லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் - தெல்லிப்பழை
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
10 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – தெல்லிப்பழை

June 9, 2025 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் மல்லாகம் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், தெல்லிப்பழைக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம். 

தெல்லிப்பழைக் கோவிற்பற்று, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது தெல்லிப்பழை, மாவிட்டபுரம், பழை, வீமன்காமம், கட்டுவன் என ஐந்து துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கோவிற்பற்றின் வடக்குக் கரையோரமாகக் மேற்கிலிருந்து கிழக்காகத் தெல்லிப்பழை, மாவிட்டபுரம், பழை ஆகிய மூன்று துணைப்பிரிவுகளும் வரிசையாக அமைந்துள்ளன. கிழக்கு எல்லையை அண்டித் தெற்கில் கட்டுவனும் அதற்கு வடக்கே வீமன்காமமும் உள்ளன. முதலில் குறிப்பிட்ட மூன்று பிரிவுகளும் கடல் முகப்புகளைக் கொண்டவை. இறுதி இரண்டும் நிலத்தால் சூழப்பட்டவை (படம்-1).

எல்லைகள்

தெல்லிப்பழைக் கோவிற்பற்றின் வடக்கு எல்லையாக, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள பாக்கு நீரிணை அமைந்துள்ளது. கிழக்கில் மயிலிட்டியும்; தெற்கில் மல்லாகமும்; மேற்கில் மல்லாகம், பண்டத்தரிப்பு ஆகிய கோவிற்பற்றுகளும் எல்லைகளாக அமைந்துள்ளன (படம்-2).

நிலப்படம் காட்டும் தெல்லிப்பழைக் கோவிற்பற்றின் பகுதிகள் தற்காலத்தில் தெல்லிப்பழைப் பிரதேசச் செயலர் பிரிவுக்குள்ளும், உள்ளூராட்சி நிர்வாக முறைமையில் இன்றைய வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் எல்லைக்குள்ளும் அடங்குகின்றன.

வீதிகள்

லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி, தெல்லிப்பழையில் மூன்று வீதிகள் சந்திப்பதைக் காண முடிகிறது. ஒன்று யாழ்ப்பாண நகரத்திலிருந்து வடக்கு நோக்கித் தெல்லிப்பழை வரை வருகிறது. அடுத்தது, தெல்லிப்பழையிலிருந்து கிழக்குப் பக்கமாக வல்லையூடாக வடமராட்சிக்குச் செல்லும் வீதி. மூன்றாவது, தெல்லிப்பழையிலிருந்து மேற்குப் பக்கமாகப் பண்டத்தரிப்புக்குச் செல்கிறது. இவை சந்திக்கும் இடத்தை இன்றைய தெல்லிப்பழைச் சந்தியுடன் அடையாளம் காணலாம். மேற்படி மூன்று வீதிகளூடாகவே தெல்லிப்பழையில் அமைந்த யாழ் குடாநாட்டின் தலைமைக் கோவிற்பற்றுத் தேவாலயம் குடாநாட்டின் பிற தேவாலயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் முக்கிய வீதிகளாகவுள்ள தெல்லிப்பழை –  காங்கேசந்துறை வீதியும் கரையோரமாகச் செல்லும் புன்னாலை பருத்தித்துறை வீதியும் நிலப்படத்தில் இல்லை. 

கட்டடங்கள்

ஏனைய கோவிற்பற்றுகளில் உள்ளது போலவே தெல்லிப்பழைக் கோவிற்பற்றிலும் தேவாலயத்தையும் அதனோடிணைந்த தேவாலய இல்லத்தையும் நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. அத்துடன், கரையோரத்தை அண்டி மடங்கள் போன்ற அமைப்புகள் இருப்பதையும் நிலப்படம் காட்டுகிறது. 

தேவாலயமும் தேவாலய இல்லமும்

போர்த்துக்கேயர் காலத்திலும் ஒல்லாந்தர் காலத்திலும்  தெல்லிப்பழைத் தேவாலயமே யாழ்ப்பாணக் குடாநாட்டின் தலைமைத் தேவாலயமாக இருந்தது (படம்-3). நிலப்படத்தில் இது மூன்று முக்கியமான வீதிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஒல்லாந்தர்காலத் தொடக்கத்தில் தேவாலயமும் இல்லமும் எவ்வாறிருந்தன என்பதைப் பற்றி போல்தேயஸ் பாதிரியார் விளக்கியுள்ளார். தெல்லிப்பழைத் தேவாலயம் நல்ல இட வசதியுடன் கூடிய பெரிய கட்டடம் என்றும் அதன் நடுவே சிறப்பாகக் கட்டப்பட்ட இரண்டு தூண்வரிசைகள் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.1 இது போர்த்துக்கேயக் கட்டடக்கலைப் பாணியில் மூன்று பகுதிகளாக அமைந்த மண்டபத்தைக் கொண்டது என்பது தெளிவாகிறது. 

