மறுவாசிப்பில் நாவலர்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
20 நிமிட வாசிப்பு

மறுவாசிப்பில் நாவலர்

May 20, 2025 | Ezhuna

இன்றைய இருப்பில் இயங்கும் சமூக சக்திகள் தத்தமக்கான நலன்களின் நோக்கில் கடந்த காலத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றன. மேலாதிக்கத் தமிழ்த் தேசியம், தலித்தியம், விடுதலைத் தேசியம் என்பவற்றின் கருத்தியல் தளங்களை அடிப்படையாக உடைய சமூக சக்திகள் இன்றைய இயக்கங்களாகச் செயற்படுகின்றன. எமக்கான நவீன வரலாற்றைக் கட்டமைத்த ஆளுமையாகிய ஆறுமுக நாவலர் குறித்து இவை ஒவ்வொன்றும் தமக்கே உரிய கண்ணோட்டத்தில் மறுவாசிப்பை மேற்கொள்கின்றன; இதன்வழியாக, கடந்தகாலச் சமூக சக்திகள் வழிவகுத்துவிட்டிருந்த இயங்குமுறை அமைந்த அடித்தளங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றன. இதேபோன்ற பின்னணிக்குரிய ஏனைய சமூகங்களில் இயங்கிய ஆளுமைகளுடன் எமது இயங்கு தளத்துக்குரிய ஆளுமைகளை ஒப்பிடுவதன் வாயிலாக செய்யப்பட்டவற்றையும், செய்திருக்கத்தக்கன எவை என்பதையும் மதிப்பீடு செய்வது அவசியமானது. இவற்றின் பெறுபேறுகள் எமக்கான எதிர்கால மார்க்கத்தை வடிவமைப்பதற்கு மிகமிக முக்கியமானவை ஆகும். “சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர்” எனும் இத்தொடரானது நாவலரின் பங்களிப்புக் குறித்த மதிப்பீட்டின் வழியாக சமகால இயங்குமுறையைக் கணிப்பிட்டு, சுயவிமரிசனங்களுடன் புதிய பாதையையும், அதற்குரிய சரியான மார்க்கத்தையும் கண்டடையும் நோக்கில் எழுதப்படுகிறது.

இன்று நாம் கடந்தவாறிருக்கும் சமூகநியதிகளில் கடந்தகாலத்தின் தாக்கங்கள் உள்ளன. இப்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் களைந்தெறிந்து திடமான முன்னேற்றத்தை எட்டுவதற்குத் தடையாகச் சில தவறுகள் முன்னரே ஏற்படுத்தப்பட்டவையாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. மறுதலையாக, கடந்தகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆரோக்கியமான செயல்முறைகளைத் தொடர்ந்து வளர்த்தெடுக்க முனையாமல் திசைமாறிச்சென்ற இடைக்காலத்தின் வரலாற்று ஓட்டம் காரணமாகவும் இன்றைய பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கலாம்.

இன்றைய வாழ்வியலில் கணிசமான தாக்கத்தை விளைவித்த காலப்பரப்பான நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் எமது இருப்பு எவ்வாறு இருந்தது? அன்று நிலவிய இடர்பாட்டை மாற்றியமைத்து மேல்நிலை எய்தவென எடுக்கப்பட்ட எத்தனங்கள் எவை? அவற்றில் ஊடாடிய ஆரோக்கியமான அம்சங்கள், தவறான பண்புகள் என்பவை இன்றைய வாழ்நிலையில் எத்தகைய தாக்குறவுடன் உள்ளன? இத்தகைய கணிப்பினை அன்று செயற்பட்ட முதல்நிலை ஆளுமையாகிய ஆறுமுக நாவலரை முன்னிறுத்தி மேற்கொள்ள முயல்வோம்!

ஒன்றரை நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் குடியேற்றவாதத்துக்கு எதிரான விடுதலைப் போராட்டம் முன்னெடுத்தாக வேண்டியிருப்பது குறித்த ஈடுபாடு தொடர்ந்தபடிதானுள்ளது. அன்று பிரித்தானியக் காலனியாக இருந்தநிலை மாறியபோதிலும் சிங்களத் தேசத்தின் காலனியாகத் தமிழர் தாயகம் அடிமைப்பட்டதான கணிப்புப் பெரும்பான்மையான தமிழ்த் தேசியர்களிடம் உள்ளது. இந்தப் புரிதல் பிரித்தானிய ஏகாதிபத்தியப் பிணைப்பை நீடித்தபடி இருந்த டொமினிக்கன் அந்தஸ்துடன் கூடிய குடியரசாக இலங்கை இருந்தவரை தமிழ்த் தேசியர்களிடம் ஏற்பட்டிருக்கவில்லை. அவ்வகைப்பட்ட அரைச் சுதந்திர நாடாக இருப்பதில் சுகம்கண்ட ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து இயங்கி வந்த தமிழ்த் தேசியத்துக்கு உரியதான கொங்கிரஸ் – தமிழரசு என்ற பிளவுபட்ட இரு கட்சிகள் 1972 ஆம் ஆண்டில் பூரண சுதந்திரக்குடியரசு பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் ஒன்றிணைந்து ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ என்று செயற்படலாயினர். முன்னதாகத் தமிழ்த் தேசியம் என்ற சொல்லைக்கூட அவர்கள் உச்சரித்ததில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பின் வடிவமாக அமைந்திருந்த தேசியம் முழு இலங்கையைக் குறிப்பதாக இருந்தது. எழுபதாம் ஆண்டுகளில் ‘சிங்கள ஏகாதிபத்தியத்தை’ எதிர்ப்பதாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த தமிழ்த் தேசியம் காலப்போக்கில் ‘தேசியம்’ என்பதை உருச்சிதைத்தது. தேசியம் என்றாலே தமிழினத்துக்கானதாகப் புரிந்துகொள்ளப்படும் இன்றையநிலை ஏற்பட்டபோது, உலக ஏகாதிபத்தியத்தின் பகுதியாக அது இணைவு பெற்றுவிட்டமைக்கு அன்று விடுதலைத் தேசிய உணர்வற்று முன்னெடுக்கப்படுவதாய் அமைந்த முதல்கோணல் நடவடிக்கைகள் காரணங்களாகின.

