காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
20 நிமிட வாசிப்பு

காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் – பகுதி 1

May 21, 2025 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981: பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன

காலனித்துவ அரசியலில் வர்க்கமும் சாதியும் (Class and Caste in National Politics) என்னும் தலைப்பில் அமையும் இக்கட்டுரை ‘Nobodies to Somebodies: The Rise of Colonial Bourgeoisie in Sri Lanka’ என்னும் நூலின் 18 ஆவது அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பாகும். 1833 முதல் 1948 வரையான காலத்தில் இலங்கையின் தேசிய அரசியலில் வர்க்கம், சாதி என்பனவற்றின் வகிபாகம் பற்றி ஆராயும் இக்கட்டுரையை பொருத்தம் கருதி இத்தொடரில் வெளியிடுகின்றோம்.

இலங்கை முதலாளிகளிடையே பழமைவாதிகள், மிதவாதிகள் என்ற இரு பிரிவினர் இருந்தனர். இவ்விரு பிரிவினரும் ஏகாதிபத்தியத்தில் தங்கியிருப்போராகவும் அதன் விசுவாசிகளாகவும் இருந்தனர். இவ்விடயத்தில் அவர்களிடையே பிரதான முரண்பாடுகள் என்று எவையும் இருக்கவில்லை. ஆயினும் இவ்விரு பிரிவினர்களிடையே அரசியல் விடயத்தில் சில பிளவுகள் ஏற்பட்டன. கொய்கம சாதியினரான சிங்கள முதலியார்கள் பிரிவு, ஏனைய சமூகங்களின் பழமைவாதிகளுடன் ஒன்று சேர்ந்து, இருந்துவரும் நிலையில் மாற்றங்கள் எதுவும் இல்லாமல், தமது நலன்கள் தொடர்ந்து பேணப்படுவதையும் பாதுகாக்கப்படுவதையும் விரும்பினர். இப்பழமைவாதிகள் கொய்கம, கராவ, சலாகம, துராவ, வகும்புர, நவண்டன ஆகிய சாதிகளில் இருந்தும் பிறசாதிகளில் இருந்தும் தோன்றிய புதுப்பணக்காரர்களை வெறுத்தனர். இச்சாதிகளில் இருந்து தோன்றிய புதுப்பணக்காரர்கள் ஏகாதிபத்திய ஆட்சி என்ற வரைசட்டகத்துள் நின்றுகொண்டே கொய்கம முதலியார் வகுப்பின் ‘நிலமானிய’ப் பகட்டையும், அவர்கள் அனுபவித்த சலுகைகளையும் கேள்விக்கு உட்படுத்தியதோடு அல்லாமல், தமக்கும் சமத்துவ அந்தஸ்தைக் கோரினர்; மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தையும், ஆண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படும் வாக்குரிமையுடன்கூடிய அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தையும் கோரலாயினர்.

ஐரோப்பாவில் புதிதாக எழுச்சி பெற்ற முதலாளித்துவ வகுப்பு நிலமானிய வகுப்பின் சலுகைகளுக்கு எதிராகவும், சர்வாதிகார முடியாட்சிக்கு எதிராகவும் போராட வேண்டி ஏற்பட்டது. தமது வர்க்கத்தின் அரசியல் உரிமைகளையும் அரசியல் பங்கேற்பையும் இவர்கள் கோரினர். தமது பொருளாதாரநிலையை ஸ்திரப்படுத்திக்கொண்டதும் புதிய பணக்காரர்கள் தமக்கு அரசியல் உரிமை வேண்டும் என்று கூறத் தொடங்கினர். இருந்தபோதும் இலங்கையில் அரசியல் மட்டத்தில் தேசியவாத இயக்கம் தோன்றவில்லை. காரணம், முதலாளித்துவ வகுப்பு சாராம்சத்தில் சமரசப் போக்குடையதாயும் பிரித்தானிய ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்காததாயும் இருந்தது. முதலாளித்துவ வகுப்பால் முன்னெடுக்கப்பட்ட இயக்கங்கள் கூடிய அரசியல் பிரதிநிதித்துவத்தையும் எழுச்சி பெறும் புதிய முதலாளிகளுக்கு சமத்துவமான வாய்ப்புகளை வழங்குவதையுமே கோரிக்கைகளாக முன்வைத்தன. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சமூகச் சீர்திருத்தத்தையும் கோரின. அவர்களின் எதிர்ப்புக்குரிய பிரதான இலக்காக முதலியார் வகுப்பு இருந்தது. முதலியார்கள் பெற்றிருந்த சலுகைகளும், சுதேசிகளுக்கு காலனிய நிர்வாகத்தில் உத்தியோகப் பதவிகள் வழங்கியபோது, முதலியார் வகுப்பு அதனைத் தனது ஏகபோகமாக ஆக்கியதும், சட்டசபைப் பிரதிநிதித்துவத்தை முதலியார் வகுப்புக்குக் கொடுத்ததையும் புதிய பணக்காரர்கள் எதிர்த்தனர்.

காலனித்துவப் பின்னணியில் மதிப்புமிக்க தொழில்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆங்கிலக்கல்வியைப் பெறுவதன்மூலம் இத்தொழில்களைப் பெற்று சமூகப்படித்தரத்தில் உயர முடிந்தது. வெளிநாடு சென்று கல்வி கற்றும் செல்வந்த வகுப்பினர் இப்பதவிகளைப் பெற்றுத் தம் சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள முடிந்தது. இதனால் யாவருக்கும் உத்தியோகங்களில் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்தது. கல்விகற்ற முதலாளித்துவ வகுப்பினரும் சட்டம், மருத்துவம் போன்ற உயர்தொழில்களில் புகமுடிந்ததேயன்றி பிறவகையான உத்தியோகங்களில் புக முடியவில்லை. பறங்கியர் தவிர்ந்த பிற இனத்தவர்களான சுதேசிகளிற்கு அரசாங்க உத்தியோகங்கள் வழங்கப்படவில்லை. பறங்கியரும் எழுது வினைஞர்களாகவும், கீழ்நிலைப் பதவிகளிலுமே இணைத்துக் கொள்ளப்பட்டனர். உயர்பதவிகள் அவர்களுக்கும் வழங்கப்படவில்லை. 

புதிய பணக்காரர் வகுப்பினர் சொத்துகளைச் சேர்ப்பதன்மூலம் சமூகநிலையில் உயர்ந்தனர். ஆயினும் கல்விமூலம் உயர்பதவிகளைப் பெற்றுத் தமது சமூக அந்தஸ்தை உயர்த்த முடியவில்லையே என்ற மனக்குறை அவர்களுக்கு இருந்தது. கண்டியின் உயர்குலப் பிரபுக்கள் வம்சம் தமது சமூக மதிப்பை கல்வியாலும் உத்தியோகத்தாலும் மேலும் உயர்த்த வேண்டும் என்று ஆசைப்படவில்லை. இதுபோன்றே பழைய நிலஉடைமைக் குடும்பங்களைச் சேர்ந்த சிங்களவரும், முஸ்லிம்கள், போராக்கள், செட்டிகள் போன்ற குழுக்களும் உயர்தொழில்கள் மூலம் தம்மை உயர்த்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்குள் இருக்கவில்லை. ஆனால் சிங்களவர்களிடையும், தமிழர்களிடையும் தோன்றிய குட்டி முதலாளி வகுப்பினருக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் போதியளவு இல்லாதநிலையில் கல்வியொன்றே சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரே ஒரு வழியாக இருந்தது. கல்வி முன்னேற்றம் ஏற்பட்டபோது உத்தியோகங்களிற்கு ஆட்களைச் சேர்ப்பதில் பாரபட்சம் காட்டப்படக்கூடாது என்றும் தொழில்களில் திறமைக்கு முதன்மை அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. மொறட்டுவவைச் சேர்ந்த அலக்சாண்டர் தர்மரட்ன என்ற நியாயத்துரந்தரர் 1890 இல் ஒரு முக்கியமான விவாதத்தைத் தொடக்கினார். படித்த இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று தர்மரட்ன கூறினார். பிரித்தானிய உத்தியோகத்தர்களின் கர்வத்தையும், தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பாவனையையும் தர்மரட்ன கேலி செய்தார். கவர்னர் பதவி, குடியேற்ற நாட்டுக் காரியதரிசி பதவி, இராணுவத் தளபதி பதவி போன்ற ஒருசில பதவிகள் பிரித்தானியர் வசம் இருக்க வேண்டும் என்று கூறிய தர்மரட்ன பூரண அரசியல் சுதந்திரத்தைக் கோரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ‘தகைமை, திறமை, அடைவும் தேர்ச்சியும் ஆகியவற்றால் தம்தரத்தை வெளிப்படுத்திய சுதேசிகளுக்கு உரிய பதவிகளை வழங்கலாம்’ என்பதே தர்மரட்னவின் கருத்தாகும். சிவில் சேவைப் பரீட்சைக்கு சிங்களமும் தமிழும் பாடங்களாக வைக்கப்பட வேண்டும் என்றும் தர்மரட்ன குறிப்பிட்டார்.

சட்டத்துறையில் உள்ள நிலைமையைச சுட்டிக் காட்டி நியாய துரந்தரர்களது கருத்தை எடுத்துக் கூறிய தர்மரட்ன “நூற்றுக்கணக்கான சிங்களவர்கள், தமிழர்கள், பறங்கியர்கள், கல்வி, திறமை, நேர்மை, செல்வம் என்பவற்றைக் கொண்டவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் நீதித்துறைப் பதவிகளை நிரப்புவதற்குப் பொருத்தமானவர்கள்” என்றும் “ஏனைய காலனிகளில் இலங்கை நியாய துரந்தரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதில்லை; இலங்கையில் அரச வழக்கறிஞர் பதவிக்கு இலங்கையர்களை நியமிக்க வேண்டும்” என்றும் தமது கருத்துகளைக் கூறினார்.

