முதலாம் உலகப் போர்
ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகிய அண்டைப் பிரதேசங்களிலும் நடந்த முதலாம் உலகப்போர் (1914 – 1918) யாழ்ப்பாணத்தை எந்தவிதத்திலும் தொடவில்லை என்று கூறமுடியாது. இப்போர் தென் ஆசியாவில் நடக்காவிட்டாலும் தென் ஆசியர் பிரித்தானியப் பேரரசின் படைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். பிரித்தானியர் ஆண்ட இந்தியாவில் இருந்து ஏறத்தாழ 160,000 போராளிகள் பிரான்ஸில் ஜெர்மன் படைகளை எதிர்த்துப் போராட அனுப்பப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. போரில் இவர்களுள் 47,000க்கு மேற்பட்ட போராளிகள் இறந்துவிட்டனர் அல்லது காணாமல்போய்விட்டனர்.
யாழ்ப்பாணத்தவரைப் பொறுத்தமட்டில் இந்த உலகப்போர் எங்கோ ஒரு தூரப் பிரதேசத்தில், ஐரோப்பாவில், நடக்கும் நிகழ்வாக இருந்திருக்கலாம். எனினும், இப்பெருநிகழ்ச்சி யாழ்ப்பாணத்தவரைத் தொடாமல் இருக்கவில்லை. ஒரு சில யாழ்ப்பாணத்து இளைஞர்கள் பிரித்தானியப் படையில் சேர்ந்து போராடினர் என்பது குறிப்பிடப்படவேண்டியதாகும்.
இங்கிலாந்தில் பொறியியல் படிக்கச் சென்ற A. பரமநாதன் என்ற ஓர் இளைஞர் போர் மூண்டபோது பிரித்தானியர் படையில் சேர்ந்து, 1915 இல் எகிப்துக்கு அனுப்பப்பட்டார். பின்னர், அங்கிருந்து அவர் துருக்கியில் போராடிக்கொண்டிருந்த பிரித்தானியர் படையுடன் சேர்ந்து துருக்கியர் படையைத் தாக்குவதற்கு அனுப்பப்பட்டார். துருக்கியின் எல்லைப்புறத்தில் இவர்களுடைய போர்க்களம் இருந்தது. இப்பகுதியை ‘Dardanelles’ என்று பொதுப்பட அழைத்தனர். இங்கு ஆயிரக்கணக்கான பிரித்தானிய, பிரெஞ்சு, இந்தியப் போராளிகள் துருக்கியை வீழ்த்தப் போராடினர். ‘Gallipoli’ என்ற ஒரு பாகத்தில் ஆஸ்திரேலிய, நியூஸீலந்துப் போராளிகள் (ANZAC படை) துருக்கியருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினர். இங்கு பல்லாயிரக்கணக்கான ‘ANZAC’ படையினர் இறந்தனர். இவர்களை நினைவுகூர ஆண்டுதோறும் ‘ANZAC’ நினைவுநாள் ஆஸ்திரேலியாவிலும் நியூஸீலந்திலும் இடம்பெறும்.
இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமரிலேதான் யாழ்ப்பாணத்துப் பரமநாதன் பங்குகொண்டு, இறுதியில் தன் போர்புரியும் ஆற்றலை இழந்த (Invalided) காரணத்தால் இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இவர் முதல் உலகப் போரில் பங்குகொண்ட முதலாவது யாழ்ப்பாணத்தவராக அக்காலத்தில் கருதப்பட்டார்.
இன்னொரு யாழ்ப்பாணத்தவர் பேரரசின் படையில் சேர்ந்து, ஐரோப்பாவில் நடைபெற்ற போரில் பங்குபற்றிப் போர்க்களத்தில் உயிர் இழந்தார். இவர் லான்ஸ் கோப்பரல் (Lance Corporal) ஐயாத்துரை என்பவராவர். செல்வராஜா உவிண்டம் (Windham) என்ற இன்னொருவர் ‘Middlesex Regiment’ இல் சேர்ந்து போராடினார். வேறும் பல யாழ்ப்பாணத்தவர் பிரித்தானியர் படையில் சேர்ந்திருக்கலாம்.
