உலகில் உள்ள ஜீவராசிகளின் உயிர்வாழ்வுக்கு நீர் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். உலகிலே மொத்தமாக 1400 மில்லியன் கனகிலோமீற்றர் நீர் உள்ளது. உலகச் சமநிலையில் இதன் அளவைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது (ஆனால் இதன் இருப்பின் விகிதத்தையே மாற்ற முடியும்).

பூமியில் உள்ள மொத்த நீரில், 97.4% ஆனது உப்பு நீராகும். எஞ்சிய 2.6% மட்டுமே நன்னீர் ஆகும். இந்த 2.6% நன்னீரில், சுமார் 2% ஆனது பனிக்கட்டியாகத் துருவங்களிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் உறைந்துள்ளது. மீதமுள்ள 0.6% நன்னீரின் மொத்த அளவு சுமார் 8.4 மில்லியன் கன கிலோமீட்டர்கள் ஆகும். இந்தப் பங்கீட்டிலும், 8 மில்லியன் கன கிலோமீட்டர்கள் நிலத்தடி நீராகவும், 0.4 மில்லியன் கன கிலோமீட்டர்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட குளங்கள், இயற்கை ஆறுகள், மற்றும் ஏரிகளிலும் உள்ளன. இருப்பினும், இந்த நீர் இருப்பும்கூடச் சமமாக எல்லா இடங்களிலும் பரவி இல்லை. இதன் காரணமாகவே இயற்கையின் படைப்பில் சில இடங்கள் நிரந்தரப் பாலைவனங்களாகவும், சில இடங்கள் நீர் வளம் மிகுந்த சோலைகளாகவும் காணப்படுகின்றன.
இலங்கையில் நீர்ப்பாவனையானது மனிதனால் உண்டாக்கப்பட்ட நீர்த்தேக்கங்களில் இருந்தும், இயற்கை ஆறுகளில் இருந்தும், நிலத்தடி நீரில் இருந்தும் பெறப்படுகின்றது. அண்மைய காலங்களில் இலங்கையில் உள்ள அநேகமாக எல்லா நீரூற்றுப் பிரதேசங்களும் நீர்த்தேக்கங்களாக மாற்றப்பட்டு விட்டதனால், வீட்டுப்பாவனை மற்றும் சனத்தொகைக்கேற்ப அதிகரித்து வரும் விவசாய நீர்த் தேவைகளுக்கு நிலத்தடி நீரைப் பாவிக்கும் தன்மை அதிகரித்து வருகின்றது.
நிலத்தடி நீரானது மூன்று வகையில் நிலத்தில் இருக்கின்றது.
1. மிக ஆழமான இரட்டை ஊடுபுகவிடா பாறைகளுக்கிடையில் உள்ள நீர்.
2. ஊடுபுகவிடா பாறையில் மேல் தொங்கியுள்ள நீர்.
3. மழை நீர் நிலத்தினுள் சென்று மண்ணில் உள்ள இடைவெளிகளில் தேங்கி இருக்கும் நீர்.
இம்மூன்றிலும் மூன்றாவது நீரானது ஒரு தற்காலிக இருப்பேயாகும். இரண்டாவது ஓரளவிற்கு நம்பகத்தன்மையுள்ள இருப்பாகும். இந்த நீர் நம்மால் அநேகமாகக் கிணறுகளில் ஊற்றின் மூலம் பெறப்படும் நீராகும். முதலாவது வகை நீரானது மிகவும் பாரிய நிலத்தடி நீர்த்தேக்கங்கள் போன்றதாகும். இந்நீரானது, ஆறுகளால் நிலத்தின் கீழ் தொடர்ச்சியாக மீள் செலுத்தப்படுவதால், அதிக நம்பகத்தன்மை கொண்டதாகும். இதுவே ஆழ்துளைக் குழாய்க் கிணறுகள் மூலம் பெறப்படும் நீராகும்.
இவ்வாறாக இருப்பில் உள்ள நீரை முக்கியமாக இரண்டு வகைகளில் நாங்கள் நிலத்தில் இருந்து பெறுகின்றோம்.
1. வாளி மூலம் அள்ளுதல்.
2. பம்பிகள் மூலம் வெளியே எடுத்தல்.
இம்முறைகளில் வாளி மூலம் வெளியே எடுக்கும் நீரின் அளவானது மிகவும் குறைவாகவும், நீர் அள்ளும்போது நீர் ஊற்றிலிருந்து மீள் கிணற்றிற்குச் செலுத்தப்படும் நீரின் அளவிலும் குறைவாக இருப்பதால், இதனால் எந்த ஒரு பாதிப்பும் நிலத்தடி நீரிற்கு ஏற்படாது.
பம்பிகள் மூலம் நீர் எடுக்கும்போது இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. ஒன்று கைப்பம்பிகள், மற்றது மின்சார அல்லது எரிபொருள் பம்பிகள். கைப்பம்பிகள் மூலம் நீரை வெளியே எடுக்கும்போது, அது வாளியின் மூலம் எடுப்பதைப் போல, நீர்ப்பீடத்திற்கு இடையில் மிகத் துல்லியமாகவும், நேர்த்தியாகவும் அமைவதால், நிலத்தடி நீரின் இருப்பில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தையே ஏற்படுத்துகின்றது. ஆனால் மின்சார மற்றும் எரிபொருள் பம்பிகள் மூலம் நீர் எடுக்கும்போது நீர் பம்பும் விகிதமானது நீர் ஊறும் விகிதத்திலும் விட அதிகமாக இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து செல்லும்.
இவ்வாறாக, நீரின் அதிகப்படியான பயன்பாடு நிலத்தடி நீரின் இருப்பில் தாக்கங்களை ஏற்படுத்துவதுடன், நிலத்தின் வலிமையையும் குறைக்கிறது. நீண்டகால நோக்கில் பார்க்கையில், இது அப்பகுதிகளில் உள்ள கட்டடங்களின் அத்திவாரங்கள் இறங்குதல் போன்ற விளைவுகளுக்கும், சில சமயங்களில் மிகவும் நுண்ணியதான பூமி அதிர்வுகள் ஏற்படுவதற்கும் கூட இட்டுச்செல்லலாம்.
