இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே மிகுந்த மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட ஒரு வாழ்க்கை நிகழ்வாக சுன்னத்துக்கலியாணம் காணப்படுகிறது. இது வெறும் மருத்துவ நடைமுறையாகவோ சடங்காகவோ மட்டுமல்லாமல்; சமூக அடையாளம், தூய்மை மற்றும் ஆண்கள் பருவத்திற்கு நுழைவதற்கான ஏற்பாட்டு விழாவாகவும் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம்களிடையே இந்த விழா பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகள், மரபுகள் மற்றும் சமூகப் பங்கேற்புகளோடு கொண்டாடப்படுகிறது. இக்கட்டுரை ஆரம்பகால சுன்னத்விழா வழக்குகளை சுருக்கமாக அறிமுகம் செய்கின்றது. மத நம்பிக்கைகள் மற்றும் சுதேச கலாசார வெளிப்பாடுகள் எப்படி ஒன்றோடு ஒன்று இணைந்து இக்கொண்டாட்டத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றன என்பதை உரையாடுகின்றது.
விருத்தசேதனம் என்பது ஆண்களின் பிறப்புறுப்பில் உள்ள முன்தோலை அகற்றும் செயன்முறையாகும். இது உலகளாவிய முஸ்லிம்களிடையே காணப்படுகின்ற பிரதான ஒற்றுமைகளிலொன்று. இந்நடைமுறை இலங்கை முஸ்லிம்களிடையேயும் காணப்படுகின்றது. இஸ்லாமிய மார்க்கத்தின் வருகைக்கு முன்பிருந்தே இந்நடைமுறை பல்வேறு இனக்குழுக்களிடையேயும் மதங்களைப் பின்பற்றுவோரிடையேயும் நடைமுறையில் இருந்துள்ளது.
செமித்திய இனக்குழுக்கள், அரேபியர்கள், யூதர்கள் போன்ற மத்தியகிழக்கு வாசிகளிடமும், எகிப்தியக் கொப்டிக் கிறிஸ்தவர்கள், எதியோப்பிய மரபுவழிக் கிறிஸ்தவர்கள் மற்றும் மதம்சாராத பழங்குடி மக்களிடையேயும் வழக்கில் இருந்து வருகின்றது. குறிப்பாக தென் சஹாராவின் ஆபிரிக்கத் தொல்குடிகள், வடஅமெரிக்க அஸ்டெக்குகள், மாயன்கள், பிஜி, ஆவுஸ்திரேலிய தொல்குடிகள் என்று உலகின் பல பாகங்களிலும் இவ்வழக்குக் காணப்பட்டு வந்துள்ளது.
கிழக்கிலங்கை முஸ்லிம்கள் ஷாபி சிந்தனைப்பள்ளியைப் பின்பற்றுபவர்களாக காணப்படுவதனால் அனைவரும் விருத்தசேதனம் செய்வதைக் கட்டாயக் கடமையாக கைக்கொண்டு வருகின்றனர். இம்மரபு இஸ்லாத்தின் அறிமுகக்காலத்திருந்தே தொடர்ந்து வருகின்றது.
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், ‘விருத்தசேதனம் செய்வது, இலிங்க உரோமங்களைக் களைவது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கையான மரபுகளில் அடங்கும்’ என்று கூறியதாக கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது (ஸஹீஹ் புகாரி 5889, 5891, 6297).
விருத்தசேதனம் என்பது இலக்கியச் சொல்லாடலாகப் பயன்பட்டு வருகின்ற அதேவேளை, ‘கத்னா’, ‘சுன்னத்’ என்ற சொற்களே பேச்சுவழக்கில் உள்ளன. அரபுமொழியில் இது ‘கிதான்’ என்ற சொல்லால் அழைக்கப்படுகின்றது. கிழக்கிலங்கையில் இச்சடங்கு ‘சுன்னத்துக்கலியாணம்’ என்றே வழங்கப்படுகின்றது. அதேபோன்று இச்சடங்கு ஒரு பெரு வைபவமாகவே கொண்டாடப்படுகின்றது.
பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு 3 – 12 வயதிற்குள் சுன்னத் செய்யப்படும். தற்காலத்தில் பிறந்து ஏழாம் நாள், ஒன்பதாம் நாள், 40 ஆம் நாள் அல்லது 04 மாதங்களில் சுன்னத் செய்யப்படுகின்றது. இந்த வயது வரம்புகள் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபட்டும் காணப்படுகின்றன. இருப்பினும் பிள்ளையின் திடகாத்திரத்தன்மைக்கு ஏற்ப பெற்றோரே அதனைத் தீர்மானிக்கின்றனர்.

சுன்னத் செய்துவைப்பவர்கள் ஒய்தா, ஒய்தாமாமா என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சிகையலங்காரம் செய்பவர்களாகவே காணப்படுகின்றனர். பரம்பரை பரம்பரையாக இவர்களே இச்சடங்கை செய்வதற்காக அழைக்கப்பட்டனர். தற்காலத்தில் ஆங்கில வைத்தியர்கள் இதனை மேற்கொள்கின்றனர். ஒஸ்தாத் என்ற வார்த்தையிலிருந்து இச்சொல் பிறந்ததாகக் கருதப்படுகின்றது.
ஒரு வீட்டில் சுன்னத்துச் செய்வதாக இருந்தால் முதலில் வீடுகள் மெழுகப்பட்டு, சுவர் பூசி மினுக்கப்பட்டு, சுண்ணாம்பு அடிக்கப்படும். ஆற்றிலிருந்து மாட்டுவண்டியில் குருத்துமணல் ஏற்றிவந்து வாசலில் பரவுவார்கள். வீட்டின் சாப்புவீடு, உள்வீடு, திண்ணைவாசல் ஆகிய இடங்களில் மேற்புறமாக வெள்ளைச்சீலை கட்டுவார்கள். வண்ணான் மாற்றுச் சீலைகளால் பந்தல் அலங்காரம் செய்யப்படும். இதனைக் குடும்ப வண்ணாணே பொதுவாகச் செய்வதுண்டு. இதனை ‘வெள்ளை கட்டுதல்’ என்று அழைப்பர். சாப்பு வீட்டின் மத்தியில் ஒரு சணலைக் கட்டித் தொங்கவிடுவார்கள். அதன் நுனியில் வெள்ளைத்துணியொன்றின் மத்தியில் கொட்டைப்பாக்கை வைத்துக் கட்டி வைப்பார்கள். வீடானது இலாம்புகள், வண்ணவண்ண வெளிச்ச விளக்குகள் ஏற்றப்பட்டு அலங்கரிக்கப்படும். உயரமான தென்னை மரங்களில் ஒலி பெருக்கிகள் கட்டப்பட்டு பாடல்கள் ஒலிபரப்பப்படும்.
வீட்டு அலங்கார வேலைகள் நடைபெறுகின்றவேளை, ஆலிம் ஒருவரிடம் நாள் குறித்துக்கொண்டு வரும் வழக்கமும் இருந்துள்ளது. குறித்த நாளில் பெரும்பாலும் அஸர் தொழுகைக்குப் பின்னர் ஒஸ்தாமாமா அழைக்கப்படுவார்.
அழைப்பு
வாய்வழியாகச் சொல்லப்படுவதோடு, அழைப்பிதழ்களாக அச்சிட்டும் கொடுக்கப்படும். ஆரம்பகால அழைப்பிதழ்கள் ‘விருத்தசேதன விஞ்ஞாபனம்’, ‘விருத்த சேதன அழைப்பிதழ்’ என்று அச்சிடப்பட்டன. பின்னர் ‘சுன்னத் அழைப்பிதழ்’, ‘கத்னா அழைப்பிதழ்’ என்று அச்சிடப்படலாயின. தற்காலத்தில் இவ்வைபவம் மிகவும் எளிமையாகவே கொண்டாடப்படுகின்றது. ஆரம்பகாலங்களில் ஒரு வாரமளவுக்கு இச்சடங்கும் கொண்டாட்டமும் நீடித்துக் காணப்பட்டாலும், தற்காலத்தில் ஒரே நாளிலேயே எல்லாம் நிறைவேற்றப்பட்டு முடிகின்றது. மேலும் சிலர் சடங்கை மட்டுமே நிறைவேற்றி விடுகின்றனர்.



