ஈழத்தைச் சூழ்ந்த யுத்த மேகங்கள் இன்று காசாவில்; பல்லாயிரம் மனித உயிர்களைக் காவுகொள்ளும் மேலாதிக்க வெறியானது மேலும் வியாபிதமடைந்து அரபுலகனைத்தையும் அதனைக்கடந்த உலக யுத்தமாகவும் விரிவாக்கம் பெறலாம் என்ற ஆரூடங்கள் வெளிப்பட்ட வண்ணம். மேலைத்தேசங்கள் எனப்படும் ஏகாதிபத்தியத் திணையானது அவ்வாறு ஏற்படவுள்ள அந்தப் பெரும் யுத்தக்களரிக்குத் தயாராகும் முஸ்தீபுடன் இராணுவச் செலவுகளை அதிகரிப்பதான செய்திகள் வந்தபடி. இனிவரும் புதிய உலக ஒழுங்கில் பனிப்போர்கூட மூழ இடமின்றித் தேசங்கள் ஆக்கிரமிப்பு யுத்தங்களை மறந்தவாறு ஆளுமையுடன் சுயசார்புப் பொருளாதாரத்தை அடிப்படையானதாக வரித்துத் தமக்கான விருத்தியை ஏற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறிவரும் வேளையில் இத்தகைய அவதி.
அதுவும் மெய்; இதுவும் இன்றைய நிதர்சனம். உலக நாடுகள் அனைத்திலும் தனது ஆணைக்கு இணங்கும் அரசுகளை அமைக்க முற்படுவதும், மீறி வரும் அரசாங்கங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்துப் புதிதாக ஒன்றை ஜனநாயக வடிவிலோ இராணுவச்சதி வாயிலாகவோ அரங்கேற்றுதல் என்பது ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் ஆளுமைக்குக் கட்டியங்கூறி வந்த அம்சம். அந்த ஒற்றை மைய மேலாதிக்கத்துக்கு இனிமேலும் பணிந்து ஒழுக வேண்டிய அவசியமின்றிப் பல மையங்களுடன் நாடுகள் ஊடாடவல்ல புதிய உலக நியதி ஒன்று தொடக்கம் பெற்றுவிட்டது; சர்வவியாபியாக இருந்த டொலர் மேலாண்மையை மறுத்துப் பல்வேறு நாணயப் பரிமாற்ற வாய்ப்புகள் சாத்தியப்பட்டவாறுள்ளன.
ஏகாதிபத்தியத் திணையால் இந்த மாற்றத்தைச் சமாதான வழியில் அனுமதித்துப் பின்வாங்க இயலவில்லை என்பதனையே இன்றைய கெடுபிடிகள் காட்டிநிற்கின்றன; அதனைப் பொறுத்தவரை, ‘வாழ்வா? சாவா?’ எனும் பிரச்சினை இது. மேலாதிக்க ஒடுக்குமுறையைப் பிரயோகித்து டொலர் வாயிலாக எமது தேசங்களைச் சுரண்டிவந்த ஏகாதிபத்தியம், அவ்வாறன்றிச் ‘சுயசார்புடன் தனது சொந்த உழைப்பில் வாழ்வதற்கு’ ஒருப்படுமா?
ஏகாதிபத்தியத் திணையினுள் நேற்றுவரை இருந்து வந்த அந்நியோன்ய ஒற்றுமை இன்று இல்லையெனும் ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. ருஷ்ய – உக்ரேன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உக்ரேனின் வளப்பிரதேசங்களை பெரியண்ணன் நிலையில் இருக்கும் ஐக்கிய அமெரிக்கா வறுகி எடுத்துவிட்டதில் ஐரோப்பிய நாடுகளுக்கு உடன்பாடில்லை; உக்ரேனை யுத்தத்துக்குத் தூண்டியதுடன் அதற்கான ஆயுத வழங்கல்களை நாங்களும் தானே செய்தோம், எங்களுக்கான பங்கைத் தரவேண்டாமா என்ற ஆதங்கம் பின்தங்கிவிட்ட ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுக்கு!
இதனைப் பகை முரண்பாடாக்கி, உலகை மறுபங்கீடு செய்யும் ஆற்றலுடன் மூன்றாம் உலக யுத்தமொன்றைத் தொடுப்பதன் வாயிலாக ஐக்கிய அமெரிக்காவை மேவிய மூப்பு எமக்கே உரியது என்பதனை ஐரோப்பவினால் சாதித்துக்காட்ட இயலுமா? அதற்காகத்தான் தமது நாடுகளின் இராணுவச் செலவை அதிகரிக்கிறார்களா? நேற்றுவரை இளமைத் துடிப்பு மங்காமல் ஆளுமையுடன் தலைமை தாங்கிய ஐக்கிய அமெரிக்காவுங்கூட முதிர் பருவத்தில் தள்ளாடத் தொடங்கிவிட்டது; அதற்கும் ஏற்கனவே கிழடுதட்டிப்போன ஐரோப்பிய அணிக்கும் இடையே பாகப்பிரிவினை காரணமாக ஏற்பட்டுவரும் முரண்பாடு வலுத்தவாறு உள்ளபோதிலும் அதனைப் பகை முரண்பாடாக்குவதற்கு அவ்விரு தரப்பினருமே முற்படப்போவதில்லை. தமக்கிடையே பங்குபிரித்தலில் ஏற்பட்டுள்ள இந்தப் போட்டாபோட்டியை விடவும் புதிதாக உலக நாடுகள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவரும் சீன – ருஷ்ய அணியின் பொருளாதார வல்லமைதான் அவர்களைப் பொறுத்தவரை முதன்மைமிக்க பகை முரண்பாடு.