மேலும், மிதமிஞ்சிய நீர் பம்புதலால் நீரின் குணாதிசயத்தில் மாற்றம் ஏற்படும். நிலத்தடி நீரானது பொதுவாக நன்னீராக இருந்தபோதிலும், கடலை நோக்கிச் செல்லும்போது அதன் உவர்த்தன்மை சற்றுக் கூடிக்கொண்டே செல்லும். இத்தன்மையானது மாரி காலத்தில் குறைவாகவும், கோடை காலத்தில் சற்றுக் கூடியதாகவும், சாதாரண சூழ்நிலையில் சமநிலையிலும் இருக்கும். அதாவது நிலத்தடி நீரின் சமநிலையில் கடல் நோக்கிய ஒரு நாட்டம் எப்போதும் காணப்பட்டுக் கொண்டிருக்கும். மிகவும் வறண்ட கோடை காலங்களில் மிகச் சிறிய அளவில் எதிர்த் திசை ஓட்டம் இருக்கலாம்.
ஆனால் நீர்பரப்பும் விகிதம் அதிகரித்தால், நீர்மட்டம் தாமதமாக எதிர் ஓட்டத்தைத் தூண்டி நிலத்தடிச் சமநிலையைக் குழப்புகின்றது. இது நிலத்தடி நீரை உப்புநீராக மாற்றுவதனால் காலப்போக்கில் இப்பிரதேசம் உவர்நீர்ப் பிரதேசமாக மாறிவிடும். இவ்வாறான அபாயம் அநேகமாக குடாநாடுகள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் ஏற்பட வாய்ப்புண்டு. அதாவது, கடற்கரைகளில் இருந்து 5 கிலோமீற்றருக்கு உட்பட்ட பிரதேசங்கள் கூட இவ்வாறான பாதிப்பிற்கு உட்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இருந்தாலும், சனத்தொகைப் பெருக்கத்திற்கேற்ப எமது உணவுத் தேவை அதிகரித்துக்கொண்டே செல்வதால், பொது விவசாயத் தேவைகளுக்கு நிலமேல் நீர் வளம் போதுமானதாக இல்லை. எனவே, நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. கோடைகாலங்களில் நிலத்தடி நீரைத் தொடர்ச்சியாகப் பாவிக்க வேண்டிய தேவை தவிர்க்க முடியாதிருப்பின், மழைக்காலங்களில் இயற்கையாகவே நிலத்தடி நீரின் இருப்புக்கு மழை நீரின் பங்களிப்பை அதிகரிக்கக்கூடிய மாற்று வழிகளைக் கையாள வேண்டும். அதாவது மழை நீரை இயலக்கூடியளவிற்கு தேக்கவைத்து நிலத்தில் ஊறவிடுதல், கடலுக்கு மழை நீர் செல்லாது தடுத்து நிலத்தில் ஊறவிடுதல் மற்றும் சில சிறிய குளங்களை நீர்ப்பாசனத் தேவைகளுக்கு அல்லாது நிலத்தில் ஊறவிடுவதற்காக மட்டும் பாவித்தல் ஆகிய முறைகளைக் கையாளலாம்.
பண வசதி படைத்த நாடுகளில் செயற்கை முறையில் மாரி காலங்களில் நீரை நிலத்தின் கீழ் பம்பிகள் மூலம் பாய்ச்சும், மீள்பாய்ச்சல் முறையும் பாவனையில் உண்டு.
பாசனத்திற்கான நீர்
பாசனத்திற்கான மேற்பரப்பு நீர் ஒரு வரையறுக்கப்பட்ட வளமாக இருப்பதால், இணை ஆதாரமாக நிலத்தடி நீரின் பயன்பாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும், மைய வளமாகக் கருதப்படும் நிலத்தடி நீரின் நிலைத்தன்மை மற்றும் உற்பத்தித் திறனான பயன்பாட்டை பாதிக்கக்கூடிய பாகுபாடான சுரண்டல்கள், அதன் சமச்சீரற்ற எடுத்துக்காட்டலால் உருவாகின்றன.
பாரம்பரியக் கமத்தொழில் பகுதிகளில், விசேடமாக உலர் வலயத்தில், ஏனைய துறைகளுடனான போட்டித் தன்மையான கிராக்கி, நீர்ப் பற்றாக்குறையை விளைவிக்கின்றது. வளப்பட்டியலுக்கு வழிவகையின்றி ஒழுங்குபடுத்தப்படாத சுரண்டலின் காரணமாக இரண்டாந்தர மூலமாக நிலநீரின் இணைப்பிலான உபயோகம் ஆரம்பநிலை மட்டங்களைப் படிப்படியாக அடைகின்றது. தற்போது நோக்கப்படுவது போல், நீரின் பகிரங்க சிறப்புத் தன்மையைக் கருத்தில் எடுக்கும்போது, மேற்பரப்பு நீரைப் பெறுவதற்கான அடைதல் தோன்றும் போது, பிரித்தெடுப்புக்கு பௌதீக ரீதியான இடர்பாடுகள் இல்லை எனத் தோன்றுகிறது.
உண்மையில், அது இந்தப் பொதுவான சிறப்பின் தன்னிச்சையான சுரண்டலை ஊக்கப்படுத்துகின்றது. ஆற்றுப் பாய்வுகள் உட்பட மேற்பரப்பு நீருடனான அதன் தொடர்புகளைக் கருத்தில் கொள்ளாமல் விடுவதால், நிலநீர் வளத்தின் தரம் குறைவது அதன் நிலைத்திருக்கும் தன்மைக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும் கடுமையான காரணியாக அமையக்கூடும். இது தொடர்பில் கமக்கிணறுகள் பாரிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றது. நீர் வளம் கிடைக்கும் உலர் வலயங்களில் கூட, குறிப்பாகக் கரையோரப் பகுதிகளில், விடுதிகள் (ஹோட்டல்கள்) மற்றும் ஏனைய தொழில்களினால் மிகையான நீர் பிரித்தெடுத்தல் மேற்கொள்ளப்படுகிறது. இதன் தாக்கங்கள் நீரின் மாசுபடுத்தல் மற்றும் மேற்பரப்பு நீரின் தரத்தில் குறைபாடு போன்ற விடயங்களில் கண்கூடாகத் தெரிகின்றது.
நில நீரின் பரந்த வகைப்படுத்தல் பின்வரும் முறையில் சாத்தியமானதாகும்.
- ஆழமற்ற காசித்து (Karstic) நீர்தாங்குப் படுக்கை – யாழ்ப்பாணக் குடாநாடு
- கரையோர மண்களின் ஆழமற்ற நீர்தாங்குப் படுக்கை.
- புத்தளத்தில் இருந்து முல்லைத்தீவு வரையில் நீடிக்கும் மயோசின் சுண்ணக்கல் வலயத்தின் ஆழ் கட்டுப்பட்ட நீர்தாங்குப் படுக்கை.
- தென்மேற்கு இலங்கையில் செம்பூரான்கல் பிராந்திய நீர்தாங்குப் படுக்கை.