போர்த்துக்கேயர் காலத்தில் யேசுசபையைச் சேர்ந்த பாதிரியார்களால் கட்டப்பட்ட தேவாலய இல்லம்  கம்பீரமானது என்றும், அங்கே சிறப்பான திராட்சை, இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பழ மரங்கள், நல்ல தண்ணீர்க் கிணறுகள் ஆகியவற்றுடன் கூடிய மனதுக்கு இதமான தோட்டமும் வளவும் இருந்தது எனவும் அவர் கூறுகிறார். தெல்லிப்பழைத் தேவாலயத்தை அண்டிப் பெரிய அரங்கம் இருந்ததாகவும், போர்த்துக்கேயப் பாதிரியார்கள் கட்டிய இவ்வரங்கத்தில் விசேட நாட்களில் சமயம்சார்ந்த நாடகங்களை நிகழ்த்திக் காட்டியதாகவும் தெரிகிறது.2

பிரித்தானியர் காலத்தில் தெல்லிப்பழை அமெரிக்க மிசன் மதப் பணியாளருக்கு ஒதுக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் அவர்கள் கையேற்றுத் திருத்திய முதல் இரண்டு ஒல்லாந்தத் தேவாலயங்களில் தெல்லிப்பழைத் தேவாலயமும் ஒன்று.3 மற்றது வட்டுக்கோட்டை என ஏற்கெனவே முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டோம்.  தெல்லிப்பழையில் ஒல்லாந்தர்காலத் தேவாலயமும் இல்லமும் அமைந்திருந்த இடத்திலேயே முன்னர் அமெரிக்க மிசன் நிறுவிய யாழ்ப்பாணத்தில் மிகப் பழைய பாடசாலைகளுள் ஒன்றான யூனியன் கல்லூரியும் அமெரிக்க மிசன் தேவாலயமும் இன்றும் காணப்படுகின்றன.

மடங்கள்

நிலப்படத்தில் தெல்லிப்பழைக் கோவிற்பற்றின் கடற்கரை ஓரமாகவுள்ள மூன்று இடங்களில் மடங்களைக் குறிக்கும் குறியீடுகள் காணப்படுகின்றன. ஒன்று இளவாலைத்துறை எனப் பெயர் குறித்துள்ள இடத்திலும், மற்றது பட்டிக்குடா என்ற இடத்திலும், மூன்றாவது கீரிமலைக்குக் கிழக்கே ஓரிடத்திலும் காணப்படுகின்றன. இவை தவிர, வலிகாம நிலப்படத்தில் வரித்தூண்டல் (Wari Toendel), பட்டிக்கடவை எனக் குறித்துள்ள இடங்களில் குளங்களும் அருகே மரங்களும் இருப்பதுபோல் காட்டியிருந்தாலும், யாப்பாணக் குடாநாடு முழுவதையும் காட்டும் நிலப்படத்தில் இவ்விரண்டு இடங்களிலும்கூட மடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இளவாலைத்துறை, பட்டிக்குடா, வரித்தூண்டல், பட்டிக்கடவை ஆகியவை படகுத்துறைகள் என்பதில் ஐயமில்லை. இவை தெல்லிப்பழைத் துணைப்பிரிவுக்குள் காணப்படுகின்றன. இப்போதும் அவற்றுட் சில மீன்பிடித்துறைகளாகப் பயன்படுகின்றன. முற்காலத்தில் இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையேயான பயணிகள் போக்குவரத்துக்கும் இத்துறைகள் பயன்பட்டிருக்கக்கூடும். லெயுசிக்காமின் நிலப்படங்களில் பல இடங்களில் காட்டியுள்ளதுபோல் மேற்காட்டிய இடங்களில் உள்ள மடங்களும் பயணிகளினதும் மீனவர்களினதும் தேவைக்கானவையே எனலாம். 

