முன்னுரை
தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்ககாலம் முதல் இன்றுவரை பதிப்பாசிரியர் பலர் பல்வேறு வகையான பதிப்புப் பணிகளைச் செய்து வருகின்றனர். பழந்தமிழ் நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியம் என்பனவான பல நூல்கள் வெளிவந்தமைக்கு பதிப்பாசிரியர்களின் பதிப்புப்பணியே காரணம் என்பதை எள்ளளவும் மறுக்க இயலாது. இவ்வாறான பதிப்பாசிரியர்களின் உழைப்பால்தான் பல்வேறு வகையான நூல்களும் இலக்கியங்களும் இன்றைக்கும் நம் கைகளில் தவழுகின்றன. தொடக்ககாலப் பதிப்பாசிரியர்கள் இப்பணியினை மேற்கொள்ளவில்லையெனில் சங்க இலக்கியம், ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம், கம்பராமாயணம், சிற்றிலக்கியங்கள் எனப் பலவற்றின் சிறப்பும் அதனைத் தோற்றுவித்த எழுத்தாளர்களின் பெருமையும் அவற்றிற்கு உரையெழுதிய உரையாசிரியர்களின் புலமையும் நமக்குத் தெரியாமலே மறைந்திருக்க வாய்ப்புகள் ஏராளம். பதிப்பாசிரியர்களின் ஆளுமைத்திறனின் மூலமே எத்தகைய சிறப்பு வாய்ந்த நூலாக இருப்பினும் அதன் சிறப்புகளை உணர்ந்துகொள்ள நம்மால் முடிகின்றது. ஒரு மொழியின் சிறப்பினையும் அதன் தனித்துவமான பண்புகளையும் புரிந்துகொள்ள இலக்கியங்கள் மிகவும் துணைபுரிகின்றன. அப்படிப்பட்ட இலக்கியங்களை உலகிற்கு வெளிக்காட்டியதில் நூலாசிரியர், உரையாசிரியரின் பங்கு எத்தகைய சிறப்பு வாய்ந்ததோ அதற்குத் துளியும் குறையாமல் சிறப்பு வாய்ந்தது பதிப்பாசிரியர்களின் பதிப்புப்பணி ஆகும்.
ஈழமும் தமிழியலும்
தொடக்க காலகட்டத்தில் பல்வேறு வகைப்பட்ட படைப்பிலக்கியங்கள் ஈழத்தில் தோன்றின. அவற்றில் தனிச்செய்யுள்களை இயற்றுவதில் புகழ்பெற்றவர்களாக மட்டுநகர் பூபாலபிள்ளை, க. கணபதிப்பிள்ளை, நவநீதகிருஷ்ண பாரதியார் முதலானோர் விளங்கினர். காவியப் படைப்பாளர்களாக அரசகேசரி, வரத பண்டிதர், சதாசிவ ஐயர், முத்துக்குமாரர் முதலானோரும்; புராண ஆசிரியர்களாக கணேசபண்டிதர், சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார், சபாபதி நாவலர் முதலானோரும் குறிப்பிடத்தக்கவர்கள். சிற்றிலக்கியங்களாக மடல், உலா, குறவஞ்சி, பள்ளு, கலம்பகம் ஆகியவற்றினை இயற்றியோரும் ஈழத்தில் பலர். வடமொழி இலக்கியங்களை செய்யுள்வடிவில் தமிழில் மொழிபெயர்த்தோராக அ. குமாரசாமிப்புலவர் உள்ளிட்ட பலர் விளங்குகின்றனர்.
வசன நூலாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக ஆறுமுக நாவலர், வ. கணபதிப்பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை, ந.சி. கந்தையாபிள்ளை, அ. குமாரசாமிப்புலவர், சரவண முத்துப்பிள்ளை, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை முதலான பலரையும் குறிப்பிடலாம். இசை நூலாசிரியர்களாக பரமானந்தப் புலவர், சுவாமி விபுலானந்தர், பிரான்சிஸ்குபிள்ளை, ஆவரங்கால் நமச்சிவாயப்புலவர், விநாயகமூர்த்திச் செட்டியார், பண்டிதர் சச்சிதானந்தர் முதலானோர் விளங்குகின்றனர்.
