காலப்பகுதி II : ஆரம்ப வரலாற்றுக் காலம் 1.
நகரமயமாக்கம் கி.மு. 600-300.
வரலாற்றுக்கால ஆரம்பம் என்பது ஒரு பிரதேசத்தில் பதிய வைத்திருக்கும் கல்வெட்டுகளிலோ அல்லது வேறு பொருட்களிலோ காணப்படும் வாசிக்கக்கூடிய ஒரு மொழியின் ஆரம்பகாலத்தைக் கொண்டு வரலாற்றாசியர்கள் கொடுக்கும் காலத்தைக் குறிப்பிடுகிறது. அந்தவகையில் கந்தரோடையில் இதுவரை கண்டெடுத்த பானை ஓடுகளில் காணப்படும் தமிழ்ப்பிராமி எழுத்துகளின் வடிவமைப்பு, இயற்பியல் ஆகியவற்றைக் கொண்டு, அந்த எழுத்துகள் கி.மு. 300 ஆம் ஆண்டிற்கு உரியதாகத் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இதேவகையான ஆரம்பகாலப் பிராமி வடிவங்களைக் கொண்ட எழுத்துகள் காணப்படும் ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், கீழடி ஆகிய தொல்லியல் மையங்களில் காணப்பட்ட கலவோடுகளின் கதிரியக்கக் காலக்கணிப்புகள் கி.மு. 600-500 ஆண்டுகள் எனக் காட்டுகின்றன. இக் காலக்கணிப்புக்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிராமி எழுத்தின் ஆரம்பகாலம் கி.மு. 600 ஆம் ஆண்டாகக் கொள்ளப்படுகிறது (இரா. சிவானந்தம் 2019: 8).
இலங்கையிலும் அநுராதபுரத்தில் கண்டெடுத்த பானை ஓட்டில் காணப்படும் தமிழ்ப்பிராமி எழுத்து கி.மு. 700 இற்கும் – கி.மு. 500 இற்குமிடையே பதியப்பட்டிருப்பதாக கதிரியக்க ஆய்வுகள் காட்டுகின்றன (Dreraniyagala, S.U. 1992).

எழுத்துகளின் வடிவமைப்பை மட்டும் கொண்டு அந்த எழுத்து எழுதிய காலத்தைத் தீர்மானிப்பது ஒரு பொது விதியே ஒழிய, அக்கணிப்பு தவறாகக்கூட இருக்கலாம். அந்த எழுத்துப் பதியப்பட்டிருக்கும் பொருளை அறிவியல்ரீதியிலான காலக்கணிப்புச் செய்வதன் மூலமே அதன் சரியான காலத்தைக் கண்டறிய முடியும். உதாரணமாக அநுராதபுரத்தில் பெருங்கற்காலம் கி.மு. 1000 ஆண்டளவில்தான் ஆரம்பமானபோதிலும், அங்கே கண்டெடுத்த தமிழ்ப்பிராமி எழுத்துகளைக் கொண்ட பானை ஓட்டின் அறிவியல்ரீதியான காலக்கணிப்பு கி.மு. 700-500 ஆண்டு காலத்தைக் காட்டியிருக்கிறது. கந்தரோடையிலும் இந்த எழுத்துகள் பதிந்த ஓடுகளை, முதலிலேயே திட்டமிட்டுக் கதிரியக்கக் காலக்கணிப்புச் செய்வதன் மூலமே இந்த மொழிப்பதிவின் சரியான காலத்தைக் கண்டறிய முடியும். மேலும், பெரும்பாலான தொல்லியல் மையங்களில் ஆரம்ப வரலாற்றுக் காலத்திலேயே நகரமயமாக்கலும் ஆரம்பமாகிறது. இதையும் கவனத்தில் கொண்டே ஆரம்ப வரலாற்றுக்காலத்தைத் தீர்மானிக்க முடியும்.
தென்னாசியாவின் தொல்லியல் மையங்களில் நகரமயமாக்கலின் முக்கிய அம்சங்களாக பின்வரும் பண்புகள் எடுத்துரைக்கப்படுகின்றன: அப்பிராந்தியத்திலுள்ள குடியிருப்புகளில் நிரந்தரமான ஒரு பெரிய குடியிருப்புப் பகுதி, அம் மக்களின் வாழ்வாதாரத்திற்கான உணவு உற்பத்தி, நகரத்திட்ட அமைப்பு, பொது மக்களுக்கான கட்டடங்கள், குடியிருப்பு மட்டங்களில் உயர்வான ஓர் ஆட்சிக்குழு அல்லது தலைவன், எழுத்துக்கலை, தனித்துறைகளாக விளங்கும் கைத்தொழில்கள்\ தொழில்நுட்ப வேலைப்பிரிவுகள், நெடுந்தூர வர்த்தகம், பெருகிவரும் மக்கள் தொகைக்கான வாழ்வாதார முன்னேற்பாடுகள் (Allchin, 1995: 57). இவற்றை ஆதாரமாகக்கொண்டு கந்தரோடையின் ஆரம்ப வரலாற்றுக்காலம் கி.மு. 600 ஆம் ஆண்டுக்காலமாக இந்த ஆய்வில் தீர்மானிக்கப்படுகிறது. கந்தரோடையின் நகரமயமாக்கல் அம்சங்கள் இங்கே சுருக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது. பின்னர் இடம்பெறும் ஓர் இயலில் இவை மேலும் விரிவாகப் பேசப்படும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆதிக்குடியிருப்புகள் இடம்பெற்ற மையங்களில் கந்தரோடை முக்கியமானது. பெருங்கற்பண்பாட்டைப் பேணிய இம்மக்கள் தென்னிந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்தார்களா அல்லது இங்கு ஏற்கனவே குடியேறியிருந்த மக்கள் இந்தப் பண்பாட்டை மேற்கொண்டார்களா என்பது தெரியவில்லை. ஒருசமயம் தென்னிந்தியாவிலிருந்து இந்த விவசாயப் பண்பாட்டை மேற்கொண்ட ஒரு பகுதியினர் இங்கே வந்து, இங்கே ஏற்கனவே குடியிருந்தவர்களுடன் சேர்ந்து இதைக் கடைப்பிடித்திருக்கலாம்.