பல பெற்றோர்கள் தமது நெருங்கிய வயதுடைய இரு புதல்வர்களுக்கு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரே தடவையில் கத்னா வைபவத்தை நடாத்தியுள்ளனர். தற்காலத்தில் பிறந்து சில நாட்களிலேயே இது நிறைவேற்றப்படுவதோடு தனித்தனியாகவே செய்யப்படுகின்றது.
அழைப்புக் கொடுப்பதற்கு முன்பதாக பள்ளிவாசலில் அனுமதிபெறும் வழக்கும் சில பிரதேசங்களில் காணப்பட்டுள்ளது. இதற்காக வெற்றிலை – பாக்குத் தட்டத்துடன் தந்தை அல்லது உறவினர் ஒருவர் பள்ளிக்குச் சென்று அனுமதி பெறவேண்டியும் இருந்துள்ளது (நிந்தவூர்).
பின்னர் பெற்றோர், ஒவ்வொரு வீடாகச்சென்று அழைப்பு விடுப்பார்கள். உதாரணமாக நற்பிட்டிமுனை வரலாறும் வாழ்வியலும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அழைப்பு முறையை இங்கு குறிப்பிடுகின்றேன்.
“வாற சனிக்கிழமை அஸறுக்குப் பொறகு எங்கட புள்ளைய உரல்ல வைக்கப்போறம் அயத்துப் போகாம வந்திருங்க” என்று அழைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பால், பழம் கொடுத்தல்
அழைப்புக் கிடைத்ததும், வேளைகளில் முறைக்காரர்கள் (மாமா, மாமி முறையானவர்கள்) வெற்றிலை – பாக்கு வைத்து வட்டா கொண்டு வருவார்கள். அதனோடு அரிசி, நாட்டு முட்டை போன்றவற்றையும் எடுத்து வருவார்கள். பின்னர் மாப்பிள்ளைக்குத் தண்ணீர் வார்ப்பார்கள். தேங்காய்பால் பிழிந்து, அதில் வாழைப்பழம் சக்கரை இட்டுப் பிசைந்து அருந்தக் கொடுப்பார்கள்.
மருதோன்றிக் கலியாணம்
முறைக்காரர்கள் மாப்பிள்ளைக்கு மருதோன்றியிடும் நிகழ்வு மருதோன்றிக் கலியாணம் எனப்படும். மாப்பிள்ளையை நடுவில் இருக்கச்செய்து அவரின் தலையின்மீது வெள்ளைநிறச் சீலையொன்றைப் போட்டு வைப்பார்கள். பின்னர் மாட்டுக்கொழுப்பை உருக்கி, குச்சிகளால் உள்ளங்கைகளிலும் நகத்திலும் அலங்காரம் இட்டபின்னர் அரைத்துவந்த மருதோன்றியை உள்ளங்கையில் பூசி விடுவார்கள். பத்து விரல்களுக்கும் தொப்பி போன்று மருதாணி இடுவார்கள். இதன்பின்னர் உறவினர்களுக்கு விருந்துபசாரம் நடைபெறும்.
மருதோன்றி சிவந்து காய்ந்ததும், அடுத்தநாள் மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெறும். உறவினர்கள் கலியாண வீட்டில் தங்கி, பலகாரம் சுடுதல் மற்றும் பிற காரியங்களில் ஒத்தாசையாகச் செயற்படுவார்கள். தொதல், முறுக்கு, பணியாரங்கள் தயாரித்தல், வேலி கட்டுதல் போன்றன இடம்பெறும்.