ஏகாதிபத்தியத்திடம் இருந்து மீட்சிபெற முனைந்த சிங்களத் தேசியம், தம்மால் புறக்கணிக்கப்படுவதாக அமைந்த இடைவெளியைத் தமிழினத்  தேசியத்துக்கு ஏற்படுத்தும் செயலொழுங்குகளைத் தவிர்த்து இயங்கி இருப்பின் மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் விருத்திபெற்று ஏகாதிபத்திய அணிக்குள் சங்கமமாவதனைத் தடுத்திருக்க இயலும். மேலாதிக்கத் தமிழ்த் தேசியத்தை ஒடுக்கியவாறு ஒன்றிணைந்த இலங்கைத் தேசத்தைக் கட்டமைத்தல் எனும் பேரில் முன்னெடுக்கப்பட்டு முப்பது வருடங்கள் நீடித்த யுத்தம் சிங்களத் தேசியத்தையும் ஏகாதிபத்தியக் கைப்பொம்மையாக இயங்க வழிப்படுத்தி உள்ளது. உலகவங்கி ஊடாக ஐக்கிய அமெரிக்காவும் அயலவர் என்ற உரிமையுடன் இந்தியாவும் தமக்குரிய மேலாதிக்க நலன்சார்ந்த விடயங்களையே சிங்களத் தேசியம் செயற்படுத்த இயலுமானதாக வழிப்படுத்தி உள்ள இன்றைய சூழல் என்பது ஏனைய இனத்தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்ததன் விளைவு எனும் புரிதல் இன்னமும் சிங்களத் தேசியத்திடம் தேவையான அளவுக்கு ஏற்பட்டுவிடவில்லை. சொந்த நாட்டை ஏகாதிபத்தியத்திடம் மென்மேலும் காட்டிக்கொடுக்கும் அரசியல் செயற்பாடுகளை வளர்க்கிறோம் என்ற உணர்வற்று தமிழினத் தேசியமும் இயங்கியவாறுள்ளது.

ஏகாதிபத்தியம் தனது நேரடிக் காலனித்துவப் பிணைப்பை 1948 ஆம் ஆண்டில் கைவிடும்போது இங்குள்ள இனத்தேசியங்கள் ஒன்னுடனொன்று தமக்குள் மோதுவதற்கான ஏற்பாடுகளை விதைத்துச் சென்றிருந்தது. அதன் வலைக்குள் இடர்பட்டு இரு இனத்தேசியங்களும் சுயநிர்ணயப் பிரயோகத்தைப் பூரணவிடுதலை நோக்கி முன்னெடுக்க இயலாத தப்பாட்டங்களில் ஈடுபட்டன. ஏகாதிபத்தியத் தகர்ப்புடன் இனத்தேசியத்தின் சமூக – பொருளாதார – அரசியல் விடுதலையை வென்றெடுக்கும் இலட்சியம் முனைப்புடையதாக இருந்திருப்பின் ஏகாதிபத்திய அரவணைப்புக்குள் சென்றடைந்து மேலும் தவறான பாதையில் இயங்குவதனைத் தமிழினத் தேசியம் தவிர்த்திருக்க இயலும். எம்மை ஆயுதநுகர்வில் சாகடித்து ஓய்ந்த பின்னர் வேறுகளங்களில் ஆயுத முழக்கங்களுக்கான வாய்ப்பு அந்த மரண வியாபாரிகளுக்குத் தடையின்றிக் கிடைத்து வருகிறது. இன்னமும் யுத்தங்களால் உலகைத் தமது கட்டுக்குள் வைத்திருக்க முனையும் ஏகாதிபத்தியப் பிணைப்பைத் துண்டிக்கவியலாத துர்ப்பாக்கிய நிலையிலேயே மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் உள்ளது. எமது நாட்டினுள் வாழும் ஏனைய இனத்தேசியங்கள் இடையே உள்ள உழைக்கும் மக்கள் முன்னெடுக்கும் விடுதலைப் போராட்டங்களுடன் கைகோர்க்காமல் பிரிவினை மனப்பாங்குடன் தனிவழி காணும் அரசியல்போக்கு ஏற்படுத்தி உள்ள பாதக விளைவுகள் பல; அவற்றில் இருந்து கற்றுக்கொள்ள மறுக்கும்போக்கு நீடிக்கிறது. அண்மையில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் மிக மோசமான இனவாதம் தமிழர் தரப்பிடமே வெளிப்பட்டு இருந்தது. 