வேறொரு வகையிலும் யாழ்ப்பாணத்தவருக்கும் முதல் உலகப் போருக்கும் தொடர்பு இருந்தமை கவனிக்கத்தக்கது. பிரித்தானியப் பேரரசுக்கு ஆபத்து நேர்ந்த வேளையில் தாம் ஏதாவது ஒரு வகையில் உதவவேண்டும் எனச் சில யாழ்ப்பாணத்தவர் எண்ணினர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. மலாயாவில் வேலைசெய்துகொண்டு இருந்தவர்கள்.
விமானங்கள் முதல் தடவையாக போரில் பயன்பாட்டுக்கு வந்த அக்காலத்தில் பிரித்தானிய விமானப்படைக்கு ஒரு போர் விமானத்தை வாங்கி அன்பளிப்புச் செய்ய இவர்கள் திட்டம் வகுத்து, அதற்கான பணத்தை மலாயாவில் வாழ்ந்த இலங்கையரிடம் இருந்து சேகரித்து, ஒரு விமானத்தை வாங்கினர். அந்த விமானம் ‘JAFFNA’ எனப் பெயரிடப்பட்டு ‘Royal Air Force’ படைக்குக் கொடுக்கப்பட்டது.
முதல் உலகப் போரின் மறையாத ஓர் எச்சமாகத் தமிழில் ஒரு புதுச்சொல் புகுந்தது. அதுதான் எம்டன். சென்னைத் துறைமுகத்தைத் தாக்கிச் சேதம் உண்டுபண்ணிய ஜெர்மன் போர்க் கப்பலின் பெயர் அது. அக்கப்பல் இந்து சமுத்திரத்தில் செய்த அட்டகாசங்கள் பொதுமக்கள் மனதைக் கவர்ந்தவை. பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களை ஏமாற்றி இலகுவில் கைப்பற்றப்படாது இந்து சமுத்திரத்தில் பல இடங்களில் சேதம் விளைவித்த எம்டன் கப்பலைப் பற்றிக் கேள்வியுற்ற தென்னிந்தியரும் இலங்கையரும் வியப்படைந்தனர். அப்படிப் பலரை ஏமாற்றி, இலகுவில் பிடிபடாமல் ஓடித் திரிபவனை ‘எம்டன்’ என்றனர். யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் ‘எம்டன்’ ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டது.
போர்களுக்கு இடைப்பட்ட காலம்
உலகப் போர் 1918 இல் முடிவுக்கு வந்தது. ஆனால் அமைதி நீண்டகாலத்துக்கு நீடிக்கவில்லை. மீண்டும் ஓர் உலகப் போர் 20 ஆண்டுகளின்பின் மூண்டது. இந்த 20 ஆண்டுகளும் நவீன இலங்கையும் இந்தியாவும் உருவாகுவதற்கு வழிவகுத்த பல முக்கியமான நிகழ்வுகள் இடம்பெற்ற காலமாகும். சுதந்திரகாலத் தென் ஆசியாவின் வடிவத்தை நிர்ணயிப்பதற்கு இவை பல வகைகளில் உதவின.
போக்குவரத்து வசதிகளைப் பொறுத்து மெதுவாக மாற்றங்கள் ஏற்பட்டன. மோட்டார் வண்டியின் பயன்பாடு கொழும்பில் உள்ளதைப்போல் இல்லாவிட்டாலும், அது அனைவரும் அறிந்த, அதிசயிக்கத்தக்க ஒன்றாகக் கருதப்படாத சாதாரண வாகனமாக மாறிவிட்டது என்று கூறலாம். அரசாங்க அதிபர் போன்ற மேல்மட்ட அதிகாரிகள் மட்டுமல்லாது சில தனியார் நிறுவனங்களும் மோட்டார் வண்டியை வைத்திருந்திருப்பர். எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணக் கல்லூரிக்கு 1914 இல் அமெரிக்காவில் இருந்து வந்த மிஷனரி ஒருவர், சாள்ஸ் மில்லர் (Charles Miller) என்பவர், அமெரிக்காவில் இருந்து ஒரு மோட்டார் வண்டியைக் கல்லூரிக்குக் கொண்டுவந்திருந்தார்.
போக்குவரத்தைப் பொறுத்து பொதுமக்களைத் தொட்ட முன்னேற்றம் மோட்டார் பஸ் (பேருந்து) வண்டியின் வருகை எனலாம். கொழும்புக்கு முதலாவது மோட்டார் பஸ் (Motor omnibus) 1907 இல் வந்திருந்தாலும், 1920 வரை பஸ் போக்குவரத்து வளர்ச்சியடையவில்லை எனலாம். உலகின் மிகப்பெரிய நகராக அக்காலத்தில் விளங்கிய லண்டனில்கூட 1919 இலேதான் குதிரைகள் இழுத்த பஸ் வண்டிகள் இல்லாது போய் முற்றிலும் மோட்டார் பஸ் சேவைகள் இடம்பெற்றன.
இலங்கையில் 1930 அளவில் 2,960 லொறி (Lorries) வண்டிகளும், 2,603 மோட்டார் பஸ் வண்டிகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. நாட்டின் பல பாகங்களிலும் இவை பயன்பாட்டுக்கு வந்திருந்தன என்பதை இதில் இருந்து அறியலாம். யாழ்ப்பாணத்திலும் இந்த வண்டிகள் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும், மாட்டுவண்டிகளே பெரும் அளவில் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை பயன்பட்டன.
போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பொதுமக்கள் வாழ்வில் செல்வாக்குப் பெறும் வலிமை உடைய இரு தொழில்நுட்ப ஆக்கங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தன. ஒன்று பேசும்படம்; மற்றது வானொலி. மௌனப்படமாக மக்களுக்கு அறிமுகமாகிய சினிமா, 1930களில் யாழ்ப்பாணத்தவர் பார்த்தும், கேட்டும் மகிழும் திரைப்படமாகியது. தமிழில் வெளியாகிய முதல் பேசும்படமாகிய ‘காளிதாஸ்’ யாழ்ப்பாணத்திலும் காட்டப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
பொதுமக்களுக்கு அவர்கள் வீட்டுக்குள்ளேயே இசையையும் செய்திகளையும் எடுத்துச் செல்லக்கூடிய தொழில்நுட்ப ஆக்கமாக வானொலி 1920களில் வந்தது. கொழும்பு வானொலி (Colombo Radio 1925), திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் (1939) ஆகியவற்றின் நிகழ்ச்சிகள் யாழ்ப்பாணத்திலும் கேட்கக்கூடியவையாக இருந்தபோதிலும், வானொலிப் பெட்டிகளைப் பொதுமக்கள் வாங்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. இதனால் போருக்குப் பிற்பட்ட காலம்வரை யாழ்ப்பாணத்தில் வானொலி குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தவில்லை எனலாம்.
போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் போக்குவரத்து வசதிகள் முன்னேற்றம் அடைந்தமை யாழ்ப்பாணத்துக்கும் நாட்டின் தென்பாகத்துக்கும் இடையில் பல வகையான உறவுகளும் தொடர்புகளும் ஏற்படுவதற்கு உதவியது எனலாம். எடுத்துக்காட்டாக, கல்வித்துறையில், யாழ்ப்பாணத்துப் பட்டதாரிகள் தெற்கில் இருந்த சில பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாகச் செல்வதையும், தெற்கில் இருந்து யாழ்ப்பாணத்துப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருவதையும் காணலாம்.
தெற்கில் இருந்து வந்த சிங்கள மாணவர்கள் பற்றிய தகவல்களை விரிவாக அறிவது கடினம். எனினும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் வேறு செயற்பாடுகளிலும் சிறப்பிடம் பெற்ற சில சிங்கள மாணவர்களுடைய பெயர்களை யாழ்ப்பாணப் பாடசாலைகளின் சஞ்சிகைகளில் காணலாம். எடுத்துக்காட்டாக, 1930களில் இந்துக் கல்லூரியில் அமரஸிங்ஹ மற்றும் தர்மபால, St. Henry’s கல்லூரியில் விக்ரமஸிங்ஹ, St. John’s கல்லூரியில் கருணாரத்ன, St. Patrick’s கல்லூரியில் பீரிஸ் மற்றும் ஸமரவிக்ரம, யாழ்ப்பாணக் கல்லூரியில் சி. ஜயஸிங்ஹ ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணக் கல்லூரியில் 1950கள் வரை சிங்கள மாணவர்கள் இருந்தனர் (இக்கல்லூரியில் நான் படித்த காலத்தில் என் வகுப்பில் குருநாகலில் இருந்து பர்னாந்து என்பவரும், வாத்துவவில் இருந்து ஆர்.டி. பெரேரா என்பவரும், மேல் வகுப்பில் மாத்தளையில் இருந்து ஸரத் ஹேவாபதிரண என்பவரும் இருந்தனர்.) அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் படித்த ஒரு சிங்கள மாணவர் பின்னர் அரசியலில் முக்கியத்துவம் பெற்ற அமைச்சர் மைத்திரீபால சேனாநாயக்க ஆவார். இவர் St. John’s கல்லூரியில் படித்தவர்; தமிழை நன்கு பேசியவர்.
இக்காலகட்டத்தில் பாடசாலைகளுக்கான அனைத்து இலங்கை நிகழ்ச்சிகள் சில தொடக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்து மாணவர்கள் தெற்கு நோக்கிச் செல்வதற்கும் சிங்கள மாணவர்களுடன் உறவாடுவதற்கும் வழி திறக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, 1937 இல் கொழும்பில் ‘All Ceylon Sports Meet’ நடைபெற்றது. அதில் யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த ‘V.G. George’ என்ற மாணவன் உயரம் தாண்டுதலில் (High jump) சாதனை ஈட்டியது மட்டுமல்லாது, இங்கிலாந்துப் பாடசாலைகளின் சாதனையையும் (English Public Schools record in high jump) முறியடித்தான்.
சில பாடசாலைகளில் மாணவர்களுக்கு இக்காலகட்டத்தில் சாரணர் இயக்கமும் (Scouts Movement) தொடக்கப்பட்டது. இதனால் நாட்டின் தென்பாகத்தில் சாரணர் ஒன்றுகூடல் (Scouts Jamboree) நடைபெறும்போது, யாழ்ப்பாணத்து மாணவர் சிலர் சிங்களச் சாரணர்களுடன் சில நாட்கள் வாழ்ந்து கலந்துரையாட வாய்ப்பு ஏற்பட்டது. சிலவேளைகளில் இந்தியாவுக்கும் ஒன்றுகூடலுக்காகச் செல்ல முடிந்தது. எடுத்துக்காட்டாக, 1937 இல் யாழ்ப்பாணத்துச் சாரணர் கொழும்புக்குப் போய், அங்கு பிறமாணவர்களுடன் கூடி, அங்கிருந்து இந்தியாவுக்கு ஒரு சாரணர் ஒன்றுகூடலுக்குச் சென்றனர். இலங்கையில் இருந்து 61 பேர் சென்றிருந்தனர்.
வடக்கு – தெற்குப் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளும் இக்காலத்தில் தொடங்கின. யாழ்ப்பாணக் கல்லூரியின் கால்பந்து அணி 1935 இல் தர்மராஜக் கல்லூரி அணியுடன் போட்டியிடக் கண்டிக்குச் சென்றது.
யாழ்ப்பாணத்துப் பாடசாலை மாணவர்கள் தென்பாகத்துக்குச் சுற்றுலாபோகும் வழக்கமும் இக்காலகட்டத்தில் தொடங்கியது. யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் 1940 இல் கண்டிக்குச் சுற்றுலா சென்றதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
யாழ்ப்பாணப் பாடசாலைகளுக்குத் தெற்கில் இருந்து பல கல்விமான்கள் பிரதம விருந்தினராகவோ சிறப்புரை ஆற்றுவோராகவோ இக்காலகட்டத்தில் வந்து செல்லும் வழக்கமும் தொடங்கியது. பிரபல பௌத்த நிறுவனமாகிய கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் அதிபராக இருந்து, பின்னர் கண்டி தர்மராஜக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிகொண்டிருந்த பி.டி.எஸ். குலரத்ன 1935 இல் யாழ்ப்பாணக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். வரலாற்று விரிவுரையாளரும் நூலாசிரியருமாக விளங்கிய கலாநிதி ஜி.சி. மெண்டிஸ் 1940 இல் யாழ்ப்பாணக் கல்லூரிக்குச் சென்று சிறப்புரைகளை வழங்கினார். இவரைப்போல கொழும்பில் இருந்த பல்கலைக்கழகக் கல்லூரியின் அதிபர் (பிற்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர்) ‘Ivor Jennings’ யாழ்ப்பாணக் கல்லூரிக்குச் சிறப்புரை ஆற்றச் சென்றிருந்தார்.
மேலும் ஒரு போக்கும் கவனிக்கத்தக்கது. யாழப்பாணத்தவர் பலர் தெற்கில் இருந்த பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாகச் செல்லும் வழக்கம் இக்காலகட்டத்தில் காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, 1940 இல் மாத்தறை ‘St. Thomas’ பாடசாலைக்கு ஜே.ஏ. நவரத்தினம் என்பவரும், நுவர எலிய ‘Holy Trinity’ பாடசாலைக்கு ஜே.ரீ. செல்லையா மற்றும் லிலி செல்லையா என்பவர்களும், மட்டக்களப்பு ‘Central College’ இற்கு எஸ்.ரீ. சீவரத்தினம் என்பவரும் ஆசிரியர்களாகச் சென்றிருந்தனர்.
இவ்வாறாகக் கல்வித்துறையில் யாழ்ப்பாணத்துக்கும் தெற்குக்கும் இடையில் உறவுகள் வளரத் தொடங்கிய காலமாகப் போர்களுக்கு இடைப்பட்டகாலம் காணப்பட்டது. இது வெளித்தோற்றம். இதன்கீழ் அரசியலைப் பொறுத்துப் பல குமுறல்கள் எழத் தொடங்கியிருந்தன. இவை பின்னர் எடுத்துக்கொள்ளப்படும்.
மலாயாத் தொடர்பின் துண்டிப்பு
1942 பெப்ரவரி 15; பிரித்தானியப் பேரரசின் தென்கிழக்காசியப் படைபல மையமான சிங்கப்பூர் ஜப்பானியரால் கைப்பற்றப்பட்டது. பேரரசின் தென்கிழக்காசியப் பாகம் பிரித்தானியர் கையில் இருந்து வழுகி ஜப்பானியர் மடியில் வீழ்ந்தது. வியட்நாமில் பிரெஞ்சு ஆதிக்கத்தை 1940 இல் அடக்கிவிட்டு, மலாயாமீது கவனம் செலுத்திய ஜப்பானியர், சிங்கப்பூரைக் கைப்பற்றியதுடன் நில்லாது, ஒல்லாந்தர் ஆண்ட கிழக்கு இந்தியத் தீவுகளையும் (இன்றைய இந்தோனேசியா) 1942 இல் இலகுவில் தம்வசப்படுத்தினர். இதே ஆண்டில் பிலிப்பைன் தீவுகளில் அமெரிக்கர் தங்கள் இறைமையை இழந்து பின்வாங்க, அங்கும் ஜப்பானியர் ஆதிக்கம் நிறுவப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் மேலைத்தேச வல்லரசுகளின் ஆதிக்கம் திடீரென மறைந்தது.

இந்த நிகழ்வுகள் நடந்த 1942, யாழ்ப்பாணத்தைப் பொறுத்தும் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்ட ஆண்டாகும். இரண்டாம் உலகப் போர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியிருந்தாலும், 1942 இல் இருந்துதான் யாழ்ப்பாணம் அதன் விளைவுகளை உணரத் தொடங்கியது எனலாம்.
இரண்டாம் உலகப் போர் 1939 செப்டம்பர் 1 இல் ஜெர்மனியின் படைகள் போலந்தைத் தாக்கியதுடன் தொடங்கியது. அப்பொழுது ஆசியாவில் ஜப்பானியர், சீனக் குடியரசுக்கு எதிரான கடும் போர் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தனர். அதன் படர்ச்சியாக, 1941 இன் இறுதியில் ஜப்பானியர் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக ஆசியாவில் போர் தொடுக்க, இரண்டாம் உலகப் போர் ஆசியாவிலும் மூண்டது.

சிங்கப்பூர் கைப்பற்றப்பட்டதும், அடுத்ததாக இந்தியாவை ஜப்பான் தாக்கும் எனப் பிரித்தானியர் எதிர்பார்த்தனர். அவர்களுடைய கடற்படையைச் சேர்ந்த கப்பல்களும் (Royal Navy) விமானப் படையைச் சேர்ந்த சில போர்விமானங்களும் (Royal Air Force) கொழும்பிலும் திருகோணமலையிலும் நின்றன. ஜப்பான் 1942 ஏப்ரல் தொடக்கத்தில் கொழும்பைத் தாக்குவதற்குத் திட்டமிட்டு இருந்ததை உளவறிந்ததும் கொழும்புத் துறைமுகத்தில் நின்ற போர்க்கப்பல்கள் வெளியே கொண்டுசெல்லப்பட்டன.
ஏப்ரல் 5 (உயிர்த்த ஞாயிறு) காலை 7:30 அளவில் கொழும்புத் துறைமுகத்திலும் ரத்மலானை விமானத்தளத்திலும் ஜப்பானியர் விமானங்கள் குண்டு வீசத் தொடங்கியதும் சில மணிநேரம் முதல் தடவையாகக் குண்டுவீச்சும் விமானப்போரும் இலங்கையில் நடைபெற்றது. இப்படியான போரை அறியாத கொழும்பு மக்கள் வெளி ஊர்களுக்கு ஓடத் தொடங்கினர். கடைகளும் உணவுச்சாலைகளும் மூடப்பட்டன; அவற்றின் சொந்தக்காரர் பலர் கொழும்பைவிட்டு ஓடிவிட்டனர். இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்போர் நடமாடினர்.
நகரவாழ்க்கை இவ்வாறு சீர்குலைக்கப்பட்டதும், மீண்டும் ஓரளவு உறுதிநிலையைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்தது. அத்தியாவசியப் பொருட்களை விற்பதற்கும் உணவைப் பெறுவதற்கும் சில கடைகளையும் உணவகங்களையும் பலாத்காரமாகத் திறந்து நடத்துவதற்குச் சிலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அப்படி அதிகாரம் பெற்று அரசாங்கத்துக்கு உதவியோருள் ஒருவர் யாழ்ப்பாணத்தவர். இவர் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தில்லைநாதன் உருத்திரா என்பவராவர்; வெள்ளவத்தையில் வசித்தவர். உடற்பயிற்சியில் பெரிதும் ஈடுபட்ட இவர் ஒரு பயில்வான் போன்று கருதப்பட்டவர். மூடப்பட்டிருந்த ஆனந்தபவன் என்ற பிரசித்தி பெற்ற உணவுச்சாலையை மீண்டும் இவர் திறந்து நடத்தியும், வேறுவகைகளில் உதவியும் கொழும்பில் புகழ்பெற்றார். இப்புகழின் விளைவாகப் பின்னர், 1953 இல், கொழும்பின் ‘மேயராக’ நகரத்தேர்தலில் வெற்றிபெற்றார். அந்த ஆண்டு இலங்கைக்கு வந்த எலிஸபெத் மகாராணியை கொழும்பின் முதல்வராக வரவேற்கும் வாய்ப்பையும் பெற்றார். வெள்ளவத்தையில் உள்ள உருத்திரா மாவத்தை என்ற தெரு இவர் ஞாபகார்த்தமாக விளங்குகிறது.
மலாயாவும் சிங்கப்பூரும் ஜப்பானியர் ஆட்சிக்கு உட்பட்டதும் அந்த இடங்கள் யாழ்ப்பாணத்துடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டது. என் தாயார், தன் சகோதரர் ஒருவருக்கு எழுதிய கடைசிக் கடிதம் என் கண்முன் இன்றும் நிற்கிறது. அது எழுதப்பட்ட காலம் 1941 இன் இறுதி என்று நினைக்கின்றேன். எனக்கு நாலு வயது. அம்மா ஒரு சாதாரணக் கடதாசியில் பென்சிலால் எழுதிய ஒரு கடிதம். தான் எழுதுவதை எனக்குச் சொன்னார். அம்மாவுடைய வழமையான கடிதத் தொடக்கம்: ‘அன்பும் பட்சமும் மறவாத —-’; நான் இன்னும் மறக்காத சொற்கள். இதன்பின் கடிதங்கள் மலாயாவுக்கு அனுப்பப்படவுமில்லை, அங்கிருந்து கிடைக்கவும் இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாணத்தவர்க்கும் மலாயா/ சிங்கப்பூரில் வாழ்ந்த அவர்கள் உறவினர்களுக்கும் இடையில் இருந்த தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டது.