இந்த மக்களது குடியிருப்பு 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட கந்தரோடைக் குளத்திற்குச் சமீபமாக நடைபெற்றிருக்கிறது. இது தனியாக இயங்கும் ஒரு குளமல்ல. இதிலிருந்து செல்லும் கால்வாய்கள் – மனிதர்களால் வெட்டப்பட்ட அகன்ற வாய்க்கால்கள் – இதனோடு பல சிறு குளங்களை இணைக்கின்றன (Cascaded lake system). குளங்களுக்கு அருகே நீண்டு அகன்ற நெல் வயல்களுக்கு அப்பால்தான் மக்களின் வதிவிடங்கள் காணப்படுகின்றன. இதைக் கவனித்து நோக்குமிடத்து பெரியதொரு மக்கள் தொகையைப் பராமரிப்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட விவசாய அமைப்பு இது என்பதை உணர முடிகிறது.
கந்தரோடைத் தானியங்களின் காலக்கணிப்பு
2018 ஆம் ஆண்டின் கந்தரோடை அகழ்வுகளின்போது இலண்டன் பல்கலைக்கழகக்கல்லூரியைச் சேர்ந்த (University College, London) தொல் தாவரவியலாளர் டொறியன் புஃல்லர், கந்தரோடை அகழ்வுகளில் கண்ட சில தானியங்களைத் தன்னுடன் எடுத்துச்சென்று இலண்டன் கதிரியக்கக் கரிம ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்திருக்கிறார். அவர் எடுத்துச்சென்ற மாதிரித் (Sample) தானியங்களில், அரிசி கி.மு. 380 ஆண்டிற்கு உரியதாகவும், தினை கி.மு. 350-305 ஆண்டிற்கு உரியதாகவும், சாமை கி.மு. 180-40 ஆண்டிற்கு உரியதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

கந்தரோடைக் கிராமத்தினூடாக யாழ்ப்பாணக் கடலின் மேற்குக்கரைவரை செல்லும் வழுக்கை ஆறு எனப்படும் கால்வாய், வடக்கே கட்டுவன் கிராமத்தில் ஆரம்பமாகி, மேற்கு நோக்கி ஓடி வறுத்தலைவிளான், தெல்லிப்பழை ஊடாக அளவெட்டியை அடைந்த பின்னர், தெற்கு நோக்கித் திரும்பி கந்தரோடை வழியாக கட்டுடைக் கிராமத்தை அடைந்து, மீண்டும் மேற்கு நோக்கித் திரும்பி நவாலி, கல்லுண்டாய் வழியாக நாவாந்துறைக்குச் சமீபமாக கடலை அடைகிறது. இன்று வெள்ள வாய்க்காலாகச் செயலாற்றும் இக்கால்வாய் எப்போதும் இப்படியிருந்ததில்லை. அக்கிராம மக்களின் மரபு ஞாபகங்களின்படி முற்காலத்தில் கடலுடன் இணைந்து கடல்நீரைக் கொண்டிருந்த இக்கடற்கால்வாய் பெரியதொரு பண்டமாற்றுப் பாதையாக இயங்கிவந்திருக்கிறது. இதன்மூலமாக சிறிய படகுகள் நாவாந்துறையிலிருந்து கந்தரோடை வரை பொருட்களைக் கொண்டுவந்தும், எடுத்துச்சென்றும் பணியாற்றியிருக்கின்றன.