தேசியவாதப் பிளவு மனப்பாங்கானது ஏகாதிபத்தியத்தின் கபட நாடகங்களுக்கு இரையாக்கிவிடும் என்பதற்கு இந்திய – பாகிஸ்தான் யுத்தக் கொண்டாட்டங்கள் அண்மைக்கால வெளிப்பாடாகும். ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு மாறாக ருஷ்யாவுடனும் சீனாவுடனும் நட்புப்பாராட்டும் இந்தியாவின் தலையில் அவசியமற்ற ஆயுதங்களை ஜனாதிபதி ட்ரம்ப் திணித்ததன் பேரில் பாகிஸ்தானுடன் வலிந்த யுத்தம் ஒன்றை இந்தியா மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது. ஆயுத வியாபாரம் அமோகமாக நடந்தேறிய பின்னர் இருதரப்பாருக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்திய புனிதப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் இந்தச் சந்தர்ப்பத்தை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டுள்ளது. இவ்வகையில் கிடைத்த ‘வெற்றி’ தமக்கான மீளெழுச்சியைச் சாத்தியப்படுத்தப் போதுமானதல்ல என்பது ஏகாதிபத்தியத் திணை அறியாத ஒன்றல்ல. எவ்வளவு முயன்றும் இந்திய – சீன முரண்பாட்டை யுத்தமாக்கிவிட இயலவில்லை. முன்னதாக ஒடுக்கப்பட்ட தேசங்களாக இருந்து விடுதலையின் பின்னர் நிதானமாக வளர்ச்சித்திசையில் முன்னேறி வருகின்ற இருபெரும் தேசங்கள் எத்தகைய முரண்பாடுகளை முகங்கொண்டபோதிலும் சுய விருத்தியின் பொருட்டு வர்த்தக உறவை வளர்த்தெடுத்து வருவதாக மட்டுமன்றி, தம்மிரு நாடுகளின் எல்லையில் நிலைகொண்டிருந்த  இராணுவங்களை விலக்கிக்கொண்டும் உள்ளன (அவசியமற்ற அந்தச்செலவை அபிவிருத்தி நோக்கித் திருப்பும் வாய்ப்பைப் பயன்படுத்தி உள்ளன). விடுதலைத் திணை அரசியலுக்கு உரியதாக மக்கள் சீனம் முன்னெடுக்கின்ற அரசியல் பிரயோகமானது மேலாதிக்கத் திணை அரசியலைத் தொடருகின்ற இந்தியாவை இவ்விடயத்தில் இணங்கிப்போக வழிப்படுத்தி இருக்கும் இந்த அம்சம் கவனிப்புக்கு உரியது; ஐக்கிய அமெரிக்காவுக்குப் பணிந்ததுபோலக் காட்டிக்கொண்டு அதனை மேவியவாறு உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாக விருத்திபெறும் எத்தனத்தில் இந்தியா!

சைவத் தமிழின் ஐந்தாம் குரவர்

வெளியுலக வணிக நாட்டத்துடன் பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் ‘நாடுகாண் வீரர்களை’ உத்வேகமூட்டி அனுப்பியவாறு இருந்த வேளையில், தமது இருண்ட யுகப் பின்தங்கியநிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியனவாய் இருந்தன. அன்றைய சாகசப் பயணங்களை இலகுபடுத்தவும் வர்த்தக நலனுக்கான தொடர்பாடல் திறனை விருத்தி செய்ய முன்னெடுத்த அறிவியல் தேடல்களும் செயல்முனைப்புகளும் தொழில் புரட்சியைச் சாத்தியப்படுத்திய பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்கூறில் ‘மேலைத் தேசம்’ என்ற திமிருடன் ஆளும் தரப்பாகத் தம்மை அடையாளம் காட்டினர். நான்கு நூற்றாண்டுகளின் முன்னர் அதியுச்சநிலைக்குரிய நாடுகள் எனப் பார்த்து வியந்த இந்தியா, சீனா, அரபுலகு என்பவற்றை ஒட்டச் சுரண்டி ஒட்டாண்டி நிலைக்கு ஆளாக்கியது தாமே எனும் உண்மையை மறந்து – மறைத்து, ‘ஆசிய உற்பத்திமுறைக்குரிய இந்தத் தேசங்கள் என்றென்றும் மூட நம்பிக்கைகளில் மூழ்கித் திளைத்த பிற்போக்கான வாழ்முறைகளைக் கொண்டிருந்தன, கொண்டிருப்பன’ என்றனர்.

தம்மைப்போல எம்மையும் நாகரிகப்படுத்தும் பொருட்டு கிறிஸ்தவ வேதாகமத்தை (பைபிளை) எம்மத்தியில் பரப்புரை செய்ய வேண்டியுள்ளது என, இறை தொண்டாற்றும் பாதிரிகளைக் கடல் கடந்து பயணப்பட ஊக்கப்படுத்தினர் மேலைத்தேச வணிக (வைசிய) ஆட்சியாளர்கள். கல்வி விழிப்புணர்வூட்டலுடன் இணைந்ததாக அவர்களது மதப்பரப்புரை அமைந்தது. இவ்வாறு அமெரிக்க மிசனரியால் நடாத்தப்பட்ட யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் தனது மாணவனாகக் கற்ற ஆறுமுகத்துடன் இணைந்து வேதாகமத்தைத் தமிழ்ப்படுத்தும் முயற்சியை பேர்சிவல் பாதிரியார் முன்னெடுத்திருந்தார். இலக்கிய நயத்தையும் இறை நம்பிக்கையையும் ஒருங்கே கொண்டுருந்த பைபிளை மொழிபெயர்ப்பது மகிழ்வூட்டும் விவகாரமாக ஆறுமுகத்துக்கு அமைந்திருக்கும். இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு முக்கால் நூற்றாண்டுக்குப் பின்னர் மகாகவி பாரதிக்கும் அவ்வாறான ஒரு மொழிபெயர்ப்பை முன்னெடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது என்பதனை வி. சக்கரைச்செட்டியார் வாயிலாக அறிகிறோம் (பேர்சிவல் பாதிரியார் தமது மாணவருடன் இணைந்து மேற்கொண்ட தமிழாக்கம் மிகச் சிறப்பானதெனப் பாராட்டப்பட்டபோதிலும் பயன்படுத்தப்படவில்லை என்பர்). பிரெஞ்சு இந்தியாவாக அமைந்த பாண்டிச்சேரியில் பத்து வருடங்கள் ‘தலைமறைவு’ வாழ்வை முன்னெடுத்த பாரதி, அதனைத் தொடர விரும்பாமல் பிரிட்டிஷ் இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர் மொழிபெயர்க்கும் அந்த விருப்பம் குறித்துத் தனது நண்பரிடம் கூறியுள்ளார். 

