற்றைக்கு 3350 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கே நவீன மனிதர்களின் குடியிருப்புகள் இருந்தன என்பதை தொல்லியலாய்வுகளில் கண்டெடுத்த அம்மனிதர்களின் பாவனைப்பொருட்களின் தேதிக்கணிப்புகளைக் கொண்டு கண்டறிய முடிகிறது. இவற்றுள் ஆரம்பப் பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகள் உபயோகத்திலிருந்த காலப்பகுதியை இப்பிராந்தியத்தில் மக்களின் குடியேற்றங்கள் ஆரம்பித்த காலமாகக் கொள்ளலாம். இதை அறிந்து கொள்வதற்கு இம்மட்பாண்டங்களின் காலக்கணிப்பு அவசியமாகிறது.
1970 ஆம் ஆண்டு ஜீன்-ஜீலை மாதங்களில் கந்தரோடையில் அறிவியல்பூர்வமான அகழாய்வை மேற்கொண்ட அமெரிக்கப் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத் தொல்லியலாளர்கள், அங்கே கண்டெடுத்த தொல்பொருட்களை அமெரிக்காவின் கதிரியக்கக் கரிம ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பெறுபேறு பற்றி நீண்டகாலமாக இலங்கையின் தொல்லியல் திணைக்களத்தினர் எதுவிதமான அக்கறையும் காட்டவில்லை.
1977 ஆம் ஆண்டில் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்ட பிரபல தொல்லியராளரான சிரான் தெரனியகல, 1970 ஆம் ஆண்டில் கந்தரோடை அகழ்வுகளில் பங்கு பற்றிய பென்னெற் புரொன்ஸனைத் தொடர்புகொண்டு கந்தரோடையில் கண்டெடுத்த தொல்பொருட்களின் கதிரியக்கக் கரிமக் கணிப்புத் திகதிகளைப் பெற்றுக்கொண்டார். இந்த அறிவிப்பு 08-02-1982 திகதியிட்ட இலங்கைப் பத்திரிகை ‘Weekend’ இலும், பின்னர் இரகுபதியின் 1987 ஆம் ஆண்டின் யாழ்ப்பாணத் தொல்லியலாய்வு நூலிலும் வெளியானது.

இத்தொல்லியல் பொருட்களில் P-2515, P-2525 என அடையாளமிட்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் முறையே கி.மு. 1290±60 ஆண்டையும், கி.மு. 980±220 ஆண்டையும் தந்திருக்கின்றன. இக்காலக்கணிப்பின்படி கி.மு. 1350 ஆண்டளவில் உபயோகப்படுத்தப்பட்ட மட்பாண்டங்கள், அக்காலத்தில் இங்கே பெருங்கற்கால மக்களின் குடியேற்றங்கள் இருந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன (Ragupathy, P. 1987:205, Thiagarajah, S. 2016: 42)
இலங்கையில் பெருங்கற் பண்பாட்டின் நுழைவாயில் கந்தரோடை
கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் அவ்விடத்தில் பரவியிருந்த பெருங்கற்பண்பாட்டின் முக்கியமானதொரு அங்கமாகும். முதன்முறையாக 1970 ஆம் ஆண்டில் விமலா பெக்லியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கந்தரோடை அகழ்வாராய்ச்சியின்போது பெருங்கற்காலப் பண்பாட்டுச் சுவடுகள் பல இங்கே கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த இடத்தில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் பற்றியும், பெருங்கற் பண்பாட்டில் அவற்றின் சிறப்பிடம் பற்றியும் சில வரிகள் கூறுவது அவசியமாகிறது. முதன்முதலாக சிந்துவெளி நகரங்களில் கி.மு. 3000-2800 ஆண்டு காலங்களில் இனங்காணப்பட்ட இவ்வகையான மட்பாண்டங்கள் பின்னர் இந்தியத் துணைக்கண்டம் எங்கும் பரவி, பின்னர் கி.மு. 1800 ஆண்டளவில் கர்நாடகத்தில் பிரம்மகிரி, மஸ்கி ஆகிய மையங்களில் காணப்படும் பெருங்கற் புதையல்களில் காணப்படுகின்றன. தென்னாசியச் சூழமைவில் பெருங்கற் பண்பாடும், அதன் ஓர் அம்சமான கறுப்பு-சிவப்பு மட்பாண்டமும் திராவிட மக்களுக்குரிய தனித்துவமான பண்புகளாகும் (இது பற்றிப் பின்னொரு இயலில் விரிவாகப் பேசப்படும்).
