4.5.4 யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு பாதுகாப்பான நீரை வழங்குவதற்கான நீண்டகால நிலையான வழிகள்
யாழ்ப்பாணத்திற்கு பாதுகாப்பான நீரை வழங்குவதற்கான நீண்டகால நிலையான ஒரே தீர்வு, யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வெளியே, ஆனால் வடக்கு மாகாணத்திற்குள் இருக்கும் ஆறுகள், ஏரிகள், அணைகள், நீர்த்தேக்கங்கள், குளங்கள் போன்ற நிலப்பரப்பு நீர் மூலங்களில் இருந்து நீரைக் கொண்டு வருவதே என்பது கீழே உள்ள அட்டவணை 4.1 மூலம் எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெற்குப் பகுதியில் இருந்து (ஆனால் வட மாகாணத்தின் எல்லைக்குள்), ஆறுகள், அணைகள், நீர்த்தேக்கங்கள், குளங்கள் போன்ற மேற்பரப்பு நீர் மூலங்களிலிருந்து நீரைப் பெறுவதே சந்தேகத்திற்கு இடமின்றி ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை இவை அனைத்தும் நிரூபிக்கின்றன.
இரணைமடு (Iranamadu) ஏரியில் இருந்து மூல நீர் (Raw Water) பெற வேண்டிய, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) நிதியுதவியுடன் கூடிய திட்டம் சிரமங்களைச் சந்தித்துள்ளது என்பது நமக்குத் தெரியும். இந்தத் திட்டத்தைக் காப்பாற்றும் முயற்சியாக, இரணைமடுப் பாசன விவசாயிகள், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கான பாதுகாப்பான நீர் விநியோகம் குறித்த தங்கள் அசல் எழுத்துப்பூர்வ உறுதிமொழியை (Written Commitment) மதிக்க மறுத்து, தந்திரமான, சுயநல அரசியல் தலையீட்டின் மூலம் இரணைமடுக் குளத்தில் புனரமைப்புப் பணிகளைச் செய்துள்ளார்கள். தற்போது மிதமிஞ்சிய நீர் வருடா வருடம் கடலுக்குச் செல்கிறது.

Source: “Northern River Basins Yield Study for Operational Policy of Irrigation Schemes & Water Resources and Agriculture Development Strategy for North – 2020 – 2035”, ISBN 978-955-0585-39-7, 2020.
4.5.4.1 ‘யாழ்ப்பாணம் – கிளிநொச்சி’ பாதுகாப்பான நீர் வழங்குவதற்கான திட்டத்தின் தற்போதைய நிலை
பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் வரை குழாய் வலையமைப்பு (Pipe Network) மற்றும் 13 நீர் விநியோகக் கோபுரங்கள் (Water Distribution Towers) கட்டமைக்கப்பட்டு வெளிப்படையாகச் சோதிக்கப்பட்டுள்ளன. இரணைமடுவில் இருந்து பரந்தன் வரையிலான குழாய்ப்பணி, அங்கு நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தின் (Water Treatment Plant) தளம் என்பன இன்னும் நிறைவடையவில்லை. நீர்ச் சுத்திகரிப்பு நிலையமும் இன்னும் கட்டமைக்கப்படவில்லை.
ஆனால் தற்போது தற்காலிகமாக தாளையடியில் அமைந்துள்ள கடல்நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, மிகவும் கூடிய செலவில் குடாநாட்டிற்கான நீர் விநியோக நடவடிக்கைகள் சிறிது சிறிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரணைமடுவில் இருந்தும், புதிதாக அமைக்கப்பட உள்ள பாலி ஆற்று நீர்த்தேக்கத்திலிருந்தும் நீர் விநியோகம் செய்வதற்கான ஒழுங்குகள் மிகவும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன.
மேலே கூறப்பட்ட அனைத்திலிருந்தும், யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு பாதுகாப்பான நீர் வழங்குவதற்கான நீண்டகால நிலையான வழிகள் (Policy Option) பின்வருமாறு அமையும் என்பதை நாம் அறிய முடியும்:
வடக்கு மாகாணத்தின் எல்லைக்குள் உள்ள எந்த இடத்தில் இருந்தும் நிலப்பரப்பு நீர், பரந்தன் நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்திற்கு (WTP) குழாய் மூலம் கொண்டு செல்லப்பட வேண்டும். அங்கு அது சுத்திகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட மொத்த நீர் (Treated Bulk Water) ஏற்கனவே கட்டப்பட்ட குழாய் வலையமைப்பு வழியாக 13 நீர்க் கோபுரங்களுக்கும் வழங்கப்படும்.
நிலப்பரப்பு நீர் மூலங்களில் இருந்து வரும் மூல நீரை (Raw Water) சுத்திகரிக்க, பரந்தன் நீர்ச் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட வேண்டும். ஏனெனில் ஆரம்பத் திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) நிதி ஒதுக்கீடுகளில், பரந்தன் நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தையும் உள்ளடக்கியது.