“புதுவையினின்று பாரதியார் திரும்பியதும் நான் அவரைச் சந்தித்தபோது தாம் விவிலிய வேதத்தை (Bible) நூதனமுறையில் மொழிபெயர்க்க உத்தேசித்திருப்பதாகக் கூறினார். அப்பணிக்குச் ஶ்ரீமான் திரு வி. கலியாணசுந்தர முதலியார் முதலான வேறு தமிழறிஞர்களுடன் நமது பாரதியாரும் பெரிதும் யோக்யதை படைத்தவரென்று கூறுவேன். அவர் மட்டும் இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்திருப்பின், அத்தகைய ஓர் பணியை தேசிய உணர்ச்சியுள்ள இந்திய கிருஸ்தவர்கள் அவர்பால் ஒப்புவித்திருப்பாரகள் என்பதில் ஐயமில்லை” (கடற்கரய் மத்தவிலாச அங்கதம் {பதிப்பாசிரியர்}, 2017. பாரதி விஜயம் – மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள், வி. சக்கரைச்செட்டியார், ‘ராஜீய வாழ்வு’. சென்னை – 83. ப. 620). கல்வி – உயர் தொழில் வாய்ப்பு என்பவற்றை முன்னிறுத்தியவாறு வலிமைமிக்க கருவியாக மதமாற்ற நடவடிக்கையை ஏகாதிபத்திய அரசு கையாள்வதற்கு எதிராகக் காத்திரமான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தவர் பாரதி; ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு அடிநிலை மக்களையும் பரந்தளவில் அணிதிரட்டலுக்கு ஆட்படுத்தி இருந்த கட்டத்தை முதல் தடவையாக எட்டியிருந்த இரண்டாவது தேசிய எழுச்சிக்கான (1919 – 1922) சூழலில், அதனை ஆதரித்து வளர்ந்தபடியே எதிரியால் பயன்படுத்த இயலாத பண்புடன், மக்களுக்கான மத நம்பிக்கைத் தளம் சார்ந்து பைபிள் மொழிபெயர்ப்பைச் செய்யும் ஆவல் கொண்டவராக பாரதி இருந்துள்ளார். 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்கூறில்தான், ஐரோப்பியர்களான தாமே முழு உலகையும் ஆளப்பிறந்த மக்கள் கூட்டத்தினர் எனக் கருதத் தொடங்கியதுடன் அதற்கெனக் கடவுளால் தேர்ந்தெடுத்துப் படைக்கப்பட்டு இருக்கிறோம் என்பதான எண்ணப்பாங்கினை உருவாக்கி வளர்க்க ஆரம்பித்திருந்தனர். அதே வெள்ளையர்கள் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறி நிரந்தரமாக வாழ்ந்துவந்த நிலையில் தமது ஐரோப்பியத் தாயகத்தில் இருந்து வீரசுதந்திரம் வேண்டிப் போராடி 1776 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றிருந்தனர்; அந்த ஐக்கிய அமெரிக்காவின் கிறிஸ்தவ மிசனரியினரிடம் காலனித்துவ எதிர்ப்புணர்வும் ஜனநாயக நாட்டமும் அப்போது மேலோங்கி இருந்த சூழலில், அவர்களால் ஆகர்ஷிக்கப்பட்டுக் கல்வி கற்ற ஆறுமுகமும் பைபிள் மொழிபெயர்ப்பை மேற்கொண்டது முற்றிலும் வேறுபட்ட கால – தேச நிலைமைகளுக்கு உரியது. இந்தக் கவர்ச்சியில் கிறிஸ்தவமயப்பட்டு, தான் தடம்புரண்டால் என்னவாகும், தாம் அதனை மீறித்தப்பினாலும் தமது உதவியுடன் தமிழாக்கப்பட்ட பைபிள் வேறுபலரைக் கிறிஸ்தவராக்கப் பயன்படுமாயின் அதனை ஏற்பது சரியானது தானா? என்ற கேள்விகள் ஆறுமுகத்தை வருத்தி இருக்க வேண்டும். இவ்வகையில் ஈடுபாட்டுடன் தமிழ்ப்படுத்திய ஆறுமுகம் கிறிஸ்தவராக மதம் மாறிவிடவில்லை என்பதனைப்போல உயர் சாதியினர் எனப்படுவோரில் பலர் மதமாற்றத்துக்கு இணங்க மறுக்கின்றனர் எனும் நிதர்சனத்தையும் அமெரிக்க மிசனரியினர் காணத் தவறவில்லை. ஆதிக்க சாதிப் பிரிவினருடன் அதீதமாக மெனக்கிடுவதோடு அடங்கிவிடாமல் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினரைக் கல்வியூட்டி மத மாற்றத்துக்கு ஆட்படுத்துவதையும் இணைப்பது அவசியம் எனக் கருதினர்.