பெருங்கற் பண்பாடானது முக்கியமாக இறந்த மக்களை அடக்கம் செய்யும் பெருங்கற்களைக்கொண்ட கல்லறைகளை உள்ளடக்கியது. இறந்தவர்களை அடக்கம் செய்த பின்னர் பெரிய கற்பாறைகளை கற்பலகைகளாக வெட்டியோ, அல்லாமலோ அடக்கத்தைச் சுற்றிவர நட்டு மேலாக மற்றொரு கற்பலகையால் மூடிவிடுவார்கள். இந்த அடிப்படை முறையிலிருந்து பலவகையான மாறுபாடுகள் காணப்படுகின்றன. தமிழகத்தின் தாழிப்புதையல்கள் இப்பண்பாட்டின் மற்றொரு அங்கமாகும். இம்மாதிரி பெருங்கற்களைக் கொண்ட சமாதிகளும், வழிபாட்டு நடுகற்களும் பண்டைய உலகின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தைப் பொறுத்தவரையில் தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிட மொழிகளைப் பேசும் மக்களே இந்த அடக்க முறைகளைக் கடைப்பிடித்தவராவர்.
பெருங்கற் பண்பாடு என்பது மேற்கூறப்பட்ட பெருங்கற்களைக்கொண்ட கல்லறைகள் அல்லது தாழிப் புதையல்களோடு இரும்பின் தொழில்நுட்பம், குளம் மற்றும் அணைக்கட்டு ஆகியவற்றின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன விவசாயம், உழுவதற்கான ஏர், நெற் பயிர்ச்செய்கை, மட்பாண்டம் வனையும் சில், கறுப்பு-சிவப்பு மட்பாண்டம், அம்மட்பாண்டங்களில் காணப்படும் எழுத்துகள் ஆகிய பண்புகளை உள்ளடக்கியதாகும்.
செக்கோசிலாவாக்கிய நாடு தந்த சமஸ்கிருத, தமிழ் மொழிகளின் மொழியியல் விற்பன்னர், பேரறிஞர் கமில் ஸ்வெலபில்லின் கூற்று இது:
“கறுப்பு-சிவப்பு மட்பாண்டம் திராவிடமொழி பேசும் மக்கள் காவிச்சென்ற பண்பாட்டு அடையாளம். அதன் அகில இந்திய பரவல், இவர்கள் ஒருகாலத்தில் இந்தியா முழுவதிலும் பரவி இருந்தார்கள் என்பதற்கான சான்று. கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களும், வேதகாலப் பண்பாட்டின், தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்களும் ஒன்றாகக் காணப்படும் கி.மு. 500 ஆம் ஆண்டுகாலப்பகுதி பெருவாரியான திராவிடமொழிச் சொற்கள் சமஸ்கிருத மொழியில் உட்புகுந்த காலமாகும்” (Kamil Zvelebil 1965: 65-69).
இலங்கையின் பெருநிலப்பரப்பில் காணப்படும் பெருங்கற் சமாதிகளினதும், தாழிப்புதையல்களினதும் அவற்றோடு காணப்படும் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களினதும் காலக்கணிப்புகள் கி.மு. 1000 ஆண்டையும், அதற்குப் பிந்திய ஆண்டுகளையுமே தருகின்றன. இவற்றை நோக்குமிடத்து இப்பெருங்கற் பண்பாடும், அதனோடு சேர்ந்த கறுப்பு-சிவப்பு மட்பாண்ட உபயோகமும் கந்தரோடை வழியாகவே இலங்கைக்குப் பரவியிருக்கின்றன என எண்ணத் தோன்றுகிறது.
பெருங்கடல் வர்த்தக – பண்பாட்டுப் பரிமாறல்கள்
யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் மூன்று கரையோரங்களிலும் அமைந்திருந்த இறங்குதுறைகள், துறைமுகங்களான யாழ்ப்பாணப்பட்டினம், யம்பு கோவளம், காயாத்துறை, கல்கோவளம் (பருத்தித்துறை) என்பன பல்வேறு நாடுகளுடன் வர்த்தக – பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பரிமாறிக்கொள்ளும் வாயில்களாக விளங்கின. யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் கரையோரங்களில் உள்ள இறங்குதுறைகளினதும், துறைமுகங்களினதும் பெயர்களைக் கவனிக்கும்போது இந்த உண்மை நன்கு புலப்படும்.
