நாட்டுப்புறத் தெய்வங்களில் பல, கொலைகளில் உருவானதாகவே அமையப்பெற்றுள்ளன. அவ்வாறான சம்பவங்களின் பின்னணியிலேயே பொன்னர் – சங்கர் பற்றிய அறிதல் புலனாகிறது. முன்மாதிரியான செயற்பாடுகள், உதாரணம் பொருந்திய வாழ்க்கை முறைகள் என்பன காலம் கடந்த நிலையிலும் மக்களால் ஆராதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான சம்பவங்களுள் ஒன்றாகவே பொன்னர் – சங்கர் பற்றிய அவதானம் கைக்கொள்ளப்படுகின்றமையை அறியலாம். தமிழ்நாட்டில் பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட பொன்னர் – சங்கர் கதைமரபு, நாட்டாரியல்சார் பண்புகளுடனும் நிகழ்த்துகலை வடிவங்களுடனும், அதனுடன் தொடர்புடைய அனுஷ்டிப்புகளுடனும் இணைந்து கைக்கொள்ளப்படுகின்றது எனலாம். அவ் உண்மை வரலாறு, இன்றுவரையில் மீட்டிப்பார்க்கப்படுவதற்கு பல காரணங்கள் ஏதுவாக அமைந்துள்ளன. அச்சம்பவங்கள் மரபுநிலையிலிருந்து காலவோட்டத்திற்கு ஏற்ப எவ்வாறான மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன என்பதை உற்றுநோக்குவதாக இவ் ஆய்வு அமையப்பெறும். அத்தோடு பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின்போது தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களும் பொன்னர் – சங்கர் தொடர்பிலான கவனத்தில் அதனை பயில்நிலைக்குரியதாக முக்கியத்துவப்படுத்தி வருகிறார்கள். அண்ணன்மார் கதை, பொன்னர் – சங்கர் நாடகம், பொன்னர் – சங்கர் கூத்து என்றவாறு அதனுடன் தொடர்புபட்ட பாடல்கள், கதைகள், ஆய்வுகள் என்பன வழிபாட்டு நுட்பத்துடனான அணுகுமுறைகளோடு பயில்நிலைக்குரியதாகவுள்ளது. மலையக மக்களும் இவ்வரலாற்றுச் சம்பவம் தொடர்பில் அவதானத்தைச் செலுத்தி வருகிறார்கள். அவ்விடயங்கள் தொடர்பான ஆவணப்படுத்தலோடு அதன் செல்வாக்குநிலை தொடர்பிலான பார்வையைச் செலுத்தும் வகையில் இவ் ஆய்வு விரிவுபெறும். கள ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற அனுபவங்களோடு, பொன்னர் – சங்கர் தொடர்பில் ஏலவே இடம்பெற்ற ஆய்வு முடிவுகள், நேர்காணல் மூலமாக பெறப்பட்ட தகவல்கள், எழுத்தாக்க, மின்னியல் ஆவணங்கள் ஊடாக பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றைக்கொண்டு இவ் ஆய்வு ஒருங்கிணைக்கப்படுவதாக அமையப்பெறும்.