அவ்வாறு ஒடுக்கப்பட்ட மாணவர் மத்திய கல்லூரியில் சேர்க்கப்பட்ட போது, சைவத் தமிழ்ப் பண்பாட்டை பாதுகாக்கும் அவசியம் ஆறுமுகத்தை உந்தித்தள்ளியதன் பேரில், அங்கிருந்து வெளியேறிச் செயற்பட்டதன் வாயிலாக நாவலர் எனப் பரிணமித்தார் என்பதை அறிவோம். முந்திய நிலவுடைமைச் சமூக முறைமையில் உலகின் முதல்நிலை வல்லரசாகத் திகழ்ந்த தமிழ்ச் சைவத்தின் பரம்பொருள், உலகெலாம் ஓதுதற்கரியவன் என்ற பீடத்தினின்றும் வீழ்த்தப்படுவதனை, ஒருப்பட இயலாதென்று உணர்ந்த ஆறுமுக நாவலர் சைவத்தின் மீளெழுச்சிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். புதிய மதம் நவீனப் பயன்பாட்டு வல்லமை பொருந்திய மொழிப்பிரயோகத்துடன் மேலெழுகிறது எனில் பழம் பெருமை வாய்ந்த தமிழின் மகிமையையும் மீட்டுயிர்ப்புச் செய்யும் பணி இணைக்கப்பட வேண்டும் என உணர்ந்தார். கவனம்பெறாமல் அழிந்தொழியும் ஓலைச்சுவடிகளை நவீன உலகின் நீடித்த உயிர்ப்புக்கு மடைமாற்றி அச்சு நூல்களாக்கினார்.

தமிழ் வணிக ஊடாட்டம் வாயிலாக அன்று ஆற்றலோடு இயக்கம் கொண்டிருந்த நாடுகள்தோறும் பரப்புரை செய்யப்பட்ட சைவத்தின் மேன்மை சமஸ்கிருதத்துடன் இணைக்கப்பட்டதாக இருந்தது. முன்னதாக வளவழிபாட்டு மேலாண்மைக்கு முந்திய அறிவியல் மனப்பாங்கு மேலோங்கியிருந்த தமிழ் தன்னூடாக அனைத்து மதங்களையும் வெளிப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தது; பக்திப் பேரியக்கம் வாயிலாகச் சைவம், வைணவம் ஆதிய வைதிக மதங்கள் மேலோங்க உதவும் கருவியாகவும் இருந்தது. பௌத்தத்துக்குப் பாளி, சமணத்துக்குப் பிராகிருதம், வைதிக மதங்களுக்குச் சமஸ்கிருதம் போல ஒருதனி மதத்துக்கான மொழியாகத் தமிழ் ஒடுங்கிப்போக இயலாத காரணத்தால் உலகமொழி ஊடாட்டத்தைப் பெறத் தவறியது; அன்றைய உலக மொழிகளாக பாளி, சமஸ்கிருதம் என்பனவே தொடர்பாடல் பயன்பாட்டில் இருந்தன. 

முன்னதாகப் பிராமணருக்கும் சமஸ்கிருதத்துக்கும் தம்மை அறியாமல் முன்னுரிமை கொடுத்ததன் காரணமாகப் பட்ட அடி யாழ்ப்பாணத் தமிழர் அடிமனதில் உறைந்துள்ள ஒன்று; யாழ்ப்பாணத்தை மத்தியகாலக் கட்டமைப்பில் வடிவமைத்தபோதே தமிழ்த் தத்துவ நெறியான சைவசித்தாந்த மேலாதிக்கத்துடன் வாழ்வைத் தொடங்கியவர்கள் இரண்டொரு நூற்றாண்டுகளாக மாற்றுமொழியினரது மதத்துக்கு அடிமைப்பட நேர்ந்துள்ளது. நவீன உலகமொழியாக விருத்திபெற்றுவந்த ஆங்கிலம் எமது பண்பாட்டு அடித்தளத்தை முற்றாகத் தகர்க்க வாய்ப்புள்ளது எனக் கண்டபோது சைவத் தமிழைப் பேணும் பணியைப் பழைய பாணியில் முன்னெடுப்பது போதுமானதல்ல என்பதனை நாவலர் புரிந்துகொண்டார். ஆதிக்கநிலையில் பண்பாட்டுச் சிதைவை எட்டியிருந்த பிரபுக்களின் சிற்றின்பக் களியாட்ட நிறுவனங்களாகத் திகழ்ந்த கோயில்களின் சடங்காசாரக் கையாளுகைகளை விட்டொழிப்பது அவசியமெனக் கண்டார். வெற்றிபெற்ற புதிய வாழ்வியலுக்கான மிஷனரிமார்களது கிறிஸ்தவமதப் பரப்புரை நடைமுறைகளைப் பிரயோகிக்க முனைந்தார். முன்னதாகத் தத்துவத்தளத்தில் பௌத்தத்தை வெற்றிகொள்ள ‘மறைவான பௌத்தர்’ எனக்கூறத்தக்க வகையில் இயக்கம் கொண்டு அதன் அம்சங்களை உட்படுத்திய நுட்பத்தாலேயே வைதிகத் தத்துவத்தைச் சங்கரரால் மேன்மைபெற வைக்க இயலுமாக இருந்தது. நாவலரும் நவீன புரட்டஸ்தாந்தக் கிறிஸ்தவ நடைமுறைகள் சிலவற்றைக் கையேற்று இயங்குவதன் வாயிலாகவே கிறிஸ்தவத்தை வெற்றிகொள்ள வேண்டியவராக இருந்தார். இந்துக் கோயில்களின் பன்முகப்பணிகளில் கலை விருத்தியும் முதன்மைக்குரியதாகத் துலங்கியது; அதன் விருத்திக்கென அமர்த்தப்பட்ட தேவரடியார் பெண்களைக் காமக்களியாட்டத்தின் கருவிகளாக்கி இருந்ததனை எதிர்த்தார். நடனக்கலையைச் சின்னமேளம் எனக் கீழிறக்கம் செய்வதுடன், வாணவேடிக்கைக் களங்களாகக் கோயில்கள் மாற்றப்பட்டு இருப்பதனைக் கண்டித்து, மாற்றுச் செயற்பாடாக சமயப் பிரசங்கங்கள் – புராணப்படிப்பும் உரை விளக்கங்களும் என்பவற்றினூடாக மத விழிப்புணர்வு மேலோங்க வழிகாட்டினார்.