ஐந்தாவதாக ஒன்று அம்பலம் என்ற குறிப்புடன் காணப்படுகிறது. இது மாவிட்டபுரம் துணைப்பிரிவுக்குள் கரையோரமாக அமைந்துள்ளது. லெயுசிக்காமின் வலிகாமத்தைக் காட்டும் நிலப்படத்தில் இதற்கான குறியீடும் பெயரும் தெளிவாக இல்லை. ஆனால், இத்தொகுப்பிலுள்ள இன்னொரு நிலப்படத்தில் ‘அம்பலம்’ என்ற பெயர் தெளிவாக உள்ளது. அவ்விடத்தில் மடத்தைக் குறிக்கும் சிறிய கட்டடமும் அதனருகே ஒரு மரமும் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளன. இந்த அம்பலம் இவ்விடத்தில் ஏன் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை. இது கீரிமலைக்கு அருகாமையில் உள்ளது. கீரிமலையில் புகழ்பெற்ற பழைய சிவன்கோவில் இருந்துள்ளது. அத்துடன், இன்றும் இப்பகுதியில் உள்ள கேணி மிகப் பழங்காலத்திலிருந்தே புனிதமானது என்று கருதப்பட்டது. அக்காலத்திலேயே அக்கேணியில் நீராடுவதற்கு யாத்திரீகர்கள் வருவதுண்டு. பிரித்தானியர் காலத்தில் இப்பகுதியில் பல யாத்திரீகர் மடங்கள் நிறுவப்பட்டன. உள்நாட்டுப் போர்க்காலத்தில் அவற்றுட் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. நிலப்படத்தில் குறித்துள்ள அம்பலம் மேலே குறிப்பிட்ட கோவிலுடனும் கேணியுடனும் தொடர்புடையதா என்பது ஆய்வுக்குரியது. இங்கே எடுத்துக்கொண்ட நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் கீரிமலைச் சிவன்கோவில் ஒரு யாத்திரைத்தலமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. கேணியில் குளிப்பதற்காக மக்கள் வருவது தொடர்ந்திருக்கக்கூடும். ஆனால், இப்பகுதியில் கேணி எதையும் நிலப்படம் காட்டவில்லை.  

பட்டிக்குடா

இந்தக் கட்டுரைத் தொடரின் முன்னைய கட்டுரை ஒன்றில் தொலமியின் நிலப்படத்தைப் பற்றி ஆராய்ந்தபோது அந்நிலப்படத்தின் வடகிழக்குக் கரையோரத்தில் பட்டிக்குடா என்னும் ஓரிடத்தைக் காட்டியிருப்பது பற்றிக் குறிப்பிட்டோம். அத்துடன், சில ஆய்வாளர்கள் தொலமியின் நிலப்படத்தில் வடகிழக்குக் கரையில் காட்டியுள்ள இடங்கள் உண்மையில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையில் உள்ளவையே என்ற கருத்தை முன்வைத்திருப்பதையும் எடுத்துக்காட்டினோம். எனவே, தொலமியின் நிலப்படம் காட்டும் பட்டிக்குடா, லெயுசிக்காமின் நிலப்படம் காட்டும் பட்டிக்குடாவுடன் பொருந்துமா அல்லது அவை ஒரே பெயரைக் கொண்ட இருவேறு இடங்களா என்பதை ஆராயவேண்டும்.

காங்கேசந்துறைத் திட்டம்

நிலப்படத்தின்படி அக்காலத்தில் காங்கேசந்துறைக்குப் பெரிய முக்கியத்துவம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. பிரித்தானியர் காலத்தில் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டதாலும், தொடர்வண்டிப்பாதை காங்கேசந்துறை வரை சென்றதாலும், பின்னர் சீமெந்துத் தொழிற்சாலை அமைக்கப்பட்டதாலும் முக்கியத்துவம் பெற்ற இவ்வூர், போர்த்துக்கேயர் காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க குடியேற்றமாக இல்லாததாற்போலும் இவ்வூரின் பெயரில் ஒரு துணை நிர்வாகப் பிரிவுகூட உருவாக்கப்படவில்லை. 

ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் தலைமையிடத்தை யாழ்ப்பாண நகரத்திலிருந்து காங்கேசந்துறைக்கு மாற்றுவது தொடர்பில் சிந்தித்ததாகவும், அங்கே கோட்டையொன்றைக் கட்டுவதற்கான ஆரம்ப வேலைகள் இடம்பெற்றுப் பின்னர் கைவிடப்பட்டது என்றும், அதன் எச்சங்கள் இன்னும் இருக்கின்றன என்றும் ஆர்.எல். புரோகியர் உள்ளிட்ட சில ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டது பற்றி இத்தொடரின் முன்னைய கட்டுரையொன்றில் குறிப்பிட்டோம்.4 லெயுசிக்காமின் வலிகாமத்தைக் காட்டும் நிலப்படத்திலும் காங்கேசந்துறையை அண்டிய கடலுக்குள் நீண்டிருக்கும் சில கட்டுமானங்களைக் குறித்துள்ளனர். இதன் அருகிலுள்ள குறிப்பையும் வேறு சில நிலப்படங்களிலுள்ள குறிப்புகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்ததில், இதற்கு ‘காங்கேயந்துறைக்கான பழைய திட்டம்’ (Oud Project tot Cangeantoerre) எனப் பொருள்கொள்ள முடியும். ‘பழைய திட்டம்’ என்ற குறிப்பிலிருந்து அவ்விடத்தில் ஏதோவொரு கட்டுமானம் தொடங்கப்பட்டுப் பின்னர் கைவிடப்பட்டது எனக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. ஆனால், புரோகியர் முதலியோர் கருதுவதுபோல் இது ஒரு கோட்டையா அல்லது வேறேதாவது கட்டுமானமா என உறுதியாகச் சொல்ல முடியாது. இந்தக் கட்டுமானத்தின் ஒரு பகுதி தெல்லிப்பழைக் கோவிற்பற்றை அண்டியும் எஞ்சிய பகுதி மயிலிட்டிக் கோவிற்பற்றை அண்டியும் காணப்படுகின்றன.

