உதவி : ஜீவராசா டிலக்ஷனா
இக்காலகட்டம், 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவான காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு 1968 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இளைஞர்கள் இயக்கம் தொடங்கியதில் முடிவடைகின்றது. இக்காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் இலங்கை என்ற ஒற்றைக்கட்டமைப்பில் இருந்து விலகி வடக்கு, கிழக்கு என்ற தமிழர் தாயகத்தை வலியுறுத்தி அதற்கு அதிகாரத்தைக் கோரும் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. இக்காலகட்டத்தில் மூன்று மாற்றங்கள் இடம் பெற்றன. ஒன்று, ஒற்றை ஆட்சியில் சமவாய்ப்புக் கோரிக்கை என்பது கைவிடப்பட்டு, சமஸ்டிக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. இரண்டாவது, தாயகம் அடையாளப்படுத்தப்பட்டதும் தமிழீழ அரசியல் தமிழத்தேசிய அரசியலாக மாற்றமடைந்தது. மூன்றாவது, இதுவரை காலமும் சட்டசபைகளில் பேசுதல் அல்லது உரையாற்றுதல், கோரிக்கை மனுக்களை அனுப்புதல் என்கின்ற அணுகுமுறைக்கு மாற்றாக மக்களை இணைத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு காலகட்டத்தில் காலிமுகத்திடல் சத்தியாக்கிரகப் போராட்டம், 1957 ஆம் ஆண்டு திருமலை யாத்திரை, 1957 – 58 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டங்கள், 1961 ஆம் ஆண்டு கச்சேரிகளின் முன்னால் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் என்பன முக்கியமானவையாகும். அகில இலங்கை தமிழரசுக் கட்சி இப்போராட்டங்களை முன்னெடுத்தது. எஸ்.ஜே.வி செல்வநாயகம், ‘தந்தை’ செல்வா என அழைக்கப்பட்டார். அவர் இக்காலகட்டத்தை நகர்த்திய முக்கிய தலைவராகக் காணப்படுகின்றார்.

• புதிய கட்சி உருவாக்க முயற்சி இடம்பெறல்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறிய செல்வநாயகம் குழுவினர் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்துப் பிரசாரம் செய்தனர். இதற்கான முதல் கூட்டம் 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் முன்றலில் செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் டாக்டர் ஈ.எம்.வி நாகநாதன், வன்னியசிங்கம் உட்பட இளைஞர்களின் சார்பில் சட்டமாணவராக இருந்த அமிர்தலிங்கமும் உரையாற்றினார். தொடர்ந்து கொழும்பில் ஒவ்வொரு வியாழன் இரவும் ஒவ்வொரு நண்பர் வீட்டில் சமஸ்டிக் கோரிக்கை தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. டாக்டர் வி.என். பரமநாயகம், எம்.திருவிளங்கம், வி.என். திருநாவுக்கரசு, பி. நல்லசிவம்பிள்ளை, வி.பி.சி. முத்துக்குமாரசுவாமி, எஸ்.பி. வேலாயுதப்பிள்ளை, வி. நவரத்தினம், எஸ்.டி. சிவநாயகம், அருள் தியாகராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதற்கப்பால் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் சமஸ்டி பற்றிய கலந்துரையாடல்களும் கருத்தரங்குகளும் இடம்பெற்றன. திருகோணமலையில் 1949 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 8 ஆம் திகதி சக்தி நிலைய ஆதரவில் சமஸ்டி பற்றிய கருத்தரங்கு இடம்பெற்றது. இராஜவரோதயம் இராமநாதன், விஜயநாதன் ஆகியோர் இக்கருத்தரங்கினை ஒழுங்கு செய்வதில் முன்னிலை வகித்தனர். மட்டக்களப்பில் ஆர்.ப. கதிர்காமர் தலைமையில் முதலாவது கூட்டம் இடம்பெற்றது. ஈ.ஆர். தம்பிமுத்து, சாகுல்ஹமீது, செ. இராசதுரை, இரா. பத்மநாதன், பாலசுப்பிரமணியம், சித்தாண்டி நாகலிங்கம், சிவஞானம், ஆசிரியர் கனகசபை ஆகியோரும் இதனை ஒழுங்குபடுத்துவதில் முன்னிலையில் நின்றனர்.