இலங்கையில் உத்தியோகத்தர்களாயிருந்த ஐரோப்பியர்கள் விசேட சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். தமக்குப் பாரபட்சம் காட்டப்பட்டதை கல்விகற்ற முதலாளித்துவ வகுப்பு உணர்ந்தது. இதனால் அவர்கள் மத்தியில் அதிருப்தி உணர்வு வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை தர்மரட்னவின் கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன. அரசுத்துறையில் பணியாற்றும் கீழ்நிலைப் பணியாளர்களும், எழுதுவினைஞர்களும் மிகவும் குறைந்த சம்பளத்தையே பெறுவதையும், பிரித்தானிய உத்தியோகத்தர்களின் ஆடம்பர வாழ்க்கையையும் ஒப்பிட்டு தர்மரட்ன நையாண்டி செய்தார். “பிரித்தானியாவில் இந்த உத்தியோகத்தர்களுக்கு குதிரையோ, பயணிப்பதற்கு வண்டியோ கிடைப்பதில்லை. இவ்வளவு எண்ணிக்கையான வேலையாட்களை அவர்களால் அங்கு வைத்திருக்க முடியுமா? இங்குள்ளதுபோல் அங்கு வைன் குடித்துக் களிக்கலாமா?” என்று கிண்டல் செய்தார். இளம் உத்தியோகத்தர்களான பிரித்தானியர்களுக்கு சட்டப்படிப்பு இல்லாவிடினும் நீதிவான் உத்தியோகம் கொடுக்கப்படுகிறது. ‘ஐரோப்பிய நீதிபதிகள் ஒரு ஐரோப்பியனுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி சுதேசி ஒருவனுக்கு நியாயம், வழங்கிய’ உதாரணங்கள் குறைவு. பாடசாலை விடுதிகளில் சுதேசிப் பெண் பிள்ளைகள் ‘ஐரோப்பிய பெண் பிள்ளைகளுடன் உடன் இருந்து உணவு உட்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இவை போன்ற பல அநீதிகளை தர்மரட்ன சுட்டிக்காட்டினார் (தர்மரட்ன, 1890). சமத்துவ வாய்ப்புகள் இன்மை, பாரபட்சம் காட்டுதல் என்ற இரு விடயங்களும் புதிய பணக்காரர்களிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியவை. வழமையான இந்த முறைப்பாடுகளைவிட இன்னொரு முறைப்பாடும் இவர்களால் முன்வைக்கப்பட்டது. இது முதலாளித்துவ வகுப்புக்கு உள்ளே ஏற்பட்ட அரசியல் பிரதிநிதித்துவம் என்ற சிக்கல் வாய்ந்த பிணக்கு ஆகும். அரசியல் பிரதிநிதித்துவம் என்ற இந்தப் பிணக்கை சாதிச்சச்சரவாக அல்லது சாதிப் போராட்டமாக சிலர் விளக்க முயன்றனர். ஆகையால் இது பற்றித் தனியாகப் பார்ப்போம்.

சட்டசபைப் பிரதிநிதித்துவம் தொடர்பான சர்ச்சைகள்

சட்டசபைப் பிரதிநிதித்துவம் 1833 முதல் 1912 வரை ஏறக்குறைய எவ்வித சீர்திருத்தமும் இல்லாமல் தொடரப்பட்டது. புதிய பணக்காரர்களினால் எழுப்பப்பட்ட முக்கிய சச்சரவாகவும் சண்டையாகவும் இது விளங்கியது சட்டசபையில் 15 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 9 பேர் உத்தியோகத்தவர்களாவர். 6 பேர் உத்தியோகத்தவர் அல்லாதோராவர். உத்தியோகத்தவர் அல்லாதோரை கவர்னர் நியமிப்பார். வெவ்வேறு குழுக்களில் இருந்தும் ‘பிரதான வர்த்தகர்களையும்’, ‘சுதேசிகளின் உயர் வகுப்பினரையும்’ கவர்னர் நியமித்தார். 1889 வரை சிங்களப் பிரதிநிதி ஒருவர் இருந்தார். அவ்வாண்டு முதல் கண்டியச் சிங்களவர் ஒருவரும், கரைநாட்டுச் சிங்களவருக்கு மேலதிகமாக நியமிக்கப்பட்டார். 1830களில் இருந்து 1889 வரை சிங்களவரைப் பிரதிநிதித்துவம் செய்தவர்கள், 1889 இல் நியமிக்கப்பட்ட கரைநாட்டுச் சிங்களவர் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

பிலிப்ஸ் பண்டிதரட்ண(1839-43)
யே.ஜி. டயஸ்(1843-60)
ஹென்றி (ஹரி) டயஸ்(1861-65)
ஈ.எச். டெகியாகம(1865-75)
யேம்ஸ் டி அல்விஸ்(1875-78)
யே.பி. ஒபயசேகர(1878-81)
ஏ.எல்.டி. அல்விஸ்(1881-88)
ஏ.டி.அல்விஸ் செனிவிரத்ன(1888-1900)
எஸ். கிறிஸ்ரோபல் ஒபயசேகர(1900-11)

இப்பட்டியலில் உள்ளவர்களில் டெகியாகம தவிர்ந்த பிறயாவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். ஒன்றிற்குள் ஒன்று திருமணம் செய்துகொள்ளும் உறவுக் குழுமமான இந்தக் குடும்பத்தில் இருந்தே மஹா முதலியார் என்ற பதவிக்கும் ஆட்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இக் குடும்பத்தினர் அங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுமாவர் இவர்களுள் யே.ஜி. டயஸ், ஹரி டயஸ் என்போர் சகோதரர்கள். இவர்களின் சகோதரி ஒருவரைத் திருமணம் செய்தவர், உறவுக்காரரான ஜேம்ஸ் டி அல்விஸ்; ஜே.பி. ஒபயசேகர, அவரின் சகோதரர் எஸ்.சி. ஒபயசேகர ஆகியோர் டயஸ் சகோதரர்களின் உறவினர்களாவர். இவ்விதம் பட்டியலின் ஐந்து உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் மிகநெருங்கிய உறவினர்களாய் இருந்தனர். சட்டசபை நியமனம்பெற்ற சிங்கள உறுப்பினர்கள், நில உடைமையாளர்களான இந்தக் கொவிகம நிலப்பிரபுத்துவ அந்தஸ்தை தமக்கு வரித்துக்கொண்டதோடு ‘முதல் தர கொவிகம’ என்று தம்மைக் கருதலாயினர்.