வளவுகாவல் பண்ணுதல்
கத்னா நடைபெறுவதற்கு முன்பு பிரிகாரி ஒருவர் அழைக்கப்பட்டு வளவு காவல் பண்ணுதல் செய்வார்கள். வீட்டு வளாகத்தின் நான்கு எல்லைகளிலும் குழிவெட்டி அதனுள் மந்திரித்த தகடு அடங்கிய கண்ணாடிச் கீசாக்களையும், ஓதிய எலுமிச்சை போன்றவற்றையும் புதைத்துவிடுவார்கள். இதன்மூலம் கெட்ட சக்திகள் வீட்டினுள் நுழைவது தடுக்கப்படுவதாக நம்பினர்.
மாப்பிள்ளை ஊர்வலம்
அடுத்தநாள் காலைவேளையில் மாப்பிள்ளையை நன்றாகச் சோடித்து புதுச்சாரம், சட்டை, தொப்பி, கண்ணாடி, கைக்கடிகாரம், வார்ச்செருப்பு அணிவித்துக் குதிரையில் அல்லது மாட்டுவண்டியில் ஊர்வலம் கூட்டிச்செல்வார்கள். கூட்டுவண்டியாயின் வண்டிலினுள் கதிரையில் வெள்ளை விரித்து அதில் மாப்பிள்ளையை அமரச்செய்வார்கள். மாப்பிள்ளைையின் வண்டிலின் பின்னால் உறவுக்காரர்கள் – மச்சான், மைத்துனர்கள் – நான்கைந்து வண்டிகளில் தொடுவமாக வருவார்கள். முன்னும் பின்னும் பக்கீர் பாவாக்களும், பொல்லடிக் கோஷ்டியினரும் ஆடல் பாடல்களுடன் செல்வார்கள். ஊரிலுள்ள பிரதான பள்ளிவாயில்கள், தைக்காக்கள், ஸியாரங்களுக்கு அழைத்துச்சென்று காணிக்கை போடுவார்கள். அருகில் இருப்பவர்கள் கால்நடையாக ஊர்வலம் செல்வார்கள். ஊர்வலம் செல்லும்போது மாப்பிள்ளைக்கு ரொபி மாலை, காசு மாலை போன்றவற்றையும் உறவினர்கள் அணிவிப்பார்கள்.
பள்ளிவாசல் காணிக்கை போட்ட பின்னர், மோதினார் (முஅத்தின்) ‘துஆ’ பிரார்த்தனை செய்வார். அதன்பின்னர் அவருக்கும் காணிக்கை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வருவார்கள். இந்தவேளைகளில் உறவினர்கள் சந்திகளில் வெடி கொழுத்துவதும், குரவை இடுவதுமாக மாப்பிள்ளையை வரவேற்பார்கள்.
பின்னர் வீட்டிற்கு திரும்பியதும் ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள். ஆரத்தி மூன்றுமுறை எடுக்கப்படும். முதலாவதாக பால் ஆரத்தியும், பின்னர் மஞ்சள் ஆரத்தியும், அடுத்ததாக மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த சிவப்பு ஆரத்தியும் எடுக்கப்படும். பின்னர் ஆரத்தி தெருமூலையில் ஊற்றப்படும்.
ஒஸ்தாமாமாவுக்கு வட்டா கொண்டுபோதல்
தந்தையும், உறவினர்களும் ஒஸ்தாமாமாவின் வீட்டுக்கு வெற்றிலை, பாக்கு, வாசனைத்திரவியங்கள், பொருட்களுடன் வட்டா கொண்டு செல்வார்கள். அதன்போது அவருக்குத் திகதியையும் அறிவித்துவிட்டு வருவார்கள்.
சுன்னத்து நடைபெறுவதற்கு முதல் நாளிரவு முஅத்தின், ஒஸ்தா, அதிகாரி ஆகியோருக்கு விருந்து வைக்கப்பட்டு பாத்திஹாவும் ஓதப்படும்.