- உலர் வலயத்தின் உருமாறிய கடும்பாறைப் பிராந்தியத்தில் ஆழமற்ற நிலநீர், நீர்வீழ்ச்சி, உள்நாட்டுப் பள்ளத்தாக்குகள்.
- உலர்வலயத்தின் உருமாறிய அடித்தளப் பாறைகளின் இணைப்புகள், பிளவுகள், மற்றும் முறிவு வலயங்கள் ஆகியவற்றின் ஆழமான, பரவலான மற்றும் அங்கொன்றும் இங்கொன்றுமான நிலநீர்.
இவற்றுக்கு மேலதிகமாக, உள்ளூர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, நாடு முழுவதும் பரவலாக உள்ள ஆழமற்ற திறந்த கிணறுகள், உள்நாட்டுப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் நெல் வயல்களின் தாழ்ந்த மற்றும் நடுத்தர நிலப்பகுதிகள் (சமவெளிகள்) மற்றும் பாறைத்தொடர் அமைப்புகள் கொண்ட பள்ளத்தாக்கு நிலவுருக்கள் ஆகியவற்றின் ஊடாகப் பரவியுள்ள ஆழமற்ற நீர்ப்பீடத்திலிருந்து தமது நீர்வழங்கலைப் பெறுகின்றன. மேலும், மேட்டுநில நீர்ப்பீடத்திலிருந்து நீர்ப்பாசனம் வெளியேறும் உயரமான அமைவிடங்களில் ஊற்றுப்பாய்வு இடம்பெறுகிறது.
மலைநாடு முழுவதும் இடம்பெறும் வேறுபட்ட நீர்ப்பீடங்களின் வெளியேற்றமானது, அடியில் உள்ள பாறைப் படுக்கைகளின் மேற்பரப்பு இடவிளக்கவியலை ஊடறுக்கின்றன. படிகப்பாறை மற்றும் பளிங்குப்பட்டறைப் பாறை ஆகியவற்றில் உள்ள நீரூற்றுக்கள், பிளவுகளாலான உலர் வலயத்தை விட ஈரவலயத்தில் உயர்வான விளைச்சலைக் கொடுக்கின்றன. முறையான சிறந்த நீர்ச்சுழற்சி இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஆழமற்ற காசித்து நீர்ப்பீடமே (Karstic Aquifer) நாட்டில் நன்கு மதிப்பாய்வு செய்யப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலநீர் வளமாகும். ஈரமான மழைக்காலத்தின்போது, முழு நீர்தாங்குப் படுக்கைகளும் நன்னீரால் மீள் நிரப்பப்படுகின்றன. ஆனால், இந்த நீரில் 50% ஆனது, அடித்தள சுண்ணக்கல்லில் இடம்பெறும் காசித்து (Karstic) கடத்திகளின் விளைவாக, வறண்ட சிறுபோகத்தின்போது கடலுக்கு இழக்கப்படுகிறது. மீதமுள்ள 50%, தீவிரமான ஏற்று நீர்ப்பாசனத்திற்கும் உள்ளூர்த் தேவைகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. உள்நாட்டிலிருந்து கடலுக்கான நன்னீரின் பாய்ச்சல், காங்கேசன்துறை கரையோரத்தில் நேரடியாகவே அவதானிக்கப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான கரையோரப் பகுதிகளில் பொதுவாகக் காணப்படும் கூழாங்கற் குன்றுகள், மணல் தடைகள் மற்றும் உயர்த்தப்பட்ட கடற்கரைகள் ஆகியவற்றில் உள்ள திரண்டிருக்காத மணல் குறித்துச் சில ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயினும், இந்த நீர்தாங்குப் படுக்கைகளின் தன்மையையும், குணாதிசயத்தையும் பற்றிய சிறந்த புரிதல், 1960களில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய ஆய்வுகளிலிருந்தே பெறப்பட்டுள்ளது. நெருக்கமான உப்புநீர்ச் (உவர்நீர்) சூழலில், மெல்லிய படிவுகளிலிருந்து பெறக்கூடிய நன்னீரின் மட்டுப்படுத்தப்பட்ட அளவே இந்த ஆழமற்ற நீர்தாங்குப் படுக்கையின் முக்கிய அம்சமாகும்.
மேற்பரப்பு நிலநீரின் கூட்டுச்சார்பு குறித்து மிக நெருக்கமான பரிசீலனை செய்வதும், வளத்தின் நிலைமையைப் பட்டியலிடுவதும் அவசரமான தேவையாகத் தோன்றுகிறது. இந்த வளத்திற்கு சீர்படுத்த முடியாத சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து நிறைந்த துறைகளை இனங்காட்டுவதும் அத்தியாவசியமாகும்.
ஊக்கமளிப்புத் திட்டங்கள் மூலமான கமக்கிணறு அபிவிருத்தி (விவசாயக் கிணறுகள்) அல்லது கைத்தொழில் பயன்பாடுகள் போன்ற கட்டுப்படுத்த முடியாத விஸ்தரிப்பினால் பாரிய தாக்கங்கள் விளையக்கூடும். எனவே, நீர் வளங்கள் மீதான உள்ளூர்த் திட்டங்களை மிகக் கவனமாக அமுல்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், முதலீடு இழக்கப்படுவது மட்டுமன்றி, எதிர்பார்க்கப்பட்ட மீள்நிரப்புதலில் கூடப் பாதிப்பு ஏற்படும். இதன் விளைவாக, மேற்பரப்பு நீர்வழங்கலிலும் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படலாம். நீர்ப்பீடங்களின் குறைப்புக் காரணமாக பல பிரதேசங்கள் பாரதூரமாகப் பாதிப்படைந்துள்ளன. பொருளாதாரங்கள், இடர்பாடுகளின் அடிப்படையில் சமநிலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்கிற போதிலும், முதலீடு மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளை நாடு இழக்கிறது; இதன் நன்மை – தீமைகளின் பாரத்தை, இறுதியில், விவசாயிகளே தாங்கிக்கொள்ள வேண்டிய நிலை உருவாகிறது.