நாடகத்துறையில் கணபதி ஐயர், இணுவைச் சின்னத்தம்பி, முத்துக்குமாரகவிராயர், கந்தப்பிள்ளை, இன்னாசித்தம்பி, மயில்வாகனப் புலவர், பொன்னையாப் புலவர், சூசைப்பிள்ளை முதலான ஐம்பதிற்கும் மேற்பட்டோரின் எழுத்துகளைக் குறிப்பிடலாம். சோதிடத்தில் புலமைபெற்றவர்களாக போசராச பண்டிதர், சோமன், இராமலிங்கையர், சின்னத்தம்பி, வி. சபாபதி ஐயர் ஆகியோரையும்; திறன்மிக்க மருத்துவ எழுத்தாளர்களாக செகராசசேகரன், பரராசசேகரன், வரதபண்டிதர், நாகேசையர், சுப்பிரமணியம் முதலானோரையும் கூறலாம்.
தருக்கவியலாளர்களாக சிதம்பரம்பிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர், சங்கர பண்டிதர், முருகேச பண்டிதர் போன்றோரைக் குறிப்பிடலாம். கணித நூல்களை இயற்றியவர்களாக காரிவையா, சுவாம்பிள்ளைப்புலவர், கறோல் விசுவநாதபிள்ளை, ஞானச்சகோதரர் பிலிப்பு S.S.J, இளையதம்பி, சின்னத்தம்பி போன்றோரையும்; மோற்றிமர் குலசேகரரை கப்பல் சாத்திர நூலாசிரியராகவும் குறிப்பிடலாம். நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரை மொழி நூலாசிரியராகவும், புலவர் வரலாற்று நூல்களை இயற்றியவர்களாக சைமன் காசிச்செட்டி, அ. சதாசிவம்பிள்ளை, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, அ. குமாரசாமிப்புலவர், சி. கணேசையர், இரத்தினேசுவர ஐயர், அ. சிவகுருநாதன் ஆகியோரையும் குறிப்பிடலாம்.
இலக்கண நூலாசிரியர்களாக கூழங்கைத் தம்பிரான், சவுந்தரநாயகம்பிள்ளை, அப்பாபிள்ளைப் போதகர், வ. குமாரசாமிப்புலவர், ச. ஜகநாத ஐயர், த. கைலாசபிள்ளை, நவநீத கிருஷ்ண பாரதியார், பொன் இராமநாதன் முதலானோரைக் குறிப்பிடலாம். சமயம்சார்ந்த கண்டன நூலாசிரியர்களாக ஆறுமுக நாவலர், விசுவநாதபிள்ளை, முத்துக்குமார கவிராயர், சி.வை. தாமோதரம்பிள்ளை, அ. குமாரசுவாமிப்புலவர், சங்கர பண்டிதர், சிலம்புநாதபிள்ளை, வல்வை வயித்தியலிங்கப்பிள்ளை, அருளப்ப முதலியார், காசிவாசி செந்தில்நாதையர் முதலானோரைக் குறிப்பிடலாம்.
பலர் ஈழத்தினைப் பற்றியும் அந்நாட்டின் வரலாற்றினை அறியும் பொருட்டும் பல்வேறு நூல்களை இயற்றியுள்ளனர். செகராசசேகரன், வையா ஐயர், மயில்வாகனப் புலவர், சிவானந்தன், க. சுந்தரம், கதிர்காமர், முத்துக்கிருஷ்ணர், இராசநாயக முதலியார், கணபதிப்பிள்ளை, வ. சின்னத்தம்பிப் புலவர், வி. கனகசபைப்பிள்ளை, சோமன், முத்துராசகவிராயர் முதலானோர் இயற்றிய நூல்களை ஈழத்தின் தொடக்ககால வரலாற்று நூல்களாகப் பார்க்க முடியும்.
இவற்றோடு அகராதிகள், நிகண்டுகள், கலைக்களஞ்சியங்கள் ஆகியவற்றை உருவாக்கிய ஆசிரியர்களாக பண்டிதர் சந்திரசேகரம், கு. கதிரைவேற்பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை, ச. சுப்பிரமணிய சாஸ்திரி, வி. கனகசபைப்பிள்ளை, சதாசிவம்பிள்ளை முதலானோரைச் சுட்டலாம்.
ஈழத்துப் பழைய உரையாசிரியர்கள்
ஈழத்தினைச் சேர்ந்த உரையாசிரியர்களாக கூழங்கைத்தம்பிரான், அம்பிகைபாகர், அருளம்பலம், ஆறுமுக நாவலர், ஆறுமுகத் தம்பிரான், ஏகாம்பரப்புலவர், சி. கணேசையர், நா. கதிரவேற்பிள்ளை, ச. கந்தையாபிள்ளை, அ. குமாரசுவாமிப்புலவர், சங்கர பண்டிதர், சிவசிதம்பர ஐயர், சிவப்பிரகாச பண்டிதர், சுப்பிரமணிய சாஸ்திரி, ஞானப்பிரகாச சுவாமி, ஞானப்பிரகாச தேசிகர், நவநீத கிருஷ்ண பாரதியார், பொன்னம்பலப்பிள்ளை, ச. பூபாலபிள்ளை, ம.க. வேற்பிள்ளை முதலானோரைக் கருதலாம்.