கீரிமலை

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உயரமான பகுதி கீரிமலையே என்பது அறிந்ததே. இவ்விடத்தை உயரக்கோடுகள் போன்ற குறியீடுகளுடன் நிலப்படத்தில் காட்டியுள்ளனர். அருகே கீரிமலை (Kirimale) என்று பெயரும் குறித்துள்ளனர். இவ்விடம் குடாநாட்டின் மிக உயரமான பகுதி என்பதாலேயே இதைச் சிறப்பாகக் குறித்துக் காட்டியுள்ளனர் எனலாம். இந்நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் சைவ சமயம்சார்ந்த செயற்பாடுகளுக்கு ஒல்லாந்தர் தடை விதித்திருந்தமையால் இங்கே முன்னர் இருந்த கீரிமலைச் சிவன்கோவில், புனிதக்கேணி என்பவை தொடர்பாக ஒல்லாந்தர் இவ்விடத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கமாட்டார்கள் என்பது தெளிவு.   

குளங்கள்

நிலப்படத்தின்படி தெல்லிப்பழைக் கோவிற்பற்றில் 15 குளங்கள் உள்ளன. இவற்றுள் 14 குளங்கள் தெல்லிப்பழைத் துணைப்பிரிவுக்குள்ளும் எஞ்சிய ஒரு குளம் கட்டுவன் துணைப்பிரிவுக்குள்ளும் உள்ளன. தெல்லிப்பழைத் துணைப்பிரிவிலுள்ளவற்றுள் மட்டிவளைக் குளம், உட்டுச்செல்லக் குளம், பண்டுவண்ணைக் குளம், கர்த்தவயல் குளம், வாரித்தூண்டல், பட்டிக்கடவை, வெட்டுக் குளம், கெச்சேரிக் குளம், வலித்துணையன் குளம், சிலுகெல் குளம், பள்ளனவெட்டுவான் குளம், முலாய்க்குளம் ஆகிய 12 குளங்கள் சிறப்புப் பெயர்களைக் கொண்டவை. இவற்றுடன் அத்துணைப் பிரிவுக்குள் ஒரு கேணியையும் ஒரு குளத்தையும் பொதுப்பெயர்களிலேயே குறித்துள்ளனர். கட்டுவன் துணைப் பிரிவுக்குள் உள்ள குளம் அவ்வூர்ப் பெயரைத் தழுவிக் கட்டுவனில் குளம் என்று அழைக்கப்படுகிறது. 

இப்பகுதியில் காணப்படும் தற்காலக் குளங்களின் பட்டியலிலுள்ள பெயர்களுடன் ஒப்பிடும்போது மட்டிவளைக் குளமும் பண்டுவண்ணைக் குளமும் மட்டுமே அதே பெயரில் இன்றுவரை தொடர்வதைக் காண முடிகிறது.5 இவற்றைவிட நிலப்படத்திற் காணும் உட்டுச் செல்லக் குளம் (Uttoe chella coelam), முலாய்க் குளம் (Moelaay coelam) ஆகிய குளங்கள் முறையே உச்சலைக் குளம், முல்லைக் குளம் ஆகியவற்றுடன் அமைவிடப் பொருத்தத்தையும், பெயர்களில் ஒலிப்பு ஒற்றுமையையும் கொண்டுள்ளன. எனவே, நிலப்படத்தின் உட்டுச் செல்லக் குளம், முலாய்க் குளம் என்பனவே முறையே தற்போதைய உச்சலைக் குளம், முல்லைக் குளம் ஆகியவை என்று கொள்ள முடியும்.

குறிப்புகள்

  1. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 318.
  2. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 318.
  3. Miron Winslow, Memoirs of Mrs. Harriet L. Winslow (New York: American Tract Society, 1840), 192.
  4. R. L. Brohier, “Ceylon in Maps,” The Journal of the Dutch Burgers Union, vol XXXII, no. 2 (October 1942): 80.
  5. விவசாய அபிவிருத்தித் திணைக்களப் பதிவுகளின்படி.


About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்