வர்த்தகப்போரை அறிவித்து முரண்டுபிடித்துவந்த ஐக்கிய அமெரிக்கா இறுதியில் சீனாவிடம் விட்டுக்கொடுப்புடன் கூடிய சமரசத்தைச் செய்ய நேர்ந்துள்ளது. தம்மால் பதியமிட்டு விருத்தி செய்யப்படுகின்ற இந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தால் ஐக்கிய அமெரிக்கத் தாளத்துக்கு அமைவாக இந்திய அரசை இணங்கிப்போகும்படி செய்வதற்கு இயலவில்லை என்பதனையும் ஏகாதிபத்தியத் திணையால் புரிந்துகொள்ள முடிகிறது. பலபடித்தான பலவீனங்களுடன் உள்ள இன்றைய இந்திய அரசாங்கம்கூடத் திமிறிக்கொண்டே செயற்படுகிறது. சீனாவைப்போலச் சொந்தக்கால்களில் முன்னேறும் வல்லமை தம்மிடம் கிடையாது என்றபோதிலும் இந்திய அரசாங்கம் இந்தவிடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமின்றித் தனித்துவத்தைப் பேண இயலுமாக இருப்பது, ஏகாதிபத்திய நலனைக் காவாந்து பண்ணும் அவசியத்தின் பொருட்டாகத் தம்மிடம் ஐக்கிய அமெரிக்கா இறங்கிவரும் என்ற நம்பிக்கையினாலே தான்!
பொதுவாக, புதிதாக மேலெழும் ஏகாதிபத்திய அணி ஏற்கனவே நடப்பிலிருக்கும் உலகப்பங்கீட்டை மாற்றியமைக்கும் நிர்ப்பந்தம் காரணமாக உலகயுத்தம் ஒன்றை தொடக்குவதாக இன்றைய ஏகாதிபத்திய யுகம் அமைந்தபோதிலும், புதிய பொருளாதார வலிமையைப்பெற்று முன்னேறுகின்ற சீன – ருஷ்ய அணி அத்தகைய யுத்த சன்னத நிலையைத் தவிர்க்கும் செயலொழுங்குகளுடனேயே இயக்கம் கொண்டுள்ளது. நேட்டோவின் யுத்த முஸ்தீபை முறியடிக்கும் நோக்கில் உக்ரேன் மீது ருஷ்யா தொடுத்துள்ள பதிலடித்தாக்குதல் என்பது ஏகாதிபத்தியத்தின் முன்னேற்றத்தை முறியடிப்பதற்கானது என்பதனைச் சமாதான விரும்பிகள் அறிவர். கிழடுதட்டத் தொடங்கியதன் காரணமாக ஏற்படுகின்ற தனது தள்ளாட்டத்துக்கு உரிய இன்றைய கட்டத்தை உணரும் ஐக்கிய அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியத் திணையேதான் வலிந்த யுத்தத்தை இன்று நாடி நிற்கின்றது. அதற்கு வாய்ப்புடைய ஒவ்வோரிடத்திலும் யுத்தப்பொறி பெருமெடுப்பாக மூசியெழ வேண்டும் என்பதற்கான இராஜதந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளது ஏகாதிபத்தியத் திணை. உக்ரேனிலும் மத்தியகிழக்கிலும் அவர்களது நோக்கம் தவிடுபொடியாகும்போது தூரகிழக்கில் தைவானைப் பகடைக்காயாக்க முயல்கின்றனர். நவகாலனித்துவப் பிணைப்புகளைத் தகர்த்து எறிந்தபடி தத்தமது நாடுகளின் பூரண விடுதலையை வென்றெடுக்க முற்படும் விடுதலைத் தேசிய சக்திகள் யுத்தங்களை விரும்பப்போவதில்லை; தேசங்கள் சுயாதிபத்தியத்துடன் விருத்தி பெறுவதனைத் தடுக்கும் பொருட்டும் ஆயுத வியாபாரம் களைகட்ட வேண்டும் என்பதனாலும் ஏகாதிபத்தியம் யுத்தத்தை வலிந்து உருவாக்கி வருகின்றது. அது யுத்தத்தையே சுவாசமாகக்கொண்டு சீவிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட அமைப்புமுறை. பூரண சுதந்திரத்தையும் சுய விருத்தியையும் நாடும் எந்தவொரு இனத்தேசியமும் யுத்தங்களை நிராகரிப்பதன் அடிப்படையில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முறியடிக்கும் இலட்சியத்தையே வரித்துக்கொள்ளும்!
மேலாதிக்கத் தமிழ்த்தேசியம்
‘மாவீரர்’ யுகத்தை மீட்டெடுக்கும் பரப்புரைகளை மேற்கொண்டுவரும் மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் சுயவிமரிசன நாட்டம் அற்றதாக உள்ள காரணத்தால், நடந்தேறிய வரலாற்றுத்தடத்தில் எமக்கான பின்னடைவு எவ்வாறு ஏற்பட்டது என்ற தேடலற்றதாக உள்ளது. இன்னமும் எதிர்ப்பு அரசியல் நிலைப்பாட்டில் யுத்தத்தைத் துதிபாடுகிறது. இவ்வாறு சொல்வதில் அடிப்படையான ஒரு தவறுள்ளது என்பதனையும் இணைத்துப்பேசுவது அவசியம். ஒட்டுமொத்தமாகத் தமிழ்த் தேசியம் தோல்வி கண்டுள்ளது எனக்கூற இயலுமா?