பழம் பதிப்பாசிரியர்கள்
தமிழ்ப் பதிப்புத்துறையில் ஈடுபட்டு மக்கி மண்ணோடு மண்ணாக மாறியிருக்கும் எத்தனையோ நூல்களை ஓலைச்சுவடிகளிலிருந்து காத்து நூலாக்கம் செய்த பழம் பதிப்பாசிரியர்களின் பணி என்றென்றைக்கும் நினைக்கத்தக்கது. பதிப்பாசிரியர் பதிப்பித்த அனைத்து நூல்களையும் குறிப்பது புறநிலை ஆகும்; அவர்தம் பதிப்பு நெறிமுறைகளைக் குறிப்பது அகநிலை ஆகும்.[1] இவ்வாய்வானது பதிப்பாசிரியரின் பதிப்புப் பணிகளை அகநிலையிலும் புறநிலையிலும் ஆராய்வதாக அமைகின்றது. பதிப்பாசிரியர்களைப் பற்றியும் அவர்தம் பதிப்பு நெறிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்வதன் மூலம் ஒரு சிறந்த நூற்பதிப்பின் மூலபாடத் திறனாய்வினையும் பதிப்பு வரலாற்றினையும் அறிந்து கொள்ள முடியும். பதிப்பு நெறிமுறைகள் என்பது மரபு வழிப்பட்ட வளர்ச்சியினை உடையதாகும். அந்த மரபு வழிப்பட்ட கோட்பாட்டு வளர்ச்சி என்பது, மூலத்தில் உள்ளதை மாறுதல் இன்றி ஆய்வு நிலையில் தெளிவுற வெளிப்படுத்தக்கூடிய மரபு வழிபட்ட பதிப்பு அறக்கோட்பாட்டினை பதிப்பாசிரியர்கள் பின்பற்றிய வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு அமைவதாகும். உரையாசிரியர்கள் என்று கூறினாலே இறையானர் களவியல் உரை தொடங்கி இளம்பூரணார் உட்பட்ட தொல்காப்பிய பழைய உரையாசிரியர்களும், குறளுக்கு உரையெழுதிய பதின்மரும், சிலம்பு உரைகூறிய அரும்பத உரையாசியரும், அடியார்க்கு நல்லாரும் நினைவுக்கு எட்டுவதினைப் போல; பதிப்பாசிரியர்கள் என்றவுடன் நம் நினைவுக்கு எட்டுபவர்களாக உ.வே. சாமிநாதையர், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, ச. வையாபுரிப்பிள்ளை, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, சி. கணேசையர் முதலானோர் காணப்படுகின்றனர். பதிப்பாசிரியர்களை அவர்கள் பிறந்த இடத்தின் அடிப்படையில் வகைப்படுத்திப் பார்க்கும்போது தமிழுலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பதிப்பாசிரியர்கள் தோன்றியுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. இத்தகைய வகைப்பாட்டினைப் பற்றியே ‘சுவடிப்பதிப்பாசிரியர்கள்’ என்ற நூலில் சி. இலட்சுமணன் வகைப்படுத்தியும் காட்டியுள்ளார்.
ஈழத்துப் பதிப்பாசிரியர்கள்
தமிழரின் மற்றொரு தாய்வீடான ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பலர் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பதிப்புத்துறையின் வாயிலாக பல்வேறு வகையில் தொண்டாற்றியுள்ளனர். அவ்வகையில் ஏறத்தாழ முப்பதிற்கும் மேற்பட்ட பதிப்பாசிரியர்களை ஈழத்தின் பழம்பதிப்பாசிரியர்களாக அடையாளம் காண முடியும். ஈழத்துப் பதிப்பாசிரியர்களின் பதிப்புப் பணிகளை பொதுவாக இலக்கிய, இலக்கணப் பதிப்புப் பணிகள் என்று சுருக்கமாக கூறிவிட இயலாது. இலக்கியம் என்பதை இசை, சோதிடம், தருக்கம், நாடகம் முதலான பல்வேறுபட்ட துறைகளை அடக்கியாளும் ஒரு சொல்லாகக் கருத முடியும். பல துறை சார்ந்த நூல்களையும் பல்வேறு வகைப்பட்ட பதிப்பு நெறிமுறைகளையும் கையாண்டு பதிப்பிக்க வேண்டியது இன்றியமையாதது. ஒரே வகைப்பாட்டினையோ அல்லது ஒரே மாதிரியான அளவுகோலையோ கொண்டு அனைத்து வகையான நூல்களையும் பதிப்பிப்பது என்பது கானல் நீரில் நீந்துவது போன்று யார்க்கும் இயலாத ஒன்றாகும். அந்தவகையில் ஈழத்துப் பதிப்புப்பணி என்பது பல்துறை ஆற்றல்மிக்க அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்ட பணி ஆகும். சுவடிகளுக்குள் காணப்பட்ட முத்தமிழைப் போற்றத்தக்கதாய் பதிப்பாக்கம் செய்தவர்களுள் ஈழத்துப் பதிப்பாசிரியர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள் ஆவர். படைப்பு, பதிப்பு, ஆய்வு என்னும் முப்பெரும் நிலைகளிலும் பட்டறிவும் மிகுந்த தேர்ச்சியும் பயிற்சியும் உடையவர்கள் ஈழத்துப் பதிப்பாசிரியர்கள். கோப்பாய் அம்பலவாண பண்டிதர், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அம்பலவாண நாவலர், யாழ்ப்பாணம் – மானிப்பாய் அருணாச்சல சதாசிவம்பிள்ளை, ஆறுமுக நாவலர், கு. கதிரைவேற்பிள்ளை, புலோலியூர் நா. கதிரைவேற்பிள்ளை, வடகோவை சபாபதி நாவலர், சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர், திருகோணமலை த. கனகசுந்தரம்பிள்ளை, சி. கணேசையர், மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, சிறுப்பிட்டி சி.வை. தாமோதரம்பிள்ளை, மல்லாகம் வி. கனகசபைப் பிள்ளை, மட்டக்களப்பு விபுலானந்த அடிகள், ச. பவானந்தம் பிள்ளை முதலானோரை ஈழத்துப் பதிப்பாசிரியர்களாகக் குறிப்பிடலாம். ஈழத்துப் பதிப்பாசிரியர்களைத் தவிர்த்து தமிழ் இலக்கிய வரலாற்றினை எழுதுதல் என்பது யார்க்கும் இயலாத ஒன்றாகும். ஏனெனில், இவர்களது தமிழ்ப்பணி என்பது பதிப்புப்பணியும் சமயப்பணியும் இணைந்தது ஆகும்.
சி.வை. தாமோதரம்பிள்ளை
சி.வை. தாமோதரம்பிள்ளை தம்முடைய வீரசோழியப் பதிப்புரையில் தமிழ்மொழி குறித்தும், தமிழுக்கும் வடமொழிக்குமான தொடர்புகள் குறித்தும்; தமிழ்மொழிக்கு ஆதியிலக்கணம் செய்தவர் மட்டுமே அகத்தியர், தமிழ் மொழியை உருவாக்கியவர் அல்ல என்பதையும்; பல்வேறு இலக்கியங்களின் மேற்கோள் பாடல்வரிகளை சான்றாதாரமாக்கி விளக்கிக்காட்டுகின்றார். அத்தோடு அன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் காணப்பட்ட தமிழர்கள் மீதான தொன்மங்களை வெளிப்படையாக மறுத்தும் வடமொழியில் திராவிடம் என்றச் சொல்லின் பொருள், கோடி மண்டலமே தவிர தமிழ் என்பது அன்று என்பதையும் விளக்கி தமது பதிப்புரையினை ஐம்பது பக்கத்திற்கும் மேற்பட்ட ஆய்வுரையாக அமைத்துச் சென்றுள்ளார். தமிழ்மொழியின் காலத்தை இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் சங்ககாலம், சங்கம் மருவிய காலம், காப்பிய காலம், பக்தியியக்க காலம், சிற்றிலக்கிய காலம் போன்ற இலக்கிய வகைகளால் பிரித்தும் மூவேந்தர் காலம், களப்பிரர் காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம் என ஆட்சியாளர்களின் பெயர்களால் வகைப்படுத்தியுமே உள்ளனர். ஆனால் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் தமிழ்மொழியின் காலத்தினை அபோத காலம், அஷர காலம், இலக்கணகாலம், சமுதாயக்காலம், சமண காலம் [2] எனப் பாகுபடுத்தி விளக்கியிருப்பது பதிப்பாசிரியர்கள் மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர்கள் என்பதை வெளிக்காட்டுவதாக அமைகின்றது. தனது பதிப்பிற்கு உதவிய தமிழ் அறிஞர்களோடு சமஸ்கிருத மொழி வல்லாளர்களின் பெயர்களையும் குறிப்பிடுவதை அவரது பதிப்பு அறமாகவே கருத இடமுள்ளது.

உ.வே. சாமிநாதையர்
உ.வே. சாமிநாதையர் அவர்களின் முதல் பதிப்புகளைவிட அவருடைய அடுத்தடுத்த பதிப்புகளில் அவர் மேற்கொண்ட பதிப்பு வளர்ச்சிகளைக் காண முடியும். ‘அவர் தொடக்ககாலத்தில் பதிப்பித்த சீவகசிந்தாமணியைவிட மணிமேகலைப் பதிப்பும், பத்துப்பாட்டைவிட குறுந்தொகையும் பல பாடவேறுபாட்டுப் பதிவுகளைப் பெற்றுள்ளன. பதிப்புப் பணியில் நன்கு திறமை பெற்ற பின்பு, அதனால் அடைந்த மொழித்திறனால் தொடர்ந்து வந்த பதிப்புகள் வளர்ச்சி காட்டின எனவும், அவற்றில் குறிப்புகள் மிகுதியாகி, விளக்கங்கள் அளவிற் பெருகி, பதிப்பு முதிர்ச்சியும், பதிப்புச் செய்திறனும், பதிப்புச் செம்மையும் கொண்டன’ [3] என அன்னிதாமசு அவர்கள் குறிப்பிடுகின்றார்.

இடைச்செருகல்கள்
பதிப்பாசிரியர்கள் அக்காலகட்டத்தில் சந்தித்த பல்வேறு இடர்பாடுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று இடைச்செருகல்கள் மிகுந்திருத்தல் ஆகும். எவையெவை மூலம், எவையெவை இடைச்செருகல் என்பதை எளிதில் அறிந்துகொள்ள இயலாத வகையில் இடைச்செருகல்கள் மிகுந்திருந்தன. பதிப்புத்துறையில் நன்றாகப் புலமையும் ஆழ்ந்த அனுபவமும் பெற்றிருந்தவர்களும் இத்தகைய இடர்பாடுகளைச் சந்திக்க நேர்ந்தது. அந்த வகையில் உ.வே. சாமிநாதையர் தமது சுயசரிதையில் தான்கண்ட இடைச்செருகல் பற்றிக் குறிப்பிடும்போது, பாகவதச்சுவடிகளைப் பதிப்பித்த இராசகோபாலப்பிள்ளை அவர்களிடம், தான் பாகவத்சுவடிகளில் காணாத நூலாசிரியர் பெயர், வணக்கச்செய்யுள் ஆகியவை நூலில் இருப்பதாகவும், அவை எங்கிருந்து கிடைத்தன என தான் வினவியதாகவும், அதற்கு இராசகோபாலப்பிள்ளை “அந்த நூலை நான் பதிப்பிக்கவில்லை” என்றும் “என் பெயரைப்போட்டு யாரோ பதிப்பித்து விட்டார்கள்” என்றும் கூறியதாகக் குறிப்பிடுகின்றார். பிற்காலத்தில் செவ்வைச்சூடுவார் என்பவரே பாகவத்தின் ஆசிரியர் என்பதும், அச்சிட்டவர்களால் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்தான் ‘சிந்தகத்து’ எனும் வணக்கச்செய்யுள் என்பதும் தமக்குத் தெரியவந்ததாகவும் குறிப்பிடுகின்றார் [4]. இவ்வாறு பல்வேறு இடைச்செருகல்களைக் கண்டறிந்தும் அவற்றினை நீக்கி பதிப்பிக்க வேண்டிய கடைமை பதிப்பாசிரியர்களைச் சேர்ந்ததாகும்.
பிற பதிப்பாசிரியர்களின் உதவியை நாடல்
பதிப்பாசிரியர் ஒரு நூலினை பதிப்பிக்க விரும்புகின்றார் எனில் அதற்கு பல்வேறு அறிஞர்களின் உதவியும் தேவையானதாக உள்ளது. தனது பதிப்பில் உள்ள பிழைகளைக் களைய வேண்டுமெனில் அதற்குப் பிற பதிப்பாளர்களின், அறிஞர்களின் புலமையும் இன்றியமையாததாகின்றது. சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் கலித்தொகையினை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பிக்க முற்படும்போது, கலித்தொகை முழுமைக்குமான மெய்ப்புத்திருத்தல் பணிக்காக உ.வே. சாமிநாதையரை நாடியுள்ளார். அப்பொழுது உ.வே.சா அவர்களும் அவருக்கு மெய்ப்புத்திருத்தல் பணியில் உதவியுள்ளார் என்பதையும் சுயசரிதம் வாயிலாக அறியமுடிகின்றது [5].
பதிப்புத்துறையில் புது முயற்சிகள்
ஆரம்ப காலகட்டங்களில் பதிப்புத்துறையில் ஒரு நூலினைப் பதிப்பிக்கும்போது ஓலைச்சுவடிகளில் என்னென்ன செய்திகள் இருந்தனவோ அவற்றை அப்படியே பதிப்பிக்கும் நடைமுறைகள் வழக்கத்தில் இருந்தன. குறித்த நடைமுறைகளை மாற்றி முகவுரை எழுதும் வழக்கத்தைக் கொண்டுவந்தவர் உ.வே.சாமிநாதையர் ஆவார். முகவுரையில் நூலின் சிறப்பையும் அந்நூலால் இன்ன செய்திகள் தெரியவருகின்றன என்பதையும் வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, மேற்கோள் விளக்க அகராதிகள் எனப் பலவற்றை புதியதாக உட்புகுத்தினார். அத்துடன் தம்முடைய ஆராய்ச்சி தொடர்பான செய்திகளையும், தம்மைப் பதிப்பிக்கத் தூண்டியவர்கள், பதிப்பிற்கு சுவடி கொடுத்து உதவியவர்கள், பதிப்பிக்கத் தூணாகத் துணைநின்ற நண்பர்கள் என அனைவரைப் பற்றியும் பதிப்பாசிரியர்கள் தங்களின் பதிப்புரையில் அல்லது பதிப்புகளில் குறிப்பிடத் தொடங்கியுள்ளனர்.
பதிப்புரையின் கூறுகள்
பதிப்புப் பணியினை மேற்கொள்ளும் பதிப்பாளர்கள் காலந்தோறும் புதிய புதிய மாற்றங்களையும் சேர்க்கைகளையும் செய்துகொண்டே வருகின்றனர். அவற்றுள் படிப்பவர்களுக்கு பொருள் எளிதில் விளங்கும் வகையில் சந்திபிரித்துப் பதிப்பித்தல், தாங்கள் பதிப்பித்த பதிப்புகளுக்கு முதன்மையாகத் தேவைப்பட்ட ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், கடிதப்பிரதிகள் எவையெவை எனவும் அதனைத் தனக்குக் கொடுத்து உதவிய நல்லுள்ளங்கள் யாவர் என்பதையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். ஆரம்பகாலகட்டப் பதிப்புகளில் உரைமேற்கோள்களைத் தனியாகப் பிரித்துக்காட்டும் தன்மை காணப்படவில்லை. சி.வை.தா போன்றோர் மேற்கோள்களை இரட்டை மேற்கோள்குறிக்குள் அமைத்திருந்தபோதும் அதற்கான சரியான இடவிளக்கங்களைக் குறிப்பிடவில்லை. அதனால் மேற்கோள்களை தனித்துக் காட்டி இடஞ்சுட்டிப் பதிப்புகளை பதிப்பிக்கத் தொடங்கினர். இதனைப் பதிப்பின் அடுத்தகட்ட வளர்ச்சியாகக் கருத முடிகின்றது.
தொடக்ககாலப் பதிப்புகளை எடுத்துப் பார்த்தோமானால் சுவடிகள் எவ்வடிவத்தில் காணப்பட்டனவோ அதேவடிவத்தில் பதிப்பிக்கப்பட்டன. இதற்குச் சான்றாக தொல்காப்பிய எழுத்ததிகார மழவை மாகாலிங்கையர் பதிப்பைக் காணலாம். அப்பதிப்பிலிருந்து பிறகு வேறுபட்டு நூற்பாக்களும், உரைகளும், மேற்கோள்களும், எடுத்துக்காட்டுகளும், குறியீடுகள் மூலம் தனித்தனியாகக் காட்டப்பட்டன. இதனை ‘‘கற்போர் எளிதில் உணருமாறு பொருட்டொடர்பு நோக்கிச் சூத்திரச் சொற்களையும் அவற்றின் பொருட் சொற்களையும் பிரித்தும், நிறுத்தியும், படிப்பதற்குரிய அடையாளங்களிட்டும் பதிப்பித்துள்ளேன். எனது சேர்ப்பிற்கு முன்னும், பின்னும், முறையே { } இக்குறிகளை இட்டுள்ளேன்” [6] எனும் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையின் தொல்காப்பியப் பதிப்புரையிலிருந்து அறியலாம்.
உரைப்பகுதிகளைப் பிரித்து எழுதுதல், பதிப்புகளில் பாயிரமாக இருந்த பகுதிகளைப் பதிப்புரைகளாக மாற்றி எழுதுதல், இடைச்செருகல்களை நீக்கிப் பதிப்பித்தல், பிற பதிப்புகளுடன் ஒப்புநோக்கிப் பதிப்பித்தல்; உதாரணமாக அகராதி, அரும்பத விளக்கம், மேற்கோள் விளக்கம், ஆகியவற்றைச் சேர்த்தும் பதிப்புகளை வெளியிட்டுள்ளமை ஆகியவற்றைப் பதிப்புகளின் வளர்ச்சி நிலைகளாகக் காணமுடிகின்றது.
பண்டைய பதிப்பாசிரியர்கள் பின்பற்றிய பதிப்பு நெறிமுறைகள் பலவாகும். இந்நெறிமுறைகளைப் பின்பற்றி தமிழ்ப் பதிப்புத்துறை வளர்ச்சியில் சிறந்த பங்காற்றியோர்களாக ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, கா. நமச்சிவாயமுதலியார், உ.வே.சா, வையாபுரிப்பிள்ளை போன்றோரைக் குறிப்பிடலாம். இவ்வாறான பதிப்பாசிரியர்களின் பதிப்பு முயற்சியில் ஈழத்துப் பதிப்பாசிரியர்களின் பங்களிப்பு என்பது மிகப்பெரியது ஆகும். அவ்வகையில் தமிழ்ப் பதிப்புத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சிப் படிநிலைகளைப் பின்வருவனவாகக் கொள்ளலாம்.
- தொடக்ககாலப் பதிப்பு நிலைகளிலிருந்து மாறி, மூலபாடச் செய்யுள் தனியாகவும், உரை தனியாகவும் காட்டுகின்ற மரபும்; இவை இரண்டையும் தனித்தனி எழுத்து அளவிலும் வழங்குகின்ற வழமையும் ஏற்பட்டது எனலாம்.
- விருத்தியுரையினைப் பதிப்பிக்கும்போது பதவுரை, பொழிப்புரை, அகலவுரை, வரலாற்றுப்பகுதியில் எடுத்துக்காட்டுகள், மேற்கோள்கள் என்பவை தனித்தனியாக இனங்காணும் வகையில் அடையாளக்குறிகள் இட்டும் ஒவ்வொன்றிற்குமான இடைவெளிகள் விட்டும் பதிப்பிக்கப்பட்டன.
- உரைமேற்கோள்கள் எடுத்தாளப்பட்ட நூல்களின் பெயர்கள் இடஞ்சுட்டி விளக்கப்பட்டுள்ளன.
- இந்நூலானது மாணவர்களுக்குப் பயன்படக்கூடியதா, ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடியதா? என்பதான விளக்கங்கள் அந்நூலிலையே வழங்கப்பட்டன.
- இந்நூற் பதிப்பிற்கான சுவடிகள் யாரால், எந்த நிலையில், எப்படி வழங்கப்பட்டன? என்பதான செய்திகள் தெளிவுற வழங்கப்படலாயின.
- ஒரு நூலினைப் பதிப்பிக்கும்போது, அதற்கு முன்வந்த பிற பதிப்புகளிலிருந்து அந்நூல் எவ்வகையில் சிறப்புப் பெறுகின்றது என்பதான செய்திகள் அவ்வவ் பதிப்புகளிலேயே இடம்பெறலாயின.
- முன்னைய பதிப்புகளிலிருந்த பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டு அதற்கான திருத்தங்கள் முறையான காரண – காரியத்தோடு விளக்கப்பட்டுள்ளன.
- ஒரு நூலினைப் பதிப்பிக்க மேற்கொண்ட ஆய்வு முயற்சிகள் யாவும் தொகுப்பாகப் பதிப்புகளில் இடம்பெற்றன. அப்பதிப்பினைப் பயன்படுத்துவோர் எவ்வகையில் அப்பதிப்பினைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பயன்பாட்டுக்குறிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
- பதிப்பிற்கான பெயர்க்காரணங்கள் குறித்தும் அதற்கான இலக்கணப் பொருத்தங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டன.
- பாட வேறுபாடுகளும் வரலாற்றுக் குறிப்புகளும் அடிக்குறிப்புகளில் வழங்கப்பட்டன.
இவை மாத்திரமல்லாமல் பின்வருவனவான செய்திகளும் பதிப்புகளில் இடம்பெறலாயின:
- நூலுக்கான முகவுரை, பதிப்புரை, அணிந்துரை என்பன இடம்பெறலாயின.
- பின்வந்த பதிப்புகளில் முதல் பதிப்பு, இரண்டாம் பதிப்பு ஆகியவற்றின் முன்னுரைகள் இடம்பெறலாயின.
- அந்நூலின் தொன்மை, சிறப்பு, தேவை முதலான செய்திகள் இடம்பெறலாயின.
- அந்நூலில் இடம்பெற்றுள்ள தெய்வப் பெயர், மக்கட்பெயர், ஆட்சியாளர்கள், நாடுகள், நகரங்கள், ஊர்கள், நதிகள், தாவரங்கள், பறவைகள், விலங்கினங்கள் என்பனவான பல செய்திகளும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
- இலக்கண, இலக்கிய நூல்களில் குறிப்புரைகள் இடம்பெறலாயின.
- செய்யுள் முதற்குறிப்பு அகராதிகள், மேற்கோள் விளக்க அகராதிகள், இடம்விளங்கா மேற்கோள் விளக்க அகராதிகள், அரும்பதவிளக்க அகராதிகள், அநுபந்தம் முதலியவான விடயங்கள் இடம்பெறலாயின.
- ஒரு நூல் வெளிவருவதற்குப் பொருளுதவி செய்தவர்களின் பட்டியல்களும், ஆய்வியல் உதவிகள் செய்தவர்களின் பட்டியலும் தொழில்நுட்ப உதவிகள் செய்தவர்களின் பட்டியலும் இடம்பெறலாயின.
மேற்கண்டவாறாக தமிழ்ப்பதிப்புலகில் ஏற்பட்ட வளர்ச்சிநிலைகளைச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
முடிவுரை
இவ்வாறு பதிப்புத்துறையில் கண்ணிற்குப் புலனாகாமல் எத்தனையோ வளர்ச்சிகள் பதிப்பாசிரியர்களால் காலந்தோறும் புகுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஈழத்துப் பதிப்பாசிரியர்களின் பதிப்பு நெறிமுறைகளை அவர்களது பதிப்பு நூல்களை வைத்துக்கொண்டு ஆராய்வதாக இந்த ஆய்வுக்கட்டுரையின் தன்மையானது அமைந்துள்ளது.
துணைநூற்பட்டியல்
- F.X.C. நடராசா, 1957, ஈழமுந் தமிழும், கலைமகள் வெளியீடு, கத்தோலிக்க அனாத அச்சகம், மட்டக்களப்பு.
- ப. தாமரைக்கண்ணன், க, 2004, பதிப்புச்செம்பல் சி.வை. தாமோதரம்பிள்ளை (பதிப்புரைகளின் தொகுப்பு), 2 ஆம் பதிப்பு, குமரன் பப்பிளிஷர்ஸ், சென்னை.
- உ.வே. சாமிநாதையர், 2022, என் சரித்திரம், நற்றிணைப் பதிப்பகம், சென்னை.
- ச. வையாபுரிப்பிள்ளை, 2001, புறத்திரட்டு, 3 ஆம் பதிப்பு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
- ச. வையாபுரிப்பிள்ளை, 1931, களவியற்காரிகை, 1 ஆம் பதிப்பு, சென்னை.
- ச. வையாபுரிப்பிள்ளை, 1955, திவ்யப் பிரபந்தம் முதலாயிரம், 1 ஆம் பதிப்பு, சாது அச்சுக்கூடம், சென்னை.
- ச. வையாபுரிப்பிள்ளை, 1944, நான்மணிக் கடிகை, 1 ஆம் பதிப்பு, சக்தி காரியாலயம், சென்னை.
- சி. இலட்சுமணன், 2011, சுவடிப் பதிப்பாசிரியர்கள், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
- ஆறுமுக நாவலர், நன்னூல் காண்டிகையுரை, வித்தியாநுபாலன யந்திரசாலை.
[1] சுவடிப் பதிப்பாசிரியர்கள், பக்.4.
[2] பதிப்புச்செம்பல் சி.வை.தா – வீரசோழியப் பதிப்புரை, ப.31.
[3] பதிப்பியல் – அன்னிதாமசு, ப.18.
[4] என் சரித்திரம் – உ.வே.சா., ப.559.
[5] என் சரித்திரம் – உ.வே.சா., ப.560.
[6] தொல்காப்பியம் – மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை.