வடக்கு - கிழக்கு மாகாணங்களின் சமூக நலத்துறையும் அவற்றின் பொருளாதார ரீதியிலான பங்களிப்பும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
11 நிமிட வாசிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் சமூக நலத்துறையும் அவற்றின் பொருளாதார ரீதியிலான பங்களிப்பும்

May 27, 2025 | Ezhuna

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள் தொடர்பாக தெளிவுடுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு – கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களில் மனிதமூலதனத்தையும் நிதிமூலதனத்தையும் அதிக நலிவுக்குள்ளாக்கும் காரணிகளாக சமூகநலத்துறைச் செலவீனங்கள் இருந்து வருகின்றன. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை அரசியலில் இலவசமாக வழங்குதல் என்பதுவே சுதேசிய அரசுகளின் பொறுப்பு என்ற எண்ணம் வலுப்பெற்றிருந்ததால், மக்களின் நெருக்கடிகளைத் தீர்ப்பதில் அரசின் இலவச உதவி வழங்கல் மிக முக்கியமானது எனக் கருதப்பட்டது. அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு உருவாக்கப்பட்ட சுதேச அரசு, மக்கள் நலனில் கவனம் செலுத்தும் நலஅரசு (Welfare State) என்ற கொள்கையை முன்வைத்தது. இதன் அடிப்படையில், அரசின் வருமானத்தை மக்கள் நலனுக்காக இலவச விநியோக வடிவில் பகிரும்முறை இலங்கையில் நிலைபெற்றது. இலவச அரிசி, இலவச மருத்துவம், இலவசக்கல்வி, இலவச உதவியளிப்புகள் என சுதந்திரத்துக்கு பிற்பட்டகால அரசுகள் போட்டிபோட்டுக் கொண்டு செயற்பட ஆரம்பித்தன. ஜனநாயகத்தின் அடிப்படையில் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் அரசுமுறைமைக்குச் சாதகமாக இந்த உதவியளிப்புகள் மக்களுக்கு வழங்கப்படத் தொடங்கியதால், ஒவ்வொரு வருடத்திலும் வெளியிடப்படும் அரசின் வரவு-செலவுத் திட்டமானது ஏதாவதொரு சலுகையை மக்களுக்கு வழங்கத் தொடங்கியது. அது மக்கள் நலனைப் பேணவில்லை என்பதற்குப் பதிலாக அது அதிக மக்கள் கவர்ச்சியை ஆட்சியரசாங்கத்துக்குப் பெற்றுக்கொடுத்து, வாக்கு வங்கியை அதிகரித்துக்கொண்டது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். பொருளாதாரரீதியில் இச்செயன்முறையானது மக்களின் தங்கியிருப்புத் தன்மையை (Dependency Mentality)  அதிகரித்து, அரசுநோக்கிக் கையேந்தும் நிலையை உருவாக்கிக் கொண்டது என்பதே வரலாறாகியது. உணவு நிவாரணம் தொடர்பில் அரைக் கொத்து அரிசி, 8 கிலோ அரிசி, உணவுக்காப்பான், உணவு முத்திரை, மண்ணெண்ணை முத்திரை, சமுர்த்தி, திவிநெகும ஆகியவை அரசின் மக்கள் நலக் கொடுப்பனவுகளாகச் செயற்பட்டுள்ளன. இந்த நலத்திட்டங்களை எந்த அரசாங்கமும் முழுமையாகக் கைவிட்டதில்லை. இலங்கையில் ஒருவர் பிறப்பதற்கு முன்னரே, கருவில் வளரும் குழந்தைக்குப் ‘போசாக்கு’ உணவும், தாய்க்கு ஒரு ஆண்டிற்குரிய சத்துணவுகளும் வழங்கப்படுகின்றன. அரசு வைத்தியசாலையில் ஒருவர் பிரசவிக்கப்பட்ட பின்னர், பிறப்புச் சான்றிதழும் இலவசமாகப் பதிவு செய்யப்படுகிறது. பின்னர், திரிபோசா உள்ளிட்ட போஷாக்கு உணவுக் கூப்பன்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. இதற்குப் பிறகு, இலவச வைத்திய சேவை, இலவசக் கல்வி, மற்றும் இலவச உயர்கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு, முழுமையாக இலவச உதவிகளுடன் உருவாக்கப்படும் இம்மனித மூலதனம், பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற பின்பும், வேலைவாய்ப்பின்றி, அரச வேலையை எதிர்பார்த்துப் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என்பதை இங்கே புறக்கணிக்க முடியாதுள்ளது. மறுபுறம், இலகுவில் பாதிப்படையும் இலக்குக் குழுக்கள் (Vulnerability target group) அரசினால் பராமரிக்கப்பட வேண்டும் என்ற உண்மைநிலையை நிராகரிக்கவும் முடியாது. இந்நிலையில சமூகப் பாதுகாப்பு தொடர்பில் வடக்கு – கிழக்கு மாகாணங்களை நோக்கும் போது, மாற்றாற்றல் உள்ளோர், அவயவங்களை இழந்தோர், பிறப்பின் போதான இயலாமைக்கு ஆளானோர், போரினால் ஊனமுற்றோர் போன்ற வெளிப்படையான இயலாமை கொண்டோர் ஒரு தரப்பாகவும்; போரினாலும், இயற்கை நிகழ்வுகளாலும் விதவைகளாக்கப்பட்டு, அவர்களால் தலைமை தாங்கப்படும் குடும்பங்கள் மற்றொரு பகுதியாகவும்; பெற்றோர், பராமரிப்பாளர்கள் இல்லாமல் சிறுவர் மற்றும் முதியோர் காப்பகங்களில் பராமரிக்கப்படுபவர்கள் பிறிதொரு வகையானவர்களாகவும், மூன்று வகையான பிரதான இலகுவில் பாதிப்படையும் குழுவினர்கள் காணப்படுகின்றனர். உள்நாட்டுப்போரின் விளைவுகளால், வடக்கு – கிழக்கில், இந்தப் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை மிக அதிகமாகவும் வேறுபட்ட சமூகத்தாக்கங்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. இவ்விரு மாகாணங்களிலும் சமூகநலத்துறையின் பணிகள் மிக அதிகளவில் வேண்டியதாகவுள்ளது.

