வடக்கு - கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியில் கூட்டுறவுத்துறையின் பங்குபற்றல்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
12 நிமிட வாசிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியில் கூட்டுறவுத்துறையின் பங்குபற்றல்

June 11, 2025 | Ezhuna

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள் தொடர்பாக தெளிவுடுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு – கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.

பொருளாதார அபிவிருத்தியில் பங்குகொள்ளும் ஒரு கொள்கைத்துறையாக கூட்டுறவு இயக்கம் இருந்து வருகிறது. இங்கிலாந்தின் ‘றொச்டேல்’ முன்னோடிகளினால் உலகத்துக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட கூட்டுறவு இயக்கமானது ஒருவர் பலருக்காகவும், பலர் ஒருவருக்காகவும் விட்டுக்கொடுத்து ஒன்றிணைந்து பணியாற்றும் ஓர் அமைப்பாகும். தன் விருப்பார்ந்த தடையற்ற உறுப்புரிமை, சனநாயக ஆளுகை, கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே ஒத்துழைப்பு, சமூக மேம்பாடு, உறுப்பினர்களின் பொருளாதாரப் பங்களிப்புக் கட்டுப்பாடின்றியும் தானாகவும் தொழிற்படல், கல்விப் பயிற்சி, தகவலளிப்பு ஆகிய ஏழு கூட்டுறவுக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இவ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கூட்டுறவில் இணைந்துகொள்ளும் ஒவ்வொரு நபரினதும் பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, பங்கு மூலதனம் என்றவகையில் நூறு ரூபாவைப் பங்குப் பணமாகக்கொண்டு உருவாக்கப்படும் விதைப்பணத்தின் (Seed Money) மூலம் தொடங்கப்பட்டு, பல்வேறு முயற்சிகளிலும் பெற்றுக்கொள்ளும் இலாபங்களைத் தனிநபரிடையே பங்கீடுசெய்து, பொதுமுதலீட்டு நிதியாக மாற்றி, அதனூடாக அங்கத்தவர்களின் தொழில்சார் விருத்திக்கான உதவிச்சேவைகளை விரிவுபடுத்திச் செல்வதே கூட்டுறவுப் பொருளாதார முறைமையாகும். ஓரினமான உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடுவோர் தாமாக ஒன்றிணைந்து தமது தொழில் விருத்திக்காக உருவாக்கும் சங்கங்களைச் சட்டரீதியான நிறுவனமாக மாற்றிக் கொள்வதற்கான கூட்டுறவுச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதுடன், இதற்குப் பொறுப்பாக கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் இருந்து வருகிறது. கூட்டுறவுச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுச் செயற்படும் நிறுவனங்கள் மட்டுமே கூட்டுறவு என்ற சொல்லை தனது பெயருடன் பாவிக்க முடியும். கூட்டுறவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள், மாகாண மட்டத்தில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மேற்பார்வையில் செயற்படுகின்றன. இச்சங்கங்களின் கணக்காய்வை மேற்கொள்வதற்காக, கூட்டுறவு அபிவிருத்தி அலுவலர்கள் சங்கவாரியாக நியமிக்கப்படுகின்றனர். நிதி நிர்வாகத்துக்கும் கணக்குகளுக்குமான ஆய்வுகள் வருடந்தோறும் மேற்கொள்ளப்படுவதுடன், இலாப–நஷ்ட விபரங்களும், கூட்டுறவுச் சொத்துகளின் நிலைமைகளும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றன.