தமிழகத்தில் பெற்றிருந்த மேலாதிக்க உச்சத்தைப் பிராமணருடன் பங்குபோட்டதன் விளைவை ஏற்கனவே கண்டுணரந்து, அவ்வகைப் பாகப்பிரிவினை ஏற்படாத தனி ஆளுகைக்கு உரியதாக கட்டமைத்திருந்த யாழ்ப்பாணக்களத்தில் சைவசித்தாந்தம் மட்டுமே புழங்கும் தத்துவமாக நிலவுவதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை நாவலர் மேற்கொண்டார்; அதன் பிழிசாறாக அமைந்து மக்களுக்கானதாக மேற்கிளம்பிய கந்தபுராண படனம் நாவலரால் முன்னெடுக்கப்பட்டு, இன்றுவரை தொடர்வதனைக் காண்கிறோம். இலக்கியப் பரிச்சயமற்ற பாமர மக்கள் எனப்படுவோரும் கந்தபுராணப் பிரசங்கங்களைக் கேட்டு வளர்ந்ததன்பேரில் யாழ்ப்பாணம் ‘கந்தபுராணக் கலாசாரக்’ களம் என்ற அடையாளத்தைப் பெற இயலுமாயிற்று!

ஒரு கடவுள் மட்டுமே உண்மைப் பொருள் என்பதற்கு மாறாக சைவர்கள் பல கடவுளர்களை வழிபடுவதாகப் பாதிரிமார் பரப்புரை செய்தபோது, அவர்களது சுதா – பரிசுத்த ஆவி என்பவற்றைக் கூட்டுச்சேர்க்க அவசியமுடைய பிதாவைவிடவும் அதியுச்சப் பரம்பொருளான பதி மட்டுமே சர்வமல்லமை பொருந்திய ஒரே இறையெனக் கொண்டது சைவசித்தாந்தம் என எடுத்துரைத்தார்; அதனைப் பல்வேறு ரூபங்களில் கொண்டாடும் மக்களுக்கான நடைமுறையை நியாயப்படுத்தும் கந்தபுராணத்தைப் பயன்படுத்தலானார். கந்தபுராணத்திலேயே காட்டப்பட்டவாறு, முருகன் தனியொரு கடவுளல்ல; சிவனின் ஒரு மூர்த்தமே அவரென எடுத்துரைக்க இயலுமாக அமைந்ததில், கிறிஸ்தவம் முன்னிறுத்துவதைக்காட்டிலும், சைவசித்தாந்தமே ஒரு கடவுள் கோட்பாட்டின் வெளிப்பாட்டை உடையதென்றார்!

வீரயுகக் காலத் தமிழில் காட்டப்பட்ட முருகனை மேவியதாக நிலப்பிரபுத்துவக் கொடுமுடிக்கு உரிய கடவுளாகச் சிவனைக் காட்ட நேர்ந்தது. ஆலமர் செல்வனும் பேசப்பட்டமையாலும், முருகனுக்கான பல அடையாளங்களை சிவனுக்கும் பொருத்த இயலுமாக இருந்தமையாலும், 14 ஆம் நூற்றாண்டின் பின்னர் ஆட்சியாளரது பரம்பொருளாக விஷ்ணு மேற்பட்டபோது, சைவ – வைணவச் சமரசத்தின் பொருட்டு, சிவனின் மைந்தனாகவும் விஷ்ணுவின் மருமகனாகவும் புராணிக்கப்பட்ட முருக வழிபாடு தமிழில் மேலோங்கும் அவசியம் ஏற்பட்டிருந்தது. அந்த முருகன் வேறெவருமல்ல, சிவனின் மூர்த்தமே என்று சொல்லும் வாய்ப்பையும் கந்தபுராணம் பயன்படுத்திக் கொண்டது. உலக மேலாதிக்கக் காலனித்துவக் கொடுமுடியில் சைவத்தை மீளெழுச்சிபெற வைக்கும் வகையில் இந்த அம்சங்களைச் சிறப்புறக் கையாண்ட நாவலர் பக்திப் பேரியக்கத்தின் நான்கு குரவர்களின் (நாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்போரையடுத்த) வழித்தோன்றலாக, ஐந்தாம் குரவராகப் பின்னர் போற்றப்படலானார்!