“சட்டசபையின் சிங்களவருக்கான ஆசனம் என்பது எமது குடும்பத்துக்குரியது என்றாகிவிட்டது. இப்படியிருந்தபோது அவர்கள் ஒரு வெளியாளான தெகியாகம என்ற கண்டியைச் சேர்ந்த புறர்டரை நியமித்தார்கள். அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைதானும் பேசவராது. அவர் கல்வி அறிவில் குறைந்தவராயினும் அடக்கம் உடையவர். அவர் கவர்னரிடம் சென்று தம்மை நியமிக்க வேண்டாம் என்று சொன்னார். கவர்னர் அவருடைய முதுகில் தட்டிக்கொடுத்துச் சொன்னார் ‘எனது பிரியமான தெகியாகம அவர்களே, உம்மையொத்த ஒருவர்தான் எங்களுக்கு சட்டசபை நியமனத்திற்குத் தேவை!’ கவர்னர் தெகியாகமவையே நியமித்தார். இருந்தாலும் மீண்டும் அந்த ஆசனம் எங்கள் குடும்பத்து யேம்ஸ் டி அல்விஸ்க்கு வந்தது. அதையடுத்து யே.பி. ஒபயசேகரா…. அதற்குப்பின் அல்பேர்ட். டி அல்விஸ் என்ற எமது இன்னொரு உறவினர்.”

-லயனல் வெலிங்டன் டியூக் சேரம் எழுதிய கடிதம் ஒன்றில் உள்ள பகுதி (குணரத்ன 1986: 39:40. மேற்கோள்).

60 வருடங்களுக்கு மேலாக சிங்களவருக்கான சட்டசபை ஆசனத்தை தம் குடும்பச்சொத்தாக வைத்துக்கொண்டிருந்த இக்குழுமத்திற்கு, முதலாளித்துவத்தின் புதுப்பணக்காரர் பிரிவில் இருந்து எழுந்த எதிர்ப்பு இயல்பானதொன்றே. 1878 இல் இப்பதவி வெற்றிடமானபோது புதுப்பணக்காரர் பிரிவு தம்மவரில் ஒருவரை இப்பதவிக்கு நியமிக்கும்படி சிபார்சு செய்து கோரிக்கைவிட்டது. இக்கோரிக்கை கவனிப்பைப் பெறாமல் போனதும் அடுத்த 30 வருடகாலத்தில் பதவி வெற்றிடம் ஏற்பட்ட ஒவ்வொரு தருணத்திலும் இப்பிரிவினர் கரைநாட்டுச் சிங்களவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தகுதியானவர்கள் என்று சிபார்சுடன் கோரிக்கைகளை வைத்து, நியமனத்தை தம்மவருக்கு வழங்கும்படி வாதாடிவந்தனர். இவர்கள் சிபார்சு செய்தவர்கள் மிகுந்த கல்வியறிவு படைத்தவர்களாயும் கராவ முதலாளித்துவப் பிரிவைச் சார்ந்தவர்களாயும் இருந்தனர். பல தடவைகளில் இந்த எதிர்ப்பு இயக்கம் கசப்புணர்வும் தீவிரமும் மிக்கதாய் இருந்தது. வரலாற்றாசிரியர்கள் சிலர் இதனை கொவிகம – கராவா சாதிச்சண்டையாக விளக்கம் கொடுத்தனர். தர்மரட்ன 1890 இல் வெளியிட்ட சிறுநூல் ‘கரா – கொய் போட்டி’ (Kara – Goi Contest) என்ற தொடரைத் தலைப்பில் கொண்டிருந்தது.

முதலியார் குழுமத்திலிருந்த சட்டசபையின் சிங்கள ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டோருக்கும் புதுப்பணக்காரர் சிபார்சு செய்தவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் வெளிப்படையானவை. முதலியார்களின் பிரதிநிதிகள் ஆளுமைக் கவர்ச்சியற்றவர்கள், அவர்களின் ஒரே ஒரு ‘தகுதி’ குடும்பத் தொடர்புகள் ஆகும். அவர்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டவர்கள் உயரிய கல்வியும், திறன்களும் உடைய இளைஞர்கள்; வெளிநாட்டில் பட்டம் பெற்றவர்கள். பிரித்தானியர்கள், நல்ல குடும்பப் பின்னணியையும், சட்டசபையில் அதிகம்பேசாது, வாய்திறக்காமல் இருக்கக்கூடியவர்களையும் நியமிக்கவே விரும்பினர். புதிய பணக்காரர்கள் செய்த முறைப்பாடுகள் நியாயமானவை. யே.ஜி. டயஸ் சிங்களவர் பிரதிநிதியாகச் சட்டசபையில் 17 வருடங்கள் இருந்தார். ‘இவரைப் பற்றிக் குறிப்பிட்டுச்சொல்ல எதுவும் இல்லை. இவரது சகோதரர்களின் விவேகமும், புத்திக்கூர்மையும் இவரிடம் காணப்படவில்லை’ என்று வெயின்மன் குறிப்பிட்டிருக்கிறார். டெகியாகம 1865 முதல் 1875 வரை நீண்டகாலம் உறுப்பினராக இருந்தார். இப்பத்து வருடகாலத்தில் அவர் சட்டசபையில் வாய் திறந்ததில்லை. ஆனால் ஒரே ஒரு தடவை மட்டும் அவர் பேசினார். ‘இப்பேச்சுதான் உலகின் சட்டசபையின் சரித்திரத்தில் உறுப்பினர்களில் ஒருவர் பேசியிருக்கக்கூடிய மிகச்சிறிய உரை. ஒரு தீர்மானத்திற்கு அவர் ‘ஐ ஓல் சோ’ (I also) என்ற சொற்களைக்கூறி வழிமொழிந்தார் (வெயின்மன், 1947. P. 10-11). இருந்தபோதும் முதலியார் குழுமத்தின் சில புத்திசாலிகளான உறுப்பினர்கள் தம்திறமையை சட்டசபையில் வெளிப்படுத்தத் தவறவில்லை. ஹென்றி டயஸ் மிகச் சிறந்த நியாய துரந்தரராக விளங்கியவர்: பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தார். யேம்ஸ் டி அல்விஸ் ஒரு புலமையாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார். ‘அக்காலத்தில் பெரும் ஆளுமைகளுள் ஒருவர்’ (மேலது: 11). 