கூட்டுறவு அமைப்பு அறிமுகம் செய்யப்பட்ட 19 ஆம் நூற்றாண்டிலிருந்து இவ் அமைப்பு சிறப்பாகச் செயற்படும் பகுதியாக வடமாகாணம் இருந்து வந்துள்ளது. இப்பகுதியில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை தேசிய கூட்டுறவுச் சபையினது முதலாவது தலைவராக கூட்டுறவு பெரியார் வீரசிங்கம் செயற்பட்டார் என்பது எமது கூட்டுறவு வரலாற்றின் பழைமையை நிறுவி நிற்கிறது. கூட்டுறவு வரலாற்றில் முதன்முதலில் அமைக்கப்பட்டவை சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களாகும். அதன் பின்னர், பண்டகசாலைக் கூட்டுறவு அமைப்பு உட்பட பல்வேறு வகையான கூட்டுறவு அமைப்புகள் உருவாயின. யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட ஐக்கிய வியாபார சங்கமானது வடமாகாணத்தில் முதலில் தொடங்கப்பட்ட கூட்டுறவு அமைப்பாக இருந்தது. 

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் செயற்படும் பல்வேறு சங்க அமைப்புகளையும் நோக்கும்போது, கிழக்கு மாகாணத்தில் 1,663 கூட்டுறவு அமைப்புகளும், வடக்கு மாகாணத்தில் 2,293 அமைப்புகளும் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு அமைப்புகளாகக் காணப்படுகின்றன. செயற்படும் தகைமையின் அடிப்படையில் ஆராயும்போது, வடக்கு மாகாணத்தில் 1,138 சங்கங்கள் செயற்பாட்டிலுள்ளதுடன், 1,155 சங்கங்கள் செயலிழந்த நிலையில் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் 1,098 சங்கங்கள் செயற்பாட்டிலுள்ளதுடன், 565 சங்கங்கள் செயலிழந்து காணப்படுகின்றன. இவ்வகையில் மொத்தமாக 43.4 சதவீதமான சங்கங்கள் செயலிழந்த சங்கங்களாக இவ்விரு மாகாணங்களிலும் காணப்படுகின்றன; 56 சதவீதமான சங்கங்களே செயற்பாட்டில் உள்ளன. சங்கங்களின் அங்கத்துவத்தன்மையின் அடிப்படையில் ஆராயும்போது, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் 81,720 பேரும்ம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 64,619 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 81,884 பேருமாக மொத்தம் 233,223  பேர் செயற்படும் அமைப்புகளில் அங்கத்தவர்களாகச் செயற்படுகின்றனர். வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 309,410 அங்கத்தவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 37,462 அங்கத்தவர்களும், மன்னாரில் 45,094 அங்கத்தவர்களும், முல்லைத்தீவில் 40,610 அங்கத்தவர்களும், வவுனியாவில் 66,680 அங்கத்தவர்களுமாக மொத்தம் 499,256 பேர் கூட்டுறவு அமைப்பில் இயங்கும் அங்கத்தவர்களாகக் காணப்படுகின்றனர். இதிலிருந்து நாம் தெளிவாகச் சொல்லக்கூடிய ஒரு செய்தியென்பது, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கூட்டுறவுத்துறையானது, மக்களுக்கு நெருக்கமாகவும் மக்களை மையப்படுத்தியும் செயற்படும் கிராமிய அமைப்பாகவுள்ளது என்பதாகும்.

அ) பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள்

கூட்டுறவு அமைப்புகளானது நோக்க அடிப்படையில் ஒன்றிணைந்தவர்களால் உருவாக்கப்பட்டுப் பதிவு செய்யப்படுவதனால், வகைரீதியாக பல்வேறு சங்க அமைப்புகளாக இவை செயற்படுகின்றன. ஓரினமான தொழில்களைச் செய்பவர்களின் நலனை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவு அமைப்பை அவற்றின் செயற்பாட்டின் அடிப்படையில் வகையீடு செய்யும்போது, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் முதன்மைச்சங்க அமைப்புகளாகக் காணப்படுகின்றன. நுகர்வோரின் பல்வேறு தேவைகளையும் ஒரே இடத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட பலநோக்குக் கூட்டுறவுச்சங்கங்கள் மொத்த – சில்லறை வியாபார நடவடிக்கைகளையும், வங்கிச் சேவைகள், எரிபொருள் வழங்கல், அரசின் நெருக்கடி கால சேவைகள் வழங்கல், பங்கீட்டு விநியோகம் போன்ற அனைத்துச் சேவைகளையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் வழங்கக்கூடிய வகையில் செயற்படுவதனால், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கூட்டுறவு அமைப்பில் முதன்மையானவையாகக் காணப்படுகின்றன. 