இந்தவகையில் வெளிப்படையான இயலாமைக்குட்பட்டோர் பற்றி ஆராயும்போது, வடக்கு மாகாணத்தில் 21,668 பேரும், கிழக்கு மாகாணத்தில் 18,337 பேரும் முழு அளவிலும், பாதியளவிலுமாக இயலாமைக்குட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். பிரதான இயலாமைத் தன்மையின் அடிப்படையில் ஆராயும்போது, பார்வைக்குறைபாடுடையவர்கள் என்ற வகைப்பாட்டில் வடக்கு மாகாணத்தில் 1,826 பேரும், கிழக்கு மாகாணத்தில் 1,598 பேரும் காணப்படுகின்றனர். செவிப்புலன் இழந்தோர், வாய்பேச முடியாதோர் என்ற வகைப்பாட்டின்கீழ் வடக்கில் 3,083 பேரும், கிழக்கில் 2,509 பேரும் உள்ளனர். அங்கங்களை இழந்தவர்கள் என்றவகைப்பாட்டில், கால் மற்றும் கைகளை இழந்தவர்கள் வடக்கில் 10,581 பேரும், கிழக்கில் 4,228 பேரும் காணப்படுகின்றனர். மனநலப் பாதிப்புக்குட்பட்டோர் என்றவகையில் வடக்கில் 6,182 பேரும், கிழக்கில் 4,887 பேரும் காணப்படுகின்றனர். இந்த நபர்களில், முழுமையாக இயலாமைக்குட்பட்டோராக இல்லங்களில் பராமரிப்புச் செய்யப்படுபவர்கள் எனப்பார்க்கும்போது, கிழக்கு மாகாணத்தில் 8 பராமரிப்பு நிலையங்களில் 221 பேரும், வடக்கு மாகாணத்தில் 3 பராமரிப்பு நிலையங்களில் 193 பேரும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இயலாமைக்குட்பட்டோரின் வெளிப்படையான தகவல்களுக்கிடையில், உட்கிடையாக இருகால்களை இழந்தவர்கள், இருகைகளை இழந்தவர்கள், முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தோர், வலிப்புநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பல்வேறு வகையான உப பாதிப்புகளுடன் கூடிய நபர்களும் காணப்படுகின்றனர். இவ்வகையினருக்கு ஏற்படும் பிரச்சினைகள் ஏனைய வகை மக்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளைவிட வேறுபட்டதும் சிக்கலானதுமாகக் காணப்படுகின்றன.