முதலியார் குழுமத்திற்கும், கராவப் பணக்காரர்களுக்கும் இடையிலான சண்டை அரசியல் அரங்கில் இடம்பெற்ற சாதிச்சண்டையாகத் தோற்றலாம். இது உண்மையல்ல. முதலியார் வகுப்பு ‘முதல் தர கொவிகம சாதியின் அறியப்பட்டோராக’ (First Class Govigama Somebodies) இருந்தனர். அவர்களின் சமூக அந்தஸ்து நில உடைமையையும், சாதியின் உயர்படி இருப்பையும் ஆதாரமாகக்கொண்டது. பணக்காரர்களான கராவ ‘அநாமதேயங்கள்’ (Nobodies), பணத்திலும் கல்வியிலும் முதலியார் வகுப்பைவிட முன்னணிக்கு வந்திருந்தனர். அத்தோடு காணிகளை பெருமளவில் கொள்வனவு செய்து காணி உடைமையாளர்களும் ஆயினர். முன்பு காணி உடைமை என்றால் அது முதலியார்களுக்கு உரிய சிறப்பாக இருந்தது. இப்பின்னணியில் இவ்விரு தரப்பினருக்குமான சண்டையை நுணுகி ஆராய்ந்தால் உருவத்தில் சாதிச்சண்டையாக தென்படும் இச்சண்டை உள்ளடக்கத்தில் ஒரே வர்க்கத்தின் இரு பிரிவினருக்கிடையிலான முரண்பாடு என்பதைக் கண்டுகொள்ளலாம்.

முதலாளித்துவ வகுப்பின் பழைய பிரிவினர் நில உடைமையால் வரும் சமூகத்தகுதியைக் கொண்டு சலுகைகளை அனுபவித்து வந்தனர். புதுப்பணக்காரர்கள் தொடக்கத்தில் வர்த்தக நடவடிக்கைகள்மூலம் பணத்தைச் சேர்த்து, அப்பணத்தைக்கொண்டு உயர் சமூகத்தகுதிக்குத் தேவையான காணி உடைமையையும் ஏனைய அடையாளச்சின்னங்களையும் பெற்றுக்கொண்டனர். இதனால் பழைய முதலாளிகளிற்கு ஏற்பட்ட பகைமையுணர்வும் போட்டியும் இரு தரப்பாருக்கும் இடையிலான மோதல்களுக்குக் காரணமாயிற்று.

வர்க்கமொன்றிற்கு உள்ளே நடந்த மோதல்

சட்டசபையில் சிங்களவருக்கான ஆசனம் தொடர்பான பெரும்மோதல் 1878 ஆம் ஆண்டில் புதிய முதலாளி வகுப்பால் தொடக்கி வைக்கப்பட்டது. அவ்வாண்டில் யேம்ஸ் டி அல்விஸ் இறந்ததால் இப்பதவி வெற்றிடமாயிற்று. இந்த ஆசனம் அதற்குப் பின்னர் 1881, 1888, 1895, 1900, 1905 ஆகிய ஆண்டுகளில் வெற்றிடமாகிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இம்மோதல் மீண்டும் மீண்டும் இடம் பெற்றது. 1878 இல் முதல் தடவையாக முயற்சியாளர்குழு சட்டசபை நியமனம் தமது தரப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரியபோது மொரட்டுவவின் கராவ முதலாளியாகிய ஜோர்ஜ் அலெக்சாண்டர் தர்மரட்னவை முன்னிறுத்தியது. பிரித்தானியாவில் கல்விகற்ற தர்மரட்ன 1874 இல் பாரிஸ்டராக தொழில்புரியும் தகைமையை பெற்றார். இவரது தந்தை எச்.ஏ. தர்மரட்னவும் 1820களில் இங்கிலாந்துச் சென்று கல்விகற்றவர். பின்னர் இலங்கையில் அரசாங்கத் திணைக்களங்களில் பணியாற்றினார். 1878 இல் ஜி.ஏ. தர்மரட்னவின் பெயர் சட்டசபை நியமனத்திற்காகச் சிபார்சு செய்யப்பட்டவேளையில் கராவ சாதியினரில் அதி உயர் கல்வித்தகைமை உடையவராக அவர் கருதப்பட்டார். அக்காலத்தில் முன்னணியில் திகழ்ந்த முதலாளிகளும், நிலச்சொத்துகளின் உடைமையாளர்களுமான சுசூ சொய்சா, சாள்ஸ் டி சொய்சா, யெரொனிஸ் பீரிஸ், லின்டாமுலாகே யாக்கோப் டி சில்வா என்ற நான்கு பேர்கள் ஜி.ஏ. தர்மரட்னவின் நியமனத்தை முன்வைத்து ஆதரித்தனர். இந்நான்கு முதலாளிகளும் தமது ஆரம்ப மூலதனத்தை சாராயக்குத்தகை வியாபாரம்மூலம் தேடிக்கொண்டனர். பின்னர் பெருந்தோட்டங்களிலும் முதலீடு செய்தனர். பெரும்செல்வம் என்ற தகுதி மட்டுமல்லாமல் பிறதகுதிகளையும் அவர்கள் தேடிக்கொண்டனர். கிறிஸ்தவத்தை தழுவுதல், மேற்குமயமாதல்மூலம் நாகரிகத்தை விரைந்து ஏற்றல் ஆகிய தகுதிகளையும் பெற்றனர். இந்நான்கு பேரும் தர்மரட்னவின் சார்பில் குடியேற்ற நாட்டுக்காரியதரிசிக்கு விண்ணப்பம் செய்தனர். சட்டசபையின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அதி உச்சமான தகுதிகளைப்பெற்ற ஒருவர் என்றால் அது தர்மரட்னதான் என்று தம்விண்ணப்பத்தில் குறிப்பிட்டதோடு தர்மரட்னவின் தந்தையார் பிரித்தானிய அரசாங்கத்தில் விசுவாசம்மிக்க உத்தியோகத்தராகப் பணியாற்றியவர் என்பதையும் பதிவு செய்தனர். இருப்பினும் இப்புதிய வர்க்கத்தின் இம்முயற்சி தோல்வியில் முடிந்தது. பழைய முதலாளி வகுப்பின் மிக விருப்புக்குரிய குடும்பத்தின் உறுப்பினரான ஜேம்ஸ் பீட்டர் ஒபயசேகர 1878 இல் சட்ட சபைக்கு நியமிக்கப்பட்டார்.