சாதியின் காவலர்

இலங்கைச் சட்டசபையில் ஒரு கிறிஸ்தவத் தமிழர் பிரதிநிதித்துவம் பெறுவதனை மறுத்து சைவத் தமிழரான சேர். பொன். இராமநாதன் தெரிவுசெய்யப்படுவதில் நாவலருக்கு இருந்த வகிபாகம் வரலாற்றில் ஆழப்பதிந்துள்ளது. எமக்கான ‘இலக்கிய வழி’ துலங்கும் வகையில் அதனைப் பதிவு செய்தவரான பண்டிதமணி கணபதிப்பிள்ளை, ஆறுமுக நாவலரூடாகக் கந்தபுராணக் கலாசாரம் எம்மிடையே அழுத்தம் பெற்றிருந்த வரலாற்றையும் எடுத்துக்காட்டியவர். அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படுவதனை மறுத்து சேர். பொன். இராமநாதன் கருத்துரைத்ததில், ‘படிப்பறிவு அற்ற ஒருவர் அரசியல் தெளிவற்றவர்’ எனும் எடுகோள் மட்டுமன்றி, மலிந்த கூலிகளாக வாழவைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் உரிமை வழங்கக்கூடாது என்ற உணர்வுதான் உள்நோக்கமாக அமைந்திருந்தது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க இயலாது. ஆதிக்க சாதியினரது நலன்கள் பேணப்பட வேண்டுமென்ற அரசியல் செயற்பாட்டுக்கு உரியவரான இராமநாதனை அரசியலாளராக முன்னிறுத்திய நாவலரது சாதி அபிமானமும் இவ்விடத்தில் இணைத்துப் பேசப்படுவதனை அறிவோம்.

பக்திப் பேரியக்கம் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுக்கு உரியதான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. சமூகம் ஒன்றின் அதியுச்ச மேலாதிக்கச் சக்தியாக நிலப்பிரபுத்துவம் விளங்குவதன் மத நிறுவன வெளிப்பாடுதான் ஒரு பரம்பொருள் ஏனைய அனைத்தையும் தனது கட்டுக்குள் ஆளுகை செலுத்துதல்; அத்தகைய மூல முழுமுதல் கடவுளான சிவனை ஏகப்பிரதிநிதியாக நாவலர் வலியுறுத்துவதில் கிறிஸ்தவப் பரப்புரையாளர்களை முறியடிக்கும் எத்தனம் மட்டுமே செயற்பட்டிருக்கும் எனக் கூறிவிட இயலாது. எமது சமூகத்தின் ஆதிக்கத் தரப்பினரது ஆளுகைக்குள் ஏனைய பகுதியினர் கட்டுப்பட்டு ஒழுக வேண்டும் என்ற அக்கறையும் இணைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அன்றைய ஆதிக்கத்தரப்பினரான காலனித்துவவாதிகளது பிடியைப் பண்பாட்டுத்தளத்தில் பலவீனப்படுத்துவதற்கான கருத்தியல் போராட்டத்துக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் முற்பட்டுவரும் வாய்ப்பு இருந்தநிலையில் நாவலர் செயற்பட்ட பாங்கு அமைந்திருப்பின் இன்றைய கணிப்புக்குரிய ஒருவராக ஆகியிருக்க மாட்டார். சமூக இயங்குதளத்தில் உலக மேலாதிக்க உச்சத்தைப் பலவீனப்படுத்தும் அம்சமாக ஆதிக்க சாதியினரின் மதமாற்றம் தடுக்கப்பட வேண்டிய வரலாற்றுக் கட்டம் அன்று நிலவியது; அதன்பேரில் சைவ ஆசாரங்களை விட்டுப் பிற மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதைக் கண்டிக்க வேண்டி இருந்தபோது ஒவ்வொரு சாதியினரும் அவரவரது சாதியாசாரங்களைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என வலியுறுத்துகிறவராக நாவலர் அமைந்தார்!

இவ்வாறு கூறும்போது சாதி வெறியர்களின் ஒடுக்குமுறைக்கருத்துகள் அனைத்துடனும் பூரண உடன்பாடு கொண்டிருந்தார் எனப் பொருள்கொள்ள இயலாது. ஆதிக்கச் சாதி நலன்சார்ந்த ஒருவர் தனது மத மேலாதிக்கம் நிலைநிறுத்தப்படும் நடைமுறைகளில் ஏனைய சாதியினர் குறுக்கீடு செய்வதற்கு எதிராக இருப்பார். செயலொழுங்கு தொடர்பான விவகாரம் ஒன்றில் ‘பள்ளர்’ ஒருவர் இதழொன்றில் அபிப்பிராயம் தெரிவித்ததனை நிராகரித்து, ‘கருத்துரைக்கும் தகுதிக்கு உரிய சாதியினரல்ல’ எனும் மறுப்புரை எழுந்தபோது அதற்கு எதிராக மறு இதழில் எதிர் கருத்தை நாவலர் பதிவு செய்திருந்தார். அந்தச் சாதிப்பிரிவினரும் சைவ சமயத்தையே சேர்ந்தவர் என்ற வகையில் கருத்துரைக்க உரித்துடையவர் என்று கூறிய நாவலர், அதன் ஏற்புடைமைக்கான நூலாதாரங்களை வெளிப்படுத்தும் ஆற்றலுடன் திகழ்ந்தார். சமூக அமைப்பு மாற்றங்களின் தவிர்க்க இயலாமைகளை ஏற்றாக வேண்டியிருப்பதனை, சுரண்டும் அபிலாசையுடன் உள்ளவரது கண்ணோட்டத்தில் நாவலர் அணுகுபவராக இருக்கவில்லை; மாற்றத்துக்கான அங்கீகாரத்தை சைவ அனுஷ்டானங்கள் ஊடாகத் தேடினார் என்பதே கவனிப்புக்கு உரியது. மாறிவரும் நியதிகள் அனைத்தையும் நிராகரித்துப் பழமைவாதத்தை அப்படியே பேண விழைந்திருப்பின் ‘புரட்டஸ்தாந்தச் சைவப்’ பரப்புரை முயற்சியையும் அவர் கையேற்றிருக்க இயலாமல், வரலாற்றில் தடம்பதிக்கும் ஆற்றலைப் பெற இயலாதவராக ஆகியிருப்பார்!