பிரித்தானிய ஏகாதிபத்தியமானது உயர்பதவிகளைத் தம்மிடம் வைத்தவாறு, உயர்கல்வி வாய்ப்பை அதிகளவில் யாழ்ப்பாணத்துக்கு வழங்கியதனூடாக, அடுத்துள்ள நிர்வாக ஏவலாளர்களால் இங்கு உருவாக்கிய ஊழியப்படையை நிரப்பிக்கொண்டது. அவர்களால் உற்பத்தி செய்யப்பட்டிருந்த அரசாங்க உத்தியோக வாய்ப்பின் பேறாக இலங்கை பூராவிலும் ஆதிக்கம் செலுத்திவந்த யாழ்ப்பாண மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் இன்றைய நிலையில் ‘சர்வதேசமளாவிய’ (அவர்களது ‘சர்வதேசம்’ ஏகாதிபத்தியப் பூமிப்பரப்பே தான்) உத்தியோக வாய்ப்பைப் பெற்றுள்ளதன் மூலமாக வெற்றிபெற்ற வாழ்க்கை மட்டத்தை எட்டியுள்ளது என்பதே உண்மை நிலவரம்!
சிங்களம் அரசகரும மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 1956 ஆம் ஆண்டிலிருந்து, சிங்களத் தேசியம் தமது பிரதேசங்களில் தமக்கான ஊழியர் படையை உள்வாங்கும் முனைப்பை மேற்கொண்டு வந்தபோதிலும், முழு அளவில் உத்தியோகக்களத்தைக் கைப்பற்றிவிட இயலவில்லை. உயர்கல்வி வாயிலாக மேலாதிக்கப் பதவிகளில் அறுபதாம் ஆண்டுகளின் இறுதிவரை, தொடர்ந்தும் யாழ்ப்பாணம் முன்னுரிமையுடன் அதிகாரம் செலுத்தி வந்தது. தரப்படுத்தல் ஊடாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருந்து துறைகள் ஒவ்வொன்றுக்கும் மாணவர் தெரிவு 1972 ஆம் ஆண்டின் பின்னர் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் அதுவரை பெற்றிருந்த சிறப்புரிமையை இழக்க நேர்ந்தது. யாழ்ப்பாணத்துக்கு வெளியே வன்னி, கிழக்கு மாகாணம் எனும் ஏனைய பூர்வீகத் தமிழர் பிரதேசம் அனைத்தையும் உள்ளடக்கியதுடன், இலங்கை பூராவும் பெற்றிருந்த உத்தியோக ஆக்கிரமிப்பு இவ்வகையில் பறித்தெடுக்கப்பட்டமை காரணமாகவும், அதன்பாலிருந்த நியாயத்தையும் கடந்து வேறும்பல புறக்கணிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டமையினாலும் தொடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் இரத்த வெள்ளத்தில் ஒடுக்கப்பட்டது. இன்று, தமிழர் தாயகம் என விளங்கிய வடக்குக் கிழக்கு எங்கிலும் தனது ஆக்கிரமிப்புக்கரத்தை சிங்களப் பேரினவாதம் விஸ்தரித்துள்ளது. சுதந்திரத்தின் பின்னர் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டு வந்த புறக்கணிப்புகள் இடம்பெறாத வண்ணம் அனைத்து இனங்களும் சமத்துவத்துடனும் சமவுரிமையுடனும் இணைந்து செயலாற்ற வழிவகுப்போம் எனக்கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழர் தாயகக் கோட்பாட்டை மறுதலிப்பதாக மட்டுமன்றி வேறுபட்ட தேசிய இனங்களின் இருப்பையும் நிராகரித்துள்ளது; சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக, பறங்கி, மலே எனவுள்ள இனப்பிரிவினர்கள் அனைவரது இணைப்புக்குமுரிய பல்லினப் பண்பாட்டுத் தேசமாக இலங்கையைக் கட்டியெழுப்ப முற்படுவதாக சூழுரைக்கின்றனர்!