பராமரிப்பாளர்கள் இல்லாதநிலையில், காப்பகங்களில் தங்கியுள்ள முதியோர் எனப்பார்க்கும்பாது, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் 4 தனியார் நிர்வகிப்பு நிலையங்களில் 73 பேரும், மட்டக்களப்பில் 5 தனியார் நிர்வகிப்பு நிலையங்களில் 106 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 2 அரசநிலையங்களில் 40 பேருமாக, 219 பேர் காப்பகங்களில் பராமரிக்கப்படுகின்றனர். வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் 6 இல்லங்களில் 26 பேரும், கிளிநொச்சியில் 01 இல்லத்தில் 18 பேரும், மன்னாரில் 04 இல்லங்களில் 524 பேருமாக, 985 பேர் காப்பகங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் .

காப்பகங்களில் பராமரிக்கப்படும் பெற்றோர், பாதுகாவலர்கள் இல்லாத பிள்ளைகள் என்ற வகைப்பாட்டில் நோக்கும்போது, கிழக்கு மாகாணத்தில் 57 சிறுவர் இல்லங்களில் 310 பிள்ளைகள் பராமரிக்கப்படுவதுடன், வடக்கு மாகாணத்தில் 37 சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் 1,475 பிள்ளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இருவகையான இல்லங்களிலும் பெருமளவிலானவை, தனியாரினாலும் தொண்டு நிறுவனங்களாலும் நடாத்தப்படுவதுடன், சமூக சேவைத்திணைக்களம், சிறுவர் நன்னடத்தைப் பராமரிப்புத் திணைக்களத்தினது மேற்பார்வையின் கீழும் இயங்கி வருவனவாகும். சிறுவர் மற்றும் முதியோர் பராமரிப்புத் தொடர்பிலாகப் பேணப்படவேண்டிய தரங்களின் நிர்ணயம், இடவசதி, உணவுமுறை, விடுமுறையளித்தல், சுகாதார நடைமுறைகள், உரிமை சார்ந்த விடயங்கள் அனைத்தும் இவ்விரு திணைக்களங்களினால் வழங்கப்பட்டு மேற்பார்வை செய்யப்படுகிறது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் என்ற இலகுவில் பாதிக்கப்படும் குழு (Vulnerability group) ஆனது, பாரிய சமூகத் தாக்கங்களுக்கு உட்பட்டதாகக் காணப்படுகின்றது. இயற்கையினாலும் யுத்தத்தினாலும் உருவாக்கப்படும் குடும்பத் தலைவர்களின் (Breadwinner) இழப்பானது, பெண்களின் தலைமைத்துவத்திற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி, அவர்களை பொருளாதாரச் சுமையைதாங்கும் பிரதான பிரிவினராக மாற்றிவிட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் மாவட்ட அடிப்படையில், வயதுரீதியாக நோக்கும்போது, அதன் விபரம் கீழேயுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

மாவட்டம்20க்கும் குறைவு21-2526-3031-3536-4041-4546-5051-5556-6060க்கு மேல்மொத்தம்
 யாழ்ப்பாணம்382056131,1311,8532,2823,6284,3476,1083,75343,958
 கிளிநொச்சி161102314295857948601,0391,0793,7508,893
 முல்லைத்தீவு1632063474146078938249871,2343,0468,721
 மன்னார்5921022592655605638858913,0336,651
 வவுனியா81302294125647537997951,2283,2178,135
  2267481,5222,6453,8745,2826,6748,05310,54036,79976,358

வட மாகாணத்தின் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் 30 சதவீதமானவை, 50 வயதுக்குக் குறைந்த இளம் விதவைகளைக் கொண்டிருப்பது, பல்வேறு சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. மறுமணம் புரிதல் என்பது சமூக  நியமங்களின்படி பெருமளவு வரவேற்புப் பெறாத சமூக அமைப்பினால், இளவயதில் கணவர்களை இழந்தவர்கள் தமது இளமையைத் தியாகம்செய்து வாழ வேண்டியுள்ளது. யுத்தத்தின்போது காணாமற்போனவர்கள் மீண்டும் திரும்பக்கூடும் என்ற எதிர்பார்ப்புத் தொடரும் காரணத்தால், பலர் ‘மறுமணம்’ செய்ய எண்ணுவதில்லை. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன், வாழ்வாதாரத்திற்காக உழைத்து, பிள்ளைகளையும் வளர்க்கவேண்டிய இரட்டைச்சுமை இவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டோராக 5,268 பேரும், கிழக்கு மாகாணத்தில் 6,577 பேரும் காணப்படுகின்றனர். குடும்ப முரண்பாடுகள் காரணமாக கணவனால் கைவிடப்பட்டவர் என்ற வகையடிப்படையில், வடக்கு மாகாணத்தில் 9036 குடும்பங்களும் கிழக்கு மாகாணத்தில் 9504 குடும்பங்களும் காணப்படுகின்றன. இவ்விரு வகைப்பாடுகளிலும் உள்ளடங்குபவர்கள் பெருமளவுக்கு இளம் தாய்மார்களாகக் காணப்படுவதனால், இவர்கள் பல்வேறு சமூக நெருக்குவாரங்களுக்கும் உட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இயற்கையான இறப்புக் காரணமாக குடும்பத்தலைவர்களை இழந்தவர்கள் வடக்கு மாகாணத்தில் 51,360 பேரும், கிழக்கு மாகாணத்தில் 56,340 பேரும் காணப்படுவதுடன், ஏனைய காரணங்களால் பெண்தலைமைக்கு உட்பட்டவர்கள் என்றவகையில் வடக்கு மாகாணத்தில் 10,654 பேரும், கிழக்கு மாகாணத்தில் 9,509 பேரும் காணப்படுகின்றனர். இந்தவகையில் மாவட்ட அடிப்படையில் இத்தகவல்களை நோக்கும்போது,

இலமாவட்டம்20<21-2526-3031-3536-4041-4546-5051-5556-6060>மொத்தம்
1திருகோணமலை1143068936509071474187519552847705318020
2மட்டக்களப்பு867961453182723112857306637964112968229986
3அம்பாறை9938937891239148619452283309140001396030675
4மொத்தம்11931995308137164704627672248842109593069178681

மூலம் : சமூக சேவை திணைக்களம், கிளிநொச்சி

மாவட்ட அடிப்படையில் இந்த எண்ணிக்கையை ஆராயும்போது யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அதிக பெண்தலைமைக் குடும்பங்கள் காணப்படுகின்றன. வயதுவாரியாகப் பரிசீலிக்கும்போது முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே இளம் பெண் தலைமையாளர்கள் அதிகமாகக் காணப்படுவதனை அவதானிக்கலாம். இந்தவகையில், ஏனைய மாகாணங்களைவிட வடக்கிலும் கிழக்கிலும் தோன்றியுள்ள இளம்வயதான விதவைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிகச் சிக்கலானவையாக உள்ளன. அவர்களின் பருவத் தேவைகள் மற்றும் அதனால் உருவாகும் உளவியல் சுமைகள், குடும்பத்தை நடத்தவேண்டிய பொருளாதாரத் தேவை, வேலைக்குச் செல்லும் கட்டாயம் ஆகியவை ஒருபுறமிருக்க, அதனால் பிள்ளைகளை முறையாகப் பராமரிக்க முடியாதநிலையும் உருவாகிறது. இத்துடன், தனிமை, பாதுகாப்புப் பற்றாக்குறை, சமூக நச்சரிப்பு, உட்தொந்தரவு மற்றும் தேவையற்ற அழுத்தங்கள் எனப் பல்வேறு பிரச்சினைகள், இந்தக் குடும்பங்களை ஒரு சங்கிலித் தொடராகத் தொடர்ந்து துரத்திக்கொண்டே செல்கின்றன. வடக்கு மாகாணத்தில் காணப்படும் 76,358 பெண்தலைமைக் குடும்பங்களையும், கிழக்கில் காணப்படும் 78,681 பெண்தலைமைக் குடும்பங்களை உள்ளடக்கிய 155,039 குடும்பங்கள்சார்ந்த விசேட இலக்குக்குழு நோக்கிய தேசிய திட்டங்கள் எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். போருக்கு பின்னரான நிலைமாறுகால நீதி என்ற வகையில் (Transitional Justice) சர்வதேச அமைப்புகளால் வலியுறுத்தப்பட்ட கருத்துகளுக்கு அமைய பெண்களுக்கான தேசிய நிலையம் (National Women Centre) உருவாக்கப்பட்டு, அதன் தலைமை நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டபோதும், அதனூடாக இவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தேசிய வரவு-செலவுத்திட்டத்திலும் கூட இம்மாதிரியான முதன்மை இலக்குக்குழு நோக்கிய கருத்திட்டங்கள் செயலுருப் பெறுவதில்லை.

அரசாங்கத்தின் நிதியளிப்பு மற்றும் உதவி வழங்கல்கள் என்றவகையில் நோக்கும்போது, பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவு, காச நோய்க்கான கொடுப்பனவு, புற்றுநோயாளருக்கான கொடுப்பனவு, தொழுநோய்க் கொடுப்பனவு, குருதி உறையா நோய்க் கொடுப்பனவு, முள்ளந்தண்டுவடம் பாதித்தோருக்கான கொடுப்பனவு என்பன நேரடியாகப் பாதிப்புக்குட்பட்டோருக்கு சமூக சேவைத் திணைக்களமூடாக வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் இதற்காக வழங்கப்படும் தொகைகளும் அது விநியோகிக்கப்பட்டு வரும் முறைகளும் பல நெருக்கடிகளைக் கொண்டே இயங்கி வருகின்றன. பொதுசன மாதாந்த உதவித்தொகையாக ரூ.250 முதல் ரூ.500 வரை வழங்கப்படுகிறது. இந்தத் தொகை அஞ்சலகங்களின் வாயிலாகவே மாதந்தோறும் வழங்கப்படுகிறது. ஆனால், பல கிராமங்களில் அஞ்சலகங்களே இல்லாத காரணத்தால், இதைப் பெறுவதற்காக பயணிக்கும்போது, பெறும் தொகையைவிட அதிக செலவு செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. காசநோய், புற்றுநோய், தொழுநோய், குருதி உறையா நோய், முள்ளந்தண்டு வடம் பாதிப்பு ஆகிய கொடுப்பனவுகளுக்கு மாதாந்தம் 5000 ரூபாவே வழங்கப்படுகிறது. அதுவும் பிரதேச செயலர் பிரிவுவாரியாகவுள்ள ஒதுக்கு எண்ணிக்கைக்கமையவே வழங்கப்பட்டு வருகிறது. பாதிப்படைந்துள்ள இலக்குக் குழுக்களுக்கு வழங்கப்படும் ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் சமூகப் பாதுகாப்புச் சபை (Social Security Fund) இனால் வழங்கப்படுகின்றன. இதன்கீழ் மதிப்பாய்வு செய்யப்பட்ட அனைத்து வறுமைக் குடும்பங்களும் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

  1. மிக வறுமை (Extremely Poor) 
  2. வறுமை (Poor)
  3. ஆபத்துக்குட்பட்டோர் (Vulnerable)
  4. நிலைமாறுதல் (Transitional) 

மிக வறுமை என்ற வகைப்பாட்டினுள் வருபவர்கள் 17,500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2026 – யூன் மாதம் வரை பெற்றுக்கொள்வர். வறுமை வகைப்பாட்டில் உள்ளடங்குவோர் 10,000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2026 – யூன் வரை பெற்றுக்கொள்வர். ஆபத்துக்குட்பட்டோர் 5000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2025 – டிசம்பர் வரை பெற்றுக்கொள்வர். நிலைமாறு வகைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மாதாந்தக் கொடுப்பனவான ரூபா 5000, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்ததால், அவர்கள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இத்துடன், சமூக சேவைத் திணைக்களத்தால் உதவித் தொகை பெறாமல் உள்ள மாற்றாற்றல் உள்ள நபர்களுக்கு மாதாந்தம் ரூபா 10,500 மற்றும் வயது முதிர்ந்தோருக்கு ரூபா 5,000 என இந்தத் திட்டத்தின்கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்தில் சேர்க்கப்படாதவர்கள், இரண்டாம் கட்ட தகவல் சேகரிப்பின் கீழ் உள்வாங்கப்பட்டு, அதற்கான பரிசீலனைகள் முடிவடைந்த பின், பிரதேச செயலாளர்களின் அனுமதி வழங்கும் செயன்முறை நடைபெற்று வருகிறது. இதற்கமைய புதிய தொகுதியினரை விரைவில் இத்திட்டத்தில் மேலதிகமாக இணைந்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எனினும், ‘அஸ்வெசும’ நலன்தொகை நிகழ்ச்சியில் ‘நிலைமாறு கட்டத்தில்’ இனங்காணப்பட்ட பலர், குறுகிய காலத்திலேயே பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் விண்ணப்பித்து மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு இல்லாத சூழலில், உதவி வழங்கப்பட வேண்டிய சிலர் தவறவிடப்பட்டுள்ளனர் என்பதைக் கவனத்தில் எடுக்க வேண்டும். 

கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பணவீக்கம், பாரிய தாக்கங்களை இலங்கைமக்கள் மீது, குறிப்பாக வடக்கு – கிழக்கு மக்கள் மீது ஏற்படுத்தியுள்ளதனை, அண்மையில் புள்ளிவிவரவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக, அதிகரித்த பணவீக்கம் காரணமாக உயர்ந்துள்ள வாழ்வாதாரச் செலவுகளை எதிர்கொள்வதற்காக, மக்கள் தமது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் சொத்துகளை விற்றல், அடகு வைத்தல், கடன் பெறல் போன்ற பல்வேறு வழிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக, பலர் கடனாளிகளாக மாறியுள்ளனர். நாட்டின் மொத்தச் சனத்தொகையில் 54.9% பேர் கடன்சுமையைக் கொண்டவர்களாகவும், 31% பேர் சொத்துகளை அடமானம் வைத்தவர்களாகவும், 21.9% பேர் வங்கிகளில் கடன் பெற்றவர்களாகவும், 9.37% பேர் வட்டிக்குப் பணம் வாங்கியவர்களாகவும் காணப்படுகின்றனர். கடந்த ஆண்டில் வருமான அதிகரிப்பைக்கொண்ட குடும்பங்கள், 3.4% ஆக மட்டுமே காணப்படுவதுடன், 36.6% ஆன குடும்பங்களின் வருமானத்தில் எவ்வித மாறுபாடுகளும் இடம்பெறவில்லை. 

இவ்வகையில் பொருளாதார நலிவு காரணமாக இலகுவில் பாதிப்படைவோரது எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதால், வலுவூட்டல் வேலைத்திட்டங்களின் உண்மை நோக்கம் அடையப்படாதுள்ளது. வறுமை வீதம் உயர்ந்து வரும்போது, நலன்புரி சேவைக் கொடுப்பனவுகளைக் குறைக்கவோ, நிறுத்தவோ தீர்மானம் மேற்கொள்ள முடியாதநிலை காணப்படுகிறது. சமூக அபிவிருத்திப் பொறிமுறையின் உதவியளிப்பும் ஆதரவும் தொடர்ந்தும் வரப்போகிறது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், இந்த நிலைமை மேலும் பாதிப்பை ஏற்படுத்தி, மக்கள் இயல்பான வாழ்க்கை முறையை நோக்கித் திரும்ப முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. இதனால், அவர்கள் அரசின் நிதியுதவியில் தொடர்ந்தும் சார்ந்திருப்பது தவிர்க்க முடியாததாக உருவாகியுள்ளது.


ஒலிவடிவில் கேட்க


About the Author

அமரசிங்கம் கேதீஸ்வரன்

பொருளியல் துறையில் சிரேஸ்ட வளவாளராகவும் பயிற்றுநராகவும் செயற்படும் அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் கிளிநொச்சியை சொந்த இடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டங்களையும், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் திட்டமிடலில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றவர். இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் II அதிகாரியாக, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பிரதி திட்டமிடல் பணிப்பாளராகப் பணியாற்றும் இவர், தேசிய பெண்கள் செயலகத்தின் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றுகின்றார். 2012 இல் ‘திட்டமிடல் மூலதத்துவங்கள்’ என்ற நூலினையும் 2024 இல் ‘மண்’ என்ற கவிதை நூலினையும் வெளியீடு செய்துள்ளார். இவர் சிறந்த விமர்சகரும் ஆய்வாளருமாவார். வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் உப தலைவராகவும், இலங்கை தேசிய கூட்டுறவுச் சபையின் உபதலைவராகவும், கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபையின் தலைவராகவும் செயற்பட்டு வரும் ஒரு மூத்த கூட்டுறவாளருமாவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்