சிங்களவருக்கான சட்டசபை ஆசனத்தை கிறிஸ்தவ, கொய்கம, முதலியார் குடும்பம் ஒன்றின் ஏகபோகமாக ஆக்கும் கொள்கை தொடரப்பட்டது. இது சிங்கள சமூகத்தின் பிறபகுதியினர் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது. பணக்காரர்களான கிறிஸ்தவ முதலாளிகள் மட்டுமல்லாது எல்லா வர்க்கங்களையும் சேர்ந்த பெளத்தர்களும் தம் அதிருப்தியை வெளியிட்டனர். 1881 இல் களுத்துறையில் புறக்டராகப் பணியாற்றிய ஏ.எல்.டி. அல்விஸ் சட்டசபைக்கு நியமிக்கப்பட்டார். இது வெளிப்படையான பாரபட்சமான செயலாகக் கருதப்பட்டது. அல்விஸ் ‘பழைய தலைமுறையின் மிகச் சிறந்த கனவான். ஆயினும் குடும்பத் தொடர்பு என்ற விடயம்தான் அவரைத் தெரிவு செய்ததில் பிரதானம் பெற்றது என்பது யாவரும் அறிந்த ஒன்று’ என்று வெயின்மன் (1947: 11) குறிப்பிட்டார். 1883 முதல் 1890 வரை கவர்னராக இருந்த சேர் ஆர்தர் கோர்டன் இதனைத் திட்டமிட்டே செய்து வந்தார்; பிரித்தானிய அரசுக்கு ஒத்துழைப்பை வழங்கும் முதலியார் குழுவிற்கு நியமனங்களைத் தொடர்ந்து வழங்குவதே அவரது கொள்கை என்பது தெளிவாகத் தெரிந்தது. “பிரித்தானியருக்கு முதலியார்கள் பதவியில் இருந்து விசுவாசத்துடன் சேவை செய்த குடும்பம் என்பதுதான் முக்கியம். அறிவிலும் திறமைகளிலும் மட்டமானவர்கள் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதல்ல.” என்று கே.எம்.டி. சில்வா குறிப்பிட்டுள்ளார் (1973: 243)