ஆக, இலங்கை மண்ணில் இலங்கைத் தமிழ்த் தேசியம் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை; அவ்வாறிருக்க ‘முழுத்தோல்வி ஏற்பட்டுவிடவில்லை’ என்று கூறுவது எவ்வகையில் சரியானது? இலங்கை பூராவிலும் பெற்றிருந்த உத்தியோக மேலாதிக்கம் பறிபோனதில் ஆயுதமோதலை மேற்கொண்ட யாழ்ப்பாண மேட்டுக்குடிகளில் முக்கால் பங்குக்கு அதிகமானோர் புலச்சிதறலுடன் ஏகாதிபத்திய நாடுகளில் இருப்பை ஏற்படுத்தி உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். யாழ்ப்பாணக் குடிசன அடர்த்தியில் சரிபாதி இவ்வகையில் வெளியேறிவிட்டுள்ளது. ஏகாதிபத்திய நாடுகளில் தஞ்சமடைந்தோரில் அடங்கும் மேலாதிக்கத் தேசியர்கள் அல்லாத மிகுதிக் காற்பங்கிலும் குறைவானோர் மேலாதிக்கத் தேசியத்தை எதிர்க்கின்ற விடுதலைத் தேசிய உணர்வுடையோராவர். இலங்கையிலுள்ள மேலாதிக்க நாட்டமிக்கோரில் பெரும்பாலானவர்கள் தமது இருப்பைக் கொழும்பிலும், தென்னிலங்கையிலும் அமைத்தவாறு வடக்குக் கிழக்குக்கான சமஷ்ட்டியைக் கோரும் விநோதமான அரசியல்வாதிகள் (இறுதி யுத்தம் நடைபெற்றபோது, வன்னியிலிருந்து வெளியேற முனைந்த மக்களைக் கண்டித்துத் ‘தலைமைக்கு விசுவாசமாக அங்கையிருந்தே போராடாமல் தப்பியோடப் பார்க்கினம்’ என்ற குற்றப்பத்திரிகை வாசித்த இவர்கள் இப்போது ‘முள்ளிவாய்க்கால்’ நினைவேந்தலில் ஈடுபடும் அற்புதக் காட்சிகளையும் தரிசிக்கிறோம்).
சிங்களப் பேரினவாதச் செயலொழுங்குகளை முறியடிக்கும் கொள்கைத் திட்டங்களும் நடைமுறைகளும் விடுதலை நாட்டம் உள்ள சிங்களத் தேசியத்தால் முன்னெடுக்கப்படாத காரணத்தால் வடக்கு – கிழக்குப் பாரம்பரியப் பிரதேசத்தில் வாழும் பெரும்பான்மையான தமிழ்மக்கள் மேலாதிக்கத் தமிழ்த் தேசியத்தின் வாலாகத் தொங்க நேர்ந்துள்ளது. பேரினவாத மேலாதிக்கத்தை விடவும் சாதிய ஒடுக்குமுறையைக் கொடியது எனக்கூறும் ஒரு பகுதியினர் உள்ளனர்; இவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரில் பெரும்பான்மையினர் அவ்வாறு வாலாக ஆகிப்போனதற்கான காரணத்தை விளக்கம்கொள்ள இயலவில்லை என்பதனால் அவ்வாறு இழுபடுவதற்கு எதிரான தமது கண்டனத்தைத் தெரிவித்தும் உள்ளனர்.
இந்த அம்சத்தைக் கவனங்கொள்வதற்கு முன்னதாக நாவலர் பற்றிய மேலாதிக்கத் தமிழ்த் தேசியத்தின் அக்கறை எத்தகையது எனப் பார்ப்பது அவசியம். அரசியல் – போரியல் ஈடுபாடற்ற பெரும்பான்மையாகவுள்ள மேலாதிக்கத் தேசிய நாட்டம் மிக்கவர்கள் ‘கடவுளாலே தான் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட இயலும்’ என அமைதியடைந்து தமக்கான ஆடம்பர வாழ்வைத் தக்கவைப்பது பற்றிய கரிசனையில் காலம் தள்ளுவர். அவர்களுக்கு நாவலர் ஐந்தாம் குரவராகத் தெரிவார். தமிழகத்தின் நிலப்பிரபுத்துவ ஆதிக்க சக்தியான வெள்ளாளர், வேத – வேதாந்தப் பிராமணரை அரவணைக்க முற்பட்ட தவிர்க்கவியலாத வரலாற்று நிர்ப்பந்தம் பின்னதாக ஏற்படுத்திவரத் தொடங்கிய பாதிப்பை இனங்கண்ட வேளையில், அங்கிருந்து வெளியேற நேர்ந்து யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்த சிறுபிரிவினர், முன்னெச்சரிக்கை உணர்வோடு இயங்கினர்; பிராமணரைக் கோயில் ஊழிய அடிமைநிலையில் மட்டுப்படுத்தி சொத்துரிமை மறுப்பை அவர்களுக்கும் உரியதாக்கினர். இந்த ஆக்கிரமிப்பு இங்கு ஏற்பட்ட பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமது மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் சைவசித்தாந்தம் வெள்ளாளர்களால் அங்கே வெளிப்படுத்தப்பட்டு இருந்தது. அந்தச் சைவசித்தாந்தப் பதியாகிய சிவனின் புனித பூமியாக யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி இலங்கை பூராவையும் கருத்தியல்படுத்திய வெள்ளாள மேட்டிமைகளுக்கு நாவலரை ஐந்தாம் குரவராகக் காட்டும் அவசியமுள்ளது. கிறிஸ்தவப் பண்பாட்டு ஊடுருவலை முறியடிக்கும் பொருட்டு பண்பாட்டுத் தேசிய முன்னெடுப்பைத் தொடக்கி வைத்தவரான நாவலர் சைவசித்தாந்தப் பரப்புரையாளராகத் திகழ்ந்தார் என்பது குறித்துப் பேசி வந்துள்ளோம்.