கத்னா வைபவம்
கத்னா தினத்தன்று உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, மாடறுத்து விருந்து வைக்கப்படும், மதியத்திற்குப் பின்னர் மாப்பிள்ளைக்கு புத்தாடை அணிவித்து அலங்கார மேடையில் இருப்பாட்டுவார்கள். வாழ்வுக்கலியாண மாப்பிள்ளையைப் போல, சுன்னத்துக்கலியாண மாப்பிள்ளையும் அலங்கரிக்கப்படுவார். வாழைநார்ப்பட்டு, மொகினிப்பட்டு, சேலைநார்ப்பட்டு சாரன் அணிவிக்கப்படும். துருக்கித்தொப்பி அல்லது குல்லா அணிவிக்கப்படும். தொப்பி அளவு போதாதபோது வெள்ளைத்துணியை தோப்பியினுள் வைத்து அறுக்கி அணியப்படும். பிற்காலத்தில் வலைத்தொப்பிகள், கோட்சூட் என்பனவும் அணியப்பட்டது. இவற்றோடு வெள்ளி மோதிரம், கழுத்திலே வெள்ளியிலான கறை, காலிலே தண்டை என்பனவும், தோல் செருப்பும் அணிவிக்கப்படும்.
பின்னர் மாப்பிள்ளை, மச்சி முறையானவர்களுக்கு உள்ளங்கையில் அத்தர் தடவிவிடுவதோடு, அன்பளிப்புகளையும் கொடுப்பார். உம்மம்மா, வாப்பம்மா முறையானவர்களுக்கும் அன்பளிப்புகளைக் கொடுப்பார். வருகைதந்த உறவினர்கள் மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளையின் தாய்க்கும் பணம், நகை உள்ளிட்ட அன்பளிப்புகளை வழங்குவார்கள்.
இந்தவேளையில் ஒஸ்தாமாமா வீட்டிற்கு வந்து சாம்பல் ஓதி வளவை மீண்டும் காவல் பண்ணுவார். தன்னுடன் கத்திக்கூடு, மருந்துப்பைகளையும் எடுத்து வந்திருப்பார். தன்னோடு உதவியாளர் ஒருவரையும் கூட்டி வந்திருப்பார்.

பின்னர் மாப்பிள்ளையைச் சிறுநீர் கழிக்கச் செய்துவிட்டு, அவரது இடுப்பில் வெள்ளைத்துணி அணிவிக்கப்படும். மாப்பிள்ளையை அழைத்து வந்து கத்னா செய்யும் அறையில் உரல் ஒன்றைக் கவிழ்க்கச்செய்து, அதன்மீது வெள்ளைத்துணியொன்றை விரித்து அமரச்செய்வார்கள். உரலின்கீழே அருகில் சாம்பல் தட்டொன்று வைக்கப்படும். சிந்துகின்ற இரத்தம் மற்றும் கழிவுத்தோல் ஆகியன அதில் இடப்படும். பின்னர் அவை புதைக்கப்படும்.
உறவினர்களில் வலுவானவர்கள், மாப்பிள்ளையின் கை, கால்கள், தொடை ஆகியவற்றை வலுவாகப் பிடித்திருக்க இன்னொருவர் தலையைத் திருப்பிப் பராக்குக்காட்டும் வண்ணம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருப்பார். ஆண்கள் சுற்றிவரநின்று சீலைகளால் மறைத்துக் கொண்டிருப்பார்கள். இந்தவேளையில் வெளிப்பக்கம் பெண்கள் குரவை ஓசை எழுப்பிக்கொண்டிருப்பார்கள். பக்கீர் பாவாக்கள் தஹராகட்டை (றபான்) மூலம் பாடல்களை இசைப்பார்கள். ஒஸ்தாமாமா கணப்பொழுதில் கத்தியினால் இலிங்க உறுப்பின் முன்தோலை அகற்றிவிட்டு மருந்தைக்கட்டி சீலையைச் சுற்றிவிடுவார். இவ்வேளை வீரிட்டுக் கத்திய சத்தமும் குரவை ஒலியுடன் மறைந்துவிடும். பின்னர் மாப்பிள்ளையை வெள்ளைச்சீலை விரிக்கப்பட்ட பாயினில் படுக்கவைப்பார்கள்.

இவ் அறுவைச்சிகிச்சை முறைக்காக விசேடமான கத்தரிக்கோல்கள் பயன்படுவதுண்டு. இவை பற்றி 11 ஆம் நூற்றாண்டைய மருத்துவத்துறைச் சத்திரசிகிச்சை நிபுணரான அல் ஜஹ்ராவின் நூலில் வரைபடக்குறிப்புகளும் உள்ளன.
மாப்பிள்ளைக்கு அசௌகரியம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், காயம் இலகுவில் ஆற வேண்டும் என்பதற்காகவும், படுக்கைக்கு மேலே கூரையிலிருந்து ஒரு கயிற்றைக்கட்டி அதன் நுனியில் பாக்கு ஒன்றை வெள்ளைத்துணியின் மையத்தில் முடிந்து, போர்வைபோல இடுப்பிற்கு கீழே உள்ள பகுதியை மறைத்துத் தொங்கவிடுவார்கள்.
இதன்பின்னர் உறவினர்களுக்கு இனிப்புகளும், சர்பத்தும் வழங்கப்படும். கத்னா நடைபெற்ற தினத்திலிருந்து சீலையைக் கழற்றி, மீண்டும் தண்ணீர் வார்க்கும்வரை வாசலில் வேப்பங்கொத்து கட்டப்படும். குறித்த வீட்டில் விசேட கவனிப்புக்குரிய நபர்கள் உள்ளனர்; எனவே, தீட்டுடையவர்கள் நுழையக்கூடாது என்று சைகைச்செய்தி அளிப்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகின்றது. மேலும் கெட்ட சக்திகள் நுழைவதை இது தடுக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
பத்தியம்
சுன்னத் செய்யப்பட்ட நபருக்கு காயம் ஆறும்வரை கிரந்தியை (அழற்சி) உண்டாக்கக்கூடிய உணவுகளைத் தவிர்க்கின்றனர். தக்காளி, கத்தரி, ஆழ்கடல் மீன்கள், இறால், மாட்டிறைச்சி போன்றவற்றைத் தவிர்ப்பதோடு, மூன்று நாட்களுக்கு தண்ணீரும் மட்டுப்படுத்தப்பட்டே வழங்கப்படும். மூன்று, நான்கு தேக்கரண்டி நீரே வழங்கப்படும். சிறுநீர்த்தொற்று மற்றும் காயத்தில் கிருமித்தொற்று ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு செய்யப்படுவதாகக் கூறுகின்றனர்.
அத்தோடு தேங்காய்ப்பூ சிறிதளவு போட்ட முருங்கையிலைச்சுண்டல், அரை அவியலில் நாட்டுக்கோழி முட்டை போன்றன விசேடமாக வழங்கப்படும். மேலும் நல்லெண்ணையினால் இடுப்பில் நீவிவிட்டு இளம்சூட்டுடன் கூடிய பிட்டினால் ஒத்தடம் இடப்படும்.
இரவுக்காவலும் பஜனையும்
சுன்னத் செய்யப்பட்டவர் இரவுவேளைகளில் புரண்டு காயத்தைச் சேதமாக்கிவிடக்கூடும் என்பதற்காக, ஆண் உறவினர்கள் இரவுவேளைகளில் காவல் இருப்பார்கள். அவர்களின் அயர்ச்சியைப் போக்குவதற்காக தினமும் இரவுவேளைகளில் பஜா அல்லது பஜனை எனப்படும் பாட்டுக்கச்சேரி நடைபெறும். இதற்காக பஜா கோஸ்டியினர் அழைக்கப்படுவார்கள். பக்கீர் பாவாக்களும் பாடல்களைப் பாடுவார்கள் இவர்கள் இஸ்லாமிய வரலாறு, உபதேசச்சிந்துகள், தத்துவப்பாடல்கள் போன்றவற்றைப் பாடுவார்கள். நள்ளிரவு தாண்டியும மாறிமாறி பாட்டிசைத்துக் கொண்டிருப்பார்கள். தொடர்ந்து தேநீர், பிட்டு, நொருக்குத்தீனிகள் போன்றவை பரிமாறப்பட்டுக்கொண்டிருக்கும். பிற்காலங்களில் தொலைக்காட்சிப்பெட்டி தருவிக்கப்பட்டு, திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வந்துள்ளன.
ஆரம்பகாலங்களில் வெளியூர்களில் இருந்து நட்டுமுட்டுக்காரர்கள் (நட்டுவாங்கம், மேளம்) இசைக்கும் தமிழர்கள் அழைக்கப்பட்டு, இசைக்கச்செய்து, வெகுமதிகள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்புகள் உள்ளன.
சம்மாந்துறையில் முதல்நாள் இரவு பதம் படிப்பார்கள்; இரண்டாம் இரவு கவி படிப்பார்கள்; மூன்றாம் இரவு பொல்லடி; நான்காம் இரவு புஸ்தகம் படித்தல் என்றவாறாக இடம்பெற்றுள்ளதாக மீராலெவ்வை எழுதிய குறிப்புகளிலிருந்து அறிய முடிகின்றது. இங்கு கண்டி ஒப்பாரி, கல்லாத்து ஒப்பாரி, நற்பிட்டிமுனையாள் காவியம், அலிபாதுஷா நாடகம், காசிம்படைப் போர், ராசமணிமாலை போன்றவை படிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் தினமும் காலைவேளை ஒஸ்தாமாமா வீட்டிற்கு வந்து காயத்திற்கு மருந்திட்டு இரத்தச்சீலையைக் கழற்றி புதுச்சீலை மாற்றிவிட்டுச் செல்வார். எண்ணைச்சீலை மருந்து கட்டப்படுவதோடு, தழும்பாக உள்ளபோது சிரட்டைக்கரி, சாம்பல் என்பன இடப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். மேலும் புளியம் இலை, குப்பிளா, குண்டுமணி இலை ஆகியவற்றை அவித்த நீரினால் உறுப்பைக்கழுவிய பின்னரே தூள் இட்டு மருந்து கட்டப்படும். இதன்போது ஒவ்வொரு நாளும் அவருக்கு அன்பளிப்பாகப் பணமும் பொருட்களும் வழங்கப்படும்.
ஆரம்பகாலங்களில் ஒவ்வொரு நாளும் ஒஸ்தாவின் வீட்டுக்கு சோறு, நிய்யத்துப் புக்கை என்பன கொண்டு சொல்லப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.
தண்ணிவார்த்தல்
காயம் ஆறியபின்னர், ஏழாம்நாள், தண்ணீர்வார்த்தல் இடம்பெறும். இதற்காக முதலில் மஞ்சள் தண்ணீரும், பின்னர் தேங்காய்ப்பாலும் தலையில் ஊற்றப்படும். பின்னர் வெதுவெதுப்பான வெந்நீரில் மாப்பிள்ளையை நீராட்டி, புத்தாடை அணிவித்து, அன்றைய தினம் பாற்சோறு, நாட்டுக்கோழிக் கறியுடன் மாப்பிள்ளைக்கு விருந்துவைப்பார்கள். பின்னர் பள்ளிவாசலுக்குச் சென்று பாத்திஹா ஓதிவிட்டு வருவார்கள்.
தற்கால நடைமுறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்
தற்காலத்தில் இச்சடங்கு ஒரு வைபவமாகக் கொண்டாடாப்படுவதில்லை. பிள்ளைகள் புத்தியறிவதற்கு முன்னரேயே, குழந்தைப்பராயத்தில் இது செய்யப்படுகின்றது. இது இலகுவாக இருப்பதோடு, காயமும் விரைவாக ஆறுகிறது. மேலும் தற்போது ஒஸ்தாமாமாவிடம் செல்லாமல், வைத்தியசாலைகளிலேயே இதனைச் செய்துகொள்ளக் கூடியதாகக் காணப்படுவதால், அலோபதி வைத்தியர்களே இதனைச் செய்கின்றனர். பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டு நடைபெறும் ஒரு விருந்துடனேயே இது நிறைவுபெற்றும் விடுகின்றது.