இலங்கையைப் பொறுத்தளவில், நாட்டின் நீர் வளங்களின் உள்ளகப் பாகமாக நிலநீரின் பரிகரிப்புத் தேவை அவசியமானதாகும். நிலநீரின் சூழலியல் ரீதியில் நிலைத்திருக்கக்கூடிய முகாமைத்துவத்திற்கான சிறப்பியல்பின் பிரக்ஞை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். நீரின் உபயோகங்களிலும் செயன்முறைகளிலும் நிபந்தனைகளைக் கோரும்போது, அது நிலத்தளத்தின் சீர்கேட்டுக்கு இட்டுச்செல்லும் செயற்பாடுகளை மந்தநிலையை அடையச் செய்கிறது. விநியோகத் தளத்தின் மாசுபடுத்தல் அல்லது கலப்படம் சாத்தியமாகும் சூழலில், நீரின் பாதுகாப்பை உறுதிசெய்ய ‘மூடப்பட்ட அமைப்புக்கள்’ கோரப்படுகின்றன. அவ்வாறு செய்யாவிட்டால், சிறந்த தரமான குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படைச் சமூகத் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் முக்கியமான திட்டங்கள் கூடப் பாதிக்கப்படும். இதன் விளைவாக, மாற்று வழிகளுக்காக அதிகச் செலவுடைய தீர்வுகளை நாட வேண்டிய தேவை ஏற்படும். குறிப்பிட்ட உவர் நிலை மட்டங்களைக் கோரும் இறால் பண்ணைகள் உள்ள வடமேல் கரையோர வலயங்களில் இத்தகைய சூழ்நிலைகள் ஏற்கனவே தோன்றியுள்ளன. இது கட்டுப்பாடின்றி வெளியேற்றப்பட்டால், மென்மையான நீர்க் குழிவுகளுக்கு ஊறு விளைவிக்கும். இத்தகைய சூழ்நிலைகளில், பெரும் குடிநீர் மற்றும் வேளாண் பிரச்சினைகளின் அபாயங்களைப் புறக்கணிக்கும் நிலை காணப்படுவதால், நீரை வெளிச்செலுத்தாத மூடப்பட்ட அமைப்புகளின் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டும்.
நிலநீரை உபயோகிப்பதற்கான தெளிவான கொள்கை மற்றும் வழிகாட்டலுக்கான அவசியத்தை இது உச்சப்படுத்துகின்றது. அத்துடன், முறையான உரிமப்பத்திரங்களைப் பெறுதலையும் உறுதிப்படுத்துவதற்கான அத்தியாவசியமான கட்டுப்பாட்டுச் சட்டக் கட்டமைப்புகளும், நிறுவன ரீதியான ஒழுங்குகளும் தேவைப்படுகின்றன.
மேற்பரப்பு நீரும் அதன் முகாமையும்
முழுச் சமுதாயத்திற்கும் மிகவும் முக்கியமானது நீர் என்பது யாவரும் அறிந்ததே. குடிப்பதற்கும் உடலைச் சுத்திகரிப்பதற்கும், விவசாயத்தை மேற்கொள்ளவும், மின்சார உற்பத்திக்கும், மகிழ்ச்சியான விளையாட்டு போன்ற எங்களது பல்வேறு செயற்பாடுகளிற்கும் நீரைப் பயன்படுத்துகின்றோம்.
இலங்கையில் நீரைப் பெற்றுக்கொள்ளும் வழிவகைகள் பல காணப்படுகின்றன. நீரூற்றுகள், நதிகள், கிணறுகள், குளங்கள் என்பவற்றிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்கின்றோம். இவற்றுள் மேற்பரப்பு நீர் என்பதைப் பற்றி ஆராய்வோம்.
நீரானது கடலிலிருந்தும் நில மேற்பரப்பிலிருந்தும், ஆவியாகி மேலே கடத்தப்பட்டு பின்னர் ஆவியான நீர் ஒடுக்கப்பட்டு மீண்டும் கீழே நில மேற்பரப்பிற்கு விழுகின்றது. இந்நீரின் ஒரு பகுதி ஓடி ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை அடைகின்றது; எஞ்சிய நீர் கடலை அடைகின்றது.

ஒரு பகுதி நிலத்திற்கூடாக உட்புகுந்து நிலத்திற்கு அடியில் சேருகின்றது. இப்பகுதி கிணற்று நீராகவோ, குழாய்க் கிணற்று நீராகவோ சென்றடைகின்றது. பிரதேசத்திற்குப் பிரதேசம் நீர் பெறப்படும் மார்க்கங்கள் மாறுபடுகின்றன. இவற்றை ஒரு பிரதேசத்தின் மண்ணின் வகை, மண்ணின் தன்மை மற்றும் தரைத்தோற்ற அமைப்பு போன்ற காரணிகள் நிர்ணயிக்கின்றன. நீராவியானது ஒடுங்கி மழையாக விழுந்து நிலப்பரப்பை அடைந்து நீர்த்தேக்கங்கள், குளங்கள் மற்றும் ஆறுகளில் சேர்க்கப்படும் நீரே மேற்பரப்பு நீராகும்.
ஆறுகள் உயர்ந்த மேற்பரப்பிலிருந்து தாழ்ந்த பகுதிகளுக்கூடாக நீரோடுகின்ற பாதை வழியே உருவாக்கப்படுகின்றன. இந்த ஆற்றின் பாதை இயற்கையாக தரைத்தோற்றத்திற்கேற்ப உருவாக்கப்படுகின்றது. இந்த ஆற்றுநீர் கடலுக்குச் சென்றடையாமல் அணைக்கட்டுகளைக் கட்டி நீர்த்தேக்கங்களுக்கு திசை திருப்புவதன் மூலம் நீர் சேகரிக்கப்படுகின்றது.
மழைவீழ்ச்சியினால் வரும் நீர், நீரேந்தும் பிரதேசங்களை அடைந்து குளங்கள், வாவிகளில் சேர்க்கப்படுகின்றது. நீர் நிலத்திற்கூடாக உட்புகுந்து செல்லும் தன்மை குறைவாக இருப்பதற்குக் காரணம் மண்ணின் உட்புகவிடும் தன்மை குறைவாக இருப்பதேயாகும். களி மண்ணின் வீதம் கூடுதலாக உள்ள படுக்கைகள் நீர் உட்புகவிடும் தன்மை குறைந்தவையாகவும், மணல் மண் வீதம் கூடுதலாக உள்ள படுக்கைகள் நீர் உட்புகவிடும் தன்மை கூடுதலாக உள்ளவையாகவும் காணப்படுகின்றன.
பொதுவாக வவுனியா, மன்னார் மாவட்டங்கள் மழைவீழ்ச்சி குறைந்த வறண்ட பிரதேசங்களாகும். ஆதலால் ஆவியாதல் மிகக் கூடுதலாக உள்ளபோதிலும் இதன் மண்ணின் தன்மை நீரைத்தேக்கி குளங்களில் வைக்கக்கூடியதாக உள்ளது (மன்னார் மாவட்ட கடற்கரையை அண்டியுள்ள பிரதேசங்களைத் தவிர). மழைவீழ்ச்சி மூலம் கிடைக்கப்பெறும் நீர், நீரேந்தும் பிரதேசங்களை அடைந்து குளங்களில் சேரக்கூடியதாக உள்ளது. இதன்மூலம் மழைக்காலம் தவிர்ந்த மழை குறைவாகக் கிடைக்கப்பெறும் காலங்களிலும் பயிர்ச்செய்கை அதிகமானதாக இருக்கின்றது.