வடக்கு மாகாணத்தில் 47 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. அதிகளவிலான அங்கத்தவர்களும் இச்சங்கங்களிலேயே அங்கத்துவம் பெற்றுள்ளனர். வடக்கு மாகாணத்தில் 28,900 உறுப்பினர்களும், கிழக்கு மாகாணத்தில் 173,524 உறுப்பினர்களும் இச்சங்கங்களில் செயற்படுகின்றனர். நேரடி வேலைவாய்ப்பைப் பெற்ற பணித்தொகுதியாக, கிழக்கு மாகாணத்தில் 763 பேரும், வடக்கு மாகாணத்தில் 924 பேரும் நன்மையடைந்துள்ளனர். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களுக்காக கூட்டுறவுக் கிராமிய வங்கிகள் என்ற பெயரில் வங்கிச்சேவையினை உருவாக்கி, நிதிரீதியாக வைப்புகளைச் சேகரித்தல், கடன்களை வழங்கல் என்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் 78 கிராமிய வங்கிகள் செயற்படுவதுடன், இதில் 93 வேலைவாய்ப்புகள் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் 88 கிராமிய வங்கிகள் செயற்படுவதுடன், 154 நிரந்தர வேலைவாய்ப்பு இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாட்டின் கீழ் வடமாகாணத்தில் 374 கிளை நிலையங்களும், 39 மொத்த நிலையங்களும், 7 கட்டடப்பொருள் விற்பனை நிலையங்களும், ஒரு புடவைக் கடையும், ஒரு மாதிரிக் கடையும், 33 கூட்டுறவு நகர்க் கடைகளும், 92 சிறிய கூட்டுறவு நகர்க் கடைகளும், 44 எரிபொருள் நிரப்பு நிலையங்களும், 6 பேக்கறிகளும், 7 சிற்றுண்டிச்சாலைகளும், 13 மா அரைக்கும் ஆலைகளும்; சேதனப் பசளை உற்பத்தி நிலையம், பழங்களைப் பதனிடல் போன்ற பல முயற்சிகளும் இயங்கி வருகின்றன.

ஆ) சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள்

கூட்டுறவுச் சங்க வகைப்பாட்டில் அடுத்து முக்கியம் பெறும் சங்க வகையாக சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்க அமைப்புக் காணப்படுகின்றது. சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் அங்கத்தவர்களின் நாணயம் மற்றும் நேர்மைத்தன்மை அடிப்படையில் உருவாக்கப்பட்டதால், ஆரம்பத்தில் இவை ஐக்கிய நாணயச் சங்கங்கள் எனவும் அழைக்கப்பட்டிருந்தன. அங்கத்தவர்களின் பரஸ்பர நிதித் தேவைக்காக அங்கத்தவர்களிடம் சேமிப்புகளைத் திரட்டுதல், கடன்களை வழங்குதல் ஆகிய நிதிச் செயற்பாடுகளில் ஈடுபடும் 1,313 சங்கங்கள் வடக்கு மாகாணத்தில் பதியப்பட்டுள்ளன. இதில் 559 சங்கங்கள் செயற்பாட்டிலுள்ளன. இதில் 59,619 உறுப்பினர்கள் அங்கத்தவர்களாகவுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் 752 சங்கங்கள் காணப்படுவதுடன், 19,284 உறுப்பினர்கள் இவ்வகைச் சங்கங்களில் அங்கத்தவர்களாகவுள்ளனர். கிராமிய மட்டத்தில் நாணயம் மற்றும் ஐக்கியம் என்ற கொள்கைகளின் கீழ் இவை செயற்படுவதுடன், கிராமியக் கடனளிப்பும் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்வகைச் சங்கங்களை ஒன்றிணைத்தல் மூலம், மாவட்ட மட்டத்தில் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்க சமாசங்கள் மற்றும் மாகாண மட்டத்தில் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்க சம்மேளனங்கள் தமது அங்கத்துவச் சங்கங்களுக்கு தேவையான கடன்களை நிதி ஏற்பாடு செய்து வழங்குகின்றன. இதனால், கூட்டுறவுத் தொழில் முயற்சிக் கடன்கள் கிராமிய மக்களின் அவசரத் தேவைகளுக்காக எளிய முறையில் வழங்கப்படுகின்றன. சம்மேளனத்திலும், சமாசங்களிலும் கிராமிய வங்கிகள் உருவாக்கப்பட்டு  நிதிச்சேவை உறுதியளிப்புச் செய்யப்பட்டுள்ளன. நடுத்தர மற்றும் சிறிய முதலீடுகளுக்கு முதல் பெறக்கூடிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இ) கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள்