இத்தகைய பிரிவினர்கூட இப்போது நாவலர் குறித்து அதிகம் அக்கறை கொள்வதில்லை. அவரைவிடவும் இன்றைய ஏகாதிபத்திய ‘வள வாழ்வை’ வருவித்துத் தந்த மாவீர யுத்த மேலாண்மையைத் துதி பாடுவது அவர்களுக்கான வரலாற்று அவசியமாக ஆகியுள்ளது. தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் யுத்தத்துக்கு அப்பால் விடுதலைப் போராட்டம் எதுவும் அவர்களுக்கு அவசியமில்லை. ‘கடவுள் தான் தமிழரைக் காப்பாற்ற வேண்டும்’ என்பவர்கள் மற்றொரு பக்கத்தில் ஏகாதிபத்திய அணியை மனங்கொள்வதாயுள்ள ‘சர்வதேச சமூகம்’ தாயக மண்ணில் நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று இறைஞ்சவும் செய்கின்றனர்!
மற்றொரு விந்தையும் உண்டு; சொந்த மண்ணில் வாழவிடாமல் புலச்சிதறலுக்கு ஆளாக்கிய சிங்களப் பேரினவாத அரசு மக்கள் மீது தொடுத்த யுத்தத்துக்குக் கரித்துக்கொட்டுவர். அதேவேளை, தாயக மண்ணில் வாய்ப்பளித்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தட்டிக்கழித்து அவசியமற்ற யுத்த முன்னெடுப்புகளை ஒவ்வொரு தடவையும் தொடக்கி வைத்த விடுதலைப் புலிகளின் நடைமுறைத் தந்திரோபாயத் தவறுகளை விமரிசனத்துக்கு உள்ளாக்காது இருப்பது மட்டுமன்றி, அதன் உந்துதலில் இருந்த வீரத்தை மெச்சுகின்றவர்களாக மேலாதிக்கத் தமிழ்த் தேசியர்கள் விளங்குகின்றனர். அந்த ‘விட்டுக்கொடுக்காத வீரம்’ தான் ஏகாதிபத்திய நாடுகளில் தமக்கான இருப்பைச் சாத்தியப்படுத்தி இருந்தது எனும் நன்றி உணர்வை மறந்தாரில்லை.
இவ்வாறு ஏகாதிபத்தியத் தளத்தில் ‘புலம்பெயர் தமிழீழத்தை’ இயங்க வாய்ப்பளித்த புலிகள் மட்டுமே இஸ்ரேலில் பயிற்சிபெற்ற ஒரேயொரு அமைப்பு எனும் அம்சம் கவனிப்புக்குரியது. இன்றைய உலகின் நாசகார யுத்த முன்னெடுப்பை மேற்கொண்டவாறு குழந்தைகள், பெண்கள், குடிமக்கள் என வகைதொகையற்று பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முஸ்தீபுகளுக்கு எதிராகப் போராடும் பலஸ்தீன விடுதலைப் போராட்டக் களத்தில் எண்பதாம் ஆண்டுகளின் முற்கூறில் பயிற்சிபெற்ற ஏனைய அமைப்புகளைத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இருந்து வெளியேற்றிய விடுதலைப் புலிகளின் தவறு குறித்தும் இந்த மேலாதிக்கத் தமிழ்த் தேசியர்கள் அலட்டிக்கொள்வதில்லை. வன்னியிலும் கிழக்கிலும் ‘அனைத்து இயக்கங்களும் ஒற்றுமைப்பட வேண்டும்’ என்ற உணர்வு மேலோங்கி இருந்தது; யாழ்ப்பாணத்திலோ ‘எதற்குப் பல இயக்கங்கள் வருகிறீர்கள், ஒரு இயக்கம் மட்டும் போராடினால் போதும்’ என்ற குரல் மேலோங்கி ஒலித்தது. அதன் ஆயுதமேந்திய பிரதிநிதிகளாகப் புலிகள் வெளிப்பட்டனர்!
விடுதலைப் புலிகள் அமைப்பினுள் ஆரம்பம் முதலாக ஏகாதிபத்தியச் சார்புடைய மிஷனரிகளின் செல்வாக்கு வலுவுடன் காணப்பட்டது. எந்த மிஷனரிகள் எமக்கான பாதிப்பின் கொடுமுடிகளாக வருவரெனக் கண்டு நாவலர் எமது பண்பாட்டுத் தளத்தைப் பாதுகாக்க முனைந்தாரோ, அந்த அமைப்புகள் இன்றைய மேலாதிக்கத் தமிழ்த் தேசியத்தின் ஏகாதிபத்திய நாட்டத்துக்குள்ளே ஊடாடி இருக்கின்றன எனும் பின்னணி கவனிப்புக்குரியது.
தலித்தியம்
தமிழ்த் தேசிய மக்களின் விடுதலைக்கான சரியான மார்க்கத்தைக் கண்டடையும் வாய்ப்புகளை மறுக்கும் வகையில், அனைத்து இயக்கங்களும் ஒன்றுபட்டு இயங்க இடமளிக்காமல் தனிவழி சென்ற மேலாதிக்கத் தமிழ்த் தேசிய இயங்குமுறை இன்றைய ஏகாதிபத்திய அணிக்குள் எம்மை ஆழ்த்தியுள்ளது; புலச்சிதறல் ‘வாய்ப்புடன்’ ஏகாதிபத்தியப் பரிணமிப்பை எட்டியுள்ள மேலாதிக்கத் தமிழ்த் தேசியர்கள் மட்டுமே தாயக மண்ணில் தமிழ்த் தேசிய விடுதலையின் சாத்தியப்பாட்டை இன்றும் மறுதலிக்கிறார்கள் என்றில்லை. இவர்கள் ஏதாயினுமொரு அதிதீவிரக் கோரிக்கை, சமஷ்டி என்பவற்றை முன்வைத்து ‘அதையன்றி வேறெதனையும் ஏற்கப் போவதில்லை’ என்று விடுதலைத் திசை மார்க்கத்துக்குரிய படிக்கட்டுகளைத் தகர்த்தெறிவர். நீண்டகால நோக்கில் தமிழ் மக்கள் உள்ளிட்ட இலங்கை முழுமையினது மக்கள் விடுதலை இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைப்பதே அவர்களது குறிக்கோள். அதிதீவிரமாக தமிழின் தனிவழி என்ற அவர்களது கோசத்தை வீரஞ்செறிந்ததாகக் கருதும் பலரும் இவர்களே தமிழர் விடுதலைக்கு வழி சமைப்பவர்கள் என மயங்குவர்.
இன்னொரு தரப்பினர் தமிழ்த் தேசியத்தின் பேரால் முன்வைக்கப்படும் ஒடுங்கிய குறிக்கோளானது தமிழ் மேட்டுக்குடிகளுக்கு உரியது; அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்தும் வாட்டிவதைத்துச் சுரண்டுவதற்கானதே தமிழ்த் தேசியத் தனியலகு என்பர்; தமிழ்த் தேசியத்துக்கு எதிராக பேரினவாத யுத்தத்தை முன்னெடுக்கும் சிங்கள அரசாங்கங்களுடன் இணைந்து தலித் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்பது அவர்களது நிலைப்பாடு. சென்ற நூற்றாண்டின் நாற்பதாம் ஆண்டுகள் முதல் அறுபதாம் ஆண்டுகளின் இறுதிவரை ஒடுக்கப்பட்ட மக்கள் கொம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையின் கீழ் அணிதிரண்டு, அனைத்துச் சாதிகளையும் ஒன்றுபடுத்தி இங்கே போராடியதன் வாயிலாகச் சாதியத் தகர்ப்புக்குரிய பல சாதனைகளை நிகழ்த்தி இருந்தனர். அந்தப் போராட்டங்களுக்கு எதிராகச் செயற்பட்ட தமிழ்த் தேசியத்தை ஆரம்பத்தில் அவர்கள் நிராகரித்தபோதிலும், சிங்களப் பேரினவாதத்தின் யுத்தவெறி அடிநிலை மக்களின் வாழ்வாதாரங்களை நாசப்படுத்தியதுடன் அவர்களைத் தொடர்ந்தும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து வந்தது; இளந்தலைமுறைத் தலித் போராளிகள் இயல்பாக யுத்த சாகரத்தில் ஈர்க்கப்பட்டபோது புலிகளால் கையகப்படுத்தப்பட்ட அணிக்குள் இயங்குவதன்றி வேறு சாத்தியப்பாடுகள் ஏதும் அவர்களின் முன்னே இருக்கவில்லை.
உத்தியோக ஆக்கிரமிப்புத் தமிழ்த் தேசியர்களில் இருந்து வேறுபட்ட தேசிய நலனைக் கொண்டிருந்த தலித் மக்கள், முன்னர் தம்மை தமிழர்களுக்குள் சிறுபான்மையினர் எனக் கருதும் வகையில் தீண்டாமை வாயிலாகப் புறக்கணிக்கப்பட்டு இருந்தனர். நாற்பதாம் ஆண்டின் நடுக்கூறில் உருவான ‘சிறுபான்மைத் தமிழர் மகா சபை’ என்ற அமைப்பாக்கத்தில் ஒடுக்கப்பட்ட அனைத்துச் சாதிப்பிரிவினரும் இணைந்து ஆதிக்க சாதியினரின் வேறுபடுத்தல்களுக்கு எதிராகப் போராடிய காலநிலை அப்படியே நீடித்திருப்பின், தமிழ்ப் புலிகளின் யுத்தகளத்தில் தலித் இளந்தலைமுறையினர் ஆகுதியாகி இருப்பரா? கொம்யூனிஸ்ட் கட்சி சரியான வழிகாட்டலை முன்னெடுக்காது போயிருப்பின், பௌத்த மதமாற்ற இயக்கம் வீறுடன் இயங்கத் தொடங்கிய நிலை வளர்ந்து, ‘தலித் – தமிழ்ப் பௌத்த’ இனத்தேசியம் ஒன்றை உருவாக்கி இருக்குமே? அதனை மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் எப்படிக் கையாண்டிருக்கும்? உடுத்த உடைகளுடன் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது போல ‘பௌத்தத் தமிழர்கள்’ வெளியேற்றப்பட்டிருப்பரா, கொன்றொழிக்கப்பட்டு இருப்பரா? நாற்பதாம் ஆண்டுகளில் இருந்து மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்து போராடி அறுபதாம் ஆண்டுகளின் பிற்கூறில் உருவாக்கப்பட்ட ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ புனிதமான – தீண்டத்தகாத சாதிகளென்ற பிளவாக்கத்தைத் தகர்க்கும் போராட்டங்களை முன்னெடுத்த காரணத்தாலேயே, வேறுபட்ட இரு தமிழர் நலன்கள் என்ற பேதங்கள் அகற்றப்பட்டு இருந்தது. இவ்வகையில் ‘சிறுபான்மைத் தமிழர்’ எனும் வேறுபடுத்தல் மார்க்சியர்களது போராட்டங்கள் ஊடாக அகற்றப்பட்டமையாலேயே ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவின் இளம் தலைமுறையினர் தமிழ்த் தேசியச் சேனைக்குள் உள்வாங்கப்படுதலும் சாத்தியப்படலாயிற்று!
தொடர்ந்த விடுதலைக்காகப் போராட வேண்டிய தலித் மக்கள் இன்று மேலாதிக்கத் தமிழ்த் தேசியத்தின் வாலாக ஆக்கப்பட்டுள்ளனர் எனக் கண்டிக்கும் தலித்தியவாதிகள் சிங்களப் பேரினவாதத்துடன் உறவாடியவாறுள்ளனர். மேலாதிக்க உணர்வற்ற தமிழ்த் தேசிய இருப்பை அவர்களால் உணர இயலவில்லை; மேலாதிக்கத் தமிழ்த் தேசியத் தலைமை தவறு செய்த காரணத்துக்காகத் தலித் மக்களே பெரும்பான்மையினராக ஆகியுள்ள தாயக மண்ணின் தமிழ்த் தேசிய நலனைக் கைவிட வேண்டுமா? இறுதி யுத்தகளத்தில் பேரினவாத யுத்தவெறிக்குக் களப்பலியான ஒரு லட்சம் மக்களில் மிகப்பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்ட மக்களல்லவா? மேட்டுக்குடிகள் ஏகாதிபத்திய நாடுகளில் இருந்தபடி “உள்ளே வரவிட்டு அடிக்கப்போவதாகக்” கதையளந்தபோது களத்தில் புலித் தலைவர்களின் மனிதக் கேடயங்களாக இழுபட்டுச் சென்ற மூன்று இலட்சம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களே. அப்போது தலைமையைக் கடுமையாக விமரிசித்த போதிலும் பின்னரும் ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்த இலங்கை அரசின் பேரினவாத நடைமுறைகள் காரணமாகவே அனைத்தையும் மறந்து அதே மேலாதிக்கத் தமிழ்த் தேசிய அலைக்குள் மாட்டுப்படும் துர்ப்பாக்கியநிலை தலித் மக்களுக்கு ஏற்படலாயிற்று. இவ்வகையில் இயக்கம் கொண்டுள்ள எமது மண்ணின் உயிர்த்துடிப்பை உணராத புலச்சிதறல் சிந்தனையே இவர்களைத் தலித்தியவாத முடக்கத்துக்கு ஆட்படுத்துகிறது. தமிழகத்தில் தலித்தியவாதம் மேலோங்கி உள்ளதெனில், அங்கே மார்க்சியர்கள் தலித் மக்களது விடுதலைக்குத் தலைமையேற்கத் தவறியதன் பேறு அது!
இலங்கை மண்ணில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொம்யூனிஸ்ட் கட்சிகள் வழிகாட்டித் தலைமை ஏற்றிருந்த காரணத்தால் தலித்தியவாதம் இங்கே முனைப்படையவில்லை. அதேவேளை பேரினவாதப் புறக்கணிப்பு, ஒடுக்குமுறை என்பன வலுப்பட்டு வந்தபோது அவற்றுக்கு எதிராகக் கொள்கை வகுத்துக் களமாடி இன விடுதலை இலட்சியத்தை ஆற்றுப்படுத்தத் தவறியமையால் இங்கே இனவாதம் தலைவிரித்தாடும் நிலை ஏற்பட்டது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய போது ஆதிக்க – இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையினர் சமூக நீதிக்காகப் போராடிய காரணத்தால் சாதியவாதப் பிளவாக்கம் சாத்தியப்படாமல் போனது. இன ஒடுக்குமுறைக்கு எதிராக மார்க்சியர்கள் போராட்டக்களத்தைத் தலைமையேற்று முன்னெடுத்திருப்பின் பேரினவாதத்தை எதிர்க்கும் மிகப்பெரும்பான்மையினரான உழைக்கும் – ஜனநாயக – முற்போக்குச் சிங்கள மக்கள் விடுதலைத் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து அணிதிரண்டு இருப்பர். இனவாதப் பிளவாக்கத்தைத் தகர்த்தபடி ‘இலங்கைத் தேசத்தினுள்’ சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகம் எனும் நான்கு இனத்தேசியங்களும் மலே, பறங்கி மற்றுமுள்ள சிறுபான்மைப் பிரிவு மக்களும் ஒன்றிணைந்திருப்பர்.
தமிழ்த் தேசிய இயங்குதளத்தில் தலித் மக்களது இணைப்பு ஏற்பட்ட வரலாற்றுத்தடத்தைக் கவனங்கொள்ளாத புலம்பெயர் தலித்தியவாதிகள் தமிழ்த் தேசியத்தை மேட்டுக்குடிகளின் விவகாரமாக மட்டும் காண்பர். அந்த அணியின் சாதியகம்பாவம் அனைத்துக்குமே கருத்தியல் வழிகாட்டியாக இருந்தவர் நாவலரே எனக் கூறியவாறு, அவரது வரலாற்று வகிபாகம் குறித்த பன்முகத் தேடல் ஏதுமின்றி ஒட்டுமொத்தமாக நிராகரிக்கின்றனர். தமிழ் மேட்டுக்குடிகளை ‘விட்டுக்கொடுப்பின்றி’ எதிர்ப்பதாகக் கூறியபடி சிங்களப் பேரினவாதக் கொலை பாதகங்களுக்குச் சாமரம் வீசுகின்றனர். உழைக்கும் தலித் மக்கள் இத்தகைய இரண்டக நிலைக்குச் சென்றதில்லை. அவர்களைவிட்டுக் காததூரம் விலகிவிட்ட ‘தலித் பிரபுக்கள்’ தம்மை அறியாமல் ஏகாதிபத்தியக் கைக்கூலிகளாகவும் மாறியுள்ளதைச் சுயவிமரிசன ரீதியாக ஏற்பது அவசியம்.
தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பதாகக் கூறியவாறு சிங்களப் பேரினவாத அரசுடன் கைகோர்க்கும் போது விடுதலைத் தேசிய முன்னெடுப்பை நாடிய தலித் மக்களுக்கு எதிராகச் செல்வதனை இவர்கள் உணரவில்லை. அந்தத் தலித் மக்களும் மேலாதிக்கத் தமிழ்த் தேசியத்தின் யுத்த முன்னெடுப்பில் களமாடிய தவறைச் செய்தனர் என்றால் அவர்களுக்கான சரியான தலைமை வழங்கப்படாத வெற்றிடத்தால் அது நேர்ந்தது என்பதனை ஏற்பது அவசியம். அந்த மேலாதிக்கத் தமிழ்த் தேசியத்தின் புரவலரான ஏகாதிபத்தியத்துக்கு உதவும் கைங்கரியத்தைத் தானே தலித் சிந்தனையாளர்களும் செய்கின்றனர்?
விடுதலைத் தேசியம்
ஏகாதிபத்தியத் திசை மார்க்கத்தில் பிரித்தானியா பரிணமித்தபோது அதன் காலனிய ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ளாத ஜனநாயகப் பண்பாட்டை உடையவர்கள் எனும் தோற்றப்பாடு அமெரிக்க மிசனரிகளிடம் இருந்தது. யாழ்ப்பாணத்தின் கல்வி விருத்தியில் அவர்கள் வகித்த பங்குப்பாத்திரம் எமது பன்முக வளர்ச்சியில் சாதகமான பல விளைவுகளை ஏற்படுத்தி இருந்தது. அதேவேளை ஏற்படவுள்ள அடிப்படையான பாதகமான விளைவாக எமது பண்பாட்டைச் சிதைப்பதற்கான இடத்தை இனங்கண்டு அவர்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தை நாவலர் தொடக்கி வைத்துள்ளார். அதன்பொருட்டு அவர் முன்னெடுத்த பண்பாட்டுத் தேசியப் பாதுகாப்புக்கான முதல் நடவடிக்கைகள் காத்திரமானவை. ஏகாதிபத்திய அடிமைத் தளையைத் தகர்க்க முனைந்த நாவலரின் பண்பாட்டு அரசியல் பரிமாணத்தை மீறி அதே ஐக்கிய அமெரிக்க மேலாண்மைக்குத் துதிபாடுவோராக மேலாதிக்கத் தமிழ்த் தேசியர்கள் ஆட்பட்டுவிட்டமையால் ஆன்மீகத்தளத்தில் மட்டும், மட்டுப்படுத்தப்பட்ட அளவோடு நாவலரை மதிக்கப் பழகிவிட்டனர். இன்றைய சுரண்டல் அமைப்பின் ஏகாதிபத்திய மேலமைப்புக்கு உரியவர்களான இவர்கள் அதற்கெதிரான நாவலரின் பக்கத்தை எவ்வாறு மதிப்புணர்வுடன் போற்ற இயலும்?
நாவலரின் ஆன்மீகத்தளத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பின் சாதிய வடிவிலான சுரண்டல் இருந்தது. அதன் பேரில் மேலாதிக்கத் தேசியம் அந்த முனைக்குரிய புனிதராக நாவலரைக் கொண்டாடுவதனைக் காரணமாக்கி எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் தலித்தியர்கள் பேரினவாதத்துடன் இணக்கம் கொள்வர். பேரினவாத இலங்கை அரசுடன் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் ஏகாதிபத்தியத்துடன் இணக்க அரசியலைக் கொண்டுள்ளது. தலித்தியர்கள் ‘எதிரியின் நண்பர் எதிரி’ என முடிவு செய்து ஏகாதிபத்திய எதிர்ப்பு அவர்களிடம் முன்னிலைப்படுமாயின் நாவலரை நிதானமாக அணுகும் வல்லமையைப் பெற்றிருப்பர்.
மக்கள் விடுதலையை வென்றெடுக்கும் போராட்டங்களை முன்னெடுத்துவரும் மார்க்சியர்கள் அத்தகைய நிதானமான மதிப்பீட்டை நாவலர் குறித்துக் கொண்டிருந்தனர். ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், பேரினவாதம் என்பன முன்னெடுக்கும் ஒடுக்குமுறைகளில் ஒன்றை எதிர்த்து மற்றதொன்றைச் சார்வதாக அன்றி அவையனைத்துக்கும் எதிராகப் போராடும் விடுதலைத் தேசிய சக்திகளின் நாவலர் குறித்த பார்வையைத் தொடர்ந்து விவாதிப்போம். இன்றைய இயங்குதளத்தில் குழப்பகரமான சிந்தனைப் பிளவாக்கம் ஏற்பட்டு இருப்பதில் காலனித்துவம் வகித்த பங்குப்பாத்திரம் குறித்து அடுத்த அமர்வில் அலசுவோம்!