அன்றைய யாழ்ப்பாணத் தீபகத்திற்கு மிக அருகிலிருந்த தமிழகத்துடனேயே ஆரம்பகாலக் கடல் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. அதன் காரணமாக தமிழகத்தின் வரலாற்றுப்போக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் வரலாற்றுப் பண்புகளைப் பெருமளவுக்கு இயக்கியிருக்கிறது. கி.மு. 1350 ஆம் ஆண்டளவில் கந்தரோடையில் காணப்படும் கறுப்பு-சிவப்பு மட்பாண்ட உபயோகம், ஆனைக்கோட்டையில் கண்ட தாழிப்புதையல் (பின்னர் பேசப்படும்), விவசாயத்தின் வருகை ஆகிய பெருங்கற் பண்பாட்டு அம்சங்கள், அதற்குப் பல ஆயிரத்தாண்டுகள் முன்பிருந்தே தமிழகத்திற்கும், யாழ்ப்பாணத்திற்குமிடையே எற்பட்டிருந்த கடல்வழித் தொடர்புகளின் பெறுபேறுகளாகும்.
கந்தரோடையின் நிரந்தரக் குடியிருப்புகள்; குளத்து நீரைப் பாச்சி, ஏர் பிடித்து உழுது மேற்கொண்ட நெற்பயிர் விவசாயம்; செம்பு, வெண்கலம், இரும்பு ஆகிய உலோகங்களை உபயோகித்த தொழில்நுட்பம்; உருளும் சில்லை உபயோகித்து வனைந்தெடுத்த மட்பாண்டங்கள்; நீண்டதூர நெடுங்கடல் வர்த்தகம்; சமூக அமைப்பு; எழுத்துருவாக்கம்; ஆட்சிபுரியும் ஓர் அரச வர்க்கம் என்பன பெருங்கற் பண்பாட்டு வழியாகப் பெற்றுக்கொண்ட கந்தரோடை நாகரிகத்தின் பேரெழுச்சியாகும். இந்தக் காலகட்டங்களை எடுத்துரைக்கும் தொல்லியல் சான்றுகள் இனிமேல் உரைக்கப்படும்.
கந்தரோடை உள்நாட்டு மட்பாண்டங்கள்
கந்தரோடையில் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத்தினரால் நடாத்தப்பட்ட தெல்லியலாய்வின் அடிப்படையில் இப்பிரதேசத்து மட்பாண்டங்களின் தன்மை, தொன்மை பற்றி அறியக்கூடியதாகவுள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகத் தொல்லியலாளர்கள் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்ட வகைகளை மூன்று பெரும் பிரிவுகளாக வகுத்து தமது ஆய்வினைச் செய்துள்ளனர் (Orton, N. 1995; கிருக்ஷ்ணராசா, செ. 1998).
இதில் முதலாவது வகையினை ‘A’ என வகுத்துள்ளனர். இவ்வகையைச் சேர்ந்த மட்பாண்டங்களின் கழுத்து வளையங்கள் (Rim) ரோமச்சிவப்பு நிறத்தினைக் (Roman Red) கொண்டிருக்கின்றன. இவ்வகையான சிவப்பு மட்பாண்டங்கள் அரிக்கமேட்டு மட்பாண்டங்களிலிருந்து வேறானவை. இம்மட்கலன்களை இரகுபதி ‘ஆரம்ப கால சிவப்பு மட்கலன்கள்: கி.மு. 1200 – கி.மு. 300’ என வகைப்படுத்தியிருக்கிறார் (Ragupathy, P. 1987: 9).
இரண்டாவது ‘B’ வகையான மட்பாண்டங்களை கறுப்பு-சிவப்பு வண்ண மட்பாண்டங்கள் என வகுத்துள்ளனர். இவை பெருமளவுக்கு தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களுக்குரிய மட்பாண்ட வகைகள் எனவும் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வகையான மட்பாண்டங்கள் தென்னிந்தியாவில் அரிக்கமேட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களை ஒத்துக் காணப்படுகின்றன எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இவ்வகையான மட்பாண்டங்களின் பரவலான உபயோகம் தென்னிந்தியாவில் இரும்பின் உபயோகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது (Orton, N. 1995; கிருக்ஷ்ணராசா, செ. 1998: 39).
மூன்றாவது ‘C’ வகையைச் சேர்ந்த மட்பாண்டங்களே அதிகளவில் கிடைத்துள்ளன. இவற்றினைச் சமையல் மற்றும் அன்றாட உபயோகங்களுக்காக மக்கள் கொண்டிருந்தமையால் இவை தடிப்பாகவும், தடிப்பான விளிம்புகளை உடையனவாகவும், பெரிய உருவத்தைக் கொண்டனவாகவும் உருவாக்கப்பட்டன. ‘சாடி’ வகையான மட்பாண்டங்களும் இவற்றில் அடங்கும். சில மட்பாண்டங்களில் ‘கிராபிற்றி’ கீறல் குறியீடுகள் காணப்பட்டன (Orton 1995; கிருக்ஷ்ணராசா 1998).
இந்த மட்பாண்டங்களின் வடிவமைப்புகளும், அவற்றில் காணப்பட்ட கீறல் குறியீடுகளும் (Graffiti marks) இலங்கையின் மற்றைய தொல்லியல் மையங்களான அநுராதபுரம், பொம்பரிப்பு, திவுல்வேவா, மகேவித்த ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்பண்பாட்டு மட்பாண்டங்களை ஒத்திருந்தன (Sitampalam, S.K. 1993: 12). இவற்றுள் காணப்பட்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களைப் பற்றி கருத்துக்கூறிய விமலா பெக்லி இந்த கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் தென்னிந்திய இரும்புக்கால மட்கலன்களை ஒத்திருப்பதாகவும், “கந்தரோடையில் குடியேற்றம் பெற்ற மக்கள் தென்னிந்திய மக்களின் கலாசார சமுதாயச் சூழலின் வழித்தோன்றல்களாகவோ, அல்லது அவர்களோடு நெருங்கிய கலாசாரத் தொடர்பு கொண்டவர்களாகவோ இருந்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார் (The people of Kantarodai have either descended from the same cultural milieu as the South Indians or have had very close cultural contacts with them) (Begley, V. 1973).
கந்தரோடையில் மிகப்பழமையான உள்ளூர், மற்றும் வெளியூர் மட்பாண்டங்கள் காணப்படுகின்றன. அவ்விடத்தில் பெருங்கற்கால முறிவளைவு கொண்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் (கி.மு. 1500 – கி.மு. 300), மற்றவகை கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் (கி.மு. 700 – கி.பி. 300), ஆரம்பகால சிவப்பு மட்கலன்கள் (கி.மு. 1200 – கி.மு. 300) என்பனவற்றோடு கி.மு. 500 ஆம் ஆண்டிற்குரிய பளிங்கு மெருகூட்டப்பெற்ற கிரேக்க ‘ரௌலெற்றெட்’ கலனொன்றும் காணப்பட்டது (Ragupathy, P. 1987: 58).




இந்த ஆதி இரும்புக்கால அகழாய்வு மட்டத்தில் இரும்பு ஆணிகள், இரும்புக் கருவிகள், மற்றும் செம்பு, வெண்கலக் கருவிகளும் காணப்படுகின்றன. வெண்கலப் பொருட்களில் திரிசூலம், இலை போன்ற வடிவில் அமைந்த வேல் என்பன குறிப்பிடத்தக்கவை. திரிசூலம், வேல் என்பன தென்னிந்தியப் பெருங்கற் புதையல்களிலும் காணப்படுகின்றன. இவை சைவ மதத்தின் முன்னோடியான பெருங்கற்காலச் சமய வழிபாட்டிற்குரிய பொருட்களாகும். (Sitampalam, S.K. 1993: 11-12).

இங்கே வெண்கலத்தினாலும் செம்பினாலும் செய்யப்பட்ட, முனைகள் சற்றுத் தடித்த உருண்டையான குச்சிகள் பல நீளங்களில் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் நீளமானவை, 4-5 அங்குல நீளம் கொண்டவை. இம் மாதிரியான குச்சிகள் அலெக்ஸாந்தர் காலத்தில் ரக்ஸிலாவில் (தக்க்ஷசீலம்) உபயோகத்தில் இருந்தன என பீரிஸ் குறிப்பிடுகிறார் (Pieris, P.E. 1919: 61). இவற்றைப் பரிசீலனை செய்த சிற்றம்பலம் இவை பெண்கள், தங்கள் கண்களுக்கு மை தீட்டுவதற்காக உபயோகித்த ‘கோலக்குச்சிகள்’ (Kohl sticks) என அடையாளம் காண்கிறார். இப்படியான ஒரு செப்புக் குச்சியில், நெல்லின் அடையாளம் பதிந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் (Sitrampalam, S.K. 1993: 11-12). இப்படியான கோலக்குச்சிகள் பண்டைய எகிப்தியப் பெண்களிடையே கி.மு. 1500 ஆம் ஆண்டுகளில் பாவனையில் இருந்திருக்கிறது.


அகழ்வாராய்ச்சியாளர் போல் பீரிஸ் தனது கந்தரோடை அகழ்வாராய்சிக்காக ரூபா 150 மட்டுமே தரப்பட்டதாகவும், அப்பணம் முடிந்ததும் தனது அகழ்வுகளை நிறுத்திவிட்டதாகவும் கூறியிருக்கிறார் (Pieris, P.E. 1919: 40). அகழ்வு செய்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஆறு அங்குல உயரமான ஒரு பெண் தெய்வத்தின் உருவம், அதன் வலது கரம் ‘அபயஹஸ்த’ முத்திரையையும் (காத்தல் அடையாளம்), இடது கரம் ‘வரதஹஸ்த’ முத்திரையையும் (செல்வம் அளிக்கும் அடையாளம்) காட்டி நின்றது எனக் குறிப்பிட்டிருக்கிறார் (Pieris, P.E. 1919: 60). இத்தெய்வம் லக்க்ஷ்மி என அடையாளம் காணப்படுகிறது. இப்படியான செப்பு, அல்லது வெண்கலப் பட்டயங்களை அக்கால மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வணங்கி வந்தார்கள்.

அகழ்வுகளில் பலவகையான இரும்புத் துண்டுகளும், இரும்பை உருக்கி வேலை செய்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டன. இவற்றில் மிகப்பழமையானது எது, பழமையில்லாதது எது என அடையாளம் காண முடியவில்லை. மேலும், அங்கே காணப்பட்ட சிவப்பு நிறமான இந்தியத் தங்கத்துண்டுகள் தங்க ஆபரணங்களின் உடைந்த துண்டுகள் என இனங்காணப்பட்டன (Pieris 1919: 62).
கந்தரோடையின் பெருங்கற்பண்பாட்டுக்காலம் கால்நடைகள், பசு, நாய் ஆகிய பிராணிகளை வீட்டுச்சூழலில் பழக்கியெடுத்து, அவற்றை அச்சூழலில் பற்றுக்கொள்ள வைத்த காலப்பகுதியுமாகும். அகழ்வுகளில் காணப்பட்ட பெருவாரியான கால்நடை எலும்புகள், எருதுகள் விவசாய நடவடிக்கைகளுக்காக உபயோகிக்கப்பட்டதை எடுத்துக்காட்டுகின்றன. நாய்களின் எலும்புகள், அவை பழக்கப்பட்ட வீட்டு மிருகங்களாக வளர்க்கப்பட்டதைக் காட்டுகின்றன. பறவைகளின் எலும்புகள், மீன் முள்ளுகள் அவை உணவாக உட்கொள்ளப்பட்டதைக் காட்டிநிற்கின்றன. ஆட்டெலும்புகளில் காணப்படும் கூர்மையான வெட்டுகள், அவை உணவாக உட்கொள்ளப்பட்டதற்கான சான்றுகள் ஆகும். அருகிலுள்ள ஆனைக்கோட்டைக் கிராமத்தில் காணப்பட்ட பெருங்கற் பண்பாட்டுப் புதையல்கள், பெருவாரியான கறுப்பு-சிவப்பு மட்பாண்ட ஓடுகளின் இருப்பு, இரும்பின் பாவனை, வயல்கள், குளங்கள், விவசாய நடவடிக்கைகள் என்பன அனைத்தும் ஒரு பெருங்கற் பண்பாட்டின் புராதன நடைமுறைகளை எடுத்துக்காட்டுகின்றன (சிற்றம்பலம், சி.க. 1993: 10-13).
தொடரும்.