மேற்பரப்பு நீரானது அழுத்த வேறுபாடு காரணமாக நீர்த்தேக்கங்களிலிருந்து அணைக்கட்டின் ஊடாகக் கசிந்து வெளியேறி விரயமாகின்றது. அணைக்கட்டின் நடுப்பகுதியில் களிமண் சேர்த்து இறுக்குவதன் மூலம் கசிந்து செல்லும் நீரின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.
நீர்ப்படுக்கைகளிலிருந்து நீர் வடிந்து செல்லுதலும் நீர் விரயமாகுவதற்கு ஏதுவாகின்றது. இதை குளப்படுக்கைகளில் மண்ணின் தன்மையே நிர்ணயிக்கின்றது. மரங்களின் இலைகள், சருகுகள் படுக்கைகளில் படிந்து நீர் உட்புகவிடும் அளவைக் குறைக்கின்றது. தேக்கி வைக்கும் நீரின் அளவைக் கூட்டுவதற்கு குளங்களை ஆழமாக்குவது பொருத்தமானதல்ல. இவ்வாறு செய்வதால் குளப்படுக்கையின் மேற்பரப்பு மண்ணின் ஒழுங்கமைப்புக் குலைக்கப்படும். மேலும் படிந்திருக்கும் இலைகள், சருகுகள் அகற்றப்படும். இச்செய்கையால் நீர் மேலும் உட்செல்லும் தன்மை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் மேற்பரப்பு நீர் அசுத்தமாவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். அநேகமாக குளங்கள், வாவிகளில் பெறப்படும் நீர் இவ்வாறு மாசடைவது இலகு. மனிதர்கள், விலங்குகள் குளிப்பதாலும் தமது உடைமைகளைக் கழுவுவதற்குப் பாவிப்பதாலும் நீர் அசுத்தமடைகின்றது. மேலும் மரங்களின் இலைகள், சருகுகளினாலும், நீர் மேற்பரப்புகளில் ஓடிவந்து தேக்கப்படுவதனாலும் அதிலுள்ள கழிவுகள் நீருடன் சேர வாய்ப்புண்டு.
வடமாகாணத்தில் இன்று மேற்பரப்பு நீர் விவசாயத்திற்கே கூடுதலாகப் பயன்படுத்தப்படுகின்றது. பெரிய நீர்ப்பாசனக் குளங்களிலிருந்தும் சிறிய நீர்ப்பாசனக் குளங்களிலிருந்தும் வாய்க்கால்களின் மூலம் பயிர்ச்செய்கை நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகின்றது.
நெற்பயிர்ச்செய்கை பெரும்போகம், சிறுபோகம் என்று இரு பெரும் காலங்களில் செய்யப்படுகின்றது. இவற்றில் அநேகமான எல்லாவற்றிலும் நீர்த் தட்டுப்பாடு காணப்படுகின்றது. இவற்றிற்கான காரணங்கள்:
- நீர்ப்பாசனக் குளம் அல்லது அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்படும் நீர் திறந்த வாய்க்கால்களின் மூலம் பயிர்ச்செய்கை நிலங்களுக்குச் சென்றடையும்போது ஏற்படும் நீர் இழப்புகள்.
- நீர்ப்பாசனக் குளப்படுக்கையிலிருந்து நீர் உட்புகுதல், அணைக்கட்டின் ஊடாக பக்க வெடிப்பு ஏற்படல், நீர் ஆவியாதல்.
- கிருமி நாசினி, உரம் பாவிப்பதற்கு மேலதிக நீரை உபயோகித்தல். இதனால் உண்டாகும் உப்புத் தன்மையைப் போக்க மேலும் அதிகளவு நீரை உபயோகித்தல்.
- பதிவேட்டிலுள்ள விஸ்தீரணத்திலும் பார்க்க அதிகளவு செய்கை பண்ணப்படல்.
- நீரைச் சிக்கனமாகப் பாவிப்பது பற்றிய அறிவும் ஆர்வமும் குறைவாக இருத்தல்.
- விவசாய உபகரணங்கள், விதைநெல் மற்றும் வங்கிக்கடன் என்பன விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கிடைக்காமை.
- பழைய முறைப்படி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
இவ்வாறு மேற்பரப்பு நீரில் நீர் இழப்புகள் அதிகமாக ஏற்படும் சந்தர்ப்பங்களில், இயன்றளவு குறைந்த நீரைப் பயன்படுத்தி, அதிக நீரைச் சேமிக்க வேண்டும். இதன் மூலம், சிறுபோக வேளாண்மையைக் கூட்டி, 40 முதல் 60 வீதம் அளவில் வேளாண்மையைச் செய்வதற்கும், மொத்தக் கன அளவில் 35 இலிருந்து 40 வீதம் அளவிலான நீரை விவசாயம் அல்லாத தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் நீர் முகாமைத்துவ நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும்.
பயிர்ச்செய்கை தொடங்க முன்னரே இதனைப் பற்றிய திட்டமிடல் அவசியமாகின்றது. இவ்வாறு திட்டமிடும்போது கிடைக்கக்கூடிய வளங்கள், நீர்ப்பாசனத் திட்டங்களின் செயற்பாடுகள் பற்றிய சரியான தகவல்கள், விவசாயம் செய்கை பண்ணப்படும் காணியின் விஸ்தீரணம், கடந்தகால அனுபவங்கள் மற்றும் விவசாயிகளின் சமூக – பொருளாதார நிலைமைகள் ஆகியன கருத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
பயிர்செய் நிலத்தை இயலுமானவரை சமன்செய்து விவசாயம் செய்யப் பயன்படுத்துவதே நல்லது. நிலம் மேடும் பள்ளமுமாக இருந்தால், பள்ளப்பகுதி நிரம்பி மேட்டுப்பகுதியை அடைவதற்கு அதிகளவு நீர் விரயமாகும்.
அத்துடன் பெரும்போகச் செய்கையைத் திட்டமிட்டவாறு குறித்த நேரத்தில் ஆரம்பிப்பதன் மூலம், அக்காலத்தில் பெறப்படும் மழை நீரைப் பயன்படுத்தி, குளத்து நீரை விரயம் செய்யாமல் அடுத்த போகத்திற்குச் சேமிக்கலாம்.
மேலும் சிறுபோகத்தில் நெல் வாய்க்கால்களுக்கு அருகாமையில் உள்ள வயல்களில் தேங்கியிருக்கும் கசிவு நீரைப் பயன்படுத்தி சிறு தானியங்களை உற்பத்தி செய்வதன் மூலம் நீரை முகாமைத்துவம் செய்யலாம். ஒரு ஏக்கர் நெல்லுக்கு தேவையான நீரைக்கொண்டு 3 – 4 ஏக்கர் சிறுதானியங்களை உற்பத்தி செய்ய முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நீர்ப்பாசன முகாமைத்துவத்தில் மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களங்களும், கமத் தொழிற்சேவைத் திணைக்களங்களும் பங்காற்றுகின்றன.
இவற்றில் நீர்ப்பாசனத் திணைக்களம் கீழ்வரும் விடயங்களில் பெரும் பங்காற்றுகின்றது.
- குளத்தில் உட்புகும், வழங்கும் மற்றும் இழக்கப்படும் நீரின் அளவை சரியாக மதிப்பிடல்.
- பிரதான கிளை விவசாய வாய்க்கால்களைப் பராமரித்தல்.
- விவசாயிகளுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குதல்.
- நீர்த் தேவையை சரியாக மதிப்பிட்டு வழங்குதல்.
- இயலுமானவரை சுழற்சி முறை நீர் விநியோகத்தை நடைமுறைக்குக் கொண்டுவரல்.
இவை எல்லாவற்றிலும் நீர் முகாமைத்துவத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்களிப்பு விவசாயிகளைச் சேர்ந்தது என்பது வெளிப்படை.
வட மாகாணத்தில் நீர் முகாமைத்துவம்
வட மாகாணத்தில் 23 ஆற்றுப்படுக்கைகள் உள்ளன. அவற்றில் ஒன்றிரண்டை தவிர ஏனைய படுக்கைகளில் கிடைக்கும் நீர்வளம் முற்றுமுழுதாகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் படுக்கைகளின் கீழ் 11 பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் சுமார் 80,000 ஏக்கரும், 60 நடுத்தரத் திட்டங்களின் கீழ் 25,000 ஏக்கரும் செய்கை பண்ணப்படுகின்றது. இதைவிட சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றில் அநேகமாக எல்லாத் திட்டங்களிலும் தற்போது நீர்த்தட்டுப்பாடு எதிர்நோக்கப்படுகின்றது.
இவ்வாறு நீர்த்தட்டுப்பாடு எதிர்நோக்கப்பட்டு குறைந்தளவே பயிர் செய்யப்படும் திட்டங்களாக வவுனிக்குளம், பாவற்குளம், கட்டுக்கரைக்குளம், முத்து ஐயன்கட்டு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். நீர்த்தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணிகள் பின்வருவன.
- படுக்கையின் விளைவில் ஏற்பட்டுவரும் கீழ்நோக்கிய மாற்றம்.
- நீர்ப்பாசன சாதனங்களின் செயற்பாட்டின் திறமை படிப்படியாகக் குறைந்து கொண்டே செல்லல்.
- பருவத்தே பயிர் செய்யாமையும், மழை நீரை அதிகளவு பயன்படுத்தாமையும்.
- நிலத்தை மட்டப்படுத்தி நீரைத் தேக்கி வைக்கத் தவறுதல்.
- கிருமி நாசினி உரம் பாவிப்பதற்கு மேலதிக நீரை உபயோகித்தல். இதனால் உண்டாகும் உப்புத்தன்மையைப் போக்குவதற்கு மேலதிக நீரைப் பாவித்தல்.
- பதிவேட்டில் உள்ள விஸ்தீரணத்திலும் பார்க்க அதிக விஸ்தீரணம் செய்கை பண்ணப்படுதல்.
- நீரைச் சிக்கனமாகப் பாவிப்பது பற்றிய அறிவும் ஆர்வமும் விவசாயிகளிடமும் கீழ்மட்ட அலுவலகர்களிடமும் இல்லாமை.
- விவசாய உபகரணங்கள், நெல், வங்கிக் கடன் முதலியன விவசாயிகளுக்கு தேவைப்படும் போது கிடைக்காமை.
- விவசாயிகள் பழைய முறையிலேயே விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- மண்ணின் நீர்புகவிடும் தன்மை.
வவுனியா மாவட்டத்திலே உள்ள பாவற்குளத்தில் பெரும்போகத்திற்கு ஏக்கருக்கு 11 அடி நீர் தேவைப்பட்டது. மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக் குளத்தில் 1987, 1988 ஆம் ஆண்டுகளில் ஏக்கருக்கு 5 முதல் 6 அடி நீர் வரை காலபோகத்தில் தேவைப்பட்டது. இதே திட்டத்தில் 1984, 1985 ஆம் வருடங்களில் 3 – 4 அடி நீர் போதுமானதாக இருந்தது. அதே வேளையில் கிளிநொச்சியில் உள்ள இரணைமடு திட்டத்தில் காலபோகத்திற்கு 5 அடி நீரும், சிறுபோகத்திற்கு 7 – 8 அடி நீரும் தேவைப்பட்டது. இவ்வாறு திட்டத்திற்குத் திட்டம் பாவிக்கப்படும் நீரின் அளவு வேறுபடுவது மேற்கூறிய ஒன்றின் அல்லது பல காரணிகளின் விளைவாகும்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீர்ப்பாவனை, காலபோகத்திற்கு 2 – 3 அடியும், சிறுபோகத்திற்கு 3 – 4 அடியும் ஆகும். காலபோகத்தில் இயன்றளவு குறைந்தளவு நீரைப் பாவித்து அதிகம் சேமித்து அதன் மூலம் கூடிய விஸ்தீரணத்தில் சிறுபோகம் செய்வது என்ற இலக்கை அடைவதற்கு நீர் முகாமைத்துவ நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும். இதனால் சிறுபோக பயிரின் பயிர்ச்செறிவை (Cropping Intensity) 40 – 60 வீதமாக அதிகரிக்கலாம். அல்லது அதே அளவில் பராமரித்து, நிலத்தடி நீரின் மீழ் ஊறல் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, நெல் அல்லாத பயிர்ச்செய்கைக்கான நீர் பம்பும் செலவைக் குறைக்கலாம். அத்துடன் மொத்தக் கன அளவில் 35 இலிருந்து 40 வீதம் அளவிலான நீரை விவசாயம் அல்லாத தேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் சிறுபோக வேளாண்மையைச் செய்வதற்கு ஏற்ற வகையில் நீர் முகாமைத்துவ நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும்.
நீர் முகாமைத்துவத்தில், நீர்ப்பாசன மற்றும் திணைக்களங்கள் ஒரு சாரார் ஆகவும், விவசாயிகள் மற்றொரு சாரார் ஆகவும் உள்ளனர். இந்த இரு சாராரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து கருத்தொருமித்து இயங்குவதாலேயே திட்ட நடைமுறை சுலபமாகும்.
நீர் முகாமைத்துவத்தில் திணைக்களங்களின் பங்கு
நீர் முகாமைத்துவத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதில், நீர்ப்பாசனம், விவசாயம், கமத்தொழிற்சேவைகள் ஆகிய திணைக்களங்களும், அத்துடன் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அதிபர் போன்றோர் அடங்கிய பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர். நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பங்கினை முதலில் ஆராய்வோம்.
1. குளத்தில் உட்புகும், வழங்கும் மற்றும் இழக்கப்படும் நீரின் அளவைச் சரியாக மதிப்பிடுதல். தற்போது அநேகமான நீர்ப்பாசனத் திட்டங்களில் உட்புகும் நீரை அளக்க வழிமுறை கிடையாது. குளத்தின் நீர்பிடிக்கும் பிரதேசத்தின் மேற்பகுதியில், நீர் கொண்டுவரும் கால்வாயில், தினமும் நீரின் அளவை மதிப்பிடுதல் வேண்டும். அதேபோல் துரிசில் இருந்து வெளியேறும் நீரின் அளவு துரிசின் மூலமாகவும், பிரதான வாய்க்காலில் அமைந்துள்ள அளக்கும் கருவி (Parshall Flume) மூலமாகவும் அளந்து கணக்கிடப்படுதல் வேண்டும். அத்துடன் ‘ஆவியாதல் தட்டு’ மூலம் ஆவியாகும் நீரின் அளவு கணிக்கப்படுதல் வேண்டும்.
2. வாய்க்கால்களைப் பராமரித்தல்:
அ) எல்லாப் பிரதான வாய்க்கால்களிலும் பிரிவிடும் வாய்க்கால்களிலும் நீரின் போக்கை நுணுக்கமாகக் கட்டுப்படுத்தக்கூடிய நீர்ப் பாய்ச்சல் அளவு மதிப்பிடப்பட வேண்டும். அத்துடன் தேவையான இடங்களில் நீரின் மட்டத்தைக் கட்டுப்படுத்துவதுடன் கதவுகளுடன் கூடிய நீர் மட்டத்தை ஒழுங்குபடுத்தும் சாதனங்கள் அமைக்கப்பட வேண்டும். அடிக்கடி வாய்க்கால்கள் துப்பரவு செய்யப்பட்டு அவற்றின் நீர்வலுக் குணங்கள் மாறாமல் பேணப்பட வேண்டும். பழுதடையும் மேற்படி சாதனங்கள் உடனுக்குடன் திருத்தப்பட்டு திருப்தியாக இயங்கச் செய்யப்பட வேண்டும்.
ஆ) பிரதான மற்றும் கிளை வாய்க்கால்களில் நீரோட்டத்தை அளவிட தேவையான இடங்களில் கணக்கிடும் வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் குறிப்பிடப்பட்ட புள்ளியில் பாயும் நீரின் அளவு அறிந்து கொள்ளப்படல் அவசியமாகும்.
இ) அளவிற்கு அதிகமாக நீர், வாய்க்கால்களில் இருந்து மண்ணால் உறிஞ்சப்படும் இடங்களில், கொங்கிறீற் வாய்க்கால்களை அமைப்பதன் மூலம் நீர் இழப்பைக் குறைத்தல் வேண்டும்.
ஈ) எல்லா நெற்காணிகளுக்கும் நீர் பாய்ச்சும் குழாய்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். விவசாயிகள் வாய்க்காலின் குறுக்கே மண் அணை போடவோ, அன்றி வாய்க்கால்களைத் தம் இஷ்டம் போல் சேதப்படுத்தி நீரைப் பெற்றுக்கொள்ளவோ அனுமதித்தல் ஆகாது.
3. விவசாயிகளுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குதல். நீர் முகாமைத்துவத்தில் விவசாயிகளின் பங்கு முக்கியமானது. அதற்கு அவர்களுக்குத் தேவையான பயிற்சியை வழங்க வேண்டும். அடிக்கடி கலந்துரையாடல்கள் நடாத்தி நீர் முகாமைத்துவத்தின் தேவையை அவர்களது மனதில் பதிய வைத்தல் வேண்டும். சில வாய்க்கால்களை மாதிரிகளாகத் தெரிந்து நீர் முகாமைத்துவத்தை அமுல்படுத்தி விவசாயிகளிற்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.
4. நீர்த்தேவையை சரியாக மதிப்பிடுதலும் வழங்கலும். ஒவ்வொரு வாய்க்கால்களிலும் தினமும் நீர் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியிருப்பின், காணியின் அளவு பற்றிய விவரம் முதல் நாள் மாலையிலேயே வெளிக்கள உத்தியோகத்தரால் சேகரிக்கப்பட்டு, தேவையான நீர் கணித்தறியப்பட்டு, அதன்படி அன்று காலையிலேயே தேவையான நீர் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். இந்த அடிப்படையில் பிரிவிடும் வாய்க்கால்களிலும், பிரதான வாய்க்கால்களிலும் நீர்த்தேவை பல்வேறு புள்ளிகளில் கணித்தறியப்பட்டு, அதன்படி குளத்திலிருந்து வழங்கப்பட வேண்டிய நீரின் அளவு கணிக்கப்பட்டு, தேவையான நீர் மட்டுமே திறந்துவிடப்பட வேண்டும். நீர்த்தேவை, நீர் வழங்கல் பற்றிய பதிவேடுகள் பேணப்பட்டு, தவறுகள் சரிசெய்யப்பட்டு, முறை சீராக்கப்பட்ட பின், நீர் விநியோகம் சிரமமின்றி தன்பாட்டிலேயே நடைபெற ஏதுவாகும்.
5. இயலுமானவரை சுழற்சி முறையிலேயே நீர்ப்பாசனம் செய்யப்பட வேண்டும். இதன்படி பிரதான வாய்க்கால்களில் எப்போதும் நீர் பாய்ந்து கொண்டிருக்க, பிரிவிடும் மற்றும் கிளை வாய்க்கால்களில் சுழற்சி முறையில் நீர் விநியோகம் செய்யப்படும்.