கூட்டுறவு அமைப்புகளில் செயற்படும் மற்றுமொரு பெரிய அமைப்பாக கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் காணப்படுகின்றன. மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களுக்கு தேவைப்படும் உள்ளீடுகளை வழங்கல், வள்ளங்கள் – வலைகளைப் பெற்றுக்கொடுத்தல், எரிபொருள்களைப் பெற்றுக்கொடுத்தல், மீனவர்களினது உற்பத்திக்கு அதிக விலையைப் பெற்றுக்கொடுத்தல், மீன்பிடித் தொழிலை பாதுகாப்பான தொழிலாக மாற்றுதல் போன்ற நோக்கங்களுடன் இத்தொழிலில் ஈடுபடுபவர்களை ஒன்றிணைத்து இச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் 463 சங்கங்கள் செயற்படுவதுடன், வடக்கு மாகாணத்தில் 7,134 சங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. இதில் 46,872 உறுப்பினர்கள் அங்கத்தவர்களாக உள்ளனர். கடல்நீர், நன்னீர் ஆகிய இரண்டு பரப்புகளிலும் தொழில் செய்பவர்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மீனவர்களால் பிடிக்கப்படும் மீன்களுக்கு நேரடியாகத் தரமான விலைகளைப் பெற்றுக்கொடுப்பது, மீன்களைப் பழுதடையாமல் பாதுகாக்கும் வகையில் அறைகள் வசதிகளை மேம்படுத்தல், கருவாடு பதனிடல், பொதியிடல் போன்ற பல்வேறு சேவைகளை மையமாகக் கொண்டே இச்சங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. மீன்பிடி வள்ளங்கள், வலைகளுக்கு அதிகளவில் தேவைப்படும் ஆரம்ப மூலதனத்தில் ஒரு பகுதியை இச்சங்கங்கள் கடனாக அல்லது முற்தொகையாகக் கொடுத்து இத்தொழில் முயற்சிகளை உற்சாகமூட்டியும் வருகின்றன. படகுகள், வலைகளை உற்பத்திசெய்து, தரமானதாக பயன்பாட்டுக்கு ஏற்றதாக வழங்கி மீன்பிடியை ஊக்குவித்து வருகின்றன. கடற்தொழில் சங்கங்கள் தமது அடிப்படை அமைப்பாக சமாசங்களையும், சம்மேளனங்களையும் உருவாக்கியுள்ளன. அவை சங்கங்களின் வளர்ச்சிக்கு உதவியளித்து வருகின்றன.