புராதன முத்திரை நாணயங்கள்


நெடுந்தூர வர்த்தகத்திற்கான சான்று கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட இந்திய முத்திரை நாணயங்கள் (Punch-marked coins) ஆகும். புத்த பகவான் காலத்தில் புழக்கத்திலிருந்த இந்த நாணயங்கள் கிறிஸ்தாப்தத்திற்கு 600 ஆண்டுகள் முற்பட்ட ‘புராண நாணயங்கள்’ எனவும், சில கி.மு. 1000 ஆண்டுக் காலத்தவையாக இருக்கலாம் எனவும், நாணய வல்லுனர் ஸேர். கன்னிங்காம் (Sir A. Cunningham) குறிப்பிடுவதாக போல் பீரிஸ் பதிவு செய்திருக்கிறார். இவ்வகையான 35 நாணயங்களை கந்தரோடையிலிருந்தும், இரண்டை வல்லிபுரத்திலுமிருந்தும் பெற்றுக்கொண்டதாகப் பதிவு செய்திருக்கிறார். இந்த நாணயங்கள் வெள்ளி, செம்பு, வெள்ளி பூசப்பட்ட செம்பு ஆகிய உலோகங்களில் நீள் சதுர வடிவு கொண்டவை. அந்த நாணயங்களில் பதிக்கப்பட்ட உருவங்கள் அவை உலோகத் துண்டுகளாக வெட்டிய பின்னர் அவற்றின்மேல் குத்திப் பதிக்கப்பட்டவை. அதன் காரணமாக அவை முத்திரை நாணயங்கள் அல்லது ‘அச்சுக்குத்திய நாணயங்கள்’ என அழைக்கப்படுகின்றன. இந்த நாணயங்கள் ஒரே நிறையில் இருக்கவேண்டும் என்பதற்காக சிலவேளைகளில் அதன் மூலைகளில் ஒரு துண்டு வெட்டப்பட்டிருக்கும் (Pieris, P.E. 1919: 46-47). சமீபகாலங்களில் யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் கி.மு. 500 ஆம் ஆண்டிற்குரிய கிரேக்க மதுச்சாடிகள் கண்டுபிடிக்கப்பட்டமை, பீரிஸ்ஸின் இந்த கடல் – வர்த்தகக் காலக்கணிப்பை ஏற்கச்செய்கிறது.

மேற்குறிப்பிட்ட முத்திரை நாணயங்களைப் போன்ற உள்ளூர் முத்திரை நாணயங்களும் உருவாக்கப்பட்டதை கிருக்ஷ்ணராசா தனது கந்தரோடை அகழாய்வுகளில் எடுத்துக்காட்டியிருக்கிறார். ஒரு வெள்ளி முத்திரை நாணயத்தில் நாகபாம்பின் உருவத்தோடு பன்னரண்டு கதிர்களைக் கொண்ட சூரிய உருவமும் பதிக்கப்பட்டிருக்கிறது. கந்தரோடையில் கண்ட இது போன்ற நான்கு நாகத்தலை நாணயங்களை கிருக்ஷ்ணராசா பதிவிட்டிருக்கிறார். இவற்றை ஆதாரமாகக் கொண்டு கந்தரோடை நாக மன்னர்களுடைய ஆட்சிப்புலத்தின் தலைநகரமாக இருந்திருக்க வேண்டும் என உறுதிப்படுத்துகிறார் (கிருக்ஷ்ணராசா, செ. 1998: 65-69).
கந்தரோடையில் போல் பீரிஸ் கண்டெடுத்த நாணயங்களினிடையே கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குரிய கொற்கைப் பாண்டிய நாணயங்களையும் கண்டெடுத்திருக்கிறார். ஒரு நாணயத்தின் முன்பக்கத்திலுள்ள யானையின் தலைமேல் காணப்படுவதை ஒரு வீடு எனவும், எதிர் முனையில் மூன்று வளையங்கள் கொண்டு காணப்படுவது ஒரு சைத்தியம் எனவும் கூறியுள்ளார். நாணயத்தின் மறுபக்கத்தில் கோடுகளாகப் பதித்திருக்கும் பாண்டியரின் மீன் சின்னத்தை அவரால் இனம் கண்டுகொள்ள முடியவில்லை (Pieris 1919: 50).

எழுத்துக்கலை
தமிழ்மொழியின் பேச்சுவழக்கு பெருங்கற்காலப் பண்பாட்டின் பரவலுடனேயே – முக்கியமாக விவசாய நடவடிக்கைகள் மூலமாகவே – முதலில் மக்கள் மத்தியில் பரவியதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அப் பேச்சுவழக்குகள் தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், கீழடி ஆகிய தொல்லியல் மையங்களில் கி.மு. 600 ஆம் ஆண்டுக்காலத்திலே தமிழ்ப்பிராமியாக எழுத்து வடிவம் பெற்றிருப்பதை ஆய்வுகள் அறியத்தருகின்றன. கந்தரோடையில் பிராமி எழுத்துகள் பாவனைக்கு வரமுன்னர் அப்பிராந்தியத்தில் ஒரு வகையான குறியீட்டு எழுத்துகளை (Graffiti) மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இக்குறியீடுகள் அவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஒரு தொடர்பு மொழியின் எழுத்துப்பதிவுகளாக இருக்கலாம்.
முடிவுரை: ஆரம்ப வரலாற்றுக்காலம் 1.
நீர்ப்பாசன வேளாண்மையிலும், நெல் விளைவித்தலிலும் தொழில்புரியும் உழவுத் தொழிலாளர்கள்; வெளிநாட்டு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் வர்த்தகர்கள்; கறுப்பு-சிவப்பு மற்றும் பலவகையான மட்பாண்ட வேலைகளைச் செய்யும் குயவர்கள்; செம்பு, வெண்கலம், இரும்பு ஆகிய உலேகங்களைக் கொண்டு வேலை செய்யும் கொல்லர்கள்; முத்திரை நாணயங்களை வெளியிடும் ஆளும் வர்க்கத்தினர், கண்களுக்கு மை தீட்டும் உயர்குலப் பெண்கள் – இவை அனைத்தும் வேலைப் பிரிவினையையும், தொழில்நுட்ப ஆற்றலையும், சமூக அமைப்பாண்மையையும், அன்றைய சமூகப்படிநிலை அமைப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. நாடெல்லாம் காணப்படும் கறுப்பு-சிவப்பு மட்பாண்ட ஓடுகளும், உலோகப் பொருட்களும் நாடெங்கும் பரந்துகிடக்கும் ஒரேமாதியான பொருளியல் கலாசாரத்தை எடுத்துக்காட்டுகின்றன. உள்ளூர் நாணயங்களின் வெளியீடு ஓர் அரசியல், பொருளாதார அமைப்பின் எழுச்சியை எடுத்துரைக்கிறது.
புத்த பகவான் காலத்தில் நாகதீபத்தை ஆண்ட மகோதரனைப் பற்றி மகாவம்சம் கூறும் கதை ஐதீகமாக இருந்தபோதிலும், சாஞ்சுநியாத்தன் எழுதிய கி.மு. 700 ஆம் ஆண்டுக்காலத்தைய பீனீசியர் வரலாறு (Phoenician History of 700 BCE by Sanchuniathon) என்ற கிரேக்க நூலில் அக்காலத்திய இலங்கையின் (Taprobane) வடபகுதியில் ஓர் அரசு இருந்தது பற்றிக் குறிப்பிடப்படுகிறது (Baumgarten, A.I. 1981).

காலப்பகுதி III : ஆரம்ப வரலாற்றுக்காலம் 2: கி.மு. 300-200.
எழுத்துப் பதிவுகள் – உரோம நாணயங்கள்
உரோமக்கலன்கள்
வரலாற்றுக்கால ஆரம்பம் என்பது ஒரு பிரதேசத்தில் பதிய வைத்திருக்கும் கல்வெட்டுகளிலோ அல்லது வேறுபொருட்களிலோ காணப்படும் வாசிக்கக்கூடிய ஒரு மொழியின் ஆரம்பகாலத்தைக் கொண்டு வரலாற்றாசியர்கள் கொடுக்கும் காலத்தைக் குறிப்பிடுகிறது. அந்தவகையில் கந்தரோடையில் இதுவரை கண்டெடுத்த பானை ஓடுகளில் காணப்படும் தமிழ்ப்பிராமி எழுத்துகளின் வடிவமைப்பு, இயற்பியல் ஆகியவற்றைக் கொண்டு அந்த எழுத்துகள் கி.மு. 300 ஆம் ஆண்டிற்கு உரியதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
கந்தரோடைத் தமிழ்ப்பிராமிப் பதிவுகள்
1995 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினர் தொல்லியலாளர் கிருக்ஷ்ணராசாவின் தலைமையில் கந்தரோடையில் உச்சாப்பனை என்ற பகுதியில் மேற்கொண்ட அகழாய்வுகளில் தமிழ்ப்பிராமி எழுத்துகள் பதித்த பல கறுப்பு-சிவப்பு மட்பாண்ட ஓடுகளைக் கண்டெடுத்திருக்கிறார்கள். இவற்றில் நான்கு ஓடுகளில் எழுத்துப் பொறிப்புகள் முழுமையாக வாசிக்கக்கூடியதாக இருந்தன (கிருக்ஷ்ணராசா, செ. 2004).
சடராசன்: சடராசன் என்ற பெயர், தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்தில் ஒஸ்மண்ட் போப்பேராய்ச்சி கண்டெடுத்த ஒரு நாணயத்தில் – கலாநிதி புக்ஷ்பரட்ணத்தின் வாசிப்பின்படி – தமிழ்ப்பிராமி எழுத்துகளில் சடநாகராசன் என்ற பெயர் பொறித்த ஒரு நாக அரசனின் பெயரை ஞாபகப்படுத்தியது. இந்தப் பெயரைக் கொண்டவன் ஒரு நாக அரசனாகவோ, அல்லது தலைவனாகவோ இருந்திருக்கலாம். இந்த ஓட்டின் காலம் கி.மு. 300 ஆம் ஆண்டாகக் கணிக்கப்படுகிறது.
பலூர்: தமிழ் இலக்கியங்களில் கலிங்க நாட்டிலிருந்த ‘தந்திரபுர’ பலூர் என அழைக்கப்பட்டது. இந்த வாசகம் காணப்பட்ட மட்பாண்டத்தில் கலிங்க நாட்டின் பலூரிலிருந்து பொருட்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம். அக்காலத்தில் பெரிய பானைகளில் பொருட்களை ஏற்றி கப்பல்களில் கொண்டுவருவது வழக்கமாக இருந்தது. இந்த மட்கலன் கலிங்கத்துடனான வர்த்தக உறவுகளுக்குச் சான்றாக இருக்கலாம்.
ஆபதி: ஒரு மட்கலன் துண்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குரிய தமிழ்ப்பிராமி எழுத்தில் ஆபதி என்ற பெயர் காணப்பட்டது. இப்பெயர் அப்பாத்திரத்திற்கு உரிமையானவரின் பெயராக இருக்கலாம், அல்லது அப்பாத்திரத்தில் பொருட்களை ஏற்றிவந்த வர்த்தகரின் பெயராக இருக்கலாம்.
குனி: உடைந்த மட்பாண்டத் துண்டில் ‘குனி’ எனக் காணப்பட்ட தமிழ்ப்பிராமி வாசகம், ஒரு பெண்ணின் பெயரின் கடைசி இரு எழுத்துகளாகும். இதில் காணப்படும் ஆரம்பகால பிராமி எழுத்து வடிவம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு உரியது.


2011 ஆம் ஆண்டில் கந்தரோடையில் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தைச் சேர்ந்த நிமால் பெரேராவுடன் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் புக்ஷ்பரட்ணம் மேற்கொண்ட ஆகழாய்வுகளில் கி.மு. 300 ஆண்டிற்குரிய தமிழ்ப்பிராமி எழுத்துகளும் வாசகங்களும் கொண்ட பல மட்பாண்ட ஓடுகளைக் கண்டெடுத்திருக்கிறார்கள். மட்பாண்ட ஓடுகளில் காணப்படும் பெயர்களை அம்மட்கலன்களின் உரிமையாளர்கள், அதிலிருக்கும் பொருட்கள் தங்களுடையது எனக் காட்டுவதற்காகப் பொறிப்பார்கள்; அல்லது அப்பாண்டங்களில் பொருட்களைக் கொண்டுவரும் வர்த்தகர்கள் தங்கள் பெயர்களைப் பொறிப்பார்கள். தமிழ்ப்பிராமி எழுத்துகளின் தொகையைக் கொண்டு பார்க்குமிடத்து தமிழ்மொழியை எழுத, வாசிக்கத் தெரிந்த கணிசமான தொகையினர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுப்பகுதியில் கந்தரோடையில் வாழ்ந்தார்கள் என்பதை உணர முடிகிறது.

மதிப்புமிக்க கற்கள்
கந்தரோடையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கற்களிடையே அகேற் (Agate), நீலமணி (Sapphire), கார்னெற் எனப்படும் மணிக்கல் (Garnet), மரகதம் (Beryl), சோப்ஸ்ரோன் எனப்படும் மென்கல் (Soapstone) ஆகிய மதிப்புமிக்க கற்கள் காணப்படுகின்றன. இக்கற்கள் தமிழகத்திலிருந்து வர்த்தகள் மூலமாகத் தருவிக்கப்பட்ட கற்களாக இருக்கலாம். சில கற்களின் வரிசையாகப் பெருகும் அளவுகளைக் கொண்டும், அவற்றில் காணப்படும் துவாரங்களைக் கொண்டும், அவற்றைக் கோர்த்து மாலைகளாக அணிந்திருந்தார்கள் எனக் கணிப்பிட முடிகிறது. இவற்றை நோக்குமிடத்து அக்காலத்தில் இவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் பொருளாதாரரீதியாக உயர்நிலையில் வாழ்ந்தார்கள் என்பதையும் ஊகிக்க முடிகிறது.


உரோம நாணயங்கள்
கந்தரோடையில் கண்டெடுக்கப்படும் நாணயங்களில் மிக அதிகமானவை கி.மு. 300க்கும், கி.பி. 200ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்குரிய உரோமப் பேரரசின் நாணயங்களாகும். கடந்த நூறு ஆண்டுகளில் தனிப்பட்ட சேகரிப்பாளர்கள் ஆயிரக்கணக்கான பண்டைய உரோம நாணயங்களை இங்கிருந்து எடுத்து வெளியே விற்றிருக்கிறார்கள். மழைக்காலங்களில் மண்ணைக் கரைத்துக்கொண்டு வரும் வெள்ளத்திலிருந்து பாடசாலை மாணவர்கள் பொறுக்கியெடுக்கும் இந்த நாணயங்களை பெரியவர்களிடம் கொடுத்துவிட்டுச் சில சில்லறைக் காசுகளைப் பெற்றுக்கொள்வார்கள். கந்தரோடையில் அகழ்வை மேற்கொள்ளும் அனைவருக்கும் தவறாமல் கிடைப்பது உரோம நாணயங்கள்தாம்.
கந்தரோடையில் போல் பீரிஸ் தொல்லியலாய்வை மேற்கொண்டபோது அவருக்கு முதன்முதலில் கிடைத்தது இரு உரோம நாணயங்கள். இதை அவரிடம் கொடுத்த பெண்ணின் பெயர் ராஜலக்ஸ்மி எனப் பதிவு செய்திருக்கிறார். அப்பெண் தனது தந்தையார் வீட்டு முற்றத்தைக் களிமண்ணால் மெழுகியபோது அதில் கண்ட நாணயங்களை பீரிஸ்ஸிடம் கொண்டுவந்து கொடுத்திருக்கிறார் (Pieris, P.E. 1919: 46).
அகழாய்வு செய்யாமலே தனது மேலாய்வுகளின் மூலமாகவும், மாணவர்களிடமிருந்து பெற்றும், இரு மாத காலத்தில் போல் பீரிஸ் 150 உரோம நாணயங்களைச் சேகரித்துக் கொண்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதைக்கொண்டே கந்தரோடையின் உரோம வர்த்தகம் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்து இருந்தது என்பதை நிச்சயமாக நம்பலாம்.
இந்த நாணயங்கள் வெவ்வேறு தேய்ந்த நிலையிலே காணப்பட்டன. மிகப்பழைய நாணயங்கள் முற்றாகத் தேய்ந்த நிலையிலே காணப்பட்டன. சற்றுப் பிற்கால நாணயங்கள் பாதுகாப்பான நிலையில் காணப்பட்டன. இந்த நாணயங்கள் நாணயவியல் வல்லுநர் கொட்டிங்ரனால் (H.W. Codrington) பரிசீலனை செய்யப்பட்டு இனம் காணப்பட்டன. நாணயங்களில் பதிவிடப்பட்ட உரோமச் சக்கரவர்த்திகள்: வலன்ரினியன் (கி.பி. 321-375), கொன்ஸ்ரன்ரைன் (கி.பி. 379-395), தியொடோசியஸ் I (கி.பி. 379-395), ஆர்க்கேடியஸ் (கி.பி. 395-408), தியொடோசியஸ் II (கி.பி. 408-450). இவர்களில் வலன்ரினியனுக்கும், இரண்டாம் தியோடோசியஸ்க்குமிடையிலே 40 நாணயங்கள் காணப்பட்டன (Pieris, P.E. 1919: 57). இந்த நாணயங்களைக் கொண்டு கந்தரோடையுடனான உரோமாபுரி வர்த்தகம் ஏறக்குறைய கி.பி. 450 ஆண்டுகள் வரை நீடித்ததாகக் கொள்ள முடிகிறது.
கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட உரோம மட்பாண்டங்களையும் உரோம நாணயங்களையும் நோக்குமிடத்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் மத்திவரை 700 ஆண்டுகளுக்கும் மேலாக கந்தரோடை (யாழ்ப்பாணம்) உரோம வர்த்தகத்தின் ஒரு முக்கிய மையமாக இருந்தது புலனாகிறது. கந்தரோடையின் நெடுங்கடல் வர்த்தகப் பொருளாதாரத்தில் உரோம வர்த்தகம் ஒரு முக்கிய பங்கினை வகித்திருக்கிறதையும் புரிந்துகொள்ள முடிகிறது.



கந்தரோடை அகழ்வுகளில் அதிகமாகக் காணப்படும் ஈயத்தினால், செப்பினால் அல்லது வெண்கலத்தினால் ஆன ஒரு பெண் தெய்வத்தின் உருவம் பதித்த இருபது முதல் முப்பது செ.மீ. (ஒரு அங்குலம்) உயரமான பட்டயங்கள், நாணயங்களா அல்லது வழிபாட்டிற்குரிய பதக்கவில்லைகளா என்ற சர்ச்சை ஆய்வாளர்களிடையே இருந்து வருகிறது. முன்னர் குறிப்பிட்ட இதுபோன்ற ஆறு அங்குல உயரமான பட்டயங்கள் நிச்சயமாக வணக்கத்திற்குரிய உருவங்கள். ஆனால் அதைப்போன்ற சிறிய உருவவில்லைகள் நாணயங்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றன.
இப்பட்டயங்களை நாணயங்களாகக் கருதி அவற்றிற்கு ‘லக்க்ஷ்மி நாணயங்கள்’ என்ற பெயரை வழங்கியவர் ஆய்வாளர் போல் பீரிஸ். அவர் கண்டெடுத்த பட்டயத்திற்கு அப்படிப் பெயரிட்டமைக்காக அவர் கூறும் காரணம் இது:
இப்படியான நாணயங்களை முன்னர் சிலாபத்தில் ஒரு தடவை கண்டதாகக்கூறும் பீரிஸ் கந்தரோடை நாணயம் தனித்தன்மையான கலைத்திறனும், சிறந்த வேலைப்பாடும் கொண்டதாகக் (Singularly artistic and of good workmanship) கூறுகிறார். ‘இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் ஒரு பெண்ணின் முழுஉருவம் காணப்படுகிறது. காதுகளில் தடித்த வளையமான காதணிகள் காணப்படுகின்றன. தனங்கள் முழுமையாக, எடுப்பாகவுள்ளன. இடுப்பில் அணிந்திருக்கும் மணிக்கற்கள் பதித்த கடிபந்தத்தின் ஒரு தலைப்பு இடது பக்கத்தில் தொங்குகிறது. கால்களின் அடியில் சலங்கைகள் காணப்படுகின்றன. முதல் பார்வையில் இந்த உருவம் நிர்வாணமாகத் தோற்றமளித்த போதிலும், உடலின் மேல் மெல்லிய ஆடையின் மடிப்புகளைக் காண முடிகிறது. கரங்கள் நீண்டு மணிக்கட்டுகளில் கங்கணங்கள் (காப்புகள்) காணப்படுகின்றன. இரு கைகளும் நீண்ட மரக்கொடியைப் பற்றியுள்ளன. இக்கொடியின் அடியிலுள்ள ஒரு கிளை, ஒரு மலர் மொட்டில் முடிகிறது. இருபக்கமும் உள்ள முக்கிய தண்டுகளில், மலர்கள் அந்த உருவத்தின் தோள்மட்டத்தில் இருபக்கத்திலும் பூத்திருக்கின்றன. இருபக்கமும் பூத்திருக்கும் மலர்களின்மேல் உட்கார்ந்திருக்கும் இரு யானைகள் அதன் துதிக்கைகளை அந்தப் பெண்ணின் தலைக்கு மேலாக அரைவளையமாகப் பிடித்திருக்கின்றன. இந்த உருவம் விக்ஷ்ணுவின் துணைவியான, செல்வத்தின் தெய்வமான லக்க்ஷ்மியின் வடிவம். வழக்கமாக இரு யானைகள் இரு குடங்களிலிருந்து அவள்மீது நீர் வார்ப்பதாகச் சித்திரிக்கப்படும். இது ஒரு வைக்ஷ்ணவச் சின்னமாகும் (Pieris, P.E. 1919: 52-53).
கந்தரோடையின் முக்கியத்துவம் அங்கே பெருவாரியாகக் காணப்படும் லக்க்ஷ்மி பட்டயங்கள் அல்லது நாணயங்களாகும். பெரும்பாலானவை செப்பினால் நீள்சதுர வடிவத்தில் செய்யப்பட்டவை. முன்பக்கத்தில் கையில் தண்டொன்றைப் பிடித்திருக்கும் பெண் தெய்வமும், மறுபக்கத்தில் ஒரு தண்டின்மேல் நிற்கும் சுவாஸ்திகா சின்னமும் கொண்டவை அதிகமாக உள்ளன. இதைத்தவிர பல்வேறு வடிவங்களில் இந்த நாணயங்கள் காணப்படுகின்றன. கந்தரோடையில் இவற்றின் தொகையைக் காணும் ஆய்வாளர்கள் இந்த நாணயங்கள் செய்யப்பட்ட இடமே கந்தரோடை எனக் கருதுகிறார்கள். இந்த நாணயங்கள் கி.மு. 300 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 300 ஆம் ஆண்டுவரை 600 ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்திருக்கின்றன.
இந்த நாணயங்களில் காணப்படும் சுவாஸ்திகா சின்னம், தமிழ்நாட்டின் பெருங்கற் புதையல்களில் உலோக உருவங்களாகவும், மட்பாண்டத் துண்டுகளில் ‘கிராபிற்றி’ கீறல்களாகவும், இந்திய – இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது (Ragupathy, P. 1987: 57). லக்க்ஷ்மி நாணயங்கள் ஆனைக்கோட்டைப் பெருங்கற் புதையல்களிலும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
‘ரௌலெற்ரெட்’ கலன்கள் பொதுயுகத்திற்கு முற்பட்ட ஆயிரத்தாண்டில் கிரேக்க – உரோம – இந்தியத் துணைக்கண்ட வர்த்தகத்தின் தனித்துவமான அடையாள உருவங்களாகக் (Iconic markers) கணிக்கப்படுகின்றன. இவ்வகைக் கலன்கள் கிண்ணங்களாகவும், தட்டுகளாகவும் காணப்படுகின்றன. தூய்மையான மெருகேறிய களிமண்ணிலாலான இக்கலன்களின் உட்பக்கம் பளபளப்பான கறுப்பு நிறமாகவும், வெளிப்பக்கம் மினுமினுக்கும் குங்குமப்பூ நிறமாகவும் காணப்படும். கலன்களின் உட்பக்கத்தில் காணப்படும் நேர்த்தியான கோலங்கள் ‘ரௌலெற்றுகள்’ எனப்படும். அதன் காரணமாக இவை ‘ரௌலெற்ரெட்’ கலன்கள் என அழைக்கப்படுகின்றன. இக்கலன்களைச் சில்லில் வைத்து வனையும் காலத்திலே, பாத்திரம் வனைந்து முடிந்து சூளையில் இடமுன்னர், சில்லில் வைத்து மெல்ல உருட்டியபடியே இந்த ‘ரௌலெற்ரெட்’ கோலங்கள் வரையப்படுகின்றன. இக்கோலங்கள் பல வகையான கோடுகளையும் உருவரைகளையும் (Designs) கொண்டிருக்கும். ஏராளமான ரௌலெற்ரெட் கலவோடுகள் கந்தரோடை, ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணக்கோட்டை, பூநகரி மற்றும் யாழ்ப்பாணக் கடற்கரை மையங்களிலும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
இக்கலன்களில் ஆதியான பாண்டங்கள் பொ.யு.மு. 500 ஆம் ஆண்டுக் காலத்திலிருந்து கிரேக்க மாலுமிகளால் கொண்டுவரப்பட்டவை. பெ.யு.மு. 300 ஆம் ஆண்டிலிருந்து பொ.யு. 300 ஆம் ஆண்டுவரை, 600 ஆண்டுகளாக உரோமாபுரி வர்த்தகத்தின் முக்கியமானதொரு ஏற்றுமதிக்கலனாக இது விளங்கியிருக்கிறது (Krishnan & Coningham 1997: 925).