6. பெற்றுக்கொண்ட நீர், வழங்கப்பட்ட நீர் பற்றிய ஆய்வு செய்யப்பட வேண்டும். மாதம் ஒரு முறையாவது பெற்றுக்கொண்ட நீர், வழங்கப்பட்ட நீர் பற்றிய ஆய்வை மேற்கொண்டு, நீர் விரயமாக்கப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, சீர்செய்யப்பட்டு, பாவிக்கப்படும் நீரின் அளவு விரும்பத்தக்க அளவிற்குள் கொண்டுவரப்பட வேண்டும். அந்தந்தப் போகத்தின் முடிவில் பாவிக்கப்பட்ட நீரின் அளவு கண்டறியப்பட்டு, சகல விவரங்களும் மற்றைய ஆண்டுகளுடன் ஒப்பிடப்பட்டு, எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய செயற்பாடுகள் தீர்மானிக்கப்பட வேண்டும்.
7. கமத்தொழிற்திணைக்களம் விவசாயிகளுக்குத் தேவையான விதை நெல், உரம், உழவு இயந்திர வசதி, களை நாசினி முதலியவற்றைத் தேவையான சமயத்தில் வழங்குவதுடன் அவ்வப்போது பயிர் பற்றிய தேவையான ஆலோசனைகளையும் வழங்குதல் வேண்டும்.
8. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் விவசாயம் செய்தல், நீரைக் களவாகப் பெற்றுக்கொள்ளல் மற்றும் சேதம் விளைவித்தல் முதலான குற்றங்களுக்கு அரசாங்க அதிபர் தேவையான சட்ட நடவடிக்கை எடுத்து, நீர்ப்பாசனக் குற்றங்களைக் குறைத்து ஒழுங்கான நீர் விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும்.
நீர் முகாமைத்துவத்தில் விவசாயிகளின் பங்கு
இரணைமடு போன்ற திட்டங்களில் காலபோக விவசாயத்தில் ஆவணி, புரட்டாதி மாத மழையைப் பயன்படுத்தி புழுதியில் நெல் விதைக்கப்படுகின்றது. கட்டுக்கரைக்குளத்தின் கீழ் களி மண்ணாக இருப்பதால் புழுதியில் விதைக்கப்படுவதில்லை. பல இடங்களில் புழுதியில் செய்கை பண்ணக்கூடியதாக இருந்தும் செய்கை பண்ணப்படுவதில்லை. சேற்றில் விதைக்கும் போது கூட, பல இடங்களில் கார்த்திகை, மார்கழி மாதங்கள் வரை தாமதம் செய்யப்படுகின்றது.
இதனால் பங்குனி, சித்திரை வரை நீர் விநியோகம் செய்யப்பட வேண்டியிருக்கின்றது. அறுவடை முடிந்ததும் உழவைச் செய்து மண்ணில் உள்ள நுண்துளைக் குழாய்களை ஊடறுப்பதன் மூலம் நீர் ஆவியாதல் தடுக்கப்படுவதில்லை. நிலத்தை விதைப்புக்குத் தயார்ப்படுத்தவும், பயிரின் வளர்ச்சிக்கும் மழை நீர் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. வயல்களில் வரம்புகள் சீர் செய்யப்பட்டு தேவையான நீர் தேக்கி வைக்கப்படுவதில்லை. கழிவு வாய்க்கால் பராமரிக்கப்படுவதில்லை. மேலதிக நீர் அகற்றப்படுவதில்லை.
நீர்ப்பாசனத் திட்டங்களில் விவசாயிகளின் மேற்கூறிய தவறுகளினால் நீர் விரயமாக்கப்பட்டு நீர்ப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இது சம்பந்தமாக விவசாயிகள் கைக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. அறுவடை முடிந்ததும் நிலத்தை உழுது நிலத்தில் உள்ள நுண்துளைகளுடாக நீர் இழத்தல் தடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மழையின் பின்னாலும் உழுவதால் இதனை மேம்படுத்த முடியும்.
2. வயல், மேடு – பள்ளங்கள் இன்றி மட்டுப்படுத்தப்பட்டு, வரம்புகள் உயர்த்தப்பட்டு, நீர்தேக்கி வைக்க வழி செய்யப்பட வேண்டும்.
3. சேற்று விதைப்பிற்கு 7 முதல் 10 அங்குலம் வரை நீர் விரயமாகின்றது. இதைத் தடுப்பதற்கு புழுதியில் விதைக்கப்பட வேண்டும். இதற்கு, ஐப்பசி மாதத்திற்குப் பிறகு பெய்யும் மழை வீழ்ச்சியானது, குளத்திலிருந்து நீரைப் பெறாமலேயே, பயிரின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.
4. களைகளை இல்லாமல் செய்வதற்கு நீரை உபயோகிக்காது களை நாசினிகளை உபயோகிக்க வேண்டும்.
5. இயன்றளவு இயற்கை உரங்களைப் பாவிக்க வேண்டும். செயற்கை உரங்களால் உண்டாகும் உப்புத்தன்மையைக் கழுவ மேலதிக நீர் தேவைப்படும்.
6. நிலத்தைத் தயார்ப்படுத்தும் பொழுது விதை நெல், உரமாக்கி போன்றவற்றை முதலில் பெற்றுக்கொண்டு நன்கு திட்டமிட்டே தொடங்க வேண்டும். இதனால் வேறு காரணங்களால் நீர் விரயமாவது தடுக்கப்படும்.
7. பயிரின் வேருக்கு காற்றும் ஒரு தேவையாக இருப்பதால், நீரை எப்போதும் தேக்கி வைத்திருப்பதால் நீர் விரயமாவதுடன் விளைச்சல் குறையவும் இடமுண்டு.
8. தங்களால் பராமரிக்கப்படும் வாய்க்கால்களை நீர்ப்போக்கிற்குத் தடைகளின்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதுடன் வாய்க்காலினால் உறிஞ்சி இழக்கப்படும் நீரையும் தடுக்கலாம்.
9. தமது வாய்க்காலின் நிர்வாகத்தை தாமே பொறுப்பேற்று அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நீர் விநியோகத்தை நடாத்துதல். சிறிது சிறிதாக சிறிய திட்டங்களில் முழுமையாகவும், பெரிய திட்டங்களில் பிரிவிடும் வாய்க்கால் அளவிலும் இயக்குதல், பராமரித்தல், நிர்வகித்தல், திருத்த வேலைகள் முதலியவற்றைப் பொறுப்பேற்றல்.
மேற்கூறிய நடைமுறைகளை விவசாயிகளும், அலுவலர்களும் கைக்கொண்டு ஒற்றுமையுடன் செயற்பட்டால் நீர் முகாமைத்துவம் வடமாகாணத்தில் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு கிடைக்கின்ற நீர் வளத்திற்கு அதிகபட்சப் பலன் கிடைக்கும் என்பது நிச்சயமாகும்.



