மாதா கோயில் அம்மன்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

மாதா கோயில் அம்மன்

June 12, 2025 | Ezhuna

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.

அறிமுகம்

உலக அரங்கில் முதன்மை பெற்ற வழிபாடுகளில் ஒன்றாகப் பெண் தெய்வ வழிபாடு காணப்படுகின்றது. இயற்கை மீதான அச்சம், வியப்பு என்பவற்றின் வழிவந்த வழிபாடு, தெய்வம் எனும் கருத்துரு என்பவற்றின் வழியும் இனக்குழு, நிலம், கலை என்பவற்றின் வழியும் பல்தெய்வ வழிபாடுகள் உருவாக்கம் பெற்றன. அவற்றுள் பெண் தேவதையாக, அம்மனாக, கன்னியாக, குழந்தையாக எனப் பலவாறு வழிபடப்பட்டாள். உலகில் தோன்றிய பெரும்பாலான சமயங்கள் பெண் தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தன.

தெய்வங்கள் இயல்பிறந்த ஆற்றல்களை உடையன. அதேவேளை நாட்டார் தெய்வங்கள் மனிதர்களைப் போல ஆசாபாசங்களை உடையனவாக மனித நடத்தைகளைக் கொண்டனவாக அமைந்திருந்தன. அவை பற்றிய கதைகள் இதனை வலுப்படுத்துகின்றன. பிற்காலப் பெருந்தெய்வங்கள் பரிபூரணத்துவம் பெற்ற பரம்பொருள்களாகக் கருதப்பட்டன. ஆனால் நாட்டார் தெய்வங்கள் ஆவி, உயிரி, மானா, குறி, முன்னோர் போன்ற வடிவங்களில் இருந்தன; இனக்குழுமவியலின் தெய்வமாகப் போற்றப்பெற்றன. குறித்த இனக்குழுமத்தின் தெய்வத்தை மற்றைய இனக்குலத்தவர் அறிந்திருந்தனர் எனக் கூறுவதற்கில்லை. அறிந்திருந்தாலும் வணங்கினர் எனக் கூற முடியாது. அவரவர் தெய்வம் அவரவர்க்கானது. அது அவரது நம்பிக்கையாகும். காலவோட்டத்தில் வலுவுள்ளன நிற்க, ஏனையவை அருகிப்போயின. நாகரிகம், மேனிலையாக்கம் எனும் மனப்பாங்குகள் நாட்டார் தெய்வங்கள் அருகிச்செல்ல பெரிதும் காரணமாகி நிற்கின்றன.

ஆயினும் தம் குலதெய்வம் என்ற நம்பிக்கையூற்று வற்றிப்போகாத சமூகம் அல்லது இனக்குழுமம் இன்றும் நாட்டார் தெய்வங்களை – குல தெய்வங்களை ஏதோ ஒரு வகையில் பற்றிப்பிடித்து நிற்கின்றன. சமூக, கால மாற்றத்தின் வழி சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்திருப்பினும் அவை தம் அடிக்கட்டுமானத்தில் மாற்றமின்றி  நிற்கின்றன. பாரம்பரிய வழிபாட்டுமுறைகளின் வழி வழிபடப்படுகின்றன. தெய்வவழிபாடுகள், சமயவியற்புலத்தில் மட்டுமின்றி, சமூகவியல், மானிடவியல், இனவரைவியல் ஆகிய ஆய்வுப்புலங்களுக்கும் முக்கியமான தரவுகளைக் கொடுக்கின்றன. குறிப்பாக, ஒரு சமூகத்தின் பொருளாதாரம், அரசியல் அமைப்பு, மொழிப்பயன்பாடு, உணவுப்பழக்கம், தொழில்கள் போன்ற கூறுகளின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கும், அந்தச் சமூகத்தின் தொன்மை மற்றும் சமூக அசைவியக்கங்களை அலசுவதற்கும் இவ்வழிபாடுகள் பெரிதும் உதவுகின்றன.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் அம்பன் எனும் கிராமத்தில் இன்றும் நின்று நிலவும் தெய்வமாக ‘மாதா கோயில்’ அம்மன் காணப்படுகின்றது. அம்பனைத் தன் பிறந்த ஊராகக்கொண்ட சமூகவியலாய்வாளர், எழுத்தாளர் திரு.ந. மயூரரூபனின் வழிகாட்டலில் என்னோடு வழமைபோல ஆய்வு ஆர்வலர் திரு. கோ. விஜிகரனும் இணைந்து இந்தத் தெய்வம் பற்றிய களப்பணியினை மேற்கொண்டோம்.

மாதா கோயில் அம்மன்

ஈழத்துத் தமிழ்ச்சூழலில் புழக்கத்தில் இல்லாத ஒரு வழிபாடு அம்பன் பகுதியில் காணப்படுகிறது. அதுவே மாதா கோயில் அம்மன் வழிபாடு. மாதா கோயில் என்பது ஈழத்தைப் பொறுத்தவரை கிறிஸ்தவ மேரி மாதாவின் கோயிலாகவே சுட்டப்படுகிறது. எவ்வாறு ‘வேதக்காரர்’ என்பது சைவர்களைச் சுட்டாது கிறிஸ்தவர்களையே சுட்டுகின்றதோ, அதுபோலவே மாதா கோயிலும் றோமன் கத்தோலிக்கக் கோயிலை சுட்டுவதாகவே அமைந்துள்ளது. அதிலும் விசேடம் என்னவெனில் கிறிஸ்தவ மாதா கோயில்கள் பொதுக்கோயிலாகவே பெரும்பாலும் அமைந்திருக்கும். மாதா சொரூபத்தை சிலர் வீடுகளில் வைத்திருப்பர். ஆனால் அம்பன் கிராமத்தில் வீட்டுவளவிலும் தனித்த இடத்திலும் சிறு மாதா கோயில் கட்டப்பட்டு வழிபடப்படுகின்றது. இது சற்று நூதனமாகவே இருந்தது. ஆதலால் மாதா கோயில் அம்மனை ஆய்வுக்கெடுத்துக் கொண்டோம்.

கிறிஸ்தவ மாதா கோயிலா?

ஈழத்தில் காலனியகால ஐரோப்பியர் வருகையோடு றோமன் கத்தோலிக்கம் அரச மதமாக உட்புகுகிறது. அதேசமயம் சுதேச சமயங்கள் ஒடுக்கப்பட்டு கோயில்கள் யாவும் இடித்தழிக்கப்படுகின்றன. கற்கோயில்கள் இல்லாது ஒழிக்கப்பட்டன. ஐரோப்பியரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்களும் சுதேச சமய ஒடுக்குமுறையை மட்டுமல்லாது, றோமன் கத்தோலிக்கத்தின் மீதும் ஒடுக்குமுறையை கையாண்டு அவர்களது கோயில்களையும் இடித்தழித்தனர். புரட்டஸ்தாந்து தேவாலயங்களைக் கட்டினர். ஒல்லாந்தரின் ஆட்சியின் இறுதியில் 1890களில் சைவக் கோயில்கள் கட்டப்பட்டன. அதன்பின் கத்தோலிக்கத் தேவாலயங்களும் கட்டப்பட்டன. பிரித்தானியராட்சியில் கிறிஸ்தவ ஆதி நூலான பைபிள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுகின்றது. அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட மொழிபெயர்ப்புகள் யாவற்றிலும் சமஸ்கிருதச் சொற்கள் விரவியிருந்ததை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. வேதாகமம், மாதா, பிதா, சுதன், கர்த்தர் என இதனை உதாரணப்படுத்தலாம்.

இந்துக்களின் பெண் தெய்வ வழிபாடு அம்மனின் வழிபாடாகச் சுட்டப்பட்டது. பெண் தெய்வத்தை அம்மன், அம்மா, ஆச்சி, நாச்சியார், கன்னிமார் எனப் பல பொதுச்சொற்களால் சுட்டி வழிபடும் வழக்கமே இருந்துள்ளது. அதேவேளை கிறிஸ்தவ பெண் தெய்வமான மேரியை மேரியன்னை, மேரி மாதா எனச் சுட்டும் வழக்கம் தமிழர் மத்தியில் காணப்பட்டு வந்துள்ளது. இச்சொற்பிரயோகங்கள் ஈழத்தில் தெளிவான சமயப்பிரிநிலைச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தென்னாசிய நாடுகளில் மாதா கோயில்

இந்திய சாக்த மதத்தவரின் 64 சக்திபீடங்களில் ஒன்றாகவும், முதலானதாகவும் வர்ணிக்கப்படும் ‘ஹிங் குலாஜ்’ மாதா சக்திபீடக் கோயில் தற்போது பாகிஸ்தானின் பலூகிஸ்தான் மாகாணத்தில் லஸ்பெலா மாவட்டத்தில் ஹிங்கோர் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. ஹிங்குலி – முன்வகிடுக் குங்குமப்பொட்டு அல்லது செந்தூரம் எனப்படுகிறது. மகாசக்தி பீடேஸ்வரி தெய்வமாக வீற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இந்துக் கோயில் ‘மாதா கோயில்’ என்றே கூறப்படுகிறது. அதேபோல நேபாளத்தில் உள்ள அம்மன் கோயிலும் ‘பதிவரா மாதா கோயில்’ என்று சுட்டப்படுகிறது. கால்நடை (ஆடு) வளர்ப்புடன் இணைந்த தெய்வ வழிபாடாக இது காணப்படுகிறது. இது ஆசைகளின் தெய்வம் என்றும், இங்கு வரும் அடியவர் ஆசைகளை நிறைவேற்றுவதனால் இப்பெயர் பெற்றதென்றும் கூறப்படுகின்றது.

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானேர் மாவட்டத்தில் ‘ஹர்ணி மாதா கோயில்’ காணப்படுகிறது. இங்கு வழிபடுதெய்வம் துர்க்கை. இது எலிக் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஹரியானா மாநிலத்தில் ‘பர்வானூ சீதள மாதா கோயில்’ எனும் அம்மன் கோயில் காணப்படுகிறது. பாகிஸ்தானின் கராச்சியில் 50 வருடப் பழமை வாய்ந்த கோயில் 19.07.2023 இல் இடிக்கப்பட்டதாக பரபரப்பாகப் பேசப்பட்டமை யாவரும் அறிந்ததே. அது ‘மாரி’ மாதா கோயில் ஆகும்.

அண்மைக்காலத்தில் இந்திய ராஜஸ்தான் மாநிலத்தில் ‘சதி மாதா’ கோயிலும் உத்தரப்பிரதேசத்தில் ‘கொரோனா மாதா’ கோயிலும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வட இந்தியப் பண்பாட்டில் மாதா கோயில் என்பது இந்துக்களின் அம்மன் வழிபாட்டைக் குறிப்பதையும், இக்கோயில்கள் பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் அமைந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. ஈழத்துத் தமிழ்ச்சூழல் இதற்கு மாறானது. தமிழகத்திலும் ஈழத்திலும் மாதா எனும் சமஸ்கிருதச் சொல்லின் சமயரீதியிலான தற்காலப் பொதுப்பயன்பாடு கிறிஸ்தவ மேரி மாதாவைக் குறிப்பதாகவே அமைந்துள்ளது.

அம்பன் கிராமத்து மாதா கோயில் அம்மன்

வடமராட்சி அம்பன் கிராமத்தில் ஐந்து அம்மன் மாதா கோயில்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பழமையானது கிழக்கு அம்பன் பிரதேசத்தில் திருமதி தெய்வயானை வீரபாகு (வயது 82) அவர்களின் வீட்டில் உள்ளது. ஏனைய கோயில்களிலும் இந்த வீட்டில் உள்ள கோயில் தனித்துவமானதாக அமைந்துள்ளது. தனது அம்மம்மா காலத்திற்கு முன்பிருந்தே இந்த மாதா கோயில் வழிபாடு இருந்து வருவதாகவும் ஆரம்பத்தில் திறந்தவெளியிலும் பின்பு ஓலைக்கொட்டிலிலும் இருந்த தெய்வத்திற்கு, சிறிய சீமெந்துக் கட்டடம் அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது.

மாதா கோயில் என அழைப்பது ஏன் என வினவியதற்கு, யாவருமே தெரியாது என்று பதில் கூறினர். தொடக்ககால வரலாறு, இவ்வழிபாடு வந்தமுறை போன்ற எந்த வினாக்களுக்கும் அவர்களுக்கு விடை தெரிந்திருக்கவில்லை. மாதா கோயில் நூறு வருடத்திற்கு மேற்பட்டது என்ற வரியைக் கவனத்தில் கொண்டு சில அனுமானங்களுக்கு நாம் வரலாம்.

  1. ஒல்லாந்தராட்சிக் காலத்தில் சுதேசிகளின் வணக்கமுறைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறி வழிபடுதல் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இதற்குச் சுதேசிகள் சில மாற்றுத்திட்டங்களை முன்வைத்திருந்தனர். யாழ்ப்பாண நாட்டாரியல் வழிபாட்டில் கல், சூலம் என்பன அதிக செல்வாக்குப் பெறுவன. சூலத்தை வழிபடும் காலத்தில் ஒல்லாந்தரோ, அன்றி அவர்களுக்குக் காட்டிக்கொடுப்பவரோ வரின், சூலத்தின் மடிந்திருந்த இருகரைக் கம்பிகளையும் நேராக்கி விடுவர். அது சிலுவைபோல காட்சியளிக்கும். அதுபோல கற்களை புல், குழை, இலை போன்றவற்றால் மறைத்து விடுவர். அவ்வாறு செய்யமுடியாது பிடிபட்ட சந்தர்ப்பம் ஒன்றில் கல் வைத்து வழிபட்ட அம்மனை மாதா எனக் கூறியிருக்கலாம்.
  2. ஏதோ ஒரு தேவையின் பொருட்டு அம்மனை மாதா எனக் கூறி வழிபட்டிருக்கலாம்.
  3. கிறிஸ்தவச் சமூகத்தின் செல்வாக்கு அல்லது உதவி பெறுதற் பொருட்டு மாதா கோவில் எனும் சொல் புழக்கத்திற்கு வந்திருக்கலாம்.
  4. மாதா என்பது அன்னை – அம்மன்; ஆகவே அம்மனை மாதா என அழைத்தல் தமது உரிமை, அது கிறிஸ்தவத்திற்குரியதல்ல என்ற எண்ணத்தினாலும் இப்பெயர் இடப்பட்டிருக்கலாம்.
  5. மத நல்லிணக்க உணர்வினால் இவ்வாறு சுட்டியிருக்கலாம்.

இக்கோயில்கள் இருக்கும் இந்தவூரின் பெயர் அம்பன் எனப்படுகிறது. அதற்குத் தெளிவான காரணமெதுவும் கூறப்படவில்லை. அம்மன் – அம்பன் எனப் பேச்சுவழக்கில் திரிந்திருக்கலாம். இத்தெய்வ வழிபாட்டின் சிறப்பே ஊர்ப்பெயராக மாறியிருக்கலாம்.

ஈழத்தில் மாதா கோயில் என ஒரு சைவக் கோயில் யாழ்ப்பாணம் காரைநகர் கள பூமியில் இருக்கின்றது (பாலேந்திரன்,ச. ஆ., 2002, காரைநகர் தொன்மையும் வன்மையும், பாலாவோடை அம்மன் பதிப்பகம், காரைநகர்). காலனிய காலத்தில் சைவ வழிபாடு தடை செய்யப்பட்டிருந்த சூழலில் அம்மனை வழிபட்டு வந்ததாகவும், அந்நியர்கள் அக்கோவிலை உடைப்பதற்கு வருகை தந்தபோது மாதா சொரூபத்தை வைத்து வழிபட்டு அந்தக் கோயிலைக் காப்பாற்றியதாகவும், ஆதலால் அதனை மாதா கோயில் என்று அழைப்பதாகவும் அதன் உரிமையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். இந்தக் கோயிலுக்கும் முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இடையில் ஒரு தொடர்பு உண்டு என்றும், முத்துமாரியின் தாய் தான் மாதா என்றும் சொல்லுகிற வழக்கமும் அங்கு உண்டு. இந்த வழிபாட்டு மரபு அம்பன் மாதா கோவில் அம்மன் வழிபாட்டில் இருந்து வேறானது என்பதனால் இந்த ஆய்வில் அக்கோயிலைப் பற்றி விரித்துரைக்கவில்லை.

தெய்வவுரு

மாதா கோயில் அம்மனுக்கு உருவம் இல்லை. ‘கல்’ வைத்தே வழிபடப்படுகின்றது. தொன்மைக் கோயிலான வீரபாகு அவர்களின் வீட்டில் உள்ள அம்மனின் கல், வெள்ளைக் கல்லாகக் காணப்படுகிறது. சங்கொன்றின் நுனிப்பகுதியில் காணப்படும் சுருள் போன்ற அமைப்பில் கூம்புருவமாக ஒரு சாண் அளவுக்குட்பட்டதாகக் காணப்படுகிறது. சங்ககாலத்தில் அடி பெருத்து நுனி சிறுத்த கறுப்பு நிறத்தாலான கந்து, நந்தா விளக்கேற்றி வழிபடப்பட்டதை இவ்வடிவம் ஞாபகப்படுத்துகிறது. ஏனைய நான்கு கோயில்களிலும் கருங்கல்லாலான கூம்புருவக்கற்களே வைத்து வழிபடப்படுகின்றன. பரிவாரத் தெய்வங்களும் கூம்புருவக்கற்கள் வைத்தே வழிபடப்படுகின்றன.

வீரபாகு வீட்டுக் கோயிலிலுள்ள வெள்ளைக்கல்லின் சுருள்க்கரையில் சிதைவு ஏற்படத் தொடங்கியுள்ளதெனினும், அது தனித்துவமான ஏனைய மாதா கோயில்களில் உள்ள கல்லைவிடச் சிறப்பானதாக அமைந்துள்ளது.

கோயில் அமைப்பு

நாட்டார் தெய்வ வழிபாடுகள் பொதுவெளியில் மரத்தடி, குளத்தடி, கிணற்றடி போன்ற இடங்களில் அமைந்திருப்பது வழக்கம். அதுபோலவே இக்கோயில்களும் பொதுவெளியில் ஆரம்பிக்கப்பட்டன. இன்றும் திருமதி பானுமதி குணசிங்கம் அவர்களின் இல்லத்தில் சீமெந்துப்பீடம் அமைத்து, நடுவில் அம்மனும் நான்கு பரிவாரத் தெய்வங்களுமாக கூரையின்றி அமைந்து காணப்படுகிறது. திருமதி வீரபாகு தெய்வயானை, வன்னியசிங்கம் கனகநாதன், திருமதி பானுமதி குணசிங்கம் ஆகியோரின் காணிகளில் அமைந்துள்ள கோயில்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய எல்லாக் கோயில்களும் சீமெந்துக் கட்டடங்களாலான கூரையை உடைய சிறிய கோயில்களாக அமைந்துள்ளன. முதற்கோயில் மட்டும் மேற்குத்திசையை நோக்கியிருக்க ஏனையவை கிழக்குத்திசையை நோக்கியவையாக அமைந்துள்ளன. அவற்றுள் சாஸ்திர முறைப்படி –  சோதிடர் ஆலோசனைப்படி கட்டப்பட்டவையும் உண்டு.

மாதா கோயில் அம்மன் பற்றிய கதைகள்

  • இந்த அம்மனுக்கு உருவமில்லையெனினும் வீட்டவருக்கு ஒரு விடயம் சொல்வதற்கோ, சிக்கலைத் தீர்ப்பதற்கோ இத்தெய்வத்தை வேண்டின், அதனை உடனடியாக நிறைவேற்றும். பொழுது சாய்ந்ததன்பின் (இருட்டியபின்) கோயிலடிக்கு யாரும் செல்வதில்லை என்றும், இரவில் கிழவி ரூபத்தில் (வயதுபோன பெண்) வெள்ளை உடுப்பு உடுத்தவளாக உலாவுவாள் என்றும், எதிரில் வந்து ஏதும் சொல்லிவிட்டுப் போவாள் என்றும் திருமதி தெய்வயானை வீரபாகு (வயது, 82) கூறினார்.
  • திருமதி பானுமதி குணசிங்கம், வீட்டின் மேற்குப்புற அலம்பல் வேலியை அகற்றி எல்லை அமைக்கும்போது இக்கோயிலையும் எடுத்துவிட்டார். இக்கோவிலுக்கு முன்பு விளக்குவைத்த வெளிநாட்டில் உள்ள அண்ணாவின் கனவில் இத்தெய்வம் தோன்றியதாகவும், அவர் அடுத்தநாள் கோயிலில் என்ன செய்தீர்கள் எனக்கேட்டு, நடந்ததை அறிந்து, கோயிலை மீள அமைக்கக் கூறியபடி இக்கோயிலை அமைத்ததாகவும் திரு.ஆ. குணசிங்கம் (வயது, 60) கூறினார்.
  • யுத்த இடம்பெயர்வால் கைவிடப்பட்ட கோயிலை மீள ஆதரிக்கவில்லை. வீட்டில் நிறையப் பிரச்சினைகள் நடந்தன. கட்டுக்கேட்ட இடமெல்லாம் குலதெய்வத்தை ஆதரிக்குமாறு கூறினர். அதன்பின்பே மீளக் கோயில் அமைத்தோம். இப்போது பிரச்சினைகள் குறைந்துவிட்டன என திரு. வன்னிய சிங்கம் கனநாதன் (வயது, 72) குறிப்பிட்டார்.

இத்தெய்வத்தை வணங்கிய எவரும் இன்றுவரை இத்தெய்வ வழிபாட்டை நாட்டாரியல் பண்போடு அவ்வண்ணமே ஆதரித்து வருகின்றனர். கனவில் தோன்றி காட்சியளித்தல், கிழவி ரூபம், வெள்ளை ஆடை என்பன யாவரும் உரைக்கும் பொதுவிடயங்களாக உள்ளன.

வழிபாட்டு முறைகள்

இவ்வாலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் விளக்கு வைத்தல் நிகழ்கிறது. திருமதி தெய்வயானை வீட்டில் திங்கட்கிழமைகளில் விளக்கு வைக்கும் வழக்கமும் இருக்கிறது. விளக்கு வைக்கும் நாட்களில் வெற்றிலை, பாக்கு, பழம் என்பன படையல் வைக்கப்படுகின்றன.

தைப்பொங்கல், சித்திரைப் பொங்கல், நவராத்திரி, திருவெம்பாவைக் காலங்களில் விசேட பூஜை, வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அயலிலுள்ளவர்களும் நேர்த்தி நிறைவேற்றும் நாட்களில் கலந்துகொள்கின்றனர். வருடத்தில் ஒரு நாள் மோதகப் பூசை நடைபெறும். விசேட தினங்களில் பொங்கல் பொங்கி, பலகாரங்கள் பல (வடை, மோதகம், முறுக்கு, பால்றொட்டி, சீனியரியாரம்…) வைத்து மா, பலா, வாழை, மாதுளை உள்ளிட்ட பழங்கள் படைத்துப் பூசை செய்யப்படுகிறது. இக்கோயில் பூசை ஆண்வழிச் சமூகத்தாலேயே நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

வீட்டில் உற்பத்தியாகின்ற பொருள்களில் முதற் பொருளை (பழங்கள், தேங்காய், நெல்…..) இத்தெய்வத்துக்குப் படைத்தபின்பே பயன்பாட்டுக்கு எடுக்கும் வழக்கம் காணப்படுகின்றது.

சமூக அடுக்கமைவு

மேற்சுட்டிய ஐந்து மாதா கோயில்களும் வேளாள சமூகத்தவர்க்கானவை. அதிலும் குறித்த இரத்த பந்தம் உள்ள குடும்பங்களுக்கானவை. விவசாய நிலமும் ஆடு வளர்ப்பும் உள்ள பிராந்தியத்தில் உள்ளவை. இவற்றைவிட இதேபகுதியில் சிறுகுடி வேளாளரான பள்ளர் சமூகத்தவரிடம் ஒரு மாதா கோயில் இருப்பதை அறிந்து அங்கு சென்றோம். அக்கோயில் பூசாரியான வேலுப்பிள்ளை சசிகரன் (வயது, 41) அக்கோயில் பற்றிய விபரங்களைக் கூறினார். தன்னுடைய தாத்தா காலத்துக்கு (சிதம்பரம்) முற்பட்ட கோயில் என்றும், கல் வைத்து அம்மனை வழிபட்டனர் என்றும், 2000 ஆம் ஆண்டு வரை மாமனார் பூசை செய்து வந்ததாகவும், 2010 இல் யுத்தம் நிறைவுற்றதன்பின் வந்து பார்த்தபோது கோயில் முற்றாக சிதைந்திருந்தது என்றும், தான் தான் தற்போதைய கோயிலைக் கட்டி எழுப்பியதாகவும் கூறினார்.

ஆகமக் கோயில்களைப்போல கருவறை, முன்மண்டபம் உடையதாகவும் கல்லை அகற்றிக் கருங்கல்லாலான அம்மன் திருவுருவத்தை ஸ்தாபித்துக் கும்பாபிஷேகம் செய்ததாகவும், பரிவாரத்தெய்வமாக அண்ணமார் தெய்வம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இங்கு ஆடிப்பூரம், கும்பாபிஷேக தின மணவாளக்கோல விழா, பங்குனி உத்தரம் என்பன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

விசேட தினங்களில் இவருக்குக் கலைவரினும் கட்டுச் சொல்வதில்லை. இவரின் அக்காவின் மகளே கலையாடி, கட்டுச் சொல்கிறார். முன்பு பில்லி சூனியம், வசியம், செய்வினை அகற்றல், பேய் – பிசாசு ஓட்டுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், தனது தாய் மந்திரவித்தையில் வல்லவர் எனவும், இவை அனைத்தையும் அவர் செய்ததாகவும் கூறினார். ஆனால், தாயார் விமர்சனத்துக்குள்ளானதினால், அதனைத் தொடர்ந்து தாம் பழகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வீரபாகுவின் மகன் திரு.வீ. காந்தனும் பில்லிசூனியம், செய்வினை, வசியம் முதலான தீவினை நீக்கத்துக்காகவே இந்தத் தெய்வம் வழிபடப்படுகிறது எனக் கூறியமை இதனுடன் ஒத்துப்போகிறது.

சில அவதானிப்புகள்

  • மாதா கோயில் என்பது காலனித்துவத்தின் பேறாய் பயன்பாட்டு நிலையில் ஈழத்தில் இருந்து வந்திருக்கிறது. ஒடுக்குமுறைக்குப் பயந்து அல்லது அதற்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
  • ஈழத்துச் சைவ வாழ்வில் அம்மன் வழிபாட்டுடன் தொடர்புடைய இச்சொல், குறித்த பரம்பரையினரின் குலதெய்வத்தை அல்லது முன்னோர் வழிபாட்டைச்சார்ந்த ஒன்றென்றே கருத முடிகிறது.
  • இப்பரம்பரையினரிடம் பணிபுரிந்த சிறுகுடி வேளாளர் இத்தய்வத்தின் திருவருளை வியந்தோ அல்லது வேளாளரை ஒத்தவராகத் தம்மைக் கருதியோ, அன்றி விசுவாசத்தாலோ இத்தெய்வத்தை தம் குடியிருப்புப்பகுதியில் உருவாக்கியிருக்கலாம். இன்றும் கோயில் தண்டலுக்கு வேளாளரிடம் செல்லும் வழக்கம் உண்டு என்று பூசாரி கூறியமை குறிப்பிடத்தக்கது.
  • வெவ்வேறு கற்களால் குறிப்பிட்ட பிரதேசத்தில் (அம்பன்) இத்தெய்வவுரு வழிபடப்படுகிறது.
  • வீட்டுவளவில் சிறுகோயில் வழிபாடாகக் காணப்படுகின்றது. சிறுகுடி வேளாளரின் கோயில் மேனிலையாக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இது சாதிய நீக்கம் – தம்மைத் துறத்தல் சார்ந்த செயற்பாடாகவே பூசாரியின் உரையாடல் வழி புரிந்துகொள்ள முடிந்தது.
  • வேளாண்மை, ஆடு வளர்ப்பு என்பவற்றில் அப்பகுதி மக்கள் ஈடுபடுவதை – அவர்கள்  வேளாண்மையாளர்களாக இருப்பதனை அவதானிக்க முடிந்தது. நேபாளத்தில் உள்ள பதிவரா மாதா கோயிலும் ஆடு வளர்ப்புடன் தொடர்புபட்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • தீவினைகளுக்கு எதிராகக் கோயிலமைத்து வழிபடப்படுகின்ற நேர்நிலைத் தெய்வம் இதுவாகும்.
  • பெண் தெய்வமெனினும் ஆண்வழிப் பூசாரிகளே பூசை செய்து வருகின்றனர்.
  • தாய்மையின் அடையாளமாக, தூய்மையின் சின்னமாக இத்தெய்வமிருத்தலை கிழவி ரூபம், வெள்ளை உடை எனும் சித்தரிப்புகள் புலப்படுத்துகின்றன.
  • இந்தக் கோயில்கள் எதிலும் பலியிடலோ, மட்ச – மாமிசப் படையல்களோ இடம்பெறுவதில்லை.

நிறைவுரை

குலதெய்வ வழிபாடுகளில் ஒன்றாக அம்பன் பிரதேசத்து மாதா கோயில் அம்மன் வழிபாடு காணப்படுகிறது. இது சைவ வேளாளர் சமூகத்தின் வழிபாடாகும். மாதா எனும் சொல் அன்னையைக் குறிக்கும் எனினும், யாழ்ப்பாணத்தில் மாதா கோயில் என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ மேரி மாதா கோயில்களையே பொதுவில் சுட்டுகின்றன. ஆனால் இவை சைவக் கோயில்கள்; காலனிய ஆதிக்கங்களுக்குப் பயந்தோ, அன்றி எதிர்நிலை – நேர்நிலை எடுத்தோ இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மாதா என்பது அன்னையே எனப் பொருள்கொண்டு இப்பெயரைச் சூட்டி இருக்கலாம். விவசாய நிலத்தோடு இணைந்து வேளாளர் மரபின் வீட்டுவளவில் இருக்கின்ற காவல் தெய்வம் இதுவாகும். தீவினைத் துன்பத்தில் இருந்து காக்கும் தெய்வம் இது. ஆரம்பத்தில் அம்மன் தெய்வத்துக்கான கல் மட்டுமே வைத்து வழிபடப்பட்டது. காலப்போக்கில் பிள்ளையார், முருகன் உள்ளிட்ட தெய்வங்களும் இணைத்து வழிபடப்பட்டன. பல்வகைக் கற்களால் இத்தெய்வ வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. வேளாளரின் வழிபாடு சிறுகுடி வேளாளரிடம் சென்றமை அக்கால சமூக அடுக்கமைவை ஆதாரப்படுத்துகிறது. உணவுப் படையல் சமூக, பொருளாதார, பண்பாட்டு அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது. குறித்த பரம்பரையினரின் வழிபடு தெய்வம் எனினும், மாதா கோயில் என்ற குறிப்பு கால, தேச, வர்த்தமானம் கடந்த அர்த்தப்பாடுகளை உணர்த்தி நிற்கிறது.



About the Author

தி. செல்வமனோகரன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் சைவசித்தாந்த துறையின் முதுநிலை விரிவுரையாளராக தி. செல்வமனோகரன் திகழ்கிறார் . இந்திய மெய்யியல் கற்கை புலத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்துக்கற்கை புலம் சார்ந்து காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், இலங்கையில் சைவத்தமிழ் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, நாயன்மார் பாடல்கள், தமிழில் மெய்யியல் எனும் நூல்களை எழுதியுள்ளார். பெறுதற்கரிதான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளார். 'சொற்களால் அமையுலகு' என்னும் இவரது நூல் கலை, இலக்கியம் சார்ந்த விமர்சன நூலாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்