ஆங்கில மூலம்: ஏ.ஜே. வில்சன்
வடக்கு மாகாணத் தமிழர்கள் பங்கேற்றிருந்தால், மாகாணத்திலிருந்து குறைந்தபட்சம் ஒரு தமிழராவது சபையில் இடம் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது என்றாலும் உண்மையில் இது கேள்விக்குரியது. ஏனென்றால், கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு தமிழ் இடங்களுக்கும் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அமைச்சரவைக்குத் தேர்ந்தெடுக்க இரண்டு கிழக்கு மாகாணத் தமிழர்கள் இருந்தனர். ஆயினும் இந்த இருவரும் அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அமைச்சர்கள் குழுவில் இருந்த அந்த இரண்டு சிறுபான்மை இனப் பிரதிநிதிகளும், அரசியலமைப்பை மேலும் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற ஒருமித்த கோரிக்கையைக் காலனிகளுக்கான வெளியுறவுத்துறைச் செயலாளரிடம் முன்வைக்கும் முயற்சியில், தங்களது சிங்கள சகாக்களுடன் ஒத்துழைக்கவில்லை. எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் சீர்திருத்தப்பட்ட எந்தவொரு அரசியலமைப்பிலும், சிறுபான்மையினருக்குச் சரியான பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதையே இந்த இரண்டு அமைச்சர்களும் உறுதிப்படுத்த விரும்பினர். இத்தகைய மாறுபட்ட கருத்துகளைத் தவிர்க்க, 1936 பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஒரு பரந்த சிங்கள (Pan-sinhala) அமைச்சர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன்மூலம் அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக ஒரு செயற்கையான, பொதுக்கருத்துப் பெற்றுக்கொள்ளப்பட்டது. கூடவே இதன்மூலம், இந்த ‘அகன்ற சிங்கள’ சபையானது, கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட எல்லா வளங்களிலும், பொதுச் சேவைகளுக்கான நியமனங்களிலும் முடிந்தளவுக்குப் பெரும்பான்மை இனத்தவர்களுக்குகே அவை கிடைக்ககக்கூடிய விதத்திலான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. ஆயினும் வெள்ளையர்களுக்கோ, இந்த நடவடிக்கைகள் எவையும் பாரபட்சமானவை என்பதற்கான போதுமான சான்றுகளாகப் படவேயில்லை.
இருப்பினும், பிரச்சினை தொடர்பாக இன்னும் பல அடிப்படையான கேள்விகள் இருந்தன. சர்வஜன வாக்குரிமை, பிராந்தியரீதியாக அமைக்கப்பட்ட தேர்தற் தொகுதிகள் மூலமான சிங்கள இனப் பெரும்பான்மையினரின் ஆட்சி என்பவை அறிமுகப்படுத்தப்பட்டன. இனப் பெரும்பான்மையினரின் பிரதிநிதிகளிடம், சிறுபான்மை இனத்தினரைச் சமரசம் செய்து மீளிணைத்துக் கொள்ளும் அதேவேளை, தங்கள் சொந்தத் தொகுதியினரான பெரும்பான்மை மக்களை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்ற கேள்வி எழுந்தது. சர்வஜன வாக்குரிமை உருவாக்கப்பட்ட ஆண்டுகளில் இந்தப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை; அதற்குப் பதிலாக, 1505 ஆம் ஆண்டு முதல் மேற்கத்தியர்களான போர்த்துகீசியர்கள் வந்ததிலிருந்து காலனித்துவச் சக்திகளின் ஒடுக்குமுறை காரணமாகப் பாதிக்கப்பட்ட சிங்களப் பெரும்பான்மையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வைச் சரிசெய்யத் தாம் முயற்சிப்பதாகக் கூறி, சிங்களத் தலைவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வந்தனர். இரண்டு பெரிய இனக்குழுக்களின் உயரடுக்கினருக்கும் இடையேயான ‘சமூக- கூட்டுறவு’ தொடர்பாகச் செய்யப்படும் ஓர் ஆய்வு முயற்சியினூடாக, முன்னர் இருந்த உரசல்களையும், கசப்புகளையும் தடுத்திருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கவே செய்தது. ஆனால், மாறாக, ‘தனித்தனியான சுயாட்சி’யோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் பெரும்பான்மை இன சமூகத்தின் உயரடுக்கினரால் கடுமையாக எதிர்க்கப்படுவதே நடந்தது.
இனரீதியாக ஒரே இனத்தவர்களைக் கொண்ட குழுவை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைச் சிங்கள அமைச்சர்கள் குழு தெரிவித்தபோது, (அதன் நோக்கம் பற்றிய) சந்தேகமோ ஊகிக்கும் திறமையோ அற்ற ஆளுநரான சேர். அன்ரூ கல்டேகொட், அது தொடர்பாக எத்தகைய மறுத்துரைப்புமின்றி வாளாவிருந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம், இந்த அமைச்சர்கள் குழுவின் (1931-6) கோரிக்கைகளை, அவர்களிடையே எந்தவகையான உடன்பாடோ கருத்து ஒருமித்ததன்மையோ இல்லாத காரணத்தால், ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது என்று அவர்கள் கூறினர்.

சோல்பரி கமிஷன், ‘பெரும்பான்மையினரின் செயல், சிறுபான்மையினருக்குத் தீங்குவிளைவிக்கும் வகையில், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு கொள்கையை வெளிப்படுத்தியிருப்பதாகவே குறிப்பிடப்படலாம்’ என்று கூறியது. அதேநேரத்தில் கமிஷனின் உறுப்பினரான சேர். பிரடெரிக் ரீஸ், சில ஆண்டுகளுக்குப் பிறகு, “சிங்களவர்கள் ஆதிக்கத்தையே நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதை சிறுபான்மையினர் இயல்பாகவே முன்னெப்போதையும்விட அதிகமாகவே புரிந்துகொண்டிருந்தனர்” என்று குறிப்பிட்டார். தவிரவும், டொன் ஸ்ரிபன் சேனநாயக்காவின் அரசியலமைப்பு ஆலோசகராகச் செயல்பட்ட சேர். ஐவர் ஜென்னிங்ஸ் எழுதினார்: “1936 ஆம் ஆண்டு சிங்களவர்களைக்கொண்ட ‘பரந்த-சிங்கள’ அமைச்சரவையைவிடக் குறைவான, அவர்களைத் திருப்திப்படுத்தும் எதையும் கற்பனை செய்வது கடினம். இவை அனைத்தும், எங்களுக்கு 1921 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் சிதைவுண்டபோது சேர். பொன்னம்பலம் ராமநாதன் வெளிப்படுத்திய கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் விடக்கூடிய நிலைமையைக் கடினமாக்கிவிட்டுள்ளது:

“இந்த [சிங்களத்] தலைவர்கள், அமைச்சகங்கள், அதிக சம்பளம், ஏராளமான ஆதரவுடனான சுயராச்சியம் என்பவற்றிற்கான சாத்தியங்களைக் கண்டபோது, சிறுபான்மைச் சமூகங்கள் போதுமான பிரதிநிதித்துவத்தையும், நிர்வாகத்தில் அவர்கள் பங்குபெற்றுக் கொள்வதையும் தவிர்க்கவே முயன்றனர்.”
1954 இல் சேர் பிரடெரிக் ரீஸ் துல்லியமாக இதுபற்றி இவ்வாறு எழுதினார்: “டொனமூர் ஆணைக்குழுவினர்கள் பிராந்தியப் பிரதிநிதித்துவத்துக்கு ஆதரவான ஒரு முடிவுக்கு வந்தததற்கான காரணம், ஒருவகையில் ஒரு பாரம்பரியக் கட்டமைப்பில் மேற்கத்திய யோசனையொன்றின் தாக்கம் எப்படி அமையும் என்பதைப்பற்றிய முழுமையான உணர்திறன் அவர்களிடம் இருக்கவில்லை என்பதாலாக இருக்கக்கூடும்.”
முன்மொழியப்பட்டிருந்த ஒற்றையாட்சி அரசியல்முறைமை காரணமாக ஏற்படக்கூடிய பரந்துபட்ட மக்கள் கிளர்ச்சிகளைச் (அல்லது எழுச்சிகளைச்) சுட்டிக்காட்டக்கூடிய ஏராளமான சான்றுகள் இருந்தபோதிலும், ஏகாதிபத்தியவாத விசாரணை நடுவர் ஒரு மிக இலேசான, ஒருவகை அலட்சியப்போக்கையே கடைப்பிடிக்க விரும்பினார். 1937 நவம்பர் மாதம், காலனிகளுக்கான வெளியுறவுச் செயலாளர் ஓசம்ஸ்பி கோர் (Ormsby Gore), ஆளுநர் கல்டெகட்டிடம், ஏனைய பலவிடயங்களுடன் சேர்த்து (1) மேலதிக விளக்கங்களுக்காக, ஆளுநருக்கான விசேட அதிகாரங்கள் (2) நிறைவேற்றுக்குழுக்களும், மாநில சபைகளும் (3) சிறுபான்மைச் சமூகங்களும் அவர்களின் பிரதிநிதித்துவமும் (4) வாக்குரிமை – ஆகியவற்றையும் கவனத்துக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நேரத்தில் கல்டேகொட் அவர்கள், ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களாலும் அவரது தமிழ் ஆதரவாளர்களாலும் தொடங்கப்பட்டிருந்த சமச்சீரான பிரதிநிதித்துவத்திற்கான (‘ஐம்பதுக்கு ஐம்பது’ என்று அழைக்கப்பட்டது – சட்டமன்றத்தில் 50 சதவீத இடங்கள் சிங்களப் பெரும்பான்மையினருக்கு ஒதுக்கப்படுவதையும், மீதமுள்ள 50 சதவீதம் சிறுபான்மை சமூகங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுவதையும் இது குறிக்கிறது.) பிரசாரத்தின் தாக்கத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பெரும்பான்மைச் சிங்கள இன மக்களின் ‘கோபத்தை’க் கட்டுப்படுத்த இதுவே ஒரே வழி என்று பொன்னம்பலம் நம்பினார். ஆயினும், அவரது இந்தத் கோரிக்கையின் தர்க்கத்தால் கல்டேகொட்டோ அல்லது சோல்பரி ஆணைக் குழுவினர்களோ ஈர்க்கப்படவே இல்லை. கூடவே, இந்த அதிகாரத்தின் ஆணவத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற ஓர் உறுதியான வழியைப் பரிந்துரைப்பதற்கு இந்த ஏகாதிபத்திய நடுவர்களும் தயாராக இருக்கவில்லை. சுதந்திரங்களுக்கான சாசனம், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பேணுவதற்கான அதிகபட்சப் பாதுகாப்பு போன்ற விடயங்கள் பயனுள்ள சோதனைகளாக இருந்திருக்க முடியும். ஆனால் கல்டேகொட்டும் சோல்பரி ஆணைக்குழுவினர்களும் வித்தியாசமாகச் சிந்தித்தார்கள். நிறைவேற்றுக்குழு அமைப்பை, சற்று மாற்றியமைக்கப்பட்ட ஓர் அமைச்சரவை அரசாங்கத்துக்கு மாற்றுமாறு, கல்டேகொட் பரிந்துரைத்தார். சமச்சீர்ப் பிரதிநிதித்துவத்திற்கான கோரிக்கைக்கு அவர் தனது முழுமையான எதிர்ப்பையும் தெரிவித்தார். ஆனால், டொனமூர் அரசியலமைப்புக்குப் பின்னான அரசியலமைப்பு உருவாக்குதலில் ஈடுபட்டவர்களுள், ஐம்பதுக்கு ஐம்பது என்ற கோரிக்கைக்குப் பதிலான ஒரு மாற்றாக சிறுபான்மையினது பிரதிநிதித்துவத்தில் ஒரு வகையான அதிகப்படுத்தல் (Weightage) என்ற யோசனையை முதன்முதலில் கொண்டுவந்தவரும் அவர்தான். கல்டேகொட்டின் இந்தப் பரிந்துரை பின்னர் அரசியலமைப்புத் திட்டத்தை வகுக்கும்படி அமைச்சர்கள் குழுவிடம் கேட்கப்பட்டபோது, சேர். ஐவர் ஜென்னிங்ஸ் அவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டு மாற்றப்பட்டது. 1943 மே 26 அன்று மாட்சிமை தங்கியவரது (பிரித்தானிய மன்னர்) பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில், அது மாநிலச் சபையின் அதிகாரிகள், சபாநாயகர் அல்லது பிற தலைமை அதிகாரிகளைத் தவிர்த்து, சபையின் உறுப்பினர்களில் 75 சதவீத உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால், அந்தத் திட்டத்தைச் செயற்படுத்த முடியும் என்று பிரித்தானியா ஒப்புக்கொண்டது. இதற்கிடையில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும் மாநில கவுன்சிலின் தலைவருமான சேர். டொன் பரோன் ஜெயதிலகா 1943 இல் புது டில்லியில், இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியாகச் செல்வதற்காகப் பதவி விலகியபோது, ‘பரந்த-சிங்கள’ அமைச்சர்கள் குழுவில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக, இலங்கைத் தமிழரான (சேர். பொன்னம்பலம் அருணாசலத்தின் மகன்) அருணாசலம் மகாதேவா, முதன்மையான இலங்கைத் தமிழ் யாழ்ப்பாணத் தொகுதியின் மாநில சபை உறுப்பினராக, தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாதேவாவின் தெரிவை, அவர்களது மனமாற்றத்திற்கான ஒரு சான்றாகக் கொள்ளமுடியாது. இன ஒற்றுமை தொடர்பான குற்றச்சாட்டைத் திசை திருப்புவதிலேயே சபை ஆர்வமாக இருந்தது.
1943 மே 26 ஆம் திகதியப் பிரகடனத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரையறைகளுக்கு அமைய ஓர் அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் அமைச்சரவை இப்போது இறங்கியது. சேர். ஐவர் ஜென்னிங்ஸ் ஆலோசகராகவும், சட்ட வரைவாளராகவும் செயற்பட்டார். அமைச்சர்களது வரைவுத் திட்டம் (அமர்வு அறிக்கை – XIV, 1944) என்று அழைக்கப்பட்ட அந்த அறிக்கையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பொது ஊழியர்கள், நீதிபதிகள் போன்ற வேலைகளுக்கான ஆட்சேர்ப்பை மேற்கொள்ளவும், நியமிக்கவும் சுயாதீன அமைப்புகள் பொறுப்பாக இருக்கும். இவற்றின்மூலம், சிறுபான்மைச் சமூகங்களுக்கான பல்வேறு பாதுகாப்புகள், அரசியலமைப்பில் எந்தவொரு திருத்தத்தையும் இயற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் ஒரு கடுமையான அரசியலமைப்பு, இனச் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்திற்கான எடையை வழங்கும் பிரதிநிதித்துவத் திட்டம் ஆகியவை இந்த வரைபில் அடங்கியிருந்தன. 101 உறுப்பினர்களைக்கொண்ட இந்தச் சபையில் இலங்கைத் தமிழர்களுக்கு 12-14 இடங்களும், இந்தியத் தமிழர்களுக்கு 10-8 இடங்களும், முஸ்லிம்களுக்கு 6-4 இடங்களும் வழங்கப்பட்டிருக்கும்.
இருப்பினும், சுதந்திரம் அடைந்த சில மாதங்களுக்குள், டொன் ஸ்டீபன் சேனநாயக்காவின் அரசாங்கம் (1947-52) 1948 ஆம் ஆண்டுக் குடியுரிமைச் சட்டத்தையும், 1949 ஆம் ஆண்டு இந்திய மற்றும் பாகிஸ்தானிய குடியிருப்பாளர்கள் (குடியுரிமை) சட்டத்தையும் இயற்றியது. இவை இரண்டும் பிரதிநிதித்துவத்துக்கான நிலைமையை முற்றிலுமாக மாற்றியமைத்தன. சிங்கள அரசியல் விஞ்ஞானி ஐ.டி.எஸ். வீரவர்த்தன, ‘சிறுபான்மையினர்களும் குடியுரிமைச் சட்டமும்’ என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியர்களின் வாக்குரிமைப் பறிப்பு “அனைத்துச் சிறுபான்மையினருக்கும் மறுக்கப்பட்ட ஓர் உறுதிமொழியே” என்று சரியாகவே குறிப்பிட்டிருந்தார். தவிரவும், “சோல்பரி அரசியலமைப்பின் தார்மீக அடிப்படை ஒற்றையாட்சி அரசாக இருந்து வருகிறது.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வளர்ந்து வரும் அரசியற் சூழ்நிலை குறித்த வீரவர்த்தனவின் யதார்த்தமான மதிப்பீடு இதுவாக இருந்தபோதும், பிரதிநிதித்துவத்தில் அதிக முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பது சிறுபான்மைச் சமூகங்களுக்கு இன்னும் அதிக சிறப்பாக இருக்கும் என்று நம்பிய சோல்பரி ஆணையாளர்கள், உண்மையில் ஏமாற்றப்பட்டிருந்தனர். அவர்களின் அறிக்கையின் பத்தி 270 இல், அவர்கள் இவ்வாறு எழுதினார்கள்:
“இந்தத் திட்டத்தின் செயற்பாட்டை விளக்குவதற்குப் புள்ளிவிவரங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் எங்களுக்கு முன் வந்த பல சாட்சிகளின் உதவியுடன் நாங்கள் அதை ஆராய்ந்தோம். இதன் விளைவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 95 இடங்களில், 58 சிங்கள வேட்பாளர்கள், இலங்கைத் தமிழர்கள் 15, இந்தியத் தமிழர்கள் 14, முஸ்லிம்கள் 8 பிரதிநிதித்துவம் செல்லும் என்றும், 6 பரிந்துரைக்கப்பட்ட இடங்களுடன் 101 பேர் கொண்ட சபையில் 43 பேர்களைக் கொண்ட சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் இருக்கும் என்றும் அதன் பரிந்துரைப்பாளர்கள் மதிப்பிடுகின்றனர்”.
இத்தகைய திட்டத்தின்கீழ், சிறுபான்மையினரின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், சிறுபான்மை குழுக்கள் ஒன்றிணைந்து, இனப் பெரும்பான்மையினர் தங்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்கலாம் என்று நிச்சயமாக வாதிடலாம். சிறுபான்மையினர் ஒற்றுமையாகச் செயற்பட முடிவு செய்திருந்தால், சட்டமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது சிங்களப் பெரும்பான்மைக்குக் கடினமாக இருந்திருக்கும்.
இருப்பினும், இது நடக்கவில்லை. சுதந்திரத்திற்குப் பிந்தைய தசாப்தங்களில், சிங்களவர்கள்சார்ந்த ‘தேசிய’ கட்சிகள் (சிங்களவர்களைப் பெரும்பான்மையகக் கொண்ட தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் என்று பொருள் கொள்கிறோம்.) இந்தியத் தமிழ் மக்களின் வாக்குரிமையைப் பறித்த பிறகு, அவர்களுக்குச் செல்லவிருந்த 8-14 இடங்களை இணைத்து, பின்னர் இனப் பெரும்பான்மையினருக்குச் சாதகமான வாய்ப்புகளை வழங்கும் சட்டத்தை இயற்றியதற்கான சான்றுகள் உள்ளன.
இது மட்டுமே ஒரு வழியாக இருக்கவில்லை. சோல்பரி கமிஷன், பிரதமரைக்கொண்ட முறைமையிலான ஓர் அரசாங்கத்தினை வழங்கியது. இதன் காரணமாக, ஒரு பிரதமர் அவரின்கீழ் இயங்கும் அமைச்சரவை இலாகாக்கள், பொதுச் சேவைகள், பொதுத் துறைகளுக்கான முக்கியமான நியமனங்கள் உள்ளிட்ட அனைத்தினதும் ஆதரவைப் பெறுகிறார். அவரே, கௌரவங்களும் பட்டங்களும் பதவிகளும் வழங்கும் ஒரு பேரூற்றாகவும் மாறுகிறார். சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த முன்னணி உறுப்பினர்களை, அரசாங்கப் பதவிகளில் இணைத்துக் கொள்வதற்கு இதைவிடச் சிறந்த வழி எதுவும் இல்லை.
இந்தியத் தமிழர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின்கீழ், சிறுபான்மை இனக்குழுக்களுக்கு இருந்த கூடுதல் இடங்களுக்கான ஏற்பாடு இல்லாமலாகிவிட்டது. இது அரசியலமைப்பில் இருந்த, இணக்கப்பாட்டுடன் கூடிய செயற்பாடுகள் மூலமாக உருவாகியிருக்கக்கூடிய, நல்லிணக்கச் சூழலையும் சீர்குலைவுக்கு உள்ளாக்கியிருந்தது. ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ (Westminster) மாதிரியைத் தழுவுவதில் தீவு வெற்றிபெறும் என்று சோல்பரி ஆணையர்கள் நம்பியதற்கு நான்கு காரணங்கள் இருந்தன:
1. அரசியலமைப்பின் பிரிவு 29 (2) ‘அமைச்சரின் வரைவுத் திட்டத்தி’லிருந்து எடுக்கப்பட்டு, சிறுபான்மையினருக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்க ஆணைக்குழுவினர்களால் மறுசீரமைக்கப்பட்டமை. பிரிவு 29 (2) இனை, ஒட்டுமொத்தமாக ஓர் உரிமைகள் குறித்த மசோதா எப்படி இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் பார்த்தால், அது முற்றிலுமே வலுவிழந்த ஒரு வடிவமாகும். இலங்கை நாடாளுமன்றம், வேறெந்த இன, மதக் குழுக்களுக்கும் இல்லாத வகையில், ஒரு குறிப்பிட்ட இன அல்லது மதக் குழுவிற்கு மட்டும் எதிராகவோ பாரபட்சமாகவோ சட்டம் இயற்றுவதைத் தடுத்தது. ஒரு சக்திவாய்ந்த பௌத்த அழுத்தக் குழுவான ‘பௌத்த ஜாதிக பலவேகய’, பிரிவு 29 (2) (d) இன் விதிமுறை, “ரோமன் கத்தோலிக்கர்களின் கருத்துகளைத் திருப்திசெய்வதற்காக இறுதி வரைவின்போது இலேசாகத் திருத்தப்பட்டது’ என்று குற்றம் சாட்டியது. இறுதியாக, பிரிவு 29 (2), 1972 இல் ஒரு புதிய குடியரசுக்கான சுதந்திரமான அரசியலமைப்பு இயற்றப்பட்டபோது நீக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பின் VI ஆம் அத்தியாயத்தில் ‘அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும்’ என்ற அறிக்கை அமுலுக்கு வந்தது. ஆனால் பிரிவு 18 (2) இல் உள்ள ஒரு முழுமையான அறிக்கையால் அதன் மதிப்பு இவ்வாறு குறைக்கப்பட்டது:
அடுத்துவந்த 1978 அரசியலமைப்புச்சட்டமும், உச்சநீதிமன்றத்திற்கு இதேபோன்ற அதிகாரங்களை வழங்கியது (பிரிவுகள் 120-6). கோட்பாட்டளவில், இந்த நீதிமன்றம் 1972-8 அரசியலமைப்பின் போதான நீதிமன்றத்தைவிட, அரசியல் தலையீட்டிலிருந்து அதிகளவு சுதந்திரமாக இருந்தது. இருப்பினும், அடிப்படையில் நீதிமன்றத்தின் முடிவுகள் விவாதத்திற்குத் உள்ளாக்கப்படக் கூடியவையாக இருந்ததன் விளைவாக, நாட்டின் உச்சநீதிமன்றம் அரசியல்ரீதியாக சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறிவிட்டிருந்தது.
2. பெரும்பான்மைக் குழுவினரின் தலைவர், இனச் சிறுபான்மையினர்களுக்குச் சாதகமாகச் செயற்படுவார் என்று சோல்பரி ஆணைக்குழுவினர் நம்பிக்கை கொண்டிருந்தனர். உண்மையில், பிரிட்டன், டொன் ஸ்டீபன் சேனநாயக்காவுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளது என்று அவர்கள் நம்புவதற்கான காரணம் அவர்களிடம் இருந்தது. தவிரவும், அவர் இலங்கையில் பிரிட்டிஷ் நலன்களுக்கு ஒரு பாதுகாப்பான நண்பர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். தங்கள் அறிக்கையில் அவர்கள் இவ்வாறு எழுதினர்:
“மேற்கத்திய மாதிரிகளைப்போன்று இலங்கையில் கட்சிகள் உருவாகும்வரை, பெரும்பான்மைக்குழுவின் தலைவர், அரசாங்கத்தை அமைக்கும்போது, சிறுபான்மையினர்களின் பிரதிநிதிகளுக்கு அரசாங்க இலாகாக்களில் ஒரு பகுதியை வழங்குவார் என்றும், அந்தப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில், அவர்களைச் சேர்ந்த குழுவின் அல்லது குழுக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கலந்தாலோசித்துச் செயற்படுவார் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”
சேனநாயக்காவால்கூட தனது அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான பிரதிநிதிகளுக்காக இலங்கைத் தமிழர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்களைக் கொண்ட யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கு வெளியே உள்ள தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு தனிநபர்களை (மன்னாரும், வவுனியாவும் – இந்த இரண்டு இலங்கைத் தமிழர்களும் ஒன்றில் விசித்திரமானவர்கள் அல்லது சுயநலவாதிகள்.) இலாகாக்களை ஏற்பதற்காக அவர் நியமித்தார். 1948 ஆம் ஆண்டில், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் சேவைகளைப் பெறுவதில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் 1956 முதல் இன்றுவரை எந்தவொரு இலங்கை அரசாங்கத்திலும், தமிழர் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இலங்கைத் தமிழர்கூட இருக்கவில்லை.1
3. இடதுசாரிக் கருத்துகளின் வளர்ச்சி ஏற்கனவே இன அல்லது மத ஒற்றுமைக்கான ஒரு கரைப்பானாக உள்ளது என்று சோல்பரி ஆணைக்குழுவினர்கள் நம்பினர். ஆயினும், அவர்களின் நம்பிக்கைகளை நனவாக்குவதற்கான எந்த வாய்ப்பும் கிட்டவில்லை. கட்சிகள், இன, மத அடிப்படையில் ஒன்றிணையும் முனைப்பிலேயே இருந்தன; ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி, தமிழ் கூட்டாட்சிக் கட்சி (இப்போதைய தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஓர் அங்கம்), தொழிற்சங்கங்களை அடிப்படையாகக்கொண்ட இந்தியத்தமிழ் அரசியல் அமைப்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவற்றுடன் இன அடிப்படையில் ‘வர்ணம் பூசப்பட்ட’ பல சிறிய கட்சிகள் என்றவகையில் இருந்தமை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இடதுசாரிக்கட்சிகள்கூட சிங்கள – பௌத்த சார்பு நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டிருந்தன; இவற்றில், ஒருகாலத்தில் இனப்பிரச்சினையில் தாராளவாத அணுகுமுறையைக் கொண்டிருந்த ட்ரொட்ஸ்கிச, கம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட அடங்கும்.
4. இறுதியாக, பொதுச் சேவைகள் ஆணையகம், நீதித்துறைச் சேவைகள் ஆணையகம், இரண்டாவது சபையான செனட்சபை ஆகியவை, ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட விருப்புரிமை அதிகாரங்களைக்கொண்டு (உள் சுயராச்சியத்தின் வரையறுக்கப்பட்ட கட்டமைப்பில்), சுயாதீனமாக இயங்கும் என நம்பக்கூடிய நியமனங்களைக் கொண்டிருக்கும் என்று சோல்பரி ஆணைக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால், பின்னர் வைற்ஹோல் (Whitehall) இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து இருக்க வேண்டும் என்று முடிவு செய்ததன் காரணமாக, ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், ஒரு மாநிலத் தலைவராக ஆக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் தனது பிரதமரின் ஆலோசனையின்படி வழிநடத்தப்படும் ஒருவராகச் செயற்பட வேண்டியிருந்தது.
இதனால், சோல்பரி ஆணைக்குழுவினால் கற்பனை செய்யப்பட்ட ஒற்றையாட்சி அரசு, தமது தவறான வரலாற்று நியாயங்களின் அடிப்படையில், தமக்கானவை எனக்கருதிய உரிமைகளைக் கோரிநின்ற இனப் பெரும்பான்மையினரிடமிருந்து பெரும் அலைபோலத் திரண்டுவந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, அதன் பாதுகாப்புப் பொறுப்புகளிலிருந்து பறிக்கப்பட்டது. அதன் இடத்தில், முதலில் அமைச்சரவையின் சர்வாதிகாரமும் (1948-77) பின்னர் (ஜனாதிபதி ) நிறைவேற்றதிகாரம் கொண்ட குடியரசுத் தலைவரின் (1977) அதிகாரமும் என மாற்றப்பட்டமையானது, இலங்கைத் தமிழ் இனச் சிறுபான்மையினரை, அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பரிச்சயமற்றிருந்த ஒரு பெரும்பான்மை இனத்தவரின் தயவில் இருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டிருந்தது.
ஒற்றையாட்சி அரசின் வரலாற்றுரீதியான தோற்றங்கள், சமூக மட்டத்தில், மொழியின் ஒருமைப்பாட்டையும் மதப் பெரும்பான்மை வாதத்தையும் அங்கீகரிப்பதாகும். பிரிட்டனில் ஒற்றையாட்சி அரசு தோன்றியபோதும் இது நடந்தது. ஆனால் அந்தக்கருத்து காலப்போக்கில் மாற்றமடைந்துள்ளது. ஒற்றையாட்சி அரசு பல சந்தர்ப்பங்களில் மதச்சார்பற்ற கருத்தை ஏற்றுக்கொண்டு, ஒற்றைமொழியைக் கொண்டதாகவோ அல்லது அரசு அங்கீகரித்த ஒரு பெரும்பான்மை மொழிக்குப் பதிலாக, பன்மொழிப் பயிலுகையை ஏற்றுக்கொண்டதாகவோ இருக்கிறது. உண்மையில் ஒற்றையாட்சி அரசின் கருத்து சில சந்தர்ப்பங்களில் கூட்டாட்சி அரசுக்கான விடயங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது. அரசுகளது முயற்சிகளின் முதன்மையான குறிக்கோளாக இருப்பதெல்லாம் தேசிய ஒற்றுமையைப் பேணுவதேயாகும்.
ஏகாதிபத்திய ஆட்சியாளரின் வசதிக்காக, இலங்கை ஒரு மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி நிறுவனமாக மாற்றப்பட்டது. பல ‘இனங்களையும்’, மதங்களையும் கொண்ட அத்தகைய ஓர் அமைப்பை, ஒரு நடுநிலையான ஏகாதிபத்தியசக்தி போன்ற ஒரு வெளியாரின் மேற்பார்வையின்கீழ் ஒன்றாக வைத்திருக்க முடியும் என்றாலும், ஏகாதிபத்தியசக்தி பின்வாங்கியதன் பின்னாக, தனித்துவமான குழுக்களின் ‘இனம்’, மொழி, மதம் போன்ற பாரம்பரியக் கருத்துகள் மீண்டும் தங்களை உறுதிப்படுத்திக்கொள்ளத் தொடங்குகின்றன. வெளியேறும் சக்தியால் விட்டுச்செல்லப்பட்ட மேலோட்டமான தேசிய ஒற்றுமை பராமரிக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் ஆளுமை, அரசியல்ரீதியான இணக்கப்பாடு என்பவை அவசியம். ஆனால் அதற்குப் பதிலாக அதிகாரம் மாற்றப்பட்ட குழுவும் அதன் தலைவர்களும் சிங்கள மன்னர்களின் காலத்திற்குச் செல்ல விரும்பினர். நவீன ஒருமைப்படுத்தப்பட்ட பிரிட்டனை (இதற்கான) ஒரு மாதிரியாகப் பயன்படுத்தினர். இந்தக்கருத்தை வலுப்படுத்த வரலாற்றுரீதியான புராணங்களும் புனைவுகளும் மீண்டும் உருவாக்கப்பட்டன. இருப்பினும், ஆதிகாலம் பன்முகத்தன்மை கொண்டது. மேலும் சிங்கள – பௌத்த இனப் பெரும்பான்மை நவீன உடைகளில் கடந்த காலத்தைப் புதுப்பிக்க முயன்றதுபோலவே, தமிழ் சிறுபான்மையினரும் தம்பங்கிற்கு இலங்கையில் ஒரு காலத்தில் ஒரு தனித்தமிழ் இராச்சியம் இருந்ததை மறுபரிசீலனை செய்யத் தொடங்கினர்.
1947 பொதுத்தேர்தலுக்குப் பிறகு, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் காலனிகளுக்கான வெளியுறவுச் செயலாளருக்கு ஒரு தந்தி அனுப்பியது. வேறு பல விடயங்களுடன், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும் கோரிநிற்கும் ஒரு தந்தியாக அது இருந்தது. இந்தக் கோரிக்கையை, தமிழ் காங்கிரஸின் தேசியவாதப் பிரிவின் தலைவராக 1947 நவம்பரில், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மேலெழுந்து வந்தபோது மேலும் தெளிவாக எடுத்துரைத்திருந்தார். அதாவது, ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு வடிவம் ஒன்று உருவாக்கப்படும் போதுதான், தமிழ்ச் சமூகத்தின் கோரிக்கைகள் அதன்கீழ் நிறைவேற்றப்படுதல் சாத்தியமாகும் என்பதுதான் அது.

தமிழ் சமஷ்டிக் கட்சி (Tamil Federal Party) 1949 டிசம்பர் மாதம் முறைப்படி ஓர் அரசியற் கட்சியாகத் தொடங்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1951 ஏப்ரல் 13, 14, 15 ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடந்த அதன் முதலாவது தேசிய மாநாட்டில், முன்வைத்த கோரிக்கைகளில் அது மிகத்தெளிவாக இருந்தது. தனது முதல் தீர்மானத்தில், கனடா, இந்தியா, சுவிட்சர்லாந்து, சோவியத் யூனியன் ஆகிய வெற்றிகரமான ‘பன்முக, பன்மொழி நாடுகள்’ என்ற கவனத்தை மாநாடு ஈர்த்தது. அவை ஒரு கூட்டாட்சி அரசாங்க அமைப்பை நிறுவுவதன்மூலம் தங்கள் ‘சிக்கலான பிரச்சினைகளை’த் தீர்த்துக்கொண்டன. அதுபோலவே ‘தமிழ் மக்களுக்குரிய, சவாலுக்கு இடமில்லாத வகையிலான தேசிய உரிமையையும்’, சிங்கள மக்களுடனான கூட்டாட்சி ஒன்றியத்திற்கான அவர்களுக்குரிய உரிமையையும் விருப்பத்தையும்’ வலியுறுத்தச் செய்ததுடன், அதன்பின் இருபத்தேழு மாதங்களே வாழமுடிந்த டொன் ஸ்ரிபன் சேனநாயக்காவின் ஓர் ‘இறையாண்மை கொண்ட ஒற்றையாட்சி அரசு’ என்ற அவரது செல்வாக்குமிக்கதாக இருந்த கருத்தைச் சவால் செய்யவும், ஒரு புதிய கட்சி எழுந்தது.
அடிக்குறிப்பு
1. 1965-70 இல் பதவியேற்ற அரசாங்கத்தில், டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டணியில் இணைந்த தமிழ் சமஷ்டிக் கட்சி, உள்ளாட்சி அமைச்சராக பணியாற்ற எம். திருச்செல்வத்தை பரிந்துரைத்தது. திருச்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. அல்ல; அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக அவர் செனட்சபைக்கு நியமிக்கப்பட்டார்.
தொடரும்.