புதிய பண்பாட்டு எழுச்சிக்கான வித்தாகப் பண்பாட்டுத் தேசியம்

அண்ணமார் வழிபாட்டுக்கு உரிய பள்ளர் சாதியைச் சேர்ந்தவர் சிவவழிபாட்டு அனுஷ்டானம் குறித்து அபிப்பிராயம் தெரிவிக்கக்கூடாது என்பது தனிவழி மேலாதிக்கத் தேசியவாத நிலைப்பாடு; மதவாத அடையாள அரசியல் கூறுடையவராக அன்றி ஒன்றுபடுத்த வேண்டிய அனைத்தையும் அரவணைத்து இயங்கும் திணை அரசியல் நோக்குடைய நாவலருக்கு அண்ணமார் போன்ற தெய்வங்களைப் பரிவாரமாகக் கொண்டொழுகும் சிவன் பற்றிய புரிதல் முதன்மையானது. உயர்சாதிகள் எனப்படுவோரது சிறுதெய்வ வழிபாடுகளை நிராகரித்த நாவலர் ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினரது கடவுள் இருப்பை மறுத்து இயக்கம் எதனையும் முன்னெடுக்க இயலவில்லை. கோயில்களினுள் நுழையத்தக்கோரது சிறுதெய்வங்கள் அனைத்தையும் சிவனின் மூர்த்தங்களில் ஒன்றாகவோ, இராஜராஜேஸ்வரியாகவோ மாற்றும் அவசியம் அவருக்கு இருந்தது. கோயிலினுள் அனுமதிக்காமல், மலிந்த கூலிகளாகவும் நடாத்த வேண்டும், சைவராகவும் அங்கீகரிக்க வேண்டும் என்றால் அத்தகைய ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்த வழிபாட்டினை எப்படி விலக்க இயலும்?

அவ்வாறு ஒடுக்கப்பட்டு இருந்த மக்களுக்கான கடவுளர்களை ‘சிறுதெய்வங்களாக’ நாவலர் வரையறுக்க முற்படவில்லை; புராணங்கள் வாயிலாக மதுரைவீரன், காத்தவராயன், கருப்பசாமி, அண்ணமார் போன்ற தெய்வங்கள் பரம்பொருளுடன் அல்லது அவருக்கான சமூகத்தளத்தின் கதை மாந்தர்களுடன் முடிச்சுப்போடப்பட்டு இணைக்கப்பட்டு உள்ளமையை எடுத்துக்காட்டாக முன்வைப்பதில் நாவலருக்குத் தயக்கமிருந்திருக்காது. காலனித்துவ ஒடுக்குமுறையின் பண்பாட்டு வெளிப்பாட்டுக்கு எதிராகப் போராட வேண்டியிருந்த வரலாற்றுக்கட்டத்தில் அத்தகைய சமாதானங்களுடன் பாரம்பரிய சைவ மீளுருவாக்கத்துக்கு அவசியப்பட்ட நடைமுறைகளை முன்னெடுத்த நாவலர் குறித்த தெளிவான கணிப்புப் பின்னர் தேசிய விடுதலைக்கான அரசியல் இயக்கச் செயற்பாட்டாளர்களாக இயங்கியோரிடம் இருந்தது. 

இன்றைய அடையாள அரசியலுக்கான தலித்தியவாத நோக்குடன், ஆதிக்கசாதிக் கடவுளாகச் சிவனைக் கணித்து ‘ஒடுக்கப்பட்டோர் சைவர்களல்ல’ எனக் காணும் பிரிவினை மனப்பாங்கு ஐம்பதாம், அறுபதாம் ஆண்டுகளின் சாதியத் தகர்ப்புப் போராட்ட சக்திகளிடம் இருந்திருக்கவில்லை. அதன் காரணமாகவே சைவப் பெருங்கோயில்களினுள் பிரவேசிப்பதற்கான ‘கோயில் நுழைவுப் போராட்டங்கள்’ பிரதான வடிவத்தை இங்கே பெற்றிருந்தது. 

தனக்குரிய வரலாற்றுக் கடமையில் திணை அரசியல் பண்பை நாவலர் வெளிப்படுத்தி இருந்ததைப்போன்றே விடுதலைத் தேசிய அரசியல் முன்னெடுப்பை மேற்கொண்ட இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சிகள் சாதியத் தகர்ப்பைச் சாதிவாத – வர்க்கவாதக் கண்ணோட்டங்களில் அணுகாமல், திணை அரசியல் செயலொழுங்குப் பிரகாரம் முன்னெடுக்கலாயினர். காலனித்துவக் கையாளுகைகளினால் அடையாள அரசியல் வடிவத்தை இந்தியாவின் சாதித் தளப் போராட்டங்கள் முப்பதாம் ஆண்டுகளில் இருந்து தோற்றம்பெற்று வளர்ந்ததைப்போல இங்கு இருந்திருக்கவில்லை என்பது பற்றிப் பேசிவந்துள்ளோம். பின்னர் எமக்கான மார்க்சியப் பிரயோக வாய்ப்பினை வழங்கிய நாவலரின் இத்தகைய வரலாற்றுப் பங்களிப்புக்கான சமூகத் தளக்கட்டமைவு பற்றிய தேடலை அடுத்த அமர்வில் அலசுவோம்!


ஒலிவடிவில் கேட்க


About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்