பொன்னர் – சங்கர் கதைமரபு நீண்டகாலமாகவே பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வீரப்பூரில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களைக்கொண்டு புனைவுகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட கதை அம்சமாக இது கைக்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் இடம்பெற்ற காலம் தொடர்பில் வேறுபட்ட கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறே சம்பவம் இடம்பெற்ற களங்கள் தொடர்பிலான வேறுபட்ட கருத்துகளும் நிலவுகின்றன. அவ்வாறான கருத்துகளை முன்வைத்தவர்களில் வே.அ. பழனிச்சாமி, கி. பழனிச்சாமி, மு. கருணாநிதி, சாண்டில்யன், கனேடியப் பேராசிரியர் பிருந்தா பெக், க. கனகராசு ஆகியோரின் ஆய்வுப்பணிகள் குறிப்பிடத்தக்கதாகும். காலக்கணக்கெடுப்பு என்ற வகையில் கி.பி 15 ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னைய, பின்னைய ஆண்டுகளை அண்மித்ததாகவே இச்சம்பவம் அமைகின்றமை கவனிக்கத்தக்கது. அண்ணன்மார் கதை எனும் சிறப்புப் பெற்ற வகையிலே பொன்னர் – சங்கர் எனும் பாத்திரங்களைப் பிரதானப்படுத்துகின்ற தன்மையிலே, தங்காள் எனும் பாத்திரமும் சிறப்பிற்குரியதாய்ச் சித்திரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேளாண்மையை வாழ்வாதாரமாகக்கொண்ட ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறையினரின் வாழ்க்கைத்தடத்தைப் பதிவு செய்வதாகவே அண்ணன்மார் கதைமரபு அமைகிறது. செவிவழியாகப் பேணப்பட்டு வந்தநிலையில், இக்கதைமரபை ஆவணப்படுத்தும் பிரயத்தனங்கள் முக்கியமானவையாக அமைகின்றன. பாடல் வடிவில் ஆவணப்படுத்தப்பட்ட இக்கதை அம்சத்தை ஈ.சீ. இராமசாமியின் வாயால் இசைக்கக்கேட்டு ஆவணப்படுத்திய முயற்சிகள் மனங்கொள்ளத்தக்கதாகும். பின்னாளில் ‘பொன்னழகரென்னும் கள்ளழகர் அம்மானை’, ‘பொன்னர் சங்கர் அம்மானை’, ‘அண்ணன்மார் படுகளத்தை தேடி தங்காள் புலம்பல்’, ‘அண்ணன்மார் சுவாமி கதை’, ‘அண்ணன்மார் கதை’ ஆகிய தலைப்புகளில் ஆவணப்படுத்திய முயற்சிகளும் போற்றுதற்குரியதாகும். தமிழகத்தில் உடுக்கடி பாடல் வடிவம், கூற்றுவகைப் பாடல்களைக் கொண்டு ஆற்றுகைப்படுத்தும் படுகள வடிவம், ஒயில் கும்மி வடிவம், கூத்து வடிவம், தெருக்கூத்து வடிவம், மேடை நாடக வடிவம், வில்லுப்பாடல் வடிவம் என்றவாறு இது பயில்நிலைக்குரியதாகக் கையாளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இக்கதையம்சத்தோடு தொடர்புபட்ட பாத்திரங்கள் தெய்வங்களாக அனுஷ்டிக்கப்படுவதையும் காணலாம. அவ்வாறே பாத்திரங்களாக வழிபடப்பட்டவர்கள் தெய்வங்களாக அனுஸ்டிக்கப்படுகின்ற தன்மையையும் காணலாம்.
அதன் தொடர்ச்சிநிலையில் குங்குமம் இதழில் வெளிவந்த சித்திரக் கதை வடிவம், மு. கருணாநிதியின் திரைக்கதை வடிவம், பிருந்தா பெக்கின் கார்ட்டூன் வடிவம், சாண்டில்யனுடைய கதை வடிவம் போற்றனவும் குறிப்பிடத்தக்கது. அண்ணன்மார் கதைத் தொடர்பில் பக்திக்குரிய அனுட்டானங்கள் தொடர்பிலான அவதானம் குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டம், வீரத்திருப்பூர், மணப்பாறை ஆகிய இடங்கள் வழிபாட்டுத்தன்மைக்குச் சிறப்பிடங்களாக அமைகின்றன. இக்கதை ‘குன்னுடையான் கதை’ எனவும் அழைக்கப்படுவதுண்டு. இக்கதையை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திய கனேடியப் பேராசிரியர் பிரெண்டா பெக் அவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். ஐம்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக வீரப்பூர் தளத்தில் இருந்து இக்கதை மரபு தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் அன்னாரின் ஈடுபாடு கவனிக்கத்தக்கது. களத்தில் இருந்து பாடல்களை ஆவணப்படுத்தியதோடு மாத்திரம் அல்லாமல் அவ்விடயம் தொடர்பில் ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘வலங்கையார், இடங்கையார்’ போன்ற நூல்கள் இவ்விடயம் தொடர்பிலான பார்வைக்கு வலிமை சேர்ப்பதாக அமைகின்றன. அத்தோடு அவ் ஆய்வுகளை ஆங்கிலத்திலும் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. ‘Elder Brother’s Story’ (Oral Epic of Tamil)’ என்ற அவரது நூல் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
இக்கதை முதலாம் தலைமுறை கோளாத்தார் கவுண்டரை மூத்தவராகக் கொண்டு தொடங்கப்பெறுகிறது. கோளாத்தார் கவுண்டருக்கு ஆறு இளைய சகோரதர்கள். அவர்கள் வாழ்ந்த வெள்ளிவள நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படுகிறது. கோளாத்தார் கவுண்டர் சோழ அரசனிடம் சென்று பொன்னிவள நாட்டில் விவசாயம் செய்வதற்கான வாய்ப்பைப் பெறுகிறார். சிறிதுகாலம் சென்றவுடன் கோளாத்தாரின் தம்பிமார்களும் வந்து இணைகிறார்கள். எல்லோரின் கடும் உழைப்பால் பொன்னிவள நாடு செல்வச் செழிப்புறுகிறது. பின்னர் கோளாத்தார்மீது தம்பிகளுக்கு ஏற்பட்ட பொறாமையின் காரணமாக முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன.
கோளாத்தாருக்கும் பவளாத்தாளுக்கும் திருமணம் இடம்பெறுகிறது. ‘குன்றுடையான்’ மகனாகப் பிறக்கின்றான். குன்றுடையான், ‘மண்ணுடையான் கவுண்டர்’ எனவும் அழைக்கப்படுகிறான். குன்றுடையான், ‘தாமரை நாச்சி’ எனும் ‘பெரிய நாச்சியை’ திருமணம் செய்கிறான். இவர்களுடைய பிறப்பு, வேளாண்மை நுட்பம், வாழ்வியல் அம்சங்கள், இன்ப – துன்பம் ஆகிய நிலைகளில் இருந்து இரண்டாம் தலைமுறை கதையம்சம் நகர்கிறது. குன்றுடையான் – பெரியநாச்சி தம்பதிகளுக்கு நீண்டகாலம் பிள்ளைகள் இன்றி மனம் வருந்திய நிலையில், ஈஸ்வரனை நினைத்துக் கடுந்தவம் இருக்க வேண்டி ஏற்படுகிறது. அதனடிப்படையில் தாமரை நாச்சியாரே இக் கடுந்தவத்தை மேற்கொள்கிறார். தாமரையின் மூக்கில் கிளிகள் கூடுகட்டி வாழும் நிலையிலும், தவம் தொடர்கிறது. அவ்வாறு வாழ்ந்த கிளிகளே இக்கதையின் தொடர்ச்சியில் திருப்பத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைகின்றன. இவ் நகர்வுகளில் விஷ்ணுவின் பிரசன்னம் முக்கிய அங்கங்களாக அமைகின்றமை கவனிக்கத்தக்கது.
கடுந்தவத்தில் பேறுபெற்று குன்றுடையான் – தாமரை நாச்சி தம்பதியினர் பொன்னர், சங்கர், தங்காள் ஆகியோரைப் பெற்றெடுப்பதோடு மூன்றாவது தலைமுறை தொடங்கப்பெறுகிறது. குடும்ப உறவுகளைப்போல பகையும் தலைமுறைகளைத் தாண்டி பயணிக்கிறது. கோளாத்தாரின் தம்பிமார்கள் இரண்டாம் தலைமுறையினரான குன்றுடையான் – பெரியநாச்சி ஆகியோருக்கும் தொல்லைகள் கொடுத்த நிலையில், பொன்னர் – சங்கரையும் பிறப்பிலேயே அழிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொள்கிறார்கள். இவ்விடயத்திற்கு மருத்துவிச்சியின் உதவியை நாடுகிறார்கள். மருத்துவிச்சியும் பொன்னரையும் சங்கரையும் பிறந்தவுடன் கொல்வதற்கு இணங்கி அதற்கான முயற்சியை மேற்கொள்கிறாள். நிலவறையில் புதைக்கப்பட்ட பொன்னரும், சங்கரும் சிவனின் அருளால் ஐந்து வருடங்கள் நிலவறையிலேயே வாழ்வதாகக் கூறப்படுகிறது. மாறாக, செல்லாண்டி அம்மன் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. உயிர் அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருந்த நிலையில் சவால்களுக்கு மத்தியில் பொன்னர், சங்கரின் காலம் தொடங்கப்பெறுகிறது. விதிப்படி அவர்கள் இருவரின் வாழ்வும் பதினாறு வயது வரையிலான ஆயுளைக் கொண்டதாகவே அமையப்பெறுகிறது. வித்தைகளில் சிறந்து விளங்கும் இருவரும் விவசாயத்தைக் காப்பதற்கான அணுகுமுறைகளுடன் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்வது கதையோட்டத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அவர்கள் தங்கள் தங்கையுடன் மிகுந்த பாசம்கொண்ட சகோதர உறவை உருவாக்குகின்றனர். பொன்னர் – சங்கர் இருவருக்கும் திருமணம் இடம்பெற்றாலும், இல்லற வாழ்வுக்கு இருவரும் முக்கியத்துவம் வழங்காமை பலவீனமான அம்சமாக அமைகிறது. பொன்னர் – சங்கரின் மனைவிகள் வெறுமனே வந்துபோகின்ற பாத்திரங்களாகவே சித்திரிக்கப்பட்டுள்ளனர்.
அபூர்வக்கிளிகள் மீதான தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அண்ணன்மார் இருவரும் காட்டுக்குச் செல்கிறார்கள். இருவரின் வீர சாகச செயல்களுக்குத் துணையாக சாம்புவன் என்ற பாத்திரம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. பொன்னர், சங்கருடனேயே சாம்புவனின் வாழ்க்கையும் நகர்கிறது. இவ் இருவரின் மரணத்தின் போதே சாம்புவனும் தன்னை மாய்த்துக்கொள்வதும் குறிப்பிடத்தக்கது. தங்காள் ஆசைப்படும் கிளிகள் அவர்களுடைய தாய், தவத்தில் இருக்கும்போது தாயின் மூக்கில் கூடுகட்டி வாழ்ந்த கிளிகள் எனவும் சித்திரிக்கப்படுகிறது. கிளிகளைப் பிடிப்பதற்குச் செல்லும் வழியில் வேங்கையொன்றைச் சங்கர் வெட்டிவிடுகிறான். அவ் வேங்கைக்கு உரிமையாளரான காளியுடன் பகை ஆரம்பமாகிறது. தலைமுறைகளைக் கடந்தநிலையில், பொறாமையின் நிமித்தமாக உறவுகளுடன் உட்பகை வளர்கிறது. அதனுடைய தாக்கம் அவ்வப்போது பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. காளியுடன் தொடங்கிய பகைமைநிலை ஒவ்வொரு கட்டமாக மிகையாகின்றது. காளியின் தரப்பினர் பொன்னிவள நாட்டில் கொள்ளையிடுவது முதல் அதனை அண்ணன்மார்கள் மீட்பதுவரை பகைமையின் உக்கிரம் தொடர்கிறது. அண்ணன்மார்களின் திறமையை அறிந்த சோழ மன்னன், பொன்னிவள நாட்டின் காவல் பொறுப்பையும் அவர்களிடத்தே ஒப்படைக்கிறான். இதனை அறிந்த தலையூர் காளியின் கோபம் மேலும் அதிகரிக்கிறது. காளி வளர்த்த பன்றி பொன்னிவள நாட்டின் வேளாண்மைகளுக்குத் தீங்கு விளைவிக்கிறது. இதை அறிந்த சங்கர் அப்பன்றியைக் கொன்று விடுகிறான். இதனால், மேலும் அண்ணன்மார் மீதான கோபம் அதிகரிக்கிறது. பொன்னர் – சங்கரை எவ்வாறேனும் வென்றுவிடல் வேண்டும் என்ற முனைப்புத் தொடர்கின்றது.
நேரடியாக அண்ணன்மாரை வெல்ல முடியாது என்ற காரணத்தால் சூழ்ச்சியினால் வெல்வதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. செம்பகுலவன் பாத்திரம் ஊடாக சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. பொன்னர்மீது பழிசுமத்தி அவனை செம்பகுலவன் வெள்ளாங்குளம் அழைத்துச் செல்லும்போது தலையூர் காளியின் படையினர் பொன்னிவள நாட்டை ஆக்கிரமிக்கின்றார்கள். இதனால் சங்கர், சாம்புவன் ஆகியோர் ஸ்தலத்தில் இறக்கிறார்கள். சாம்புவன் முழங்கிய தவிலோசை பொன்னரின் காதில் விழுகிறது. பொன்னர் செம்பகுலவனை வெட்டி வீழ்த்திவிட்டு படுகளம் நோக்கி விரைகின்றான். படுகளத்தின் சங்கரின் நிலையைக் கண்டு பொன்னரும் தன்னை மாய்த்துக் கொள்கின்றான். விடயம் அறிந்த தங்காளும் படுகளம் தேடி வருகிறாள். பின்னர், பெரியகாண்டியம்மனின் துணையுடன் பொன்னரும் சங்கரும் மீண்டெழுகிறார்கள். “மாண்டவர்கள் மீண்டெழுந்தால் மாளிகை இடம் கொள்ளாது என்பார்கள். பரமனின் கட்டளைப்படி பதினாறு வயது வரையிலேயே எங்கள் ஆயுள். அக்காலம் முடிந்துவிட்டது. எங்களுக்குரிய காரியத்தைச் செய்ய வேண்டியது உனது கடமை” என அண்ணன்மார் பணிக்கின்றனர். அதற்கமைய, காரியங்களைச் செய்து முடித்தபின்னர், தங்காளும் இவ்வுலகைவிட்டு விடைபெறுகிறாள்.
பொன்னர் – சங்கரின் மனைவிமாரையும் தங்காளே தீயிட்டுக் கொழுத்துவதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஆதிக்க சக்தியினரிடமிருந்து பெண்களையும் அவர்களின் குலப் பெருமையையும் காப்பாற்றுவதற்கு தற்கொலை செய்யத் தூண்டுவது, அல்லது கொலை செய்துவிடுவது என்ற தெரிவுகளில் ஒன்றை நிறைவேற்றுவது தவிர்க்க முடியாததாகின்றது. பெண் தெய்வங்களது உருவாக்கத்தின் பின்னணியும் இதுவே. அந்தப் பின்னணியிலேயே பொன்னர், சங்கரின் மனைவிகள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக தங்காளினால் அவர்கள் தீயிட்டுக் கொழுத்தப்படுவது நியாயப்படுத்தப்படுகின்றது. அவ்வாறே குப்பாயி என்ற பாத்திரம் அவளின் கட்டளைப்படி அண்ணன்மாரால் எரியூட்டிக் கொல்லப்பட்டமையையும், அவள் எரியூட்டப்பட்ட சாம்பலை வைத்து வழிபட்ட இடம் மதுரை மீனாச்சியம்மன் ஆலய வளாகத்துடனும், காமாச்சியம்மன் ஆலயத்துடனும் தொடர்புபடுத்தப்படுவதையும் அறியமுடிகிறது. பொன்னர் – சங்கர் ஆகியோர் உட்பட தங்காளின் மறைவுடன் இக்கதை முடிவுக்கு வருகிறது.
காதலும் வீரமும் தமிழர்களின் அடையாளம் என்ற வகையில் சகோதர பாசத்தை முதன்மைப்படுத்தியதாகவே கதை நகர்கிறது. அண்ணன்மார்களின் மனைவிகள் முக்கியத்துவப்படுத்தப்படாத போக்கிலேயே கதையம்சம் உள்ளது. பல இடங்களில் யதார்த்தம் இல்லாது சிவன், விஷ்ணு ஆகியோரின் பிரசன்னம் அதிகமாக நிகழ்கின்றது. கிராமியத் தெய்வங்கள் தொடர்பிலான அம்சம் நாட்டார் பண்புநெறியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கினைப் பெற்றுள்ளது. இயற்கை நெறிமுறையுடகள் இக்கதையம்சத்துடன் கட்டியெழுப்பப்படுகின்றமை கவனிக்கத்தக்கது. விவசாய வரிவாக்கத்தின் ஊடாக ஏற்படும் நிலஉரிமை குறித்த விடயமே பகை உணர்வுத் தூண்டுதலுக்குக் காரணமாகிறது. விவசாயத்திற்குத் தீங்காக அமையும் விலங்குகள் தொடர்பான செய்திகளும் இக்கதை அம்சத்தில் கவனிக்கத்தக்கதாகும். கோளாத்தார் கவுண்டர் காலத்தில் பசுக்கள் விவசாய நிலங்களை அழிக்கின்றன. விவசாய நிலத்தில் பன்றிகளும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. விவசாயிகள் பன்றிகளை வேட்டையாடுவதும், அவற்றை உணவாக உட்கொள்வதும் உணவுச்சங்கிலி முறைமையில் தவிர்க்க முடியாததாகின்றது. இயற்கைக் கட்டமைப்பில் வேங்கைகள், பாம்புகள் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விலங்குகளாகின்றன. அவற்றை வதம் செய்யும் செயற்பாடுகள் கவனிக்கத்தக்கது. மனிதர்களோடு நேசத்துடன் வாழும் நாய், கிளி போன்ற விலங்குகளுடனான நேசமும் இக்கதையம்சத்துடன் பின்னிப்பிணைந்துள்ளமை அவதானத்திற்குரியதாகும்.

அண்ணன்மார் கதை, மூன்றாவது தலைமுறையினருடன் முடிவடையும் நிலையில், அவர்களின் நெருங்கிய உறவினர்கள் நடுகல் அமைத்து அவர்களை நினைவுகூருகின்றனர். இதில் பொன்னர், சங்கர், நல்லதங்காள் ஆகியோரின் பிரிவு குறித்த கவனத்தை ஈர்க்கின்றது. பின்னாளில் அவர்களைச் சார்ந்த உறவுகள், ஊரவர்கள், வழிபாட்டிற்குரியவர்களாக அவர்களை அனுஷ்டித்துள்ளமையை அறிய முடிகிறது. அதன் தொடர்ச்சி நிலையிலேயே அத்தலைமுறையினருடன் தொடர்புபடும் உறவுகள், நட்புகள், எதிரிகள், துரோகிகள் குறித்த கவனமும் ஏற்படுகிறது. இதனை தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பாடமாகவும் எடுத்துக்கொள்கிறார்கள். இதன் தொடக்கநிலை வீரத்திருப்பூரில் அடையாளமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சிநிலையில் அண்ணன்மார்கள், தங்காள் ஆகியோரின் சிலைகள், ஆலயங்கள், வழிபாட்டு வளாகம் போன்றவை விருத்திநிலை அடைந்துள்ளன. அத்தளத்திலிருந்து பொன்னர் – சங்கர் மீதான கவனம் ஏனைய தளங்களுக்கும் எடுத்துச்செல்லப்பட்டது. அவர்களின் உறவுகள், நட்புகள் இப்பணியைத் தொடக்கி வைத்துள்ளார்கள். இதன் பின்னணியிலேயே தமிழகத்தின் பல இடங்களுக்கும் பொன்னர் – சங்கர் கதையாகவும் வழிபாடாகவும் பரிணாமம் பெற்றது. செவிவழியாகப் பேணப்பட்டு வந்ததை மக்களிடம் முன்வைப்பதற்காக, பல நுட்பங்கள் அழகியல் உணர்வுடன்கூடிய வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டன. அவ்வாறான நகர்விலேயே பிரித்தானியக் காலனித்துவத்தால் தென்னிந்தியாவில் இருந்து இலங்கையின் மலையகத்திற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களும் இக்கதையம்சத்தை பயில்நிலைக்கு உட்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உடுக்கிசைப் பாடல்களாகவும், படுகளப் பாடல்களாகவும், கும்மிப் பாடல்களாகவும், வில்லுப்பாட்டாகவும் இக்கதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. அதன் தொடர்ச்சிநிலையில் காலம், தொழில்நுட்ப மாற்றங்களோடு இணைந்தவகையில் இக்கதையம்சம் நகர்த்தப்படுகிறது. தெருக்கூத்து, கூத்து வடிவம், மேடை வடிவம் என்ற வகையில் மேலும் அதன் பரிணாம நிலைகள் வளர்ச்சியடைந்தன. படக்கதைகள், தொடர்கதை வடிவம், நூலாக்க முயற்சிகள், சினிமா, கார்ட்டூன் ஆகிய வடிவங்களில் இதனை ஆவணப்படுத்துவதும், யூடியூப்பை உட்பட சமூக வலைத்தளங்களின் ஊடாக இக்கதையைச் சார்ந்த பல்வேறு விடயங்கள் ஆவணமாக்கப்படுவதும், அவை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படுவதும் கவனிக்கத்தக்கதாகும். எந்தவொரு வரலாற்றின் தொடர்ச்சிநிலைக்கும் அதனுள் பொதிந்திருக்கும் காத்திரமான விடயங்கள் முக்கிய காரணமாக அமைகின்றன. இக்கதையம்சமும், ஆவணப்படுத்துவதற்கு எடுத்த பிரயத்தனங்களும், ஆய்வுக்குரிய நோக்கத்துடனான பார்வையில் வெளியாகிய எழுத்துகளும் காலங்களைக் கடந்தநிலையில் செல்வாக்குடன் தொடர்கின்றன எனலாம். இதன் மூலமான கதையம்சத்துடன் கற்பனைகள் சேர்க்கைகளாகவும் திரிபுகளாகவும் இருக்கின்ற அதேவேளை, சில தவிர்ப்புகளும் தவிர்க்கமுடியாததாக அமையப்பெற்றுள்ளன.

பிரித்தானியக் காலனித்துவத்தில் புலம்பெயர்ந்து, இலங்கையில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த மலையக சமூகத்தினரின் கவனத்தில் இக்கதையம்சம் எவ்வகையான பிரயோகத்தில் கைக்கொள்ளப்படுகிறது என்ற பார்வை முக்கியத்துவம் பெறுகிறது. கூலிகளாக அழைத்துவரப்பட்ட நிலையில் அவர்களோடு ஆன்மீகம்சார்ந்த நம்பிக்கைகளும் கலை, அழகியல் உணர்வுகளும் இணைந்தே பயணித்தன. அதனை மலையக நாட்டார் பாடல்களில் அறியலாம். இலங்கையின் அரங்கியல்துறை அனுபவத்தில் மலையக நாடக முயற்சிகளே முன்னோடியானது என்ற கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. காலம்கடந்த நிலையில்தான் அக்கவனம் எடுத்துரைக்கப்பட்டமை கவனிக்கத்தக்கது. “ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு புது இரத்தம் பாய்ச்சியதாக மலையக இலக்கியம் அமைகிறது” என்பார் பேராசிரியர் க. கைலாசபதி. அவ்வாறே ஈழத்து நாடகத்துறையைப் பற்றிய பதிவுகளை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை தேசபக்தன் கோ. நடேசய்யரின் ‘தொழிலாளர்களின் அந்தரப்பிழைப்பு’ நாடகநூல் ஏற்படுத்தியுள்ளமை கவனத்திற்குரியதாகும்.
இலங்கையின் அரங்கியல்துறை வளர்ச்சியில் மலையகம் கணிசமான பங்களிப்பை வழங்கிவந்துள்ளது. ‘மலையகத்தின் முக்கூத்துகள்’ என்ற சிறப்பிற்குள் காமன் கூத்து, பொன்னர் – சங்கர், அருச்சுணன் தபசு ஆகிய கூத்துகள் இம்மக்களின் நேசிப்பிற்குரிய கலைகளாகப் பரிணமித்துள்ளன. ஒப்பீட்டளவில் காமன் கூத்து அதிக இடங்களில் வருடந்தோறும் அரங்கேற்றம் செய்யப்படுகிறது. அருச்சுணன் தபசு கூத்தின் முக்கியத்துவம் குறைந்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும். பொன்னர் – சங்கர் கூத்து ஓரளவு திருப்தியைத்தரும் வகையில் தெய்வீகக் கலையாக நேசிக்கப்படுகின்றது. இக்கூத்துகள் ஒரு சில இடங்களிலேயே நிகழ்த்தப்பட்டாலும் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பார்வையாளர்களையும் ஆர்வலர்களையும் சென்றடைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாடசாலைகள், சமய மற்றும் சமூக அமைப்புகள் ஆகியவற்றினால் மேடை வடிவத்தில் இவை கைக்கொள்ளப்படுவதும் கவனிக்கத்தக்கதாகும்

பொன்னர் – சங்கர் மூன்று தலைமுறை வாழ்க்கைமுறைகளை அடையாளப்படுத்துகிறது என்பதால் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு தலைமுறைக் கதை உள்ளடக்கங்களை அவ்வவ் வருடங்களில் நிகழ்த்துகின்றபோக்கு மலையகத் தோட்டங்களில் காணப்படுகிறது. மாறாக, ஒவ்வொரு தலைமுறைக் கதை உள்ளடக்கங்களையும் ஒவ்வொரு நாட்களிலும் வரையறுத்து, மூன்று நாட்கள் கூத்தை நடத்தும் முறையும் காணப்படுகிறது. மேலும், கிளி பிடிக்கும் படலம், பன்றியை வேட்டையாடும் படலம், புலியைக் கொல்லும் படலம், படுகளத்தை அடையாளப்படுத்தும் படலம் ஆகியவற்றோடு வரையறுத்துக்கொண்டு இக்கூத்தை அரங்கேற்றும் தன்மையும் காணப்படுகின்றது. காமன் கூத்து, அருச்சுணன் தபசு போன்ற கூத்துகளை மேடை வடிவத்திற்கு மாற்றுவதைவிட பொன்னர் – சங்கர் கூத்தை மேடை வடிவத்தில் நிகழ்த்துவது இலகுவானது. ஏனெனில் இக்கூத்தின் இயல்பான கட்டமைப்பு மேடைக்குரியதாகவே அமைகிறது. மூன்று தலைமுறையினரின் வரலாற்றை மூன்று நாட்களில் நிகழ்த்த முனையும் எத்தனிப்பு அசாத்தியமானது. இதனால், படுகளம், கம்பம் ஏறுதல் என்ற அடையாளப்படுத்தல்களை மாத்திரம் நிகழ்த்துகின்ற போக்குகளும் உள்ளன.
காமன் கூத்தை முழுமையாக அரங்கேற்றும் முனைப்பு ஓரளவு வெற்றிக்குரியதாக அமைகிறது. ஆனால் பொன்னர் – சங்கர் கதை மரபை முழுமையாக அரங்கேற்றுவது சாத்தியமற்ற விடயமாகவே அமைகிறது. இக்கூத்தின் முனைப்பான விடயங்களை மாத்திரம் அடையாளப்படுத்துகின்ற போக்கே இக்கூத்து அணுகுமுறையில் சாத்தியப்பாட்டிற்குரியதாக அமைகிறது. இந்நிலைமையைப் போலவே சினிமா முயற்சியும் வரையறைக்குட்பட்டதாக அமைகிறது. பாடல் தொகுப்பு, நாவல் வடிவம், சித்திரக