அறிமுகம்
இயற்கையின் மீதான ஆர்வம், அதிசயம், அச்சம் போன்றனவே அதனை வழிபடத் தூண்டின; இயற்கையின் இயல்பிறந்த ஆற்றல்கள்மீது மனிதரைக் கவனம் செலுத்தச் செய்தன. சடத்துவமான இயற்கை தானாகவே இயல்பிறந்த ஆற்றல்களை நிகழ்த்த முடியாது. இப்பிரமாண்டமான இயற்கையை இயக்க அதனிலும் ஆற்றல்வாய்ந்த சக்தி அல்லது சக்திகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட வலுப்பட இறைவன் பற்றிய பிரக்ஞை வலுப்பட்டது. இயற்கை வழிபாடு தெய்வ வழிபாடாயிற்று. இயற்கையின் இயல்பிறந்த ஆற்றல்களிலும் இறைவனது ஆற்றல்கள் மேலும் மேம்பட்டவை, கற்பனையாலும் எட்டமுடியாதவை, அதிலும் தன் தன் தெய்வத்தின் ஆற்றலே யாவற்றிலும் மேலானது என்ற கருத்துகள் மனிதகுல நாகரிக வளர்ச்சியோடு இணைந்து வலுவுற்று வளர்ந்தன.
இதனால் அவ்வவ்விறைவனைப் பற்றி பல்வேறு ஐதிகக் கதைகள் தோன்றின. அவை கால, தேச, வர்த்தமானத்திற்கேற்ப மேலும் மேலும் வளர்ச்சியுற்றன. இயற்கைப் பொருள்வழி இருந்த தெய்வம் விலங்கு, பறவை, மனிதவுருப் பெற்றது. வடிவம் அல்லது உருவம் முதன்னிலை பெறத் தொடங்கியது. விலங்கு – மனிதன், பறவை – மனிதன் என இணையுருவங்களுடன் மனித, ஆஜானுபாகுவான உருவங்களும்; அவற்றுக்கு நான்கு, தொடக்கம் பன்னிரெண்டு கைகள், ஒன்று தொடக்கம் ஆறு தலைகள் எனப் பல்வேறு ‘அதீத’ நிலைகளும் உருநிலைப்படுத்தப்பட்டன. அந்தத் தெய்வத்தை கேள்வியற்ற விசுவாசத்தோடு வழிபடும் அடியவர் பெறும் பேறுகள் என்பன முதன்மைப்படுத்தப்பட்டன.
இவற்றை மேலும் மேலும் வலுப்படுத்தப் பல்வேறு கதைகள் சொல்லப்பட்டன. அவை இதிகாசங்கள், புராணங்கள் எனச் செவ்விலக்கியங்களின் வழி மக்களின் மனதில் நிலைநிறுத்தப்பட்டன; சமயப்பிரசாரங்களின் பிரதான கருவியாகப் பயன்படுத்தப்பட்டன. அதிலும் இறைவன் நிகழ்த்திய அற்புதங்கள், சங்காரங்கள் என்பன விதந்துரைக்கப்பட்டன: கலை வடிவங்களாக்கப்பட்டு மக்கள் மத்தியில் மீள மீள நிகழ்த்தப்பட்டன. பொழுதுபோக்கு அம்சமாகவும், பிரசாரமாகவும், நம்பிக்கையாவும் இவை மக்கள் மனதில் நிலைத்துநிற்கச் செய்யப்பட்டு தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டன.
இந்தக் கதைகளானவை, கூத்தாக, கதையாக, பாடலாக பல்வேறு ரூபங்களில் பரவின. குறித்த ஒரு தெய்வத்தின் அல்லது நபரின் கதை பரவலாக்கமுறும் போது காலம், தேசம், பண்பாடு, தேவை அதன் அரசியல் என்பவற்றுக்கு ஏற்ப மாற்றமுறச் செய்யப்பட்டே வளர்க்கப்பட்டன. இதனால் காலவோட்டத்தில் அவை வேறுபட்ட தனிக்கதைகளுமாயின. அதேவேளை குறித்த பெயரில் வெவ்வேறு காலங்களில், இடங்களில் வெவ்வேறு கதைகள் தோன்றி உருப்பெற்று வளர்ந்தன என்பதும் மனங்கொள்ளத்தக்கது.
இந்தியப் பாரம்பரியத்தில் தோன்றி, புராணக்கதைகளின் வழி தமிழகத்தில் நிலைபெற்ற கதைகளில் ஒன்றாகவே இடும்பனின் கதை காணப்படுகிறது. இந்த இடும்பன் பூசை பற்றிய ஆய்வில் திரு கோ. விஜிகரன், திரு. சி. துக்ஷாந் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செல்வி ரஜீவா ஆகியோர் துணைநின்றனர்.
இடும்பன்
இடும்பர் எனும் சொல்லுக்கு ஒருவகை இராட்சதர், ஒருவகைச் சாதியார், செருக்கர், துயர் செய்வோர் (இடும்பை – துன்பம், தீமை, நோய், வறுமை, அச்சம்; இடும்பு – அகந்தை, கொடுஞ்செயல், தீங்கு) எனப் பொருள் சுட்டப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பெரிய உருவம் (ஆஜானுபாகுவான தோற்றம்), நீண்ட கை – கால்கள் உடையவர்கள், பயங்கரமான தோற்றம் உடையவர்கள், கை அகட்டி நடப்பவர்கள், நன்றாக உண்பவர்கள் போன்றோரை இடும்பனுக்கு ஒப்பிடுவர். ‘ஆளப் பார் இடும்பன் மாதிரி’, ‘இடும்பன் எண்டு நினைப்பு’ போன்ற சொற்றொடர்களை இதற்கு உதாரணங்களாகச் சுட்டலாம்.
இடும்பன் பற்றிய கதைகள்
இடும்பன் பற்றி பல்வேறு கதைகள் நின்று நிலவுகின்றன. ஆரம்பத்தில் சிறந்த சிவபக்தனாக இருந்த இராட்சசனான இடும்பன் பின்பு முருகபக்தனாகத் திகழ்ந்ததாகப் பொதுவில் கூறப்பட்டாலும் இதன்னின்றும் வேறுபட்ட கதைகளும் உண்டு.
- இராமாயணம்: இராவணனால் கவரப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும் இராமன் சுக்கிரீவனின் உதவி பெற்று இலங்கையில் சீதை இருப்பதை அனுமன் மூலம் அறிகிறான். இராமன் சீதையை மீட்க சுக்கிரீவனின் படையோடு கரையை அடைகின்றான். கடல் குறுக்கிடுகிறது. பாலம் அமைக்க வேண்டியநிலை ஏற்படுகிறது. அந்நிலையில் சுக்கிரீவனின் சேனை வீரர்களில் ஒரு அணியின் தலைவனாக இருந்து சேதுபந்தனத்தின்போது மலைகளைப் பிரித்துவந்த மாவீரர்களில் ஒருவனாக இடும்பன் காணப்படுகின்றான்.
- மகாபாரதம் – இடும்பவனத்தில் இடும்பன் தன் தங்கையான இடும்பியுடன் வாழ்ந்து வந்தான். அவ்வனத்துக்கு வந்த பாண்டவர்களில் ஒருவனான பீமனைக் கண்டு இடும்பி காதல் கொள்கின்றாள். அவ்விடம் வந்த இடும்பன் “மானுடர்களை உண்ணும்படி உன்னை அனுப்பினால் நீ இவன்மீது காதல் கொள்கிறாயா?” என இடும்பியை ஏசியபோது பீமன் அவனை இடைமறிக்கின்றான். “அற்ப மானுடனே நீயும் இவள்மீது காதல் கொண்டுள்ளாயோ? அவ்வாறெனில் என்னோடு போர் புரிந்து வென்றபின் அவளைத் திருமணம் செய்” எனக் கூறினான். யுத்தம் நிகழ்ந்தது. இடும்பன் இறந்தான். பீமன் இடும்பியுடன் வாழ்ந்து கடோத்கஜன் எனும் மகனைப் பெற்றான்.
- பழனி தல புராணம்: அகத்திய முனிவர் கந்தமலையின் சிகரங்களிற் சக்தி கிரி, சிவ கிரி என்னும் இரண்டையும் சக்தி – சிவமாகப் பாவித்துப் பூசித்துக் கந்தவேளின் உத்தரவின்படி அவற்றைப் பொதியமலைக்குக் கொண்டு வந்து பூசிக்கக்கருதி பெயர்த்து வந்தார். பூர்ச்சவனம் என்னும் தலத்திலே முருகனின் திருவருளினாலே அச்சிகரங்களை வைத்துவிட்டுப் பொதிகை நோக்கி வந்து கொண்டிருந்தார். சூரபன்மன் குலத்தோர்க்கு வில்வித்தை முதலிய வித்தைகளைப் பயிற்றுவித்த இடும்பாசுரன், முருகனால் சூரன் முதலானவர்கள் அழிக்கப்பட்டபோது, தன் மனைவி இடும்பியுடன் மகேந்திரபுரியைவிட்டு வன சஞ்சாரம் சென்றான். திருக்குற்றாலத்திற்கு அருகே அகத்திய முனிவரைக் கண்டு வணங்கினான். அகத்தியர் “திருக்கேதாரத்திற்குப் பக்கத்திலுள்ள பூர்ச்சவனத்திலே இருக்கும் இரு சிகரங்களையும் எடுத்துப் பொதிகை மலைக்குக் கொண்டு வருவாயானால் பெறற்கரிய பெரும்பேறடைவாய்” எனக்கூறி அவற்றை அடையும் வழிகளை உணர்த்தினார். அவன் அகத்தியர் கூறிய வழியே சென்று இரு சிகரங்களையும் கண்டு பூசித்து மூலமந்திரத்தை விதிப்படி உச்சரித்துத் தவம் செய்தான். அப்பொழுது பிரமதண்டம் புய தண்டாகவும் அட்ட திக்கு நாகங்கள் கயிறாகவும் தன் பக்கத்தில் வந்ததைக் கண்டு, பாம்புகளை உறிக்கயிறாக பிரமதண்டுடன் பிணைத்து இரு சிகரங்களையும் இருபக்கத்திலும் பிணைத்து, தோளிற் சுமந்து காவடி எடுப்பதுபோல் நடந்துசென்று பழனியை அடைந்தபோது, முருகன் திருவிளையாடலால் இடும்பனுக்குக் காவடி அதிபாரமாகத் தோன்ற, அந்த இடத்தில் இறக்கி வைத்து இளைப்பாறினான். காவடியைப் பின்பு தூக்க முயன்றபோது முடியாது போகவே சுற்றிப் பார்த்தான். சிவகிரியின் ஒரு சாரலிலுள்ள குரா மரநிழலிலே தண்டாயுதபாணியைக் கண்டு, அவன் யாரென அறியாது வழியை விடும்படி வற்புறுத்தினான். முருகன் தன் திருவிளையாடலைத் தொடக்கி “உன்னிடம் வலிமை இருந்தால் கொண்டு செல்” எனக் கூறினார். ஆத்திரமடைந்த இடும்பன் குரா மரத்தடியில் நின்ற தண்டாயுதபாணி மேல் பாய்ந்தபோது அவர் விலக, அவ்விடத்திலேயே வீழ்ந்திறந்தான். பிரமதண்டும் நாகங்களும் அஞ்சி அகன்று அகத்தியரிடம் செய்திசொல்லின. இடும்பியின் அழுகுரலுக்கிரங்கிய முருகன் இடும்பனை உயிர்பெற்றெழச் செய்தார். இடும்பன் எழுந்து முருகனை வணங்கி அம்மலையடியில் இருந்து குற்றேவல் புரிய வரம்கேட்க, முருகனும் அவ்வாறே அருளினார்.
இடும்பன் கதையுடன் தொடர்புடைய காவடி இன்று பல வடிவங்களில் எடுக்கப்படுகிறது. இடும்பன், தான் இரு மலைகளையும் எடுத்து வந்ததுபோல், தமது பாபச் சுமையை நீக்கக் காவடி எடுத்துவரும் அடியார்களுக்கு அருளும்படியும் வேண்டியதாகக் கூறப்படுகின்றது. இதன் பின்னர் முருகன் கோயில்களில் இடும்பனைப் பரிவார மூர்த்தியாக வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. இவ்வாலயங்களில் முருக மஹோற்சவம் முடிந்தபின் இடும்ப பூசை நடைபெறுவது வழக்கில் காணப்படுகிறது. தமிழகத்து சற்குருநாதர் கோயிலில், தான் இழந்த சக்திகளைப் பெற்ற பிரம்மா மகிழ்ந்து பிரம்ம தீர்த்தத்தை நிறுவியதாகவும் அங்கு சென்ற சிவபக்தனான இடும்பன், தன் பாவங்கள் யாவற்றையும் போக்க இக்குளத்தில் நீராடி வழிபட்டதாகவும் சிவன் மகிழ்ந்து அவருக்குத் திருவருள் புரிந்ததாகவும் கூறப்படுகிறது.
பழனி தல புராணம், அதனோடு ஒட்டிய ஐதிகக் கதைகள் மாத்திரமே முருகன் அடியாராக இடும்பனைக் குறிப்பிடுவது கவனத்திற்குரியதாகும். பொதுவில் இடும்பன் இராட்சதனாகவும், அதேவேளை ஞான நாட்டமுடைய சிறந்த பக்திமானாகவும், காவல்தெய்வமாகவும், அச்சத்தோடு மக்கள் வழிபடும் தெய்வமாகவும் அமைந்துள்ளது.
இடும்பன் கோயில்கள்
தமிழகத்தில் தஞ்சாவூர் காடுவெட்டி விடுதி, கீழ் மேட்டுப்பட்டி, இடும்பாவனம் என்பவற்றிலும் திருக்கன்றாப்பூர், குன்றக்குடி, திருப்பூரருகே இடுவம்பாளையம், பழனி போன்ற பல இடங்களில் இடும்பனுக்குத் தனிக்கோயில்களுண்டு. பிற கோயில்களில் பரிவார மூர்த்தியாகவும் முதன்மை கொடுக்கப்படுகின்றது.
ஈழத்துப்புலத்தில் கொழும்பு வாழ் நகரத்தாரின் (செட்டிமாரின்) மூன்று கதிர்காம வேலாயுத சுவாமி கோயில்களிலும், யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு, உரும்பிராய் போன்ற இடங்களிலும் இரத்தினபுரி, நாவலப்பிட்டி, கொஸ்லந்தை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களிலும் பரிவார தெய்வமாக இடும்பன் தனிக்கோயில் பெற்றுக் காணப்படுகின்றான். திருகோணமலையில் இடும்பன்மலை என்று ஓர் இடம் உண்டு.


பண்டத்தரிப்பில் காலையடி எனும் இடம் உண்டு. ஆகம முறையிலமைந்த கோபுரத்துடன் கூடிய முருகனாலயமே காணப்படினும், இன்றும் அது இடும்பன் ஆலயம் என்றே அழைக்கப்படுகின்றது. மூலஸ்தானத்தில் மூலமூர்த்திக்கு அருகில் முன்பு இடும்பனாக வழிபடப்பட்ட வேல், இன்றும் வைத்துப் பூஜிக்கப்படுகிறது (தகவல்: ஆலய முன்னைய தலைவர், திருநாவுக்கரசு, வயது. 83).
கொழும்பு வாழ் நகரத்தார் சமூகம் கதிர்காமக்கந்தன் மீது அளவற்ற பக்தி உள்ளவர்கள் என்றும், நேர்த்திக்கடன் செலுத்தக் காவடி முதலானவற்றைக் கொண்டு கொழும்பிலிருந்து கதிர்காமத்துக்குக் கால்நடையாகவே (கரப்பாதை) செல்வதாகவும், அப்போது வழித்துணையாக இடும்பனை அழைத்துச் செல்வதாகவும், அதன் நன்றிக்கடனாகவே தமது கொழும்பு முருகன் கோயில்களில் இடும்பனைப் பிரதிஷ்டை செய்ததாகவும் அறிய முடிகின்றது.
மேற்படி நகரத்தார் கோயில்களில் மட்டுமே உருவவழிபாடு காணப்படுகிறது. ஏனைய கோயில்களில் பெரும்பாலும் வேல், சூலம், கல் என்பன வைத்தே வழிபடப்படுகின்றன. உரும்பிராய் அம்மன் கோயிலில் பரிவாரமாக உள்ள இடும்பன் முச்சூலம் மூன்றின் இணைந்த வடிவத்தினராகக் காணப்படுகின்றார். மையத்தில் இருக்கும் திரிசூலத்தில் இருந்து எதிர்த்திசைகளை நோக்கியதாக ஏனைய இரு திரிசூலங்களும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இடும்பன் தெய்வமாகக் கருதப்படுதாது முருகன் அடியாராகக் கருதப்பட்டுவரும் வழக்கம் மேனிலையாக்கக் கோயில்களில் காணப்படுகின்றது. உதாரணமாக யாழ்ப்பாணத்து மடாலயங்களில் ஒன்றான நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் மஹோற்சவ கால பதினேழாந் திருவிழா இடும்பவாகனத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.
இடும்பன் பூசை நடைபெறும் சந்தர்ப்பங்கள்
ஈழத்துப்புலத்தில் பொதுவாக தனிக்கோயில்களிலும் இடும்பனைப் பரிவாரமாகக் கொண்ட கோயில்களிலும், கிராமிய முறை, ஆகம முறை எனும் இருதளங்களிலும் பூசைகள் நடைபெறுகின்றன. தனிக்கோயில்கள் பெரும்பாலும் பிராமணரல்லாதாரின் நாட்டார் வழக்கிலான பூசைமுறையே நடைபெறும். மேனிலையாக்கம் செய்யப்பட்ட முருகன் கோயிலாக மாற்றம்பெற்ற மற்றும் பரிவாரமாக இடும்பன் இருக்கும் ஆகம முறை சார்ந்த கோயில்களில் ஆகம முறைப்படியான பூசைகளே நடைபெற்று வருகின்றன. ஆடிவேல் உற்சவங்கள் நடைபெற்று முடிந்ததன்பின் இடும்பனுக்கு சைவ, அசைவப் படையல் வைத்து வழிபடும்முறை ஆகம முறைப்படி அமைந்த கொழும்பு கதிர்காம வேலாயுத சுவாமி கோயில்கள் மூன்றிலும் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது.
இதேபோல கொழும்பு, மலையகம், யாழ்ப்பாணம் (வடமராட்சி) போன்ற இடங்களில் கதிர்காம யாத்திரை செய்து தமது நேர்த்திக்கடனை முடித்து வந்தவர்கள் மட்ச – மாமிசம் காய்ச்சக்கூடிய நாளொன்றில் வீட்டில் இடும்பன் பூசை செய்வர்.
இவ்வாறு கோயில் சார்ந்து நடைபெறும் இடும்பன் பூசைகளைத் தவிர வாழ்வியல் சார்ந்தும் இடும்பன் பூசைகள் நடைபெறுகின்றன. அவை மகிழ்வுசார் சந்தர்ப்பத்திலும், துக்கம்சார் சந்தர்ப்பத்திலும் நடைபெறுகின்றன. குடிபுகுதல் (வீடு குடி பூரல்), கிணறு வெட்டி ஊற்றுக்காணல், குறித்த நேர்த்தியை நிறைவு செய்ததன் பின்னர், எடுத்த காரியம் சிறப்புற நடைபெற்றதன் பின்னர் என மகிழ்வுசார் பூசை நடைபெறும். இறப்பின் பின்னான அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய (31) நிகழ்வு நிறைவுற்ற பின்னர் நிகழ்வதாக துக்கம்சார் பூசை நடைபெறும்.
இடும்பன் பூசை
மேலே குறிப்பிட்டதுபோல இடும்பன் பூசை என்பது இருவிதமாக நடைபெறுகின்றது.
- கோயில் சார்ந்தது.
- கோயில் சாராது, வாழ்வியலுடன் இணைந்தது.
இடும்பன் தனிக்கோயிற் கொண்டு இருக்கும் இடங்களில் தினம் விளக்கு வைத்தல், வாராந்தப் பூசை, வெள்ளியில் விளக்கு வைத்தல் மற்றும் விஷேட தின பூசை என்பன இடம்பெறுகின்றன. இங்கு நடைபெறும் விசேட தினப் பூசைகளில் சோறு, மட்சம், மாமிசம், மரக்கறி என்பன அவித்துப் படைக்கப்படும். பூசாரி தெய்வமாடி குறி சொல்லுதலும், பில்லி – சூனியம் – வசியம் முதலியன நீங்குதலும், கயிறு கட்டி திருநீறு இடுதலும் வழக்கமாக உள்ளது.
அதேவேளை நேர்த்தி வைத்த மக்கள் தாமாகவே படையலை வைத்து வழிபடலும், அவற்றை மக்களுக்கு அள்ளி வழங்குதலும் உண்டு. நாற்பது வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள அல்வாய்ப் பிரதேசத்தில் இடும்பன் கோயில் காணப்பட்டதாகவும், அங்கு சோறு, மட்சம், மாமிசம் படையலிட்டபின் அவற்றை ஒன்றாக்கிக் குழைத்து திரணைகளாக்கி (பந்து போல உருண்டையாக்கி) யாவர்க்கும் வழங்கும் வழக்கம் காணப்பட்டதாகவும் தகவல் உண்டு (தகவல் – இ. இராஜேஷ்கண்ணன், முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இக்கோயில் யுத்த காலப்பகுதியில் ஏதோ சில காரணங்களால் அகற்றப்பட்டுவிட்டதாக அறிய முடிகிறது. கொழும்பு கதிர்காம வேலாயுத சுவாமி கோயில்கள் மூன்றிலும் ஆடிவேலின் பின் இடும்பனுக்குப் படையலிட்டு அடியவர்க்கு வழங்கும் வழக்கம் காணப்படுகிறது. இங்கு ஆகமம்சார்ந்த பூசைமுறையே காணப்படினும் இத்தினத்தில் மட்டும் அசைவம் என்று சொல்லப்படும் மட்ச, மாமிசப் படையல் இடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
வாழ்வியல்சார் சடங்காக இடும்பன் பூசை
- மகிழ்வு சார் சடங்கு/ பூசை
1. கிணற்றில் ஊற்றுக் காணல்
வீட்டுவளவில் அல்லது தோட்டங்களில் கிணறு வெட்டுவர். கிணற்றை வெட்டும்போது அத்தொழிலைச் செய்பவர் காவல் தெய்வமான இடும்பனிடம் “எந்தச் சிக்கலுமின்றி கிணறு வெட்டி முடித்து நன்னீர் ஊற்று சிறப்பாகச் சுரக்க வேண்டும்” என வேண்டிக் காரியத்தைத் தொடங்குவார். கிணறு வெட்டும்போது ஊற்றுநீரைக் கண்டவுடன் அந்த நீரை காவோலையால் (காய்ந்த பனையோலையால்) மூடிவிடுவர். அடுத்த நன்னாள் பார்த்து, உரிய நேரத்தில் இடும்பன் பூசை செய்வர். கோழி ஒன்றின் கழுத்தறுத்து எறிவதோடு இரத்தத்தைக் கிணற்றில் தெளிப்பர். காவோலை எடுக்கப்பட்டுவிடும். பலியிடப்பட்ட கோழியை உண்ணும் வழக்கம் இல்லை. வேறு இறைச்சி, மட்சம் உள்ளிட்டவை சமைத்து கிணறு வெட்டிய தொழிலாளிகளுக்கும் தமது உறவுகளுக்கும் கொடுத்துண்பர்.
2. வீடு குடிபுகுதல் (வீடு குடி பூரல்)
புதிதாகக் கட்டப்பட்ட வீடு குடிபுகும் சடங்கு நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு வீட்டின் மரவேலைகளைச் செய்த தச்சுத் தொழிலாளர்களால் வீட்டின் முகடு பிரித்து தச்சன் காளி விரட்டல் சடங்கு நிகழ்த்தப்படும். அதுபோல குடி புகுதல் நிகழ்வு நடைபெற்று நான்காம் நாள் அளவில் (அசைவம் புழங்கக்கூடிய நாளில்) அசைவ உணவுகள் சமைக்கப்பட்டு அவ்வீட்டைக் கட்டிய தொழிலாளர்களுக்கும் வேண்டிய உறவுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு விருந்து வைக்கப்படுதலே இடும்பன் பூசையாகச் சொல்லப்படுகிறது.
யாழ்ப்பாணம், மூளாய், பொன்னாலைப் பிரதேசங்களில் அத்தினத்தில் கோழி கழுத்தறுத்துப் பலியிடப்படுதலும் தலையை வீட்டுக் கூரையின் மேலால் எறிதலுமாகிய வழக்கம் காணப்படுகிறது (தகவல் – மயூரரூபன், எழுத்தாளர், வடமராட்சி). இதேவேளை யாழ்ப்பாணம், நுணாவில், மட்டுவில் கிராமங்களின் சில பகுதிகளில் இடும்பன் பூசை நடைபெறும் நாளில் சமைக்கப்படும் சைவ, அசைவ உணவுகள் யாவற்றிலும் சிறிது அள்ளி, வடலிப் பனையோலையால் பின்னப்பட்ட தட்டுவத்தில் இட்டு, குசினி அடுப்படியில் வைத்த பின்பே உணவு பரிமாறப்படுகிறது. அன்றிரவு ஆளரவம் அடங்கியபின் அத்தட்டுவத்தை சந்தி முடக்குகளில் அல்லது சுடலைக்கண்மையில் வைத்துவிட்டு வரும் வழக்கம் காணப்படுகிறது (தகவல் – செல்வி. ரஜீவா, நுணாவில், உதவி விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்).
பண்டத்தரிப்புப் போன்ற பிரதேசங்களில் பந்தமும் கொண்டு சென்று இவற்றைச் சந்தியில், ஆட்கள் புழங்காத இடத்தில் வைத்துவிட்டு தமது வீட்டடியில் எச்சிலைக் காறி உமிழ்ந்து, பின்பு கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் செல்லும் வழக்கமுள்ளதாகக் கொத்தனார் வேலை செய்யும் தர்மலிங்கம் குகன் (வயது, 37) பேபிச்சந்திரன் விஜயகுமார் (வயது, 48) போன்றோர் தெரிவித்தனர்.
கோயில் திருவிழா, கந்தசஷ்டி போன்ற காலங்களில் விரதம் முடிவுற்றதன் பின்பும் கோயில்களுக்கான பாதயாத்திரைகள், நேர்த்திக்கடன்கள் முடிவுற்றதன் பின்பும் அசைவ உணவு சமைக்கப்பட்டு உறவினருக்கும் நண்பர்களுக்கும் வழங்கப்படும்.
- துக்கம்சார் சடங்கு/ பூசை
இறப்பின் பின்னான அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னர் நிகழ்வதாக துக்கம்சார் பூசை நடைபெறும். அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் நடைபெற்று நான்காம் நாள் அளவில் (அசைவம் புழங்கக்கூடிய நாளில்) அசைவ உணவுகள் சமைக்கப்பட்டு, அவ்விறப்பு நிகழ்வு நடைபெற்றபோதும், பின்னான நாட்களிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் துணைநின்ற அனைவருக்கும், இரத்த உரித்துடைய உறவுகளுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டு விருந்து வைக்கப்படுதலே இடும்பன் பூசையாகச் சொல்லப்படுகிறது. செட்டிமாரிடமும், பாண்டியன் தாழ்வு போன்ற பிரதேசங்களிலும் இந்த வழக்காறு இருப்பதாக திரு. ச. முருகேசபிள்ளை (வயது, 60) குறிப்பிடுகின்றார்.
இங்கு இடும்பன் பூசை என்பது இடுப்பன் சாமிக்கான பூசையல்ல; அசைவ உணவு சமைத்து குறித்த காரியத்தில் கை கொடுத்த, துணைநின்ற, வழித்துணையாய் அமைந்த மனிதருக்கு அன்புடன் பரிமாறும் செயற்பாடாகவே அமைந்துள்ளது.
இடும்பன் பூசைக்கான படையல்
இடும்பன் பூசை கோயில்களில் நடைபெற்றாலும் சரி, வீட்டில் நடைபெற்றாலும் சரி இடும்பனுக்கான படையல் தனித்துவமானது. கோயில்களில் பெரிய கிடாரங்களில் சோறு சமைக்கப்படும். ஆடு, கோழி, இறைச்சிகளும் கடலுணவுகளான நண்டு, இறால், கணவாய், மீன் என்பவற்றோடு பலவகையான, கிடைக்கக்கூடிய மரக்கறிகளும் சமைக்கப்பட்டு பனையோலைப்பாயில் படையல் வைக்கப்படும். சோறு மலைபோல் குவிக்கப்பட்டு கறிவகைகள் இடப்பட்டு, படையல் படைக்கப்படும். சில கோயில்களில் கள், சாராயம் போன்றவற்றைப் படைக்கும் வழக்கமுண்டு.
வீடுகளில் நடைபெறும் இவ்வாறான பூசைகளில் சோறு, மரக்கறி, இறைச்சி வகைகளோடு புட்டு, கணவாய், இறால், மீன், பொரியல் – கறி உள்ளிட்ட பலவகையான உணவாக்கங்கள் அவரவர் வசதிக்கேற்ப ஆக்கப்படுதல் குறிப்பிடத்தக்கது. அதேபோல இப்பூசையில் பங்குபற்றுபவர்களுக்கு வேண்டிய மதுபான வகைகளும் வழங்கப்படும். இவை இன்று அநாகரிகச் செயற்பாடுகளாகக் கருதப்பட்டு தவிர்க்கப்பட்டு வருகின்றன.
சில அவதானிப்புகள்
- இடும்பன் பற்றிய கதைகள் பலவிதமாக உள்ளன. பாரத, இராமாயண இடும்பன் இராட்சதன், காவற்காரன்; முருகனடியாராகச் சித்தரிக்கப்படும் இடும்பன் சிறந்த பக்தனாக, மலைகளைத் தூக்கவல்ல பேராற்றலானாக, வீரனாகக் காட்டப்படுகின்றார். காலந்தோறும் வந்த பல்வேறு கதைகளின் கூட்டு வெளிப்பாடாகவே இடும்பன் கதை அமைகிறது.
- இராட்சதன், வீரன், காவல் தெய்வம் என்பதனால்தான் என்னவோ அசைவ உணவும் மலைபோன்ற உணவுக்குவியலுமான படையல் வழங்கப்படுகிறது போலும்.
- நாட்டுக் கோட்டைச் செட்டிமார்களின் முருக வழிபாட்டோடு இடும்பன் வழிபாடு பின்னிப்பிணைந்திருக்கிறது. நல்லூரில் கந்தசஷ்டி காலத்தில் நவவீரர் பவனி இடம்பெறுதல்போல, கொழும்பு ஆடிவேல் விழாவில் முருகனின் திருத்தேர் முன்பு பிரம்புடன் இடும்பன் ஆடிப்பாடி வருகின்ற நிகழ்வு இடம்பெறும். பிரம்புடன் வருதல் என்பது இடும்பனுக்கு கொடுக்கப்படும் முதன்மை அதிகாரத்தின் குறியீடு எனலாம்.
- அதேவேளை நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இடும்பன், வழிபடு தெய்வமாகவன்றி சுவாமியைக் காவும் வாகனமாகவே உள்ளான். கால்களை மடக்கி கனத்தினைத் தாங்கும் இராட்சதனாக – ஒரு வீரனாக – பக்தனாக – விசுவாசியாக – தொழிலாளர் வர்க்கத்தினனாகவே சித்திரிக்கப்படுகின்றான்.
- கலையியல் மரபில் இடும்பனுக்குத் தனிப்பங்குண்டு. மட்டக்களப்பில் ஆடப்படும் வடமோடிக் கூத்துகளில் ஒன்றாக ‘இடும்பன் போர்’ விளங்குகின்றது. அதுபோல நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகோற்சவத்தில் பதினேழாம் நாள் நடைபெறும் இடும்பன் வாகனத் திருவிழாவில் பூதநிருத்தம் எனும் நடனம் ஆடப்படுவது குறிப்பிடத்தக்கது. மத்தளத்தை தோளில் தூக்கியவாறு ஒற்றை காலில் ஆடி ஆடி வாசிப்பதை பூதநிருத்தம் என்பர். இவ்வாறாக பூத கண வாத்தியங்கள் முழங்க, பூத நடன சமர்ப்பணத்தோடு இடும்பன் மீது கந்தசுவாமி பவனி இடம்பெறும்.
- ஈழத்துப்புலத்தில் கதிர்காம யாத்திரை என்பது நீண்டகாலமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. முதன்முதல் யாத்திரை போய் சிறப்பாக அதனை முடித்து வீடு திரும்பியவர் வீட்டில் இடும்பன் பூசை செய்தபிறகே அவர் மீள வீட்டுக்கு வெளியில் செல்லலாம் எனும் நடைமுறை வல்வெட்டியில் இருப்பதாக திருமதி கேசலிங்கம் தவமலர் (வயது, 78) குறிப்பிடுகின்றார். பல பிராந்தியங்களில் யாத்திரை செய்யும் தோறும் இப்பூசை இடம்பெற்று வந்துள்ளது. ஆயினும் இன்று யாத்திரை மரபும் இடும்பன் பூசையும் வழக்கிழந்து வருகின்றது.
- வெட்டுக்கிணறு வெட்டும் வழக்கம் இன்று அருகி குழாய்க்கிணறு முறையே பெருகிக் காணப்படுகின்றது. அதுபோல கோழி பலியிடல் அருகி அதன்வழி இடும்பன் பூசையும் வழக்கிழந்து பொங்கல் படையலே எஞ்சி நிற்கின்றது.
- வீடு குடி புகுதல் நிகழ்வின் பின்னான மட்சம், மாமிசம் காய்ச்சுதல் நிகழ்வாக இடும்பன் பூசை நடைபெறுவது அருகி வருகின்றது. படையலுக்குப் பயன்படும் பனையோலையாலான தட்டுவம், பாய் என்பனவும் வழக்கிழந்து விட்டன. தற்காலத்தில் வாழையிலையும் உலோக, பிளாஸ்ரிக் தட்டுகளுமே பயன்படுத்தப்படுகின்றன.
- எல்லா மக்களாலும் பின்பற்றப்பட்டு வந்த இடும்பன் பூசை இன்று கைவிடப்பட்டு செட்டிமார், சிறுகுடி வேளாளர் போன்றோராலேயே சிறிதளவேனும் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
- இடும்பனுக்கான படையல் என்பது, குறித்த பிராந்திய மக்களின் பண்பாட்டோடு இணைந்து உணவு முறை, குடிவகைசார்ந்த வெளிப்பாடாகவும் கொடுத்துண்கின்ற பண்பாட்டின் வெளிப்பாடாகவும் அமைகிறது.
- இன்று இடும்பன் பூசை எனும் சொல்லாட்சி அசைவ உணவை உண்ணுதல் என்பதனைக் குறிக்கும் சொல்லாக, கிண்டலாக மாறியுள்ளமை கவனத்திற்குரியது.
- காளியோடு இணைந்திருக்கும் இடும்பன் வழிபடு தலங்கள் புதிய தளக்கோலங்களுக்கு உரியனவாக அமைந்துள்ளன. காளி, பிள்ளைகளைப் பிடித்துண்ணுபவளாகவும், அவளைக் கட்டுப்படுத்தும் தெய்வமாக நகரத்தார் இடும்பனை வழிபட்டதாகவும், பயன்பெற்றதாகவும், தமிழகத்தில் ஓர் ஐதிகக்கதை உண்டு. மகாபாரதத்தில் இடும்பன் மனிதர்கள் உள்ளிட்ட உயிர்களை உண்பவனாகவே சித்திரிக்கப்படல் முரண் நகையாகும்.
- ஈழத்தில் காளியோடு இணைந்த இடும்பன் வழிபடுதலங்களில் (மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்) பில்லி சூனியம், செய்வினை, வசியம் என்பன நிகழ்த்துகைகளாக உள்ளன. இது இடும்பன் வழிபாடு, நாகரிகமற்ற ஒன்று எனக் கருத வாய்ப்பளிக்கின்றது.
- இடும்பன் பூசை என்பது ஒரு வழிபாடு என்பதைவிட, குறித்த காரியத்தில் துணை நின்ற யாவர்க்கும் அவர் விரும்பும் உணவை, குடி வகையை விருந்தாக அளித்து நன்றி செலுத்தும் நிகழ்வு என்றே கருத வேண்டியுள்ளது. இன்னும் நுணுகியுரைக்கின் மகிழ்விலும் துக்கத்திலும் கூட இருந்தவர்களுக்கு அன்பை வெளிப்படுத்துவதாகவும் வீடு, கிணறு உருவாக்கத்தில் அர்ப்பணிப்புடன் உழைத்த உழைப்பாளிகளுக்கு நன்றி சொல்லும் வகையில் நிகழும் நிகழ்வாகவுமே இடும்பன் பூசை அமைந்துள்ளது.

நிறைவுரை
ஈழத்தில் நின்று நிலவுகின்ற நாட்டார், ஆகமமரபு வழி தனித்தனியேயும், இரு மரபும் இணைந்தநிலையிலும் வழிபடு தெய்வமாக இடும்பன் காணப்படுகின்றான். இடும்பன் பற்றிய கதைகள் பல இடும்பன்கள் இருந்தமையை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை அவனை இராட்சதனாக, மாமிச உண்ணியாக சித்திரிப்பதில் ஒன்றுபடுகின்றன. இடும்பன் தனிக்கோயில் கொண்டவனாக, பரிவாரத் தெய்வமாக காணப்படுகின்ற அதேவேளை, இன்று அவனது கோயில்கள் பல காணாமல் போயின அல்லது மேனிலையாக்கம் பெற்றன. ஆஜானுபாகுவான உருவமுடைய சிலை – விக்கிரக வழிபாடு காணப்படும் அதேவேளை வேல், கல், சூல வழிபாடும் உள்ளன. உரும்பிராயில் மட்டும், மூன்று திரிசூலங்கள் இணைந்து, இருபக்கமும் மேலும் நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டு, வழிபடப்படுவதைக் காண முடிகிறது. சனங்களின் உணவியல் பண்பாட்டோடு கலை மரபோடும் இணைந்த இத்தெய்வம் அரூபநிலையிலும் வழிபடப்படுகிறது. இடும்பன் பூசை ஒரு தெய்வ வழிபாடாக மட்டுமன்றி உழைப்பாளர்களை – குறித்த தொழில்களைச் செய்யும் மக்களை, அவர்களின் பணியைக் கௌரவித்து, மரியாதை செய்வதாகவும், நன்றி தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது. ஆயினும் நாகரிகம் என்ற போர்வையில் இன்று இப்பண்பாடும் பூசையும் மிகவிரைவாக வழக்கிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.