1880களின் பத்தாண்டுகாலத்தில் முதலாளிகளின் கழகங்களும், உயர்தொழில் துறையினரின் சங்கங்களும் உருவாக்கப்பட்டன. இவற்றில், பல இனங்களையும் பல சாதிகளையும் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். 1882 இல் இலங்கை விவசாயக்கழகம் (Ceylon Agricultural Association) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. நாட்டின் முன்னணி முதலாளிகளில் ஒருவரான சாள்ஸ் டி சொய்சா இக்கழகத்தின் தலைவராக இருந்தார். அக்காலத்தின் முக்கிய முதலாளிகளான பி. ஆனல்ட் டயஸ், எல்.யூசி.டி. சில்வா, வி. யாக்கோப் டி மெல், எச். யெரொனிஸ் பீரிஸ் ஆகியோர் உள்ளடங்கிய முக்கிய பிரமுகர்களும் இக்கழகத்தின் செயற்குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். பொ. இராமநாதன் (சட்டசபை உறுப்பினர்) ஹெக்டர் வான் குல்யன்பேர்க் மற்றும் யோன் பெர்குசன் (இவ்விருவரும் முன்னணிப் பத்திரிகைகளின் உடைமையாளர்கள்), பிரான்சிஸ் பெவன், எவ்.சி. லூஸ், எஸ்.ஆர்.டி. பொன்சேக, லூயிஸ் டி சொய்சா, பொ. குமாரசுவாமி ஆகியவர்களும் செயற்குழு உறுப்பினர்களாக இருந்த பிரமுகர்களாவர். 1888 இல் இலங்கை விவசாயிகள் கழகம் இலங்கைத் தேசியக் கழகம் (Ceylon National Association) என்று பெயர் மாற்றம் பெற்றது. இப்பெயர்மாற்றம் கழகத்தை ஓர் அரசியல் நிறுவனமாக ஆக்கும் துணிச்சலான செயல் எனக் கூறப்பட்டது. ஆனால் சாள்ஸ் டி சொய்சா இதனை ஏற்றுக்கொள்ளவில்லை; அவர் பதவி விலகினார். பெயர்மாற்றத்தை வால்டர் பெரேரா, டெல்கே சாள்ஸ் பீரிஸ், எஸ்.ஆர்.டி. பொன்சேக ஆகியோர் பிரேரித்தனர் (ஜயசேகர 1970: 126). 1890களில் யேம்ஸ் பீரிஸ் (யாக்கோப் டிமெல்லின் மருமகன்), சி.எம். பெர்னாண்டோ (சாள்ஸ் டி சொய்சாவின் மருமகன்) ஆகிய இளந்தலைவர்கள் இலங்கைத் தேசியக் கழகத்தில் மிகத்துடிப்போடு செயற்பட்டனர் (த சேர்ச் லைட், கிறிஸ்மஸ் இதழ், 1916).

1888 இல் சட்டசபையின் சிங்களவருக்கான ஆசனம் வெற்றிடமானபொழுது புதிய பணக்காரர்குழு தம்மவர் ஒருவருக்கு நியமனம்பெறும் முயற்சியில் மீண்டும் தோல்விகண்டது. கவர்னர் பழைய கொள்கையில் விலகாமல் நின்று, அலக்சாண்டர் டி அல்விஸ் செனிவிரத்தின என்ற நியாய துரந்தரரை சட்டசபைக்கு நியமித்தார். இவரும் குறிப்பிட்ட முதலியார் குடும்பத்தின் உறுப்பினரே ஆவர். 1889 இல் கண்டியச் சிங்களவருக்கு ஒரு பிரதிநிதியும், முஸ்லிம்களுக்கு ஒரு பிரதிநிதியும் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு சட்டசபைப் பிரதிநிதிகள் எண்ணிக்கையைக் கூட்டியதுதான் இக்காலத்தின் ஒரேயொரு முக்கிய மாற்றம். நியமிக்கப்பட்டோரின் பதவிக்காலம் 3 இல் இருந்து 5 ஆக உயர்த்தப்பட்டது. விரும்பினால் ஒருவரை மீண்டும் நியமனம் செய்யலாம் என்றும் விதிக்கப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கை காரணமாக புதிய முதலாளிகள் மத்தியில் ஏற்பட்ட கசப்புணர்வின் தீவிரத்தை, இக்காலத்தின் கண்டன நூல்களின்மூலம் தெரிந்து கொள்ளலாம். இவை சாதியச் சொல்லாடலைக் கொண்டிருந்தன. இருப்பினும் இவை பணமும் கல்வியும் இருந்தபோதும் அடிப்படை ஜனநாயக உரிமைகள்கூட மறுக்கப்பட்டதால் எழுந்த விரக்தியின் வெளிப்பாடு என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஜி.ஏ. தர்மரட்ன, “எழுந்தமானமானது; திருப்தியற்றது.” என்று கண்டித்ததோடு “சட்டசபையை, தேர்தல்மூலம் தெரியும் முறையின்படி திருத்தியமைத்தல் வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

“இலங்கையின் சட்டசபையின் சிங்களப் பிரதிநிதித்துவத்திற்கு நியமிக்கப்பட வேண்டியவருக்கு இருக்கவேண்டிய தகைமைகள் என்ன? என்பதைப் பிரசுரம்செய்து பகிரங்கப்படுத்த வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். இங்கிலாந்து சென்று கல்விகற்றவர்களும், உயர்ந்த கல்வித்தகைமைகளை உடையவர்களுமான சிங்களக் கனவான்கள் பலர் வேட்பாளர்களாக முன்வந்தபோதும் அவர்களை ஒதுக்கிவிட்டு கொவிகம சாதிக் கனவான்களே பல்லாண்டுகளாக இப்பதவிக்கு நியமிக்கப்படுகின்றனர். ‘கராவக்களுக்கும் இந்தக் கொவிகமக்களுக்கு இடையிலான பணக்கார அந்தஸ்து பற்றிய வேறுபாட்டை நாம் விளக்கமாகத் தந்துள்ளோம். அத்தோடு இங்கிலாந்தில் கல்விகற்றவர்களாக கொவிகமவைவிட அதிக எண்ணிக்கையிலான கராவ இருக்கின்றனர்.” (தர்மரட்ன, 1890: 63-64. ரூ. 74).

தர்மரட்னவின் கடுங்கோபம் இங்கே வெளிப்படுகிறது. ஏ.டி. அல்விஸ் செனிவிரத்தின வெளிநாடு சென்று படித்தவரல்லர்; ஏனைய போட்டியாளர்கள் அளவுக்குப் பணக்காரரும் அல்லர். 1849 இல் பிறந்த செனிவிரத்தின சென்ற் தோமஸ் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். 1883 இல் கொழும்பு முனிசிப்பல் சபை உறுப்பினரானார். 39 வயதில் நியாயதுரந்தரர் வேலையைச் செய்யத் தொடங்கினார் (றைட், 1907: 102). பிரித்தானியர்கள் செனிவிரத்தினவை அடக்கமும், விசுவாசமும் உள்ள டாம்பீகமற்ற பேர்வழியாகக் கருதி 1888 இல் அவரைச் சட்டசபை உறுப்பினராக நியமித்தனர். புதிய பணக்காரர்கள், செனிவிரத்தின மட்டமான திறன்களை உடைய ஒருவர் என்பதையும், தாம் பிரேரித்தவர்களின் மேதாவித்தனத்தையும், உயர்தகைமைகளையும் ஒப்பீடுசெய்து காட்டினர். தர்மரட்னவின் நூலின் கருத்துகள் சாதிய உள்ளடக்கத்தையுடையனவாகப் பார்க்கப்பட்டன. அவர் ‘முதல்தர கொவிகம’க்களின் பாசாங்கினை எடுத்துக்காட்டினார். புதிய பணக்காரர்களின் கோரிக்கைகளை முன்வைத்தார். கராவ சாதியினர் சத்திரிய வம்சத்தினர் என்பதை தம்நூலில் விவரித்துச் சொல்கிறார். கொவிகம தாழ்ந்த நிலையினரான சூத்திரர்கள் என்றும் குறிப்பிட்டார். அவர் ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய உயர் லட்சியங்கள் பற்றியும் எழுதியுள்ளார். குறிப்பாக தொழில்வாய்ப்புகளில் இனவாத பாரபட்சம் காட்டப்படுவதை எதிர்த்தார். பிரித்தானிய உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் பொருளாதார, சமூகச் சலுகைகளைச் சுட்டிக்காட்டி விமர்சித்தார். வரிகளைக் குறைக்க வேண்டும்; சுதேச முயற்சியாளர்களுக்கு கடன்வசதிகள் கொடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை விடுத்தார். அவ்வகையில் சுதேசிய வர்த்தக முதலாளித்துவத்தின் உள்ளக் குமுறல்களை தர்மரட்ன வெளிப்படுத்தினார்.

தர்மரட்னவின் சிறுநூல் பிரஞ்சுப் புரட்சி, அடம்சிமித், முதலாளித்துவ சிந்தனையாளர் என்பன பற்றிக் குறிப்பிடுகிறது. இது அவரது கோரிக்கைகளின் வர்க்க உள்ளடக்கத்தினை எடுத்துக்காட்டுவதாகும். முதலாளித்துவச் சீர்திருத்தங்கள் விரைவாகப்பரவி முன்னேறும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார். அரசாங்க உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் பற்றிக் கூறுமிடத்து அவர் சாதி என்பதைப் பேசாது பொதுவாகவே பேசுவது முக்கியமானதொரு விடயம். “முதலியார்கள், ரட்டே மஹாத்தயாக்கள், முகாந்திரங்கள் ஆகிய பதவிகளில் இருப்போர் சிங்களவர்களே ஆதலால் அவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது.” என்று அவர் எழுதினார். வறுமையின் தாக்கத்திற்கு உள்ளான பகுதிகளில் தானிய வரி, வீதி வரி போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ‘செவிடர், ஊமை, ஊனமுற்றோர், பிச்சைக்காரர்’ ஆகியோருக்கு உதவிகள் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். அவர் நூலில் இருந்து மேற்கோளாகத்தரப்படும் பின்வரும் பகுதி எழுச்சி பெற்றுவரும் முதலாளித்துவ வர்க்கத்தின் உலகப்பார்வையை எடுத்துக்காட்டுவதாய் உள்ளது.

“தவறான சட்டங்களை இயற்றுதல், நீதியற்ற வரி விதிப்பு, அறவிட்ட வரிப்பணத்தைத் தவறான முறையில் செலவிடுதல் ஆகியவற்றால் நேர்ந்த துன்பங்கள்தான் பிரஞ்சுப் புரட்சிக்குக் காரணமாக இருந்தன. ஆளும்குழுவின் உறுப்பினர்களான சிலர், ஆளப்படுவோர் தங்களுக்காகவே உருவாக்கப்பட்டவர்கள்; ஆளுவோரின் நன்மைக்காகத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கின்றனர். அறிவற்றவர்களான பலர் கபடபுத்தியுள்ள சிலர் உண்டு கொழுப்பதற்கு உழைத்துக் கொடுக்கத்தான் இருக்கிறார்கள் என்றும் கருதுகின்றனர். சனப்பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மக்களுக்காகத்தான் அரசாங்கம் இருக்கின்றது என்ற எமது கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். (தர்மரட்ன, 1890)”

விவாதமுறையில் அமையும் தர்மரட்னவின் கருத்துகள் உள்ளடக்கத்தில் புதிய முதலாளித்துவ வகுப்பின் பொருளாதார, அரசியல், சமூகக் கோரிக்கைகளையும், அவர்தம் மனக்குறைகளையும் வெளிப்படுத்துவனவாய் இருந்தன. புதிதாக எழுச்சிபெற்ற முதலாளித்துவ வகுப்பு அரசியல்ரீதியில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஒன்று திரளவில்லை. ஆயினும் முதலியார் வகுப்பின் ஆழவேரூன்றிய நலன்களைக் கேள்விக்கு உட்படுத்தியும், தமக்கு இழைக்கப்படும் அநீதிகளைச் சுட்டிக்காட்டியும் எதிர்ப்பை வெளியிட்டது.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க


About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்