உ) விவசாயக் கைத்தொழில் கூட்டுறவுச் சங்கங்கள்

விவசாயக் கைத்தொழில் கூட்டுறவுச் சங்கங்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் பனை – தென்னை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள், கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்கள், பால் உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்கள், விவசாயக் கூட்டுறவுச் சங்கங்கள் என்பவற்றை உள்ளடக்கிக்கொள்ள முடியம். இச்சங்கங்கள் விவசாயம் தொடர்பிலுள்ள பயிர்கள் சார்பிலும், உப தொழில்கள் சார்பிலும் சம்பந்தப்படும் உறுப்பினர்களின் தேவைப்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு அவர்களின் நலன்களைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளாகும். இந்தவகையில் 40 பனை – தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள், வடக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டதாகப் பதிவுரிமை பெற்றுள்ளன. இதில் 37 சங்கங்கள் நன்கு செயற்பட்டு வருகின்றன. இதில் 28,931 அங்கத்தவர்கள் இணைந்து செயற்படுகின்றனர். இவை உற்பத்தியில் ஈடுபட்டு வெளியீடு செய்யும் கள்ளினை விற்பனை செய்வதற்கான இணை நிலையங்களைக் கொண்டிருப்பதுடன், மேலதிக விற்பனை செய்ய முடியாத கள்ளினைப் போத்தலில் அடைத்தல், பதனீர் உற்பத்தியில் ஈடுபடுதல், வெல்ல உற்பத்தியில் ஈடுபடுதல், கள்ளிலிருந்து மதுசாரம் உற்பத்தி செய்தல் போன்ற பல்வேறு பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்து உற்பத்தி செய்யும் வறிய தொழிலாளர்களின் உற்பத்தியை வீணடிக்காது பாதுகாத்து வருகின்றன. தொழிலாளர்களின் உற்பத்திகளை நாளாந்தம் முழுமையாகக் கொள்வனவு செய்து, அதற்கான கொடுப்பனவுகளை வாராந்தம் வழங்குகின்றன. மேலும், போதிய சமூகநலத் திட்டங்களையும் முன்னெடுத்து, விபத்து, தொழிலிழப்பு, உயிரிழப்பு போன்ற நெருக்கடிக் காலங்களில் தொழிலாளர்களுக்கான நலன்களைப் பாதுகாத்து வருகின்றன. தொழிலாளர்களின் நடத்தையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தரம் வழங்கி முகாமை செய்வதுடன், A தரத்தில் உள்ள தொழிலாளர்களே முகாமைக்குத் தெரிவு செய்யப்படுவதற்கான தர வரிசை ஒழுங்கமைப்பும் இச்சங்கங்களில் காணப்படுகின்றன.

இதேபோல விவசாயச் சங்க வகைப்பாட்டில் உள்ளடங்கும் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் என்பன ஆடு, மாடு, கோழி, பன்றி ஆகிய உயிரின வளர்ப்பில் ஈடுபடுவோரது தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும், அவர்களின் பிரதான உற்பத்தியான பாலினை சந்தைப்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்ட அமைப்புகள் ஆகும். கால்நடைச் சங்கங்களில், உயிரின வளர்ப்பில் ஈடுபடும் பல்வேறுபட்டவர்களும் அங்கத்துவம் பெற முடிவதுடன், பால் உற்பத்தியாளர்கள் மட்டுமே பால் உற்பத்திச் சங்கங்களில் அங்கத்துவம் பெற்றுள்ளனர். வடக்கு மாகாணத்தில் 4 கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இதில் 33 சங்கங்கள் தற்போது செயற்பாட்டிலுள்ளன. அத்துடன் 38 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளதுடன், இதில் 23 சங்கங்களே செயற்பாட்டிலுள்ளன. இச்சங்கங்களில் கால்நடை வளர்ப்போர் சங்கங்களில் 17,850 அங்கத்தவர்களும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களில் 11,652 உறுப்பினர்களும் அங்கத்தவர்களாகச் செயற்பட்டு வருகின்றனர். கிழக்கு மாகாணத்தை ஆராயும்போது, 54 கால்நடை வளர்ப்போர் மற்றும் பால் உற்பத்திச் சங்கங்கள் செயற்படுவதுடன், 9,593 உறுப்பினர்கள் இச்சங்கங்களில் அங்கத்துவம் பெற்றுச் செயற்பட்டு வருகின்றனர். பால் உற்பத்தியினை பொறுத்து நாளாந்தம் இரண்டுவேளை இது உற்பத்தி செய்யப்படுவதனாலும், அது விரைவில் பழுதடையக் கூடியதாகவும் உள்ளதனால், சந்தைப்படுத்தல் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு இருக்க வேண்டியது அவசியமானதாகிறது. கால்நடை வளர்ப்புத் தொழில்நுட்பத்தின் தேவைப்பாடு அதிகளவில் இருந்தால்தான், சரியான உற்பத்தி மட்டத்தை அடைய முடியம் என்பதால், கால்நடைப் பராமரிப்புக்கும், துணை உணவு வழங்கலுக்கும், தொழில்நுட்பப் பரிமாற்றத்துக்கும் இச்சங்கங்கள் முன்னுரிமை வழங்கி தமது அங்கத்தவர்களுக்குச் சேவை வழங்கி வருகின்றன.