தீர்வு காண வேண்டிய ஒரே விடயம், நிலப்பரப்பு நீர் வளத்திற்கான சிறந்த மூலத்தை (Optimum Source) கண்டறிவதாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர் வளத்திற்கான கொள்கை ஒப்புக்கொள்ளப்பட்டால், மூல நீரின் சிறந்த இடத்தைக் கண்டறிவதும், தேவையான நீரை பரந்தன் நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்குவதற்கான எளிய குழாய்ப்பணியை வடிவமைப்பதும், பொதுப்பணி மற்றும் நீரியல் பொறியியல் (Civil and Hydraulic Engineering) சார்ந்த சாதாரண விடயங்களாகும். இந்தக் கொள்கைக் கட்டமைப்பை (Policy Framework) ஏற்பது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி அது நிர்ணயிக்கப்பட்டால் மற்ற அனைத்து விடயங்களும் அதைத் தொடர்ந்து விரைவாக நடக்கும்.
பெரும்பாலான மேற்பரப்பு நீர் வளங்களைப் போலவே, நிலத்தடி நீர் வளங்களின் பயன்பாட்டிற்கும் கவனமான மதிப்பீடும், நீரை எடுப்பதற்கான (Abstraction) கடுமையான கட்டுப்பாடுகளும் தேவைப்படுகின்றன. தீவிர நகர்ப்புற, தொழிற்றுறை, சுற்றுலா மற்றும் பிற வளர்ச்சிகள் இந்த வளத்தின் அதிகப்படியான எடுத்தல் மற்றும் பயன்பாட்டிற்குப் பங்களித்துள்ளன. இப்போது வரை, குழாய்க் கிணறுகள் தோண்டுவதைக் கட்டுப்படுத்துவதற்கும், நிலத்தடி நீரின் தரம் குறைவதில் அவற்றின் தாக்கத்தை கண்காணித்து மதிப்பீடு செய்வதற்கும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை (நீர்வள வாரியச் சட்டம், இல. 29/1964 இன் பிரிவு 12 (1) இல் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து, பாசனம் மற்றும் நீர்வள மேலாண்மை அமைச்சர் பிரிவு 16 (1) மற்றும் 16 (2) கீழ் வழங்கிய உத்தரவுகள், வர்த்தமானி அறிவிப்பு இல. 2010/23 – வியாழக்கிழமை, மார்ச் 16, 2017 மூலம், சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை).
கட்டுப்பாடற்ற முறையில் ‘வேளாண் கிணறுகள்’ (Agro-wells) தோண்டுவது, சில பகுதிகளில் அதிகப்படியான நீர் எடுப்பதற்கும் (Abstraction) மேல்நிலை நீரின் அதிகபட்ச பயன்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் விடயத்தில், இது பரவலான பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்கு நேரடியாக வழிவகுத்துள்ளது.
முன்மொழியப்பட்ட பிராந்திய நீர் வழங்கல் முகமைக்கு (Regional Water Supply Agency – RWSA) குழாய்க் கிணறுகள் தோண்டுவதற்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கும், அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகள் மட்டுமே நிலையான அளவு நீரை எடுப்பதற்கான அனுமதிகளை வழங்குவதற்கும் அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
சிறப்பாக ஆய்வு செய்யப்பட்ட, யாழ்ப்பாணக் குடாநாட்டின் சுண்ணாம்புக்கல் நீர்நிலக் குடுவையில் (Limestone Aquifer) சேமிக்கப்பட்டுள்ள நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் உத்தியியல் கோட்பாடு இல்லாமல், கீழ்க்காணும் ஐந்து திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன:

- யாழ்ப்பாணம் லகூன் திட்டம்
- வழுக்கை ஆறு வடிகால் திட்டம் மற்றும் அராலி அணை
- உப்பாறு லகூன் திட்டம், வெள்ளப் பாதுகாப்பு அணைகள் மற்றும் அராலி அணை
- வடமராட்சி லகூன் திட்டம், வெள்ளப் பாதுகாப்பு அணைகள் மற்றும் தொண்டமானாறு அணை
- உப்புநீர் தடுப்பு அணைத் திட்டங்கள்
உண்மை என்னவென்றால், யாழ்ப்பாணக் குடாநாட்டின் காரஸ்டிக் நீர்நிலைக் குடுவைகளில் (Karstic Aquifers) உள்ள நிலத்தடி நீரைப் பாதுகாத்தல் அல்லது மீள் நிரப்புதல் (Recharge) செய்வது இயற்பியல் ரீதியாக முடியாத ஒன்றாகும். ஏனெனில் இது ஒரு காரஸ்டிக் நீர்நிலைக் குடுவை (கரிம நீராதார அடுக்கு) ஆகும். மேலும் நிலத்தடி நீரின் மட்டம் கடல் மட்டத்தை விட (Mean Sea Level) உயர்ந்திருப்பதால், மேலோட்ட நீரானது கடலுக்கே கசிந்து போகும். ஆயினும், மேற்குறிப்பிட்ட ஐந்து திட்டங்களாலும், சுமார் 20,000 ஹெக்டேர் (ஏக்கர்) விவசாய நிலத்தை மட்டுமே மீட்டெடுக்க முடியும். இந்த மீட்டெடுப்பு (மறுசீரமைப்பு) வெற்றி பெற்றால், யாழ்ப்பாணக் குடாநாட்டின் நில உற்பத்தித்திறன் (Land Productivity) கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம் கீழ்வரும் விசேட விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியும்.