தமிழ்நாட்டில் அரிக்கமேட்டில் அகழாய்வை மேற்கொண்ட பிரித்தானியத் தொல்லியலாய்வாளர் மோட்டிமர் வீலர் இம்மாதிரியான ரௌலெற்ரெட் மட்பாண்டங்கள் உரோம ‘அறிற்றைன்’ பாண்டங்களுடனும், உரோம மதுச்சாடிகளுடனும் ஒரே அகழ்வு மட்டத்தில் காணப்பட்டபடியினால் இவை உரோம மட்பாண்டங்கள் என முடிவெடுத்தார் (Ford et al. 2005: 911).
காலப்போக்கில் இதை நிகரொத்த (Duplicate) ரௌலெற்ரெட் மட்பாண்டங்கள் அரிக்க மேட்டிலும், இலங்கையில் அநுராதபுரத்திலும், வட இந்தியாவின் வங்காளத்தில் சந்திரகேதுகார் என்ற இடத்திலும் தயாரிக்கப்பட்டன (Krishnan & Coningham 1997: 925; Gogte, V.D. 1997). இவை கி.மு. 200 ஆம் ஆண்டிலிருந்து அரிக்கமேட்டிலும் தயாரிக்கப்பட்டதாக ஆய்வாளர் விமலா பெக்லி கணித்துள்ளார் (Begley 1983; Schenk 2006). இவை “உள்ளூரில் தயாரிக்கப்பட்டபோதிலும், அதன் அலங்கார வடிவில் மத்தியதரைச் செல்வாக்கு காணப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார் (Begley, V. 1983, 1988).
அகழாய்வுகளின்போது கந்தரோடையில் காணப்படும் ‘ரௌலெற்ரெட்’ மட்பாண்டங்கள் உரோம நாணயங்களுடன் அதே அடுக்கமைவுப் படுகை மட்டங்களில் காணப்படுவதனால், இந்த மட்பாண்டங்களை மெய்யான உரோமக்கலன்களாகக் (Genuine Roman ware) கொள்ளலாம். 1967 ஆம் ஆண்டில் தனது கந்தரோடை மேலாய்வுகளில் இக்கலன் துண்டுகளைப் பரிசோதித்த விமலா பெக்லி இவற்றை உரோமக்கலன்களாகவே கருதினார் (Begley, V. 1967).
இரகுபதி தனது 1987 ஆம் ஆண்டின் ஆய்வுகளில் கந்தரோடையைத் தவிர ரௌலெற்ரெட் மட்பாண்டங்கள் காணப்பட்ட இடங்களெல்லாம் கடற்கரையை அண்டிய மையங்கள் எனக் கூறியுள்ளார். இவற்றில் கந்தரோடையில் காணப்பட்ட பெருந்தொகையான உரோம மட்பாண்டக் கலவோடுகளை அடிப்படையாகக்கொண்டு, இது ஒரு பெரிய வர்த்தக மையமாகவும் இருந்திருக்க வேண்டும் என எண்ண வேண்டியுள்ளது. இந்த மட்பாண்டங்கள் ஆரம்பகால கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், மற்ற வகையான கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், ஆரம்பகால சிவப்பு மட்கலன்கள், தடித்த விளிம்புக் கலன்கள் ஆகியவற்றுடன் வெவ்வேறு அடுக்கமைவு மட்டங்களில் காணப்படுவதால், இவற்றின் ஆரம்பகாலம் கி.மு. 500 ஆம் ஆண்டுக்காலம் எனக் கொள்ளலாம்.
கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட உரோம மட்கலன்களில் ‘உரோமச் சிவப்பு’ என அழைக்கப்படும் மட்கலன்கள் முக்கியமானவை. இக்கலன்கள் செய்யப்பட்ட களிமண்ணில் அதிகளவில் இரும்புக் கனிமங்கள் கலந்திருப்பதனால், அவற்றைச் சூளையிலிட்டுச் சுடும்போது கடுஞ்சிவப்பு நிறத்தைப் பெறுகிறது. கந்தரோடையில் இம்மட்கலன்கள் உரோம ரௌலெற்ரெட் கலன்களுடனும், மற்றைய உள்ளூர் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களுடனும், அதே அகழ்வு மட்டங்களில் காணப்படுவதனால், இவை ரௌலெற்ரெட் மட்பாண்டங்களின் காலத்திற்கு உரியவை எனக் கணிப்பிடலாம்.
தொடரும்.