மனித இனத்தை அடையாளப்படுத்துவதில் பண்பாடு மிகமுக்கியமான அளவுகோலாகப் பயன்படுத்தப்படுகின்றது. பண்பாட்டு மானிடவியலாளர்கள் பண்பாட்டுக்கு பல்வகைப்பட்ட விளக்கங்களை வழங்கியுள்ளனர். காலமாற்றம், கலாசார – சமூக – அரசியல் – பொருளியல் உற்பத்தி உறவுகள், காலநிலை மாற்றம், அறிவியல் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், உடல் – உளவியலியல் மாற்றங்கள், சமூக ஊடாட்டங்கள், கலப்புறவுகள், மணமுறைகளில் ஏற்படும் மாறுபாடுகள், போர்கள், முரண்கள், ஏனைய உயிரினங்களுடனான உறவு, உணவுமுறை, உற்பத்தி நுட்பங்கள், ஆரோக்கிய முயற்சிகள், விருந்தோம்பல், ஆடை – ஆபரணங்கள், சந்தைப் பரவல், இணைய வாணிபம், சடங்குகள், சம்பிரதாயங்கள், கல்விமுறைகள், ஊடகங்கள், சினிமா, ஆட்சிமுறை, சித்தாந்தங்கள், ஆன்மீக வளர்ச்சி, மதவழிபாடு, வாழ்வியல் தரிசனம், பிறப்பு, இறப்பு, திருமணம், அறநெறி, ஆற்றல் இயக்கம் போன்றவை அனைத்தும் பண்பாட்டின்மீது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் மலையகத் தமிழர்களின் பண்பாட்டு உருவாக்கத்தில் பல கூறுகள் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியுள்ளன. அவையாவன:
1. இந்தியப் பண்பாடும் வாழ்வியலும்
2. தமிழகப் பண்பாடும் வாழ்வியலும்
3. இந்துமதப் பண்பாடும் வாழ்வியலும்
4. காலனியப் பண்பாடும் வாழ்வியலும்
5. சிங்கள – பௌத்தப் பண்பாடும் வாழ்வியலும்
6. கிறிஸ்தவப் பண்பாடும் வாழ்வியலும்
7. பெருந்தோட்ட உற்பத்திமுறையும் வாழ்வியலும்
8. நிலவியல், நீரியல், வானியல் தோற்றப்பாடுகள்
9 . மலையகத் தமிழரின் உள முரண்பாட்டுக் கூறுகள்
- ஆண் – பெண் உறவுமுறைகள்
- சாதியமைப்பு, தொழில்முறை அதிகாரக் கட்டமைப்பு
- அகவர்க்க முரண்கள்
- மண உறவுகள்
10. மலையகத் தமிழர் – ஈழத்தமிழர் உறவும் முரணும்
11.மலையகத் தமிழர் – முஸ்லிம்கள் உறவும் முரணும்
12. அரசுசாரா அதிகார மையங்கள் (World Vision/ Redo/ Falm)
13. ஊடகச் செல்வாக்கு, சினிமா, மெகா சீரியல்கள்
14. புதிய அறிவியல் தொழில்நுட்பங்களின் செல்வாக்கு
15. உள்ளக – வெளியகப் புலம்பெயர் வாழ்வும் பண்பாடும்
மலையகத் தமிழர்கள் வாழ்நிலையும், சூழ்நிலையும், வரலாற்றின் திசைவழியும் கடந்த இருநூறாண்டுகளில் பாரிய பல்பரிமாணச் சோதனைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளாகியுள்ளன. மலையகப் பண்பாடு அடுக்கடுக்கான ஆக்கிரமிப்புச் சட்டங்கள், அடிமைச் சாசனங்கள், திட்டமிட்ட வன்முறைகள், இடப்பெயர்வுகள், பஞ்சம் – பட்டினி, நோய், இயற்கையின் கோரத்தாண்டவம், ஆக்கிரமிப்பு அபிவிருத்தித் திட்டங்கள், பூகோள அரசியல் செல்வாக்கு என்பனவற்றுக்கும்; பெருமுதலாளிய – கார்ப்பரேட் கலாசார மேலாதிக்கம், நிதிமூலதன மேலாண்மை, நிறுவனங்களின் இரக்கமற்ற சுரண்டல் போன்றவற்றிற்கும் உள்ளாகியுள்ளது. ஆயினும், திறந்த பொருளாதாரமுறையின் வலிமையான தாக்கத்தால் வாழ்வாதாரமிழந்த தொழிலாளர்களும், மக்கள் பண்பாட்டு முதுசங்களான முதியவர்கள், இளையோர், சிறுவர்கள் என்போரும், அலையலையாகப் புலம்பெயர்ந்து நகர்ப்புற நாகரிகங்களை நோக்கி உதிரிகளாகச் நகரச்செய்த சூழலிலும், எமது மக்கள் பண்பாட்டையும் அதன் அடையாளக்கூறுகளையும் பற்றிப்பிடித்துப் பாதுகாத்து வருகின்றனர்.

நவீன கல்விமுறையும், மேலெழும்புகின்ற மத்தியதர வர்க்கமும், உதிரிவர்க்கங்களும், மேலைத்தேய வாழ்வியல் கோலமுறைமையும், மேட்டுக்குடி வர்க்கங்களும் வெகுமக்கள் பண்பாட்டை அரவணைக்க மறுத்துவரும்போதிலும், எமது மக்கள், குறிப்பாக தோட்டத்தொழிலாளர்கள் மலையகமக்கள் பண்பாட்டின் காவலர்களாக நிலைத்திருக்கின்றனர். மலையகத்தின் எப்பாகத்திலும் நகர்ப்புற, கிராமப்புறப் பண்பாட்டின் பகுதியான உழைக்கும் வர்க்கத்தின் உயிரோட்டமான பண்பாட்டுக்கூறுகள் பேணப்படுவதோ, பயிலப்படுவதோ, பாதுகாக்கப்படுவதோ இல்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இந்நிலையில் மலையகத்தமிழர்களின் சமூக உருவாக்கத்தில் பண்பாட்டின் பாத்திரம் குறித்துப் பரசீலித்தல் முக்கியத்துவமுடையதாகும். அவ்வகையில்:
01. திருமண முறைகள்
02. சடங்குகள்
03. சம்பிரதாயங்களும் வழக்காறுகளும்
04. நம்பிக்கைகள்
05. ஆலய வழிபாட்டுமுறைகள்
06. சிறுதெய்வ வழிபாடுகளும் நம்பிக்கையும்
07. கலை வடிவங்கள்
08. கூத்து மரபுகள்
09. இசைக்கோலங்கள்
10. மொழியும் வழக்குகளும்
11. உணவுப்பழக்கங்கள்
12. ஆடை, ஆபரணம், ஒப்பனை
13. கலைகளும் இலக்கியங்களும்
14. நாட்டுபுற நடத்தைக்கோலங்கள்
15. பெயரியல், பெயரிடல் முறைகள்
16. குறியீடுகளும், குலக்குறிகளும்
17. உறவுமுறைகள்
18. உடலியல், உளவியல் கோலங்கள்
எனப் பட்டியலிட முடியும். இதனை விரித்தும் குறுக்கியும் பொருள்கோடல் செய்ய முடியும்.
திருமணமுறைகள்
மலையகத்தமிழர்களின் திருமணமுறைகள், பண்டைத்தமிழரின் திருமணமுறைகளில் பெரிதும் ஒத்தியங்கும் போக்குடையதாகக் காணப்படுகின்றது. பெண்பார்த்தல், மாப்பிள்ளை பார்த்தல், நிச்சயதார்த்தம் செய்தல், திருமணம் செய்தல், அம்மிமிதித்தல், அருந்ததி பார்த்தல், சீர் எடுத்தல், ஆடை சுற்றுதல், நலங்கு வைத்தல், வீட்டுக்கழைத்தல், முதலிரவு என தொடங்கும் திருமணச் சடங்குகள் ஒவ்வொரு குல, கோத்திர மரபுகளுக்கேற்ப பொதுக்கூறுகளையும், சிறப்புக் கூறுகளையும் கொண்டுள்ளன.
மாமன்மாரைத் திருமணம் செய்தல், அக்காள் மகளைத் திருமணம் செய்தல், குல – கோத்திர மரபுகளுக்குள் திருமணம் செய்தல் என இணக்கமுறைத் திருமணங்கள் நடந்து வருகின்றன. பண்டைத் தமிழர்களிடையே காணப்பட்ட மடலேறுதல், ஒருதலைக்காமம், பொருந்தாக்காதல் என்பனவும், பிணக்குமுறையிலமைந்த திருமண, மணவாழ்க்கை முறைகளும் சமூகச் சுவீகாரத்தைப் பெற்றுள்ளன.
திருமணத்திற்கு முன்னர் பெற்றோர், தாய்மாமன்மார், மாமிமார் ஆகிய உறவுமுறைகள் பேரம்பேசும் படலத்தில் ஈடுபடுகின்றனர். ஆயினும் தொழிலாளர் வர்க்கக் குடும்பங்களில் இறுக்கமான சீதனமுறைகள் காணப்படாதது குறிப்பிடத்தக்கதாகும். ஒருதாரமுறை ஏற்கப்பட்ட சமூகவாழ்க்கை முறையாகக் காணப்பட, பல்தார மணமுறையும், அக்காள் – தங்கை மணமுறையும், களவு மணமுறைகளும் அரிதானதாகக் காணப்படுகின்றன. மத்தியதர வர்க்கக் குடும்பங்களிலும், பாட்டாளிகள் – உதிரிப்பாட்டாளிகளிடையேயும் காதல் திருமணங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.
சடங்குகள்
மலையகத் தமிழரிடையே வழங்கப்படும் சடங்குகளும் நீண்டநெடிய பண்பாட்டுத் தொடர்புடையன. அவை பண்டைய தமிழர்களின் பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, இராமாயணம், மகாபாரதக் கதைகள், சடங்குகளோடும் தொடர்புடையவை. உதாரணமாக, பொன்னர் – சங்கர் கூத்திலே, தங்காளுக்கு, மாயவர் கூறுவதாக வருகிற “தாயகுக்கருத்தான் தலைமகனார் தந்தைக்கும் தான் இளையவனாம் தலை சிரைத்து கொல்லுவைக்க….” எனும் பாடல் ஈமச்சடங்குகளை எவ்வாறு நிகழ்த்துவது என எடுத்துக்கூறுகின்றது. குடும்பங்களிலே திருமணம், பூப்பெய்தல், பிள்ளை பிறப்பு, முதலிரவு, வளைகாப்பு, புண்ணியதானம், சோறூட்டல், காதுகுத்துதல், துடக்குபார்த்தல் எனப் பல கருமங்கள் சடங்குகளாகவே பேணப்பட்டுவருகின்றன.
புதுமனை புகுதல், காதுகுத்துதல், பெயர் சூட்டுதல், ஆலயச்சடங்குகளில் குறிப்பெடுத்தல், தீமிதிப்பு, கரகம், காவடி பாலித்தல் ஆகியன சிறப்பான மலையக மக்கள் பண்பாட்டுடனும் வழிபாட்டுடனும் தொடர்புடையனவாகும். நகர்ப்புறங்களிலும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களிலும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் ஆலயத்திருவிழாக்களுக்கு மாறாக, மலையகத் தமிழரிடையே குறிப்பெடுக்கும், கரகம் பாலிக்கும் சடங்குமுறைகள் காணப்படுகின்றன.
சம்பிரதாயங்களும், வழக்காறுகளும்
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்றொரு முதுமொழியுண்டு. அது மலையகத் தமிழருக்கும் பொருந்துகின்றது. உறவினரை, நண்பர்களை வரவேற்றல், உபசரித்தல், முதியோரைப் பராமரித்தல், வெற்றிலை வைத்தல், வெற்றிலை – பாக்கு – பணம் வைத்து மாமனை அழைத்தல், ஆரத்தியெடுத்தல், உலக்கை தாண்டல், அம்மிமிதித்தல், அருந்ததி பார்த்தல், வண்ணான் தீட்டுப் பார்த்தல், பந்தலிடல், திருமணம் – பூப்புனித நீராட்டுவிழா (மாமன்) கொடியேற்றல், மாவிலைத் தோரணம் கட்டுதல், கும்பம் வைத்தல், கற்கண்டும் பொட்டுக்கடலையும் கொடுத்தல், திலகமிடல், கரம்கூப்பி வரவேற்றல் என்பன இம்மக்களின் சம்பிரதாயங்களாகும்.

ஈமச்சடங்குகளில் தாலியறுத்தல், வாய்க்கரிசி போடல், எண்ணெய் வைத்தல், நெய்ப்பந்தமேற்றல், கொள்ளிக்குடம் உடைத்தல், முக்காடு போடல், முக மயிர், தலை சிரைத்தல், நீர்மாலையெடுத்தல், பால் வைத்தல், கருமகாரியம் செய்தல், திதி – திவசம் செய்தல், மோட்ச விளக்கேற்றல், தீபாவளியன்று புடவை – பலகாரம் – உணவு படைத்தல், அமாவாசை – பெளர்ணமி விரதம் பிடித்தல் என்பனவும் காணப்படுகின்றன.
ஆலய வழிபாடும் வழக்காறும்
மலையக ஆலயங்களின் வழிபாடுகள் எனக் கொள்ளும்போது 1) மாரியம்மன் ஆலயங்கள் 2) முருகன் ஆலயங்கள் 3) பிள்ளையார் ஆலயங்கள் 4) காளியம்மன் ஆலயங்கள் என்பன பிரதான வழிபாட்டு மையங்களாகவும், வழிபாட்டு முறைகளாகவும் காணப்படுகின்றன. ஒரு பருமட்டான மதிப்பீட்டின்படி, மலையகத்தில் மாரியம்மன் ஆலயங்கள் சுமார் 2500 – 3000 வரையில் காணப்படவேண்டும். மாரியம்மன் ஆலயங்கள் மலையகத்தின் தோட்டப்பகுதிகளில் பிரதான வழிபாட்டுமுறையாக அமைகின்றன. முருகன், பிள்ளையார், காளியம்மன் ஆலயங்கள் சுமார் 1000 வரையில் காணப்படவேண்டும். இவை தோட்டங்களில் சிறு ஆலயங்களாகவும் நகர்ப்புறங்களில் பெருந்தெய்வ ஆலயங்களாகவும் காணப்படுகின்றன. முருகன், கந்தன், தண்டாயுதபாணி எனப் பரவிக்காணப்படும் முருக வழிபாட்டில் நகர்ப்புற மக்களே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
மாத்தளையில் முத்துமாரியம்மன், கண்டியில் கட்டுக்கலை பிள்ளையார், நாவலப்பிட்டியில் கதிரேசன், ஹட்டனில் பிள்ளையார், மஸ்கெலியாவில் சண்முகநாதர், பொகவந்தலாவையில் தண்டாயுதபாணி, இரத்தினபுரியில் சிவன், ஜிந்துப்பிட்டியில் முருகன் எனத் தொடரும் நகர்ப்புறப் பெருந்தெய்வங்களும், தோட்டப்புறச் சிறுதெய்வங்களும் வர்க்கரீதியான பிரிகோட்டில் நிற்கின்றன. நகர்ப்புற வழிபாடும், தோட்டப்புற மக்கள் வழிபாடும் அவற்றின் தோற்றப்பாடுகளிலும் தெளிவான வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றன.
சிறுதெய்வ வழிபாடு தோட்டப்புறங்களின் பரந்துபட்ட வழிபாடாகக் காணப்படுகிறது. கம்பனி, அரச, தனியார் காணிகளில் மலையகமக்களால் வழிபாடு நடத்தப்படும் சுமார் 50,000 சிறுதெய்வ வழிபாட்டிடங்கள் இருக்கக்கூடும்.
சிந்தாகட்டி, மருதைவீரன், மருதையன், காத்தான், காத்தவராயன், சடாமுனி, மகாமுனி, மாடசாமி, காளி, உத்திரகாளி, பத்திரகாளி, கங்கையம்மன், முனியாண்டி, ஐயனார், மாயன், கருப்பு, பத்தினி, சங்கிலிக் கருப்பு, ரோதை முனி என விரியும் இத்தகை வழிபாட்டிடங்கள் மலையகமெங்கும் வியாபித்திருக்கின்றன. இவற்றை வழிபடும் மக்கள் பொதுவழக்கில் தொழில்சார் சடங்குகளை மேற்கொண்டும், சிறப்புநிலையில் கோத்திர – சாதி அடிப்படையிலும் வழிபாடுகளை நிகழ்த்துகின்றனர்.
மூடப்பட்டும், காடாக்கப்பட்டும் கிடக்கும் நூற்றுக்கணக்கான தோட்டப்பகுதிகளில், வேற்றினத்தவரால் சூனியச் சடங்குகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஆலயங்களையும் வழிபாட்டிடங்களையும் இப்போது மலையக மக்கள் பேணிக்காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும் (உதாரணமாக: அங்குருவலை பத்தினியம்மன், மாரியம்மன், சங்கிலிக்கருப்பர் ஆலயங்கள்).
தோட்டங்களில் கொடிக்கம்பம் நடல், பந்தலிடல், குறிப்பெடுத்தல், கோடாங்கி கரகம் பாலித்தல் என மாரியம்மன் வழிபாடு தொடர, நகர்ப்புறங்களில் கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகின்றன. நகர்ப்புற வழிபாட்டில் யாழ்ப்பாணத்து ஐயர்கள் பூசகர்களாக – புரோகிதர்களாக இருக்க, தோட்டப்புறங்களில் பண்டாரம், பூசாரிமார்களால் பெரும்பாலும் இவ்வழிபாடுகள் நடாத்தப்படுகின்றன.
தற்போது இந்துமத அடிப்படைவாதக் குழுக்களும், இந்து கலாசார திணைக்களம், இந்திய – இலங்கை அரசுகளும் மலையக மக்களின் வழிபாட்டு முறைகளை சமஸ்கிருதமயப்படுத்தவும், ஆகம நெறிக்குட்படுத்தவும், அடிப்படைவாத சித்தாந்தமயப்படுத்தவும் தீவிரமாக முயன்று வருகின்றன (உதாரணம், செல்வகந்த அம்மன் ஆலயத்தின் கொடியேற்றம், காளி கோவிலில் சமஸ்கிருதப் பாராயணங்கள்). உழைக்கும் வர்க்கத்தினரின் மலையக ஆலய வழிபாடுகள், மேற்பட்ட வர்க்கங்களில் நலன்களைப் பிரதிபலிப்பனவாக வலிந்து மாற்றப்படுகின்றன.

முருக வழிபாடும், பிற சிறுதெய்வ வழிபாடுகளும் சித்திராப் பௌர்ணமியும் கைவிடப்பட்டு ஐயப்பன் வழிபாடு, அம்மா பகவான் வழிபாடு, அனுமான் வழிபாடு, விநாயக சதுர்த்தி என்பன இடையீட்டுத் தெய்வங்களாக, நாகரிக மேட்டுக்குடி வழிபாடாக முன்னெடுக்கப்படுகின்றன.
மறுபுறம் காலனித்துவக் காலத்தைவிட தீவிரமாக, கிறிஸ்தவமயமாக்கம் இடம்பெறுகின்றது. நூற்றுக்கணக்கான கிறிஸ்தவப் பிரிவுகள் மதமாற்றப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளன. ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், எழுத்தாளர்கள் எனப் பலர் மதமாற்ற அரசியலின் பகடைகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
அசம்பிளி ஒவ் கோட், சிமிர்னா, 7 ஆம் நாள் திருச்சபை, யேசு அழைக்கிறார், குழந்தை யேசு திருச்சபை, ஜெகோவாவின் சாட்சிகள், பைபிள் பெப்டிஸ்ட் சேர்ச், றோமன் கத்தோலிக்கர் எனப் பரவிவரும் மதமாற்றம், காலனியமயமாக்கல் நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதியாக நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றது. இஸ்லாமியமயமாக்கல் இன்னொரு பண்பாட்டு ஊடுருவலாக இன, மத, கலாசார, அடையாள ஊடறுப்பாகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றது. வஹாபிசத்தின் நீட்சியாக இதனைக் காண முடியும். பௌத்தமயமாக்கலின் பகுதியாக, இந்துக் குருமார் பௌத்தத் துறவிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். இன – மதக் கலப்பு மணங்கள், ஒரு பண்பாட்டு ஊடாட்டக் கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. இவ்வூடாட்டம் மலையகத் தமிழின் பண்பாட்டைச் சிதைக்கும் மேலாண்மைக் கருத்தியலோடு இணைக்கப்படுகின்றது (பொகவந்தலாவ சுகுல தேரர், வனராஜா ராகுல தேரர் – நோட்டன்). தோட்டங்களில் புதிதுபுதிதாக முளைக்கும் கிறிஸ்தவ மடாலயங்களும், தேவாலயங்களும் கண்ணாடிக்கூண்டுக்குள் முளைக்கும் மாதா சொரூபங்களும், அந்நிய நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் மத – கலாசார நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியேயாகும். பௌத்த வழிபாட்டுத்தலங்களும் புதிதாக முளைத்துவருகின்றன. இது மௌனமான கலாசார ஆக்கிரமிப்பாக அமைகின்றது.
கலைவடிவங்கள்
மலையகக் கலைவடிவங்கள் என நோக்கும்போது அவை ஆடல், பாடல், இசை, ஓவியம். சிற்பம், ஒப்பனை, ஆடை – ஆபரணம், சடங்குகள், சம்பிரதாயங்கள் என விரிவான தன்மையுடையவை. எனினும் இக்கட்டுரையின் பரப்புக்கருதி அவற்றை,
1. பொன்னர் – சங்கர்
2. காமன் கூத்து
3. அருச்சுனன் தபசு
4. பவளக்கொடி
5. காட்டோரி
என வரையறுத்துக்கொள்ளலாம்.
மலையகச் சமூக – தேச உருவாக்கத்தில் பொன்னர் – சங்கர் கூத்து ஒரு சக்திமிக்க பாத்திரத்தை வகித்து வருகின்றது. பொன்னர் – சங்கர், குன்னுடையான் – தாமரைநாச்சியின் பிள்ளைகளின் வாழ்வு, சோகம், வீரம், தாழ்வு, ஏக்கம், பரிவு, பிரிவு, கம்பேறல், படுகளம், மீளாய்வு என விரியும் காட்சிக்கோலங்களில் மானிட வாழ்வின் சகல கூறுகளும் பின்னிப்பிணைந்துள்ளன. மலையகத் தமிழரிடையே உயிர்வாழும் இக்கலையானது சில தோட்டப்பிரிவுகளில் மூன்று நாள் கூத்தாகவும், சில தோட்டங்களில் வருடம் ஒரு கட்டமாகவும் நிகழ்த்தப்படுகின்றது.
இக்கூத்து தமிழரின் உளவியல்சார் கூறுகளுடன் நெருங்கிய ஊடாட்டமுடையதாகக் காணப்படும் அதேவேளை, மலையக அரசியல் – பண்பாட்டுச் சூழலில் பாட்டாளி வர்க்கத்தின் வீரம் செறிந்த குணாம்சம், சாகச உளவியல், தன்னம்பிக்கை, சுய அடையாளத் தேடல், இறுக்கமான குடும்ப உறவுகள் என அனைத்து மானிடப் பரிமாணங்களுடனும் ஊடாட்டம் கொண்டதாகவும் காணப்படுகிறது.
18 ஆம் நூற்றாண்டின் தமிழகத்தின் வறுமை, தாய்நிலத்தின் இழப்பு, காலனிய அடிமைத்தனம், பரம்பரைக் காணிகள் இழக்கப்படல், உற்றார் – உறவினர் – சுற்றத்தினரைப் பிரிந்த துயரம், தமிழகத்திலிருந்து மலையகம் நோக்கியும், மலையகத்திலிருந்து பலகட்டமாக நிகழ்ந்த உள்ளகப் புலப்பெயர்வுகளும் வெளியகப் புலப்பெயர்வுகளும் ஏற்படுத்திய உளவியற்பாடுகள், பண்பாட்டு அதிர்வுகள் போன்றவற்றிற்கான உளவள ஆற்றுப்படுத்தல் பொன்னர் – சங்கர் ஆற்றுகைச் செல்நெறியூடாக நிகழ்கின்றது.
இலங்கை – இந்திய அடிமைச் சாசனங்கள் தந்தவலி ஆழமான உளவியல் பாதிப்பாக மலையக மக்களிடையே பொதிந்துள்ளது. தமிழகக் கிராமங்களிலும், இலங்கையின் வெப்பவலய, ஈரவலய மலைக்காடுகளிலும், கோப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், வீதிகள், ரயில் பாதைகளிலும் நடந்தேறிய அவலத்தின் ஆற்றுப்படுத்தல் வடிவமாகவும் பொன்னர்- சங்கர் கூத்து நிகழ்கின்றது. அது மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் போராடும் குணாம்சத்தையும், தீராத வேட்கையையும் வெளிப்படுத்துகின்றது. மலையக மக்கள் தம்மைச் சுயமாகத் தகவமைப்பதற்கான பண்பாட்டுக் கருவியாக இக்கலை அவர்களிடையே நிலைத்திருக்கின்றது.
அருச்சுனன் தபசு
மலையகத் தமிழரிடையே வழங்கிவரும் அருச்சுனன் தபசு, புலப்பெயர்வையும், அப்புலப்பெயர்வின் போது எதிர்கொண்ட அவலங்களையும் உட்பொதிந்துள்ளது.
“வனமாய் வனம் கடந்து
வனம் கடந்து
இந்த வனம் கடந்து
அடுத்த வனம் தானடைந்தாராம்
அருச்சுன ராஜன்” (குறவஞ்சி, தெரேசியா ஆறுமுகம் மாஸ்டர்)
எனவரும் வனம் கடத்தல் படலப் பாடல்களும், 18 வகையான வனங்களில் அருச்சுனன் எதிர்கொள்ளும் சவால்கள், போராட்டங்கள், அவற்றை வெற்றி கொள்வதற்கான உபாயங்கள், உத்திகள், ஆசிகள் என அனைத்தும் ஆச்சரியப்படத்தக்க வகையில் எம்மக்களின் வரலாற்றியலோடும் வாழ்வியலோடும் ஒத்துப்போகின்றன. அவை எதிர்கால வரலாறு முழுமைக்கும் பொருந்திச் செல்லக்கூடியதாகும்.
இந்தியப் புலப்பெயர்வு, உள்ளகப் புலப்பெயர்வு, வடக்கு நோக்கிய புலப்பெயர்வு மட்டுமல்ல; தற்போதைய மத்திய கிழக்குப் புலப்பெயர்வின் அவலங்களுக்கான ஆற்றுப்படுத்தல் மூலமாகவும் அருச்சுனன் தபசும், அதன் ஆடல் பாடல் வடிவங்களும் காணக்கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக,
“ஒண்ணாம் படிகலமாம்
கண்ணுணால கண்டேன்
தருமர் தம்பி அருச்சுணனும்
பாசுபதம் போறேன்”
எனவும்
“எந்தப்பக்கம் பார்த்தாலும்
மூங்கில் வனச்சோலை
தருமர் தம்பி அருச்சுணன்
பாசுபதம் போறேன்”
எனவும்
“பச்சிபறக்க வேணும்
ஹரிஹர ராமா, ஹரிஹர ராமா,
இந்தப் பாலர்களைக் காக்க வேணும்
ஹரிஹர ராமா, காக்க வேணும்”
எனவும்வரும் பாடல் பகுதிகள் மலையகத் தமிழரின் உளவியல் கூறுகளின் வெளிப்பாட்டு வடிவமாகக் காணப்படுகிறது.
காமன் கூத்து
மலையகத் தமிழர் பண்பாட்டின் மணிமகுடமாகத் திகழும் கலைவடிவமாக காமன்கூத்து காணப்படுகின்றது. மலையகத் தோட்டப்பிரதேசங்களில் சுமார் 500 இடங்களில் நிகழ்த்தப்படும் காமன்கூத்து மலையகத்தின் தேசிய கலையாகப் பரிணமித்திருக்கின்றது. மனித நாகரிகத்திலும், மக்களிடையேயும் ஆழப்புதைந்த காதல், வீரம், அன்பு, அறம், ஆற்றாமை, சமூக அரசியல், உளவியல் – வர்க்க முரண்கள், அக முரண்கள், காலனிய எதிர்ப்பு, துரைத்தன எதிர்ப்பு, மீளத் தகவமைக்கும் – பழி தீர்க்கும் பரிதவிப்பு, உயிர்த்தெழுதல், இரஞ்சுதல், பண்பாட்டு ஊடாட்டங்களால் ஏற்பட்ட வலிகள் என ஏக்கங்களை வெளிப்படுத்தும் காமன்கூத்து மலையகத் தமிழர் வாழ்வியலோடு நீக்கமற நிறைந்துள்ளது.
மலையகச் சமூக உருவாக்கத்தில் பண்பாட்டுக் கலைகள் மலையகச் சமூக வாழ்வியலோடு பின்னிப்பிணைந்துவிட்ட நிலையில், சமூகம் அக்கலைகளைப் பாதுகாக்கும் பாசறையாகத் திகழவேண்டியுள்ளது. மலையகப் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை மீள உருவாக்கும், தகவமைக்கும் வல்லமையுடைய ஆற்றுகைக் கலைகளைப் பாதுகாத்துப் பேணுவது இன்று அவசியமாகியுள்ளது.