- உப்புத் தாங்கும் தாவரங்கள் மற்றும் உவர்நிலத் தாவரங்களைப் (Halophytes) பயிரிடுதல்.
- நிலைத்தன்மை வாய்ந்த உவர்நில உற்பத்தி முறைகளை (Bio Saline Production Systems) வளர்த்தல்.
- வித்து வங்கியை (Germplasm) வளர்த்தல்.
நில உற்பத்தித் திறனை (Land Productivity) மேம்படுத்தும் மேற்படி திட்டங்களானவை, யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக அல்லாமல், மறைந்த மாபெரும் பொறியாளர் திரு. எஸ். ஆறுமுகம் (S. Arumugam) அவர்களின் கனவுப்படி, நில உற்பத்தித் திறனை (Land Productivity) அதிகரிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தன. அவரது நோக்கம் சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல், குடாநாட்டுக்கான பாதுகாப்பான குடிநீர் விநியோகத் திட்டத்துடன், இந்த நில உற்பத்தித் திறனை (Land Productivity) மேம்படுத்தும் திட்டங்களை இணைக்கும் சில முன்மொழிவுகள், மிகவும் பாரதூரமான புரிதல் குறைபாட்டைக் கொண்டனவாக அமைந்தன.
4.5.4.2 யாழ்ப்பாணக் குடாநாட்டின் கராஸ்டிக் நிலத்தடி நீர் நிலைப்பாட்டின் நீர்ச் சமநிலை
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிலத்தடி நீர் மாதிரியமைப்பின் கூற்றுப்படி, யாழ்ப்பாணக் குடாநாட்டில் பருவமழைக் காலங்களில் பெய்யும் மழைநீர், கடற்கழிகள், ஏரிகள் மற்றும் குளங்களை நிரப்புகிறது. மீதமுள்ள நீர், நிலப்பரப்பு ஓட்டம், நிலத்தடி நீர்நிலையின் விரிசல்கள், குகைகள் மற்றும் கரைசல் கால்வாய்கள் வழியாகக் கடலுக்குச் செல்வதோடு, நீராவியாதல் மூலமும் இழப்பு ஏற்படுகிறது.
ஆனால், வறண்ட காலங்களில், குடாநாடு முழுவதும் உள்ள பல்வேறு பாரம்பரியக் கிணறுகள், கடற்கழிகள், ஏரிகள் மற்றும் குளங்களில் சேகரிக்கப்பட்டுள்ள நீர், கடல் நீருக்கும் நன்னீர் மேடைக்கும் (Groundwater Mound) இடையே உள்ள மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்ச் சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது.
இந்த ஏரிகள், குளங்கள் மற்றும் அகழிகள் (பொதுவாக ஆழம் குறைந்தவை) பருவமழைக்குப் பிந்தைய மாதங்களில் வேளாண்மைப் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாலும், அதிக அளவு நீராவியாதல் இழப்பு (மாதத்திற்கு சுமார் 120 – 150 மி.மீ) ஏற்படுவதாலும் விரைவாக வற்றிவிடுகின்றன.
ஆசிய அபிவிருத்தி வங்கி அறிக்கையின்படி, பருவமழைக்குப் பிந்தைய மாதங்களில் கடற்கழிகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் இருந்து கணிசமான அளவு நீர் ஆவியாகி விடுகிறது. இதன் விளைவாக, (விவசாயிகள் பயன்படுத்தும் எண்ணற்ற கிணறுகளில் இருந்து நீர் எடுக்கப்படுவதோடு) நிலத்தடி நீர்நிலையின் நன்னீர் மட்டம் விரைவாகக் குறைகிறது.
மேலும், ஒரு சுவாரஷ்யமான கருத்து என்னவென்றால், மழைக்காலம் முடிந்த உடனேயே நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக வீழ்ச்சியடைகிறது. இதற்குக் காரணம், கடல் நோக்கிய நிலத்தடி நீரின் வெளியேற்றம் அதிகரிப்பதே ஆகும். எப்போதுமே பெப்ரவரி – மார்ச் மாதங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகபட்சமாக இருக்கும். இருப்பினும், இந்த ஓட்டத்தின் அளவு, நீரியல் சரிவு (Hydraulic Gradient) மற்றும் நிலத்தடி நீர்நிலை அடுக்குகளின் ஓட்டக் கால்வாய்களின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து இடத்துக்கு இடம் மாறுபடும்.
4.5.4.3 புதிய கோட்பாடுகள்/ கொள்கைகளின் அறிமுகம்
யாழ்ப்பாணத்தின் நீர் நெருக்கடி குறித்து விரிவான விவாதங்கள் தேவை. இந்த நீர்ப் பிரச்சினையை ஒரு சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டுப் பிரச்சினை என்ற கோணத்தில் பார்க்கலாம். எனவே, நீர்ப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் அனைத்துத் தரப்பு சமூகத் தலைவர்களையும் சம பிரதிநிதித்துவத்துடன் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட வேண்டும். பிரச்சினைகளை துண்டுதுண்டாகத் தீர்ப்பதன் திட்டமிடாத விளைவுகளே இவை; இதைச் சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் ‘சிறிய முடிவுகளின் கொடுங்கோண்மை’ (Tyranny of Small Decisions) எனக் குறிப்பிடுகின்றனர்.
இலங்கையோடு, குறிப்பாக யாழ்ப்பாணத்தோடு ஒப்பிடுகையில், உலகின் பல பகுதிகள் கடுமையான நீர் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. வரலாற்று ரீதியாக, நீர்ப் பிரச்சினைகள் பெரும்பாலும் பொறியாளர்கள் மற்றும் பிற நிபுணர்களால் தீர்க்கப்படுகின்றன. இது குறுகிய காலத்தில் நன்றாக வேலை செய்யும். ஆனால், நன்மை தரக்கூடிய மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட தீர்வுகளின் கருத்தாக்கம் மற்றும் நிறைவேற்றத்தில், நீர்ப் பயன்பாட்டின் இறுதிப் பயனாளிகளான மக்களின் பங்களிப்பு இல்லாதது, பெரும்பாலும் திட்டமிடாத, பாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.
குடிநீர், விவசாயம் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் ஆகிய அனைத்திற்கும் ஒரே நிலத்தடி நீர் மூலமே பயன்படுத்தப்படுவதால், இது ஒரு நெருக்கடியாக மாறியுள்ளது. சமீப காலங்களில் விவசாயத்தின் தீவிரமயமாக்கல், பெற்றோலியக் கழிவுகள் மற்றும் நகரமயமாக்கல் போன்றவை நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளன. இது மக்களை அவர்களின் ஆரோக்கியப் பிரச்சினைகள் குறித்துக் கவலைப்பட வைக்கிறது.
யாழ்ப்பாணம் விவசாயத்தைக் கைவிட்டு, அனைத்து உணவுத் தேவைகளையும் பெரு நிலப்பகுதியிலிருந்து (Main Land) இறக்குமதி செய்தால், குடிநீர் நெருக்கடி இருக்காது. அல்லது பெரு நிலப்பகுதியிலிருந்து நீரை இறக்குமதி செய்யலாம். இது பெரும்பாலும் பொருளாதாரத்தைப் பொறுத்தது. ஆனால், நீண்டகாலமாக பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வரும் விவசாயத்தை யாழ்ப்பாணம் கைவிட முடியாது. இதனால் தான் நீரானது பொருளாதாரத்தின் உயிர்நாடியாகவும் மாறியுள்ளது.
போர்க் காலத்தில் மற்ற அனைத்துத் தொழில்களும் சீர்குலைக்கப்பட்டதும், போருக்குப் பின்னர் ஆழ்குழாய்க் கிணறுகள் அறிமுகப்படுத்தப்பட்டதும், மின்சாரம் கிடைக்கத் தொடங்கியதும் மக்களுக்கு முன்னிலையில் இருந்த ஒரே வழியான விவசாயத்தைத் தீவிரப்படுத்த வழிவகுத்ததாகத் தெரிகிறது. இது பின்வரும் விளைவுகளை விரைவாக ஏற்படுத்தியுள்ளது:
- நிலத்தடி நீரை அதிகமாக இறைப்பதால் உப்பு நீர் ஊடுருவல் (Saltwater Intrusion).
- உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் மாசுபடுதல்.
குறைந்த நீர்ப் பயன்பாட்டுத் தொழில்கள் நிறுவப்படவில்லை மற்றும் நீர்ப் பயன்பாட்டுத் திறன் கொண்ட நுண்பாசன முறைகள் (Micro Irrigation Systems) அறிமுகப்படுத்தப்படவில்லை. இன்று வரை இந்த நிலைமை தொடர்கிறது. இது உண்மையில் ஒரு பொருளாதார நெருக்கடி, அல்லது குறைந்தபட்சம் ‘பொருளாதாரத்திற்கான நீர் நெருக்கடி’ ஆகும். இது ஓர் ஆளுமை நெருக்கடி (Governance Crisis). நீர் நெருக்கடி என்பது, வளம் மற்றும் தேவை மேலாண்மைப் பிரச்சினை என்று நினைப்பது எளிது.
வளத்தை மதிப்பிடுவதில், நீரியல் (Hydrology) மையமானது. ஆனால் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு நீரியல் அறிவியலில் மட்டும் இல்லை. தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, வளம் மட்டும் இருந்தால் போதாது; அதைச் சேமிக்க, விநியோகிக்க மற்றும் பயன்பாட்டிற்குப் பின் அகற்ற உட்கட்டமைப்பும் தேவை. இது ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை, ஆனால் புதிய உட்கட்டமைப்பு போன்ற தொழில்நுட்பம் மட்டும் இதைத் தீர்க்க முடியாது. இது ஒரு நிதி சார்ந்த பிரச்சினை, ஆனால் பணம் மட்டும் இதைத் தீர்க்க முடியாது. இது ஒரு மேலாண்மைப் பிரச்சினை, ஆனால் இது எளிய மேலாண்மைத் தீர்வுகளை விட அதிகமானது. நீர்ப் பிரச்சினை என்பது ஒரு சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டுப் பிரச்சினை ஆகும்.
நீர்ப்பிரச்சினையின் தன்மை தொடர்பாக குடிநீர் × சுகாதாரம் × உணவு, யார் எவ்வளவு செலுத்த வேண்டும், யார் பயனடைகிறார்கள், யார் இழக்கிறார்கள் (பணக்காரர் × ஏழை, மேல்நிலை × கீழ்நிலை, நகர்ப்புறம் × கிராமப்புறம்), குறுகியகால இலாபம் × நீண்டகால விளைவுகள் ஆகிய பல அம்சங்களை மையமாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம்கூட, ஊழல், சுயநலக் குழுக்களின் செல்வாக்கு, முதலீடுகள் அதிகாரம் மற்றும் செல்வாக்கு மிக்க பகுதிகளுக்குச் செல்லுதல், ஏழை மக்கள் வாழும் இடங்களுக்குச் செல்லாமை போன்ற காரணங்களால் தோல்வியில் முடிகிறது.
நீர் நெருக்கடி என்பது உண்மையில் ஓர் ஆளுமை நெருக்கடி (Governance Crisis) தான்.
யாழ்ப்பாணம் எதிர்கொள்ளும் நீர்ப் பிரச்சினைகள் பல முகமூடிகள் கொண்ட, சிக்கல் மிகுந்தவை. எனவே, நீங்கள் ஒரு பிரச்சினையைத் தீர்க்கும் போது, அந்தத் தீர்வில் விடுபட்ட பிரச்சினைகளில் இருந்து புதிய பிரச்சினைகள் தூண்டப்படுகின்றன.
யாழ்ப்பாண நகரம் குடிநீர் நெருக்கடி, சுகாதாரத்திற்கான நீர் நெருக்கடி மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்கான நீர் நெருக்கடியைப் பின்வரும் காரணங்களால் எதிர்கொள்கிறது:
- அதிகரித்த நீர் இறைப்புக் காரணமாக நன்னீர் வளங்கள் குறைதல்.
- கட்டுப்பாடற்ற நீர் மிகைப்பிரித்தெடுப்புக் காரணமாக உப்புநீர் ஊடுருவல்.
- அதிகரித்த உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு காரணமாக மாசுபடுதல்.
- பெற்றோலியப் பொருட்களால் மாசுபடுதல்.
- சரியற்ற கழிவுநீர் மேலாண்மை.
ஆயுத மௌனிப்புக்குப் பிந்தைய பொருளாதார மறுவளர்ச்சி இந்த நீர்ப் பிரச்சினைகளால் கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களுக்கு விவசாயத்திலிருந்து விலகி, பிற பொருளாதார வாய்ப்புகளைத் தேடுவதற்கு எந்த மாற்று வழிகளும் வழங்கப்படவில்லை. விவசாயம் அல்லாத தொழில்களை நோக்கிய எந்தவொரு நகர்வும், நகர்ப்புற மையங்களில் போதுமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைப்பதன் மூலமே வரையறுக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்திற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுவதால் மக்கள் அங்கு குடியேறும்போது, கழிவுநீர் அகற்றுதலுக்கும் நீர் தேவைப்படுகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பலதரப்பட்டதாகவும், நீண்டகால நோக்குடனும், தாராள மனப்பான்மையுடன் சிந்திக்கப்படுவதாகவும் இருக்க வேண்டும். அவை, உட்கட்டமைப்பு போன்ற ‘கடினமான பாதைத்’ தீர்வுகளையும், விலை நிர்ணயம், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் நீர்ப் பாதுகாப்பு போன்ற ‘மென்மையான பாதைத்’ தீர்வுகளையும் கொண்ட ஒரு கலவையாக இருக்க வேண்டும்.
நீர் வழங்கல் எனும் தலைப்பு இன்று பல மன்றங்களில் அதிகம் பேசப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பான நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான பல்வேறு சாத்தியக்கூறுகளை நிபுணர்கள் விவாதித்த போதும், பின்வரும் வழிமுறைகளுக்கு ஏறக்குறைய அனைவரும் போதுமான முக்கியத்துவம் அளிக்கவில்லை:
- நிலத்தடி நீர் மூலத்திலிருந்து நீர் பெறுதல்.
- கடற்கழி நீரை உப்புநீக்கிப் (Lagoon Desalination) பயன்படுத்துதல்.
- தலைகீழ் சவ்வூடுபரவல் (Reverse Osmosis) – அதிக ஆற்றலைப் பயன்படுத்தி கடல் நீரைக் குடிநீராக மாற்றுதல்.
எனவே, குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நீர் மூலத்தைப் பெறுவதற்கு, முதன்மை நிலப்பகுதியிலிருந்து வரும் மேற்பரப்பு நீரை முக்கிய மூலமாக வைத்து, அனைத்து முக்கிய நீர் வழங்கல் திட்டங்களையும் பின்வரும் வழிகாட்டுதல்களுடன் கண்டிப்பாகச் செயற்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது:
- சுமார் 60% நீர்த் தேவை – தற்போதைய மேற்பரப்புப் பாசனத் திட்டங்களிலிருந்து. (இதில் 50% தற்போதைய திட்டங்களிலிருந்தும், 10% புதிய அல்லது திசைதிருப்பும் திட்டங்களிலிருந்தும்).
- சுமார் 10% நீர்த் தேவை – கடல் நீர் தலைகீழ் சவ்வூடுபரவல் (RO) மூலம் (முக்கியமாக வறட்சிக் காலங்களில்).
- சுமார் 15% – நிலத்தடி நீரிலிருந்து.
- சுமார் 15% நீர்த் தேவை – யாழ்ப்பாணத்திற்கான நதி, தொண்டமானாறு கலப்புத் திட்டம் (Thondaman Kalappu Project), திருத்தப்பட்ட யாழ்ப்பாண நதி, யாழ்ப்பாணக் கால்வாய்த் திட்டம் போன்ற எந்தவொரு கடற்கழித் திட்டத்திலிருந்தும்.
மேற்கூறியவற்றுடன் கீழே குறிப்பிடப்படும் மிலேனியம் அரசாங்கத்தின் கருதுகோளுக்கு அமைவாக,
எந்தவொரு மேற்பரப்பு நீர் மூலத்திலும், 35 – 40% நீர்ப்பாசனம் அல்லாத நோக்கங்களுக்காக வைத்திருக்க வேண்டும் என்பது ஆயிரமாண்டு சவால்கள் (Millennium Challenges) குறித்த அரசாங்கக் கொள்கையாகும். எனவே, எந்தவொரு நீர் வழங்கல் திட்டத்திற்கான நீரையும் உறுதியான மேற்பரப்பு நீர்த்தேக்கங்களிலிருந்து பெறுவது நல்லது. ஆனால், நடுத்தர/ சிறிய பாசனத் திட்டங்களிலிருந்து நீர் வழங்கல் திட்டத்திற்கு நீர் பெறுவது, தடையற்ற நீர் வழங்கலின் உறுதியைத் தராது. எனவே, மேலே உள்ள பத்தியில் பட்டியலிடப்பட்டுள்ள பல்துறை அணுகுமுறை (Multifaceted Approach) செயற்படுத்தப்பட வேண்டும்.
4.5.5. நீர் வழங்கல் திட்டத்திற்கான நிலத்தடி நீர்
யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குள் தொண்டமானாறு, உப்பாறு மற்றும் வழுக்கையாறு ஆகிய மூன்று கடற்கழிகள் உள்ளன. இவற்றின் நீர்ப்பரப்பு பகுதிகள் முறையே 78, 26 மற்றும் 14 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்த மூன்று ஆழமற்ற கடற்கழிகள், 1,036 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட தீபகற்பத்தின் நிலப்பரப்பில் சுமார் 11.8% பகுதியைக் கொண்டிருக்கின்றன.
இந்தியப் பெருங்கடலை அண்டிய தொண்டமானாறு, அராலி ஆகிய இடங்களில் இவற்றின் கடல் நுழைவாயில்கள் உள்ளன. 160 கி.மீ. நீளமான கடற்கரையால் இத்தீபகற்பம் சூழப்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதி நிலத்தடி நீருக்குள் உப்பு நீர் ஊடுருவலுக்கு (Saltwater Intrusion) ஆளாகக்கூடியதாக உள்ளது. கடற்கழிகளின் நுழைவாயில்களில் (Lagoon Mouths) உள்ள தற்போதைய அணைகளை நீண்டகாலமாகப் புறக்கணித்ததாலும், முறையற்ற மேலாண்மையாலும், யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் முக்கிய நீர்வளமான நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்துள்ளது; உப்பு நீர் ஊடுருவல் நடந்துள்ளது.
இவற்றோடு, நிலக்கழிவு (குப்பை), மலக்குழிக் கசிவு (Soakage Pit Leakage), உரங்கள் மற்றும் வேளாண் இரசாயனங்களின் அதிகரித்த பயன்பாடு ஆகியவையும் நிலத்தடி நீரின் தரத்தைப் பாதிக்கின்றன. இதன் விளைவாக, மக்கள் தங்கள் கிணறுகளில் தரமான நீரைப் பெறுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். உப்பு நீர் ஊடுருவல் காரணமாக, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களும், நூற்றுக்கணக்கான கிணறுகளும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.
4.5.6 நீர் வழங்கல் திட்டத்திற்கான திட்டக் கருத்துகள்
யாழ்ப்பாணம் மற்றும் வடபகுதியின் குடிநீர்த் தேவைகளுக்கான நீர் மூலம் குறித்து பல்வேறு மன்றங்களில் பின்வரும் கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன:
- யாழ்ப்பாணத் தீபகற்ப கடற்கழித் திட்டங்கள்.
- கடல் நீர் தலைகீழ் சவ்வூடுபரவல் (RO) ஆலை.
- முதன்மை நிலப்பகுதியிலிருந்து மேற்பரப்பு நீர்.
4.5.6.1. யாழ்ப்பாணத் தீபகற்ப கடற்கழித் திட்டங்கள் (Lagoon Desalination)
யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் மூன்று கடற்கழிகளையும் நன்னீராக மாற்றும் எந்தத் திட்ட முன்மொழிவும், பின்வரும் கடுமையான சமூக, சுற்றாடல் மற்றும் சூழலியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்:
- உப்புக் கடற்கழி நீரைச் சார்ந்த 5,000க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் தங்கள் இறால் சாகுபடி மற்றும் உப்புநீர் மீன்பிடித் தொழிலை இழந்து, தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.
- நீர்வாழ் இனப்பெருக்கக் கூடுகள் (Aquatic Breeding Grounds) சீர்குலைக்கப்படும்.
- வலசை வந்து செல்லும் பறவைகளின் தங்குமிடங்கள் பாதிக்கப்படும்.
- இறால்களின் நீர்வாழ் இனப்பெருக்கக் கூடுகளாகவும், சுனாமியைத் தடுப்பதற்கான தங்குமிடமாகவும் செயற்படும் சதுப்புநிலக் காடுகளின் (Mangroves) இருப்பு அபாயத்திற்கு உள்ளாகும்.
எனவே, சமூக – சூழலியல் மற்றும் சுற்றாடல் சமநிலையைச் சீர்குலைக்காமல், கடற்கழி நீரை உப்புநீக்கிப் பயன்படுத்தும் பரிந்துரையைச் செயற்படுத்த முடியாது. ஆனால், சாத்தியமான ஒரே வழி, பல்வேறு உப்புத்தன்மை அளவுகளுடன் கடற்கழிகளைப் பிரித்து, சமூக – சூழலியல் மற்றும் சுற்றாடல் நல்லிணக்கத்தைப் பராமரிப்பதாகும். ஆனால் இது நில உற்பத்தித்திறனை மேம்படுத்த மட்டுமே உதவும்; நகரமயமாகும் பகுதியின் உள்நாட்டு நீர் வழங்கலுக்கு உதவாது.
கடற்கழிகளை நன்னீர் ஏரியாக மாற்றி, விளிம்பில் உள்ள நிலங்களை மீட்டு (Reclaiming) சாகுபடிக்காகப் பயன்படுத்தும் யோசனை, 1889 ஆம் ஆண்டில் வட மாகாணத்தின் அன்றைய அரசு அதிகாரி (Government Agent) Mr. Twyneham என்பவரால் தொடங்கப்பட்டது. ஆனால், 1884 ஆம் ஆண்டில் தீபகற்பத்தில் ஏற்பட்ட ஒரு பேரழிவு வெள்ளம், இத்திட்டத்தை கைவிட வழிவகுத்தது. 1913 ஆம் ஆண்டில் அன்றைய வட மாகாண அரசு அதிகாரி Mr. Fesling என்பவரால் இத்திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டில், எந்தக் காரணமும் கூறப்படாமல், அரசு அதிகாரியால் திட்டம் கைவிடப்பட்டது.
1916 ஆம் ஆண்டில், Mr. Horseburg வட மாகாண அரசு அதிகாரியாக இருந்த போது, இந்த யோசனை மீண்டும் மேலெழுந்தது. ஆனால் இம்முறையும், இது பிராந்தியத்தின் உப்புத் தொழில் வருவாயைப் பாதிக்கும் என்ற காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது.
1942 ஆம் ஆண்டில், ஒரு நீர்ப்பாசனப் பொறியாளரான Webb என்பவர், ‘யாழ்ப்பாணத் தீபகற்ப கடற்கழித் திட்டம்’ என்ற ஒரு விரிவான அறிக்கையைத் தயாரித்ததன் மூலம் இத்திட்டத்தை முன்னெடுக்க முடிந்தது. கடற்கழிகளில் நுழையும் மேற்பரப்பு ஓட்டத்தைப் பயன்படுத்துவதற்கான தொடர்புடைய தரவுகள் மற்றும் பொறியியல் தீர்வுகளின் விரிவான பகுப்பாய்வின் அடிப்படையில் அவரது அறிக்கை அமைந்தது.
சராசரி மழைக்காலத்தில், 148 MCM (மில்லியன் கன மீட்டர்) அல்லது 120,000 ஏக்கர் அடி நீர் கடற்கழிகள் வழியாகக் கடலுக்குள் செல்வதாக அவர் மதிப்பிட்டார். கடற்கழிகள் வழியாக வடிகின்ற அதிகப்படியான ஓட்டத்தைப் பயன்படுத்த, வடக்கு மற்றும் தெற்குக் கடற்கழிகளின் நுழைவாயில்களுக்கு மேலே, முறையே 99 மீட்டர் (325 அடி) மற்றும் 122 மீட்டர் (400 அடி) அணைகளை ‘Webb’ (1945) முன்மொழிந்தார். இந்த அணைகள், கடல் மட்டத்திலிருந்து 0.91 மீட்டர் (3 அடி) உயரத்தில் வடிவமைக்கப்பட்ட நிலையில், சராசரி ஓட்டத்தில் 65% மட்டுமே சேமிக்க முடியும். இத்திட்டத்தின் முக்கிய பின்னடைவு என்னவென்றால், கடல் மட்டத்திலிருந்து 0.91 மீ. (3 அடி) உயரத்தில், சுமார் 220 சதுர கி.மீ. (85 சதுர மைல்) நிலப்பரப்பு நீரில் மூழ்கும். மேலும் மே மாதத்திற்கு முன்பே, ஆவியாதல் காரணமாக கணிசமான அளவு சேமிக்கப்பட்ட நீர் இழக்கப்படும். ஆயினும், நிலப்பகுதிக்குள் உப்பு நீர் நுழைவதைத் தடுக்கும் ஒரு நீரியல் தடையை (Hydraulic Barrier) உருவாக்கும்.
வடக்குக் கடற்கழி (தொண்டமானாறு) முழுவதுமான அணை 1953 ஆம் ஆண்டில் செய்யப்பட்டது. அதே நேரத்தில் தெற்குக் கடற்கழியின் அணை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு பூர்த்தி செய்யப்பட்டது. தற்போது இரு அணைகளும் முறையற்ற செயற்பாட்டு நிலையிலும், பராமரிப்பிலும் உள்ளன.
4.5.6.2 யாழ்ப்பாணத்திற்கான நதி (River for Jaffna/ Arumugam Plan)
கடந்த 40 ஆண்டுகளில், பல திட்டங்கள் அவ்வப்போது முன்னேற்றம் கண்டு (அல்லது கவனத்தை ஈர்த்து) உள்ளன. மோதலுக்கு முந்தைய காலம் மற்றும் மோதலுக்குப் பிந்தைய காலம் ஆகிய இரண்டிலுமே இந்தத் திட்டங்களைப் பற்றிப் பேசுவது ஒரு ‘Fashion’ ஆக உள்ளது. தற்போது பேசப்படும் திட்டங்கள் பின்வருமாறு:
- யாழ்ப்பாணத்திற்கான நதி (River for Jaffna).
- யாழ்ப்பாணத்திற்கான நதித் திட்டத்திற்கான முன்மொழியப்பட்ட திருத்தங்கள் (Modified River for Jaffna).
- தொண்டமானாறு நீர்த்தேக்கம் (கலப்புத் திட்டம்).
- யாழ்ப்பாணக் கால்வாய் – கருத்துரு.
இத்திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு முன், மிகவும் விரிவான ஆய்வுகள் தேவை. அவை: விரிவான நிலத்தோற்ற மற்றும் நிலப் பயன்பாட்டு ஆய்வுகள், புவியியல் ஆய்வுகள், நீர்வளங்களின் விரிவான மதிப்பீடு, வானிலை நிலையங்களை நிறுவுதல், நீரியல் அளவீட்டு வலையமைப்பை (Hydrometric Network) உருவாக்குதல் மற்றும் நீர்த் தர மாதிரி எடுப்பு நிலையங்களை நிறுவுதல் ஆகியனவாகும். இந்தத் தொழில்நுட்ப ஆய்வுகளோடு, சமூக மற்றும் சுற்றாடல் தாக்க மதிப்பீடுகளும் (Social and Environmental Impact Assessments) மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொடரும்.