• நந்திக்கொடி ஏற்றல்
1949 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் மூன்றாம் திகதி நல்லூர் சங்கிலித் தோப்பில் 1619 இல் அழிக்கப்பட்ட சங்கிலி மன்னனின் நந்திக்கொடியை புதிய அணியினர் மீளவும் ஏற்றினர். நந்திக்கொடி ஏற்றலின் பின்னர் ஊர்வலமாக நல்லூர் கைலாச பிள்ளையார் கோயில் வீதிக்குச் சென்றனர். அங்கு ப. முத்துக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற இருந்தது. போலீசார் கூட்டத்தினைத் தடை செய்தனர். அடுத்தநாள் நான்காம் திகதி நல்லூர்க் கூட்டம் தடைப்பட்டதைக் கண்டித்து நவாலியில் பண்டிதர் இளமுருகனார் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் தோற்றம் – 1949 டிசம்பர் 18
அகில இலங்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய உறுப்பினர்களும், சமஸ்டிக் கோரிக்கைக் கருத்தினால் கவரப்பட்ட உறுப்பினர்களும் 1949 டிசம்பர் 18 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு மருதானையில் உள்ள அரசாங்க லிகிதர் சேவை கட்டிடத்தில் கூடி அகில இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கினர். டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதன், வன்னியசிங்கம் ஆகியோர் கூட்ட அழைப்பாளர்களாக பத்திரிகைகள் மூலம் அழைப்பு விட்டிருந்தனர். டாக்டர் எம். திருவிளங்கம் வரவேற்புக்குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். செல்வநாயகம், கட்சியின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
செல்வநாயகம் அவர்களின் தலைமைப் பேருரையின் சுருக்கம்
“யாம் விடுதலை பெறுவதற்கு ஒரு சுதந்திரத் தமிழரசை நிறுவுவது இன்றியமையாதது. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்குமுன் இங்கு வசித்த மக்கள் பல நூற்றாண்டுகளாகச் சிங்களம்பேசும் இனம், தமிழ்பேசும் இனம் என இரு தேசிய இனங்களாகப் பிரிந்து வாழ்ந்தார்கள். தமிழ்பேசும் மக்களில் அரைப்பங்கினரைப் பிரஜாவுரிமை அற்றோராகச் செய்யும் ஒரே நோக்குடன் அரசாங்கம் பிரஜாவுரிமைச் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது.
தேசியக்கொடி விடயத்தில் அரசாங்கம் நடந்துகொண்ட விதம் தமிழ்பேசும் மக்களின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் உதாசீனம் செய்வதாக இருக்கின்றது. சிங்கக்கொடி சிங்கள மன்னரின் கொடியேயாகும். இன்று அது சிங்களவருடைய அதிகாரத்தின் சின்னமாக விளங்குகின்றது. அந்தக்கொடியே நடைமுறையில் இலங்கையின் தேசியக்கொடி எனக் கொள்ளப்படுகின்றது. பல்வேறு இனங்கள் வாழும் நாட்டில் தேசியக்கொடியாக ஓர் இனத்தவரின் கொடியைக்கொண்ட நாடு வேறு எதுவும் உலகில் இல்லை. தேசியக்கொடி விடயத்தில் அரசாங்கத்தின் கொள்கை தமிழ்பேசும் மக்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது. அரசாங்கம் அவர்கள் இங்கு வசிப்பதைச் சகித்துக்கொண்டிருக்கிறது, அவ்வளவுதான்!
தமிழ்பேசும் மக்களின் எல்லாப் பிரிவினருக்குள்ளும் தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கக்கூடிய வசதி வடமாகாண மக்களுக்கே இருந்தது. அவர்கள் இலகுவாகப் பிரிக்கப்படக்கூடிய பிரதேசத்தில் பெருந்தொகையினராக வாழ்ந்திருந்தது மட்டுமன்றி, அவர்களிடையே சிங்கள மக்கள் கலந்து வாழ்வதும் குறைவாக இருந்தது. அவர்களே ஆங்கிலக்கல்வியினாலும் அதிக பயன் பெற்றிருந்தனர். ஆனபடியால் இலங்கைவாழ் தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்யும் பொறுப்பு பெரும்பாலும் அவர்களையே சார்ந்திருந்தது.
அரசாங்கத்தின் குடியேற்றக்கொள்கை எல்லாவற்றையும் விடவும் தமிழ்பேசும் மக்களுக்குக் கூடிய ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இக்கொள்கையின் ஆபத்தை கல்லோயாவில் காண்கின்றோம். கல்லோயாத் திட்டத்தின்கீழ் நீர் பாய்ச்சப்படும் பிரதேசம், தமிழ்பேசும் பகுதியாகிய கிழக்கு மாகாணமேயாகும். தமிழ்பேசும் இப்பிரதேசத்தில் அரசாங்கம் சிங்கள மக்களைக் குடியேற்றத் திட்டமிட்டுள்ளது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இது உண்மையாக இருந்தால் இன்றைய தமிழ்பேசும் பிரதேசத்தை குறைப்பதற்கே அரசாங்கம் அநீதியான முறையில் தன் அதிகாரத்தை உபயோகிக்கின்றது என்பது தெளிவு. தடுப்பார் இன்றி, இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் சில வருடங்களுக்கிடையில் இந்நாட்டிலே தமிழ்ப்பிரதேசமே இல்லாதொழியும்.
ஒரு சுயாட்சித் தமிழ் மாகாணமும், ஒரு சுயாட்சிச் சிங்கள மாகாணமும் அமைத்து இரண்டிற்கும் பொதுவானதோர் மத்திய அரசாங்கமுள்ள சமஸ்டி அரசு இலங்கையில் ஏற்பட வேண்டும். தமிழ்பேசும் தேசிய இனம் பெரிய தேசிய இனத்தினால் விழுங்கப்பட்டு அழியாதிருக்க வேண்டுமேயானால் இவ்வித சமஷ்டி ஏற்படுவது அவசியமாக இருக்கிறது.
கிழக்கு மாகாணம் முழுவதையும் தமிழ் அரசின் பகுதியாக்க வேண்டுமென்றால் தமிழ்பேசும் தமிழர்களும், முஸ்லீம்களும் ஒன்று சேர வேண்டும். ஆனால் எங்களுடைய இயக்கம் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகள் தமிழ்ப்பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா? சிங்களம்பேசும் பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா? என்பதைத் தீர்மானிப்பதற்கு முஸ்லீம்களுக்குப் பூரண சுதந்திரம் இருக்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றது. அவர்களுக்கு என்ன வேண்டும்? என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.
நாம் வெற்றி பெறுவதற்கு அருகதையுள்ளவர்களாக வேண்டுமென்றால், நமது சமூகத்தில் இருக்கும் குறைகளைக் களைந்து அதைத் தூய்மைபெறச் செய்ய வேண்டும். தமிழ் மக்களிடையே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இருக்கின்றனர். அவர்கள் தாங்கள் மற்றவர்களால் ஒடுக்கப்படுபவர்ளாகக் கருதுகின்றனர். ‘யாம் ஒருவருக்கு கொடுமை செய்தால் தர்ம நீதியின்படி எமக்கும் பிறர் ஒருவர் அதையே செய்வார்’. தமிழ் மக்கள் அரசியல் சுதந்திரம் பெற வேண்டுமேயானால், தம் சமுதாயத்தில் உரிமையற்றவர்களாய் இருக்கும் மக்களுக்கு அவ் உரிமை வழங்க வேண்டும். மலைநாட்டில் வாழும் தமிழ் தொழிலாளர்களது நிலைமையானது இங்கு கூறிய தாழ்த்தப்பட்டோருடைய நிலையிலும் பார்க்கக் கேவலமானதாய் இருக்கின்றது. அவர்கள் அரசியலில் தீண்டத்தகாதவர்களாகி விட்டார்கள். அவர்களுக்குப் பிரஜாவுரிைமை இல்லாமல் இருப்பது மாத்திரமன்றி தமக்கென ஒரு நாடுமற்ற அகதிகளாகவும் இருக்கிறார்கள். ஏனைய தமிழ்பேசும் மக்கள் இவர்களுக்கு வந்திருக்கும் இன்னலைத் தங்களுக்கு வந்ததாகவே கருதுதல் வேண்டும். அவர்கள் உதவிக்காக எதிர்பார்ப்பது இந்தியாவை அல்ல. சுதந்திரம் விரும்பும் இலங்கைவாழ் மக்களிடமிருந்தே அவ் உதவி வருதல் வேண்டும்.”
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
1. தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு சுயாட்சி அரசை நிறுவும் வகையில் உழைப்பதற்காக தமிழ்பேசும் மக்களின் தேசிய நிறுவனமாக இயங்குதல்.
2. கட்சியின் பொருளாதாரக் கொள்கையாக, சோசலிசக் கொள்கையை ஏற்றுக்கொள்ளல்.
இரண்டாவது தீர்மானம் தொடர்பாக காராசாரமான விவாதம் நடைபெற்றது. இதன்போது சோசலிஸப் பொருளாதாரக் கொள்கையை இளைஞர்கள் வற்புறுத்தினர். ஆனால் பெரியவர்கள் இதனை எதிர்த்தனர். கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது இருபக்கத்திற்கும் சமமான வாக்குகள் கிடைத்தன. ஈற்றில் தலைவரான செல்வநாயகம் தனது வாக்கை இளைஞர் பக்கத்திற்கு அளித்து சோசலிஸப் பொருளாதாரக் கொள்கையை ஒரு வாக்கினால் வெற்றியுறச் செய்தார்.
சோசலிஸப் பொருளாதாரக் கொள்கை, தீண்டாமையை ஒழித்தல், சமூக உயர்வு – தாழ்வுகளை இல்லாமல் செய்தல் என்பவற்றை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டதை பழமை விரும்பிகள் பலர் ஏற்கவில்லை. இதனால் அவர்கள் விலகிக்கொண்டனர். கட்சியை ஆரம்பிப்பதற்காக உழைத்த பலர்கூட விலகிச்சென்றனர். அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தோற்றத்துடன் தமிழ்த்தேசிய அரசியலில் தமிழரசுக் கட்சி X தமிழ்க்காங்கிரஸ் என்ற இரு சக்திகள் இயங்க ஆரம்பித்தன. தமிழிலேயே கல்விகற்ற மத்தியதர வர்க்கத்தினர் அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதான ஆதரவுத்தளமாக மாறினர்.
சோல்பரியின் யாழ்ப்பாண வருகையும், பகிஸ்கரிப்பும்
சோல்பரி அரசியல் திட்டத்தினை உருவாக்கிய சோல்பரிப் பிரபுவே அவ் அரசியல் திட்டத்தின்கீழ் மகாதேசாதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இவர் 1950 ஆம் ஆண்டு ஜனவரியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். தமிழரசுக்கட்சி இவரது வருகையை பகிஸ்கரிக்க முடிவு செய்தது. இதுவே தமிழரசுக் கட்சியின் முதற் போராட்டமாகவும் இருந்தது. ‘தமிழினத்தின் வைரியை வரவேற்காதீர்’ என்ற தலைப்பில் தமிழரசுக்கட்சி துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு ‘வருகையைப் பகிஸ்கரியுங்கள்’ என மக்களைக் கோரியது. இது தொடர்பாக 22-1-50 இல் யாழ். நகர மண்டபத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதி நேரத்தில் அரசாங்கத்தினால் கூட்டம் தடை செய்யப்பட்டது. கூட்ட நாளன்று மண்டபத்தைச் சுற்றிப் பொலிஸ் காவலில் நிற்றனர். ஆயிரக்கணக்கில் வந்த மக்கள் அருகில் உள்ள தனியார் ‘கராஜ்’ஜில் கூடினர். அங்கு ஒரு மேசையின்மீது ஏறி நின்று தலைவர்கள் பேசினர்.
தேசியக்கொடிப் பிரச்சினை
1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி தேசியக்கொடியை உருவாக்குவதற்காக குழு நியமிக்கப்பட்டது. S.W.R.D. பண்டாரநாயக்கா, கலாநிதி செனரத்பரணவிதான, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, சேர்.ஜோன். கொத்தலாவல, ஜீ.ஜீ. பொன்னம்பலம், டி.பி. ஜாயா, எஸ். நடேசன் ஆகியோர் குழுவில் அங்கம் வகித்தனர்.
இதற்கு முன்னரே தேசியக்கொடி சிங்களவர்களின் சிங்கம், தமிழ் மக்களின் நந்தி, முஸ்லீம்களின் பிறை என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என ஒரு பிரேரணையை தந்தை செல்வா முன்வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் அதனை ஆமோதித்தார். ஆனால் சிங்களத்தரப்பு இதனை நிராகரித்தது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திரம் கிடைத்தபோது எந்தக் கொடியை ஏற்றுவது என்று பிரச்சினை வந்தது. 1835 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிவப்பு நிறப் பின்னணியுடன் வாளேந்தியபடி இருக்கின்ற கண்டி அரசனின் சிங்களக் கொடியே தேசியக் கொடியாக இருக்க வேண்டுமென மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் முதலியார் சின்னலெப்பை பாராளுமன்றத்தில் பிரேரணையைக் கொண்டுவந்தார்.
ஏ.ஈ. குணசிங்கா அதனை ஆமோதித்தார். பிரதமர் டி.எஸ் சேனநாயக்காவும் வரவேற்றார். இதனால் சிங்கக்கொடியே சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்டது. அனைத்து மதத்தவர்களும் வழிபடும் ‘சிவனொளிபாதமலை’ தேசியக்கொடியாக இருக்க வேண்டும் என ஹண்டி பேரின்பநாயகம் வலியுறுத்தினார். தமிழ், முஸ்லீம்களை குறிப்பதற்கு செம்மஞ்சள், பச்சை நிறக்கோடுகள் வாளேந்திய சிங்கத்திற்கு வெளியே இருக்கும்வகையில் கொடி உருவாக்கப்பட்டது.
செனட்டர் நடேசன் இதனைக் கடுமையாக எதிர்த்தார். கொடியில் தமிழர்களும், முஸ்லீம்களும் சிங்கள தேசத்தின் எல்லைகளுக்கு வெளியே இருப்பதாகவும் அந்த இரு இனங்களையும் தடுத்து நிறுத்துவதற்காக சிங்கம் தன் வாளுடன் கண்காணித்து நிற்பதாகவும் கூறி, செனட்டர் நடேசன் எதிர்ப்புத் தெரிவித்துக் குழுவை விட்டு வெளியேறினார்.
ஜீ.ஜீ.பொன்னம்பலமும் டி.பி. ஜாயாவும் கொடிக்கு இணக்கம் தெரிவித்தனர். 1950 ஆம் ஆண்டு மாசி மாதம் 14 ஆம் திகதி தேசியக் கொடிக்குழு தேசியக்கொடி பற்றிய பரிந்துரையைச் செய்தது. செனட்டர் நடேசன் இதனை ஏற்கவும் இல்லை, கையெழுத்திடவும் இல்லை. 1950 ஆம் ஆண்டு மாசி மாதம் 15 ஆம் திகதி செனட்டர் நடேசன் இது பற்றி அறிக்கை வெளியிட்டார்.. அதில் “தேசப்பிரிவினையின் குறியீடாக கொடி இருக்கும்” எனக் கூறினார். 1952 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 02 ஆம் திகதி தேசியக்கொடி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. தேசியக்கொடிக்கு ஆதரவாக 51 பேரும் தேசியக் கொடியை எதிர்த்து 21 பேரும் வாக்களித்தனர்.
வவுனியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி. சுந்தரலிங்கம் தேசியக்கொடியை எதிர்த்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். இடைத்தேர்தல் இடம்பெற்றபோது, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாநகர சபை மேஜர் குரே வவுனியாவில் போட்டியிட்டார். சுந்தரலிங்கம் பெருவெற்றி பெற்றார். அகில இலங்கை தமிழரசுக்கட்சியும் தேசியக்கொடியை நிராகரித்தது. “தமிழ்பேசும் சமூகம் புறக்கணிக்கப்பட இரண்டாம் தரப்பிரஜைகளாக இந்நாட்டில் வாழ்கின்றனர் என்பதைப் பிரகடனப்படுத்தும் ஒட்டுக்கொடி” எனப் பிரசாரம் செய்தது.
சிங்களக் குடியேற்றங்கள்
கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரமடைந்தது. 1941 இல் உருவாக்கப்பட்ட கல்லோயாக் குடியேற்றத் திட்டமும் சுதந்திரத்தின் பின்னரே நடைமுறையில் துரிதநிலைக்கு வந்தது. இக்குடியேற்றத்தின் மூலம் 44 குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. அதில் 38 கிராமங்கள் சிங்களவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. 06 கிராமங்கள் தமிழ்பேசும் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. பட்டிப்பளையாறு என்ற தமிழ்ப்பெயர் கல்லோயா என மாற்றப்பட்டது.
மாவட்டத்தின் சனவிகிதாசாரத்தை மாற்றுவதன் மூலம் மாவட்ட அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதலே நோக்கமாக இருந்தது. இக்குடியேற்றத்தை மையமாக வைத்தே 1959 ஆம் ஆண்டு அம்பாறைத் தேர்தல் தொகுதியும், 1961 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டமும் உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் தலைநகராக குடியேற்றப் பிரதேசமான அம்பாறை தெரிவு செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்டம் என்ற பெயர் பின்னர் ‘திகாமடுல்ல’ மாவட்டம் என மாற்றப்பட்டது. சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மொனராகலை மாவட்டத்துடன் இணைந்திருந்த மகா ஓயாவும், பதியத்தலாவையும் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. சிங்களப் பிரதேச சபைகளும் உருவாக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி கல்முனை, சம்மாந்துறை போன்ற இடங்களுக்குச் சென்று குடியேற்றங்களுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டது. இக்குடியேற்றங்கள், பின்னர் திருகோணமலை மாவட்டத்துக்கும் விஸ்தரிக்கப்பட்டது.
திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம், சட்டவிரோத விவசாயக் குடியேற்றம், மீனவர் குடியேற்றம், வியாபாரக் குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம், புனிதப் பிரதேசக் குடியேற்றம், முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றம் என அனைத்துவகைக் குடியேற்றங்களும் திருகோணமலை மாவட்டத்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்கள்தான் இவற்றில் பெரியவையாக இருந்தன. மாவட்டத்தின் சனத்தொகையை மாற்றியமைப்பதில் பெரும்பங்களிப்பினைச் செய்தனர்.
அல்லைத்திட்டம், கந்தளாய்த்திட்டம், மொறவேவாத் திட்டம், மகாதிவுல்வௌத்திட்டம், பதவியாத்திட்டம் என மிகப்பெரும் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. வடக்கையும், கிழக்கையும் இணைக்கின்ற மாவட்டமாக இருப்பது திருக்கோணமலைதான். தாயக ஒருமைப்பாட்டைச் சிதைத்தலே இக்குடியேற்றங்களின் முக்கிய நோக்கமாக இருத்தது. 1970களில் இக்குடியேற்றங்களை வால்போல இணைத்து ‘சேருவல’ என்கின்ற சிங்களத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. பிரதேசசபைகளும் உருவாக்கப்பட்டன.
‘சேருவல’ தொகுதியின் உருவாக்கத்தால் மூதூர் என்ற இரட்டை அங்கத்தவர் தொகுதி, ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டது. இதன்மூலம் மூதூர்ப் பிரதேச தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. மாவட்டத்தில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் குறைவடைந்தது. பிற்காலத்தில் இக்குடியேற்றங்கள் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டன. வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலர் பிரிவு உருவாக்கப்பட்டது. வவுனியா வடக்கில் மகாவலித்திட்டத்தை இதற்காகப் பயன்படுத்தினர். இன்று வவுனியா வடக்குப் பிரதேச சபையில்கூட நான்கு வட்டாரங்கள் சிங்கள வட்டாரங்களாக இருக்கின்றன. முல்லைத்தீவில் ‘வெலிஓயா’ என்ற பெயரில் சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டது.
1948 ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி வழங்கப்பட்ட சுதந்திரம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்களினை ஒடுக்குவதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கியது. ஆட்சியாளர்கள் ஒரேநேரத்தில் தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிப்பது, அரச அதிகாரக் கட்டமைப்பைச் சிங்களமயமாக்குவது என்கின்ற இரண்டு செயற்திட்டங்களை முன்னெடுத்தனர். முதலாவது செயற்திட்டத்தின் அடிப்படையில் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்மொழிப் புறக்கணிப்பு, பொருளாதாரச் சிதைப்பு, கலாசார அழிப்பு என்பன அரங்கேற்றப்பட்டன. தேசியக்கொடி குறியீட்டு வடிவில் அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது. 1956 ஆம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டம், ஒரேநேரத்தில் தேசிய இன அழிப்பாகவும், அரசு அதிகாரக் கட்டமைப்பைச் சிங்களமயமாக்குவதாகவும் இருந்தது.
கல்லோயாத் திட்டம்
1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தைத் தொடர்ந்து பிரதமர் டி.எஸ். சேனநாயக்க தனது நிரந்தர செயலாளர் சேர். கந்தையா வைத்தியநாதன், நீர்ப்பாசனப் பணிப்பாளர் ரி. அழகரத்தினம், நில அளவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எஸ். புறோக்கியர் என்போரை ஒரு கூட்டத்திற்கு அழைத்தார். கிழக்கு மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பட்டிப்பளை ஆற்றினை பாரிய நீர்பாசனத் திட்டமாக்கப் போவதாக அறிவித்தார். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி அழகரத்தினத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பட்டிப்பளை ஆறு பதுளை மாவட்டத்தில் உள்ள மடுல்சீமை மலைத்தொடரில் ஊற்றெடுத்து 56 மைல்கள் பாய்ந்தோடி, வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது. இதன் தரையில் பிரதான தமிழ்க்கிராமமான பட்டிப்பளை இருந்தது. சிறந்த விவசாய பூமி. மன்னராட்சிக் காலத்தில் இருந்தே சிறந்த விவசாயப் பிரதேசமாக இருந்தது. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இதனை வளர்க்கும் முகமாக இறக்காமம், கொண்டை வெட்டுவான், அம்பாறைக் குளங்களைப் புனரமைத்துக் கொடுத்தனர்.

அழகரத்தினம் குழுவினர் சம்மாந்துறை சென்று அங்கிருந்து மாட்டுவண்டி மூலம் பட்டிப்பளை ஆற்றின் மேல் பகுதியில் உள்ள அம்பாறை, இங்கினியாகலை ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். பட்டிப்பளையாற்றை இங்கினியாகலையில் மறித்து நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்கி நீர்ப்பாசனத் திட்டத்தை ஆரம்பிக்கலாம் எனச் சிபாரிசு செய்தனர்.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கல்லோயா அபிவிருத்திச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பட்டிப்பளை ஆறு கல்லோயாவாக மாற்றப்பட்டது. தமிழ்க் கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டும் முயற்சி இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. கல்லோயா அபிவிருத்தி வேலைகளை 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இங்கினியாகலையில் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க ஆரம்பித்து வைத்தார். பட்டிப்பளை ஆற்றை இங்கினியாகலையில் மறித்து அணை ஒன்றைக் கட்டி நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. டி.எஸ். சேனநாயக்க அதனை ஆரம்பித்து வைத்ததால் இதற்கு சேனநாயக்க சமுத்திரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
கல்லோயாத் திட்டம் 12,0000 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்தது. ஒவ்வொரு நிலத்திலும் 150 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று ஏக்கர் வயல் நிலங்களும் இரண்டு ஏக்கர் மேட்டு நிலங்களும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடியிருக்க வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டது. 40 குடியேற்றக் கிராமங்களில் 34 கிராமங்கள் சிங்களவர்களுக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டன. 6 கிராமங்கள் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டன.
கல்லோயாத் திட்டத்தின் முதலாவது கட்டமாக 20,000 சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். 6 கிராமங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் குடியேற்றப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற கலவரத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கல்லோயாத் திட்டத்திலிருந்து விரட்டப்பட்டனர். மீண்டும் குடியேறிய மக்கள் 1958 இல் நடைபெற்ற கலவரத்தில் மீண்டும் விரட்டப்பட்டனர். மீண்டும் திரும்பிய ஒருசிலரும் 1990 இல் விரட்டப்பட்டனர். இறுதியில் கல்லோயாத் திட்டம் தனித்துச் சிங்களவர்களுக்கான திட்டமாகவே மாறியது.
தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமென ஒதுக்கப்பட்ட 1200 ஏக்கர் நிலங்களிலும் சிங்களவர்களே பயிர்ச்செய்கையை மேற்கொண்டனர். இதைவிட பொத்துவில் லகுகலவில் வாழ்ந்த 343 தமிழ்க் குடும்பங்களும் சிங்களவர்களினால் விரட்டியடிக்கப்பட்டனர். இவர்கள் காரைதீவு, விநாயகபுரம், ஆலையடி வேம்பு போன்ற இடங்களில் அதிகளவாக வாழ்கின்றனர்.
1959 ஆம் ஆண்டு தேர்தல்தொகுதி மறுசீரமைப்புச் செய்யப்பட்டது. அதன்போது முதன்முதலாக சிங்கள மக்களுக்கு என அம்பாறைத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இத் தேர்தல் தொகுதியிலிருந்து முதன்முதலாக 1960 ஆம் ஆண்டு சிங்களவர் ஒருவர் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டார். 1961க்கு முன்னர் இப்பிரதேசம் மட்டக்களப்புத் தெற்கு என்றே அழைக்கப்பட்டது. 1961 இல் அம்பாறை என்ற தனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. குடியேற்றப் பிரதேசமான அம்பாறை இதன் தலைநகராக்கப்பட்டது. 1980களில் இதன்பெயர் திகாமடுல்ல என மாற்றப்பட்டது. இதே காலப்பகுதியில் சிங்கள மக்களின் விகிதாசாரத்தை மாவட்டத்தில் கூட்டுவதற்காக மொனராகலை மாவட்டத்துடன் இணைந்திருந்த மகாஓயா, பதியத்தலாவ பிரதேச செயலாளர் பிரிவுகள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.
திருகோணமலைக் குடியேற்றங்கள்
உலகின் எல்லா இடங்களிலும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்வதற்கு ஆதிக்கசக்திகள் குடியேற்றங்களையே ஒரு பிரதான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைகளின் அடிப்படைகளை இல்லாமல் செய்வதற்கும், போர்க்காலங்களில் போராளிகளை இலகுவாக ஒடுக்குவதற்கும், ஒடுக்கப்படும் மக்கள் தங்களிடையே நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ளாமல் கூறுபோடுவதற்கும், தீர்வு என வரும்போது குடியேற்ற மக்களைக்காட்டி தீர்வு முயற்சிகள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்குச் சார்பாகச் செல்லவிடாமல் தடுப்பதற்கும், இக்குடியேற்றங்களே அவர்களுக்குப் பெரிதும் பயன்படுகின்றன.
பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றம், அயர்லாந்தில் புரட்டஸ்தாந்தியர்களின் குடியேற்றம், கொசேவாவில் சேர்பியர்களின் குடியேற்றம், திபெத்தில் சீனர்களின் குடியேற்றம், கிழக்குத் தீமோரில் இந்தோனேசியர்களின் குடியேற்றம், பிலிப்பைன்ஸ் மிந்தானோவில் கிறிஸ்தவர்களின் குடியேற்றம் என்பன இந்த வகையிலேயே நடைபெற்றன.
உலக நாடுகளின் நிர்ப்பந்தங்களினால் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது இக்குடியேற்றங்களே பெரும் தடைகளாக விளங்குகின்றன. கிழக்குத் தீமோர் மக்களின் சுதந்திரத்தினை அங்கு குடியேறியுள்ள இந்தோனேசியர்கள் தடுத்ததையும், பாலஸ்தீன சுயாட்சி ஒழுங்காகச் செயற்படுவதை மேற்குக்கரை, காஸா பகுதிகளில் குடியேறிய யூதக் குடியேற்றவாசிகள் தடுப்பதையும் இந்தவகையிலேயே விளங்கிக்கொள்ள வேண்டும்.
இலங்கையிலும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைச் செயலற்றதாக்குவதற்கு ஆட்சியாளர்கள் குடியேற்றங்களையே ஒரு பிரதான கருவியாகப் பயன்படுத்தினர். தமிழர்களின் தனிவழி அரசியல் 1920களிலேயே உணரப்பட்டதால் அக்காலத்தில் இருந்தே சிங்களப் பேரினவாதிகளிடம் இக்குடியேற்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியிருந்தது. 1931 இலிருந்து 1947 வரையான டொனமூர் அரசியல் யாப்புக் காலப்பகுதியில் சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டே இதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த வகையிலேயே 1941 இல் கல்லோயா அபிவிருத்தித் திட்டம் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுதந்திரத்தினைத் தொடர்ந்து தமிழர் அரசியல், சமத்துவ உரிமை என்பதற்கப்பால் தாயக இறைமை என்பதனை நோக்கி வளரத் தொடங்கியது. தாயகக் குறியீடாக வடக்கு – கிழக்கு நிலப்பரப்பு என்பது எழுச்சியடைந்தது. இத்தாயக இறைமை, சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைத் தடுக்கும் வகையில் ஒரு நீண்டகால இலக்கில் குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அவர்கள் பிரதானமாக தேர்ந்தெடுத்த இடமே திருகோணமலை மாவட்டமாகும். திருகோணமலை மாவட்டத்தினை கடற்கரைப்பக்கமாக வில்போல சுற்றிவளைத்து இவை மேற்கொள்ளப்பட்டன. ஏனைய தமிழ்ப்பிரதேசங்களுடனான தொடர்புகளை துண்டித்தலே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. ஒரு வில்போல நீளமாக வளைந்திருக்கும் குடியேற்றப் பிரதேசமான சேருவல தேர்தல் தொகுதியினைப் பார்க்கும்போது இவ்வுண்மை தெளிவாகப் புலப்படும்.
இந்நிலையில் தமிழ் மக்களின் புதிய தலைமுறையினர் இக்குடியேற்றங்களைப் பற்றியும், அதற்குப் பின்னால் உள்ள சதி முயற்சிகளைப் பற்றியும், பேரினவாதிகளின் மூலோபாயங்கள், தந்திரோபாயங்கள் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டியது அவசியமானதாகும். இவ்வறிந்து கொள்ளலே இப்புற்றுநோயை இந்த மட்டத்திலாவது இடைநிறுத்தி மேலும் வளராமல் தடுப்பதற்குரிய மார்க்கங்களைப் புலப்படுத்தும். பேரினவாதிகளின் செயற்பாட்டிற்கு மாற்றான ஒரு செயற்பாட்டுத்தளத்தையும் திறந்துவைக்கும். மாற்றுமருந்து வகைகளையும் கண்டுபிடிக்கும்.
சுதந்திரத்திற்கு முன்னர் திருமலை மாவட்டத்தில் நிரந்தரமாகக் குடியேறியிருந்த சிங்கள மக்கள் என விரல்விட்டு எண்ணக்கூடியோரே வாழ்ந்திருந்தனர். இதற்குப் புறம்பாக திருமலை நகரத்தில் மட்டும் துறைமுக வேலைகளுக்காகவும், பிரித்தானியக் கடற்படைத்தள வேலைகளுக்காகவும் தற்காலிகக் குடியேறிகள் சிலர் வாழ்ந்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட திட்டமிட்ட விவசாயக் குடியேற்றத் திட்டங்களைத் தொடர்ந்தே, பெரும் எண்ணிக்கையானவர்கள் குடியேறத் தொடங்கினர். தொடர்ந்து இவற்றைப் பலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டவிரோத விவசாயக் குடியேற்றத் திட்டங்கள், கைத்தொழில் குடியேற்றங்கள், வியாபாரக் குடியேற்றங்கள், மீனவர் குடியேற்றங்கள், புனிதப் பிரதேசக் குடியேற்றங்கள், முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றங்கள் என்பன சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தன. இக்குடியேற்றங்களின் வளர்ச்சியினாலேயே திருகோணமலை மாவட்டத்தில் 1827 இல் 1.3% ஆக இருந்த சிங்களவர் எண்ணிக்கை, 1981 இல் 33.62% ஆக அதிகரித்தது. அதேவேளை 1827 இல் 81.82% ஆகவிருந்த தமிழர்களின் எண்ணிக்கை 36.4% ஆகக் குறைந்தது.
இனி திருகோணமலையின் முக்கிய திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களைப் பார்ப்போம்.
தொடரும்.