பால் விற்பனையின்போது, கிராமிய மட்டத்தில் பாலை நுகரும் வீதத்தை இந்தக் கால்நடைக் கூட்டுறவுச் சங்கங்கள் உறுதி செய்கின்றன. இச்சங்கங்கள் உள்ளூரில் விற்பனை நிலையங்களை அமைத்து, பாலை உள்ளூரவர்களுக்கு விற்பனை செய்வதுடன், மீதமான பாலைப் பயன்படுத்தி தயிர், யோகட், பன்னீர் போன்ற துணை உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்து, அதனையும் உள்ளூரில் விற்பனை செய்வதால் கிராமிய மட்டத்தில் போசாக்கான உணவு நுகர்வை உறுதி செய்வதில் கால்நடைக் கூட்டுறவுச் சங்கங்கள் காத்திரமான பங்கை வழங்கி வருகின்றன எனலாம். மில்கோ, நெஸ்லே, காகிள்ஸ் போன்ற பெரிய கம்பனிகளால் கொள்வனவு செய்யப்படும் பெரும் எண்ணிக்கையிலான பால், தேசிய – மாகாண மட்ட நுகர்வுக்குப் பரிமாறப்படுவதால், கிராமிய மட்டத்தில் பால் நுகர்வை நேரடியாக வழங்கும் இச்சங்கங்களின் சேவை குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

ஊ) கைத்தொழில் கூட்டுறவுச் சங்கங்கள்

கூட்டுறவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கிவரும் கைத்தொழில் சங்கங்கள் என்ற பகுதியின் கீழ் பாடாசாலைக் கூட்டுறவுச் சங்கங்கள், புடவை உற்பத்தி – தச்சு வேலை – மட்பாண்ட உற்பத்தி – தும்பு உற்பத்தி – உலோக உற்பத்தி போன்ற சங்கங்கள் இவ்விரு மாகாணங்களிலும் இயங்கி வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் 52 சங்கங்களுக்கு ஊடாக 373 அங்கத்தவர்கள் நன்மை அடைவதுடன், வடக்கு மாகாணத்தில் 93 சங்கங்களுக்கு ஊடாக 12,327 அங்கத்தவர்கள் பயன்பெறுகின்றனர். ஒரு நோக்குச் சங்கங்கள் என்ற வகையில் ஓரினமான தொழில்களில் ஈடுபடுபவர்களின் தேவைகளை இச்சங்கங்கள் நிறைவேற்றுவதுடன், இவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்தல், உள்ளீடுகளைப் பெற்றுக்கொடுத்தல், விற்பனை வலையமைப்பை உருவாக்கி வழங்குதல் போன்ற சேவைகளையும் வழங்கி வருகின்றன.

எ) சேவைக் கூட்டுறவுச் சங்கங்கள்

வைத்தியசாலைக் கூட்டுறவுச் சங்கங்கள், தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், வீடமைப்புக் கூட்டுறவுச் சங்கங்கள், நலன்புரிக் கூட்டுறவுச் சங்கங்கள், போக்குவரத்துக் கூட்டுறவுச் சங்கங்கள், இளைஞர் சேவை கூட்டுறவுச் சங்கங்கள், முயற்சியாண்மை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் போன்றவற்றை இச்சேவை வகைப்பாட்டின்கீழ் உள்ளடக்கிக் கொள்ளலாம். வடமாகாணத்தில் காணப்படும் இவ்வகைச் சங்கங்கள் 48 இல், 8,111 பேர் அங்கத்தவர்களாகக் காணப்படுவதுடன், கிழக்கு மாகாணத்தில் 188 சங்கங்களில் 19,284 பேர் அங்கத்துவம் பெற்றுள்ளனர். சேவைசார் கூட்டுறவுச் சங்கங்கள், பொதுமக்களின் தேவைப்பாடுகளின் முன்னுரிமைக்கமைய அவர்களால் உருவாக்கப்படுவதுடன், அதன் செயற்பாட்டை நிறுவி பதிப்புரிமையும் பெற்றுக்கொள்கின்றன. 

ஏ) இரண்டாம்படிக் கூட்டுறவுச் சங்கங்கள் 

கூட்டுறவு அமைப்புகளில் பதிவுசெய்யப்பட்ட ஆரம்பக் கூட்டுறவு அமைப்புகளை தமது அங்கத்துவர்களாகக் கொண்டு செயற்படும் கூட்டுறவு அமைப்புகள், இரண்டாம்படிக் கூட்டுறவு அமைப்புகள் என அழைக்கப்படுகின்றன. இதன்கீழ் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்கள், சம்மேளனங்கள், கிராமிய வங்கிகளின் சமாசங்கள், கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், விவசாயச் சங்கங்களின் சம்மேளனங்கள், மாவட்டக் கூட்டுறவுச் சபைகள் ஆகிய அமைப்புகள் காணப்படுகின்றன. இதில் வடமாகாணத்தில் 53 சமாசங்கள் இயங்குநிலையிலும், 114 சமாசங்கள் செயலிழந்த நிலையிலும் காணப்படுகின்றன. 

இந்தவகையில் வடக்கு – கிழக்கு மாகாண அபிவிருத்தியில் கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாகச் செயற்படுவதுடன், மாகாண மட்டத்தில் செயற்படும் மாகாணக் கூட்டுறவு வங்கி ஒன்றும் வடமாகாணத்தில் புதிதாக முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்டுச் செயற்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். 



About the Author

அமரசிங்கம் கேதீஸ்வரன்

பொருளியல் துறையில் சிரேஸ்ட வளவாளராகவும் பயிற்றுநராகவும் செயற்படும் அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் கிளிநொச்சியை சொந்த இடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டங்களையும், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் திட்டமிடலில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றவர். இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் II அதிகாரியாக, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பிரதி திட்டமிடல் பணிப்பாளராகப் பணியாற்றும் இவர், தேசிய பெண்கள் செயலகத்தின் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றுகின்றார். 2012 இல் ‘திட்டமிடல் மூலதத்துவங்கள்’ என்ற நூலினையும் 2024 இல் ‘மண்’ என்ற கவிதை நூலினையும் வெளியீடு செய்துள்ளார். இவர் சிறந்த விமர்சகரும் ஆய்வாளருமாவார். வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் உப தலைவராகவும், இலங்கை தேசிய கூட்டுறவுச் சபையின் உபதலைவராகவும், கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபையின் தலைவராகவும் செயற்பட்டு வரும் ஒரு மூத்த கூட்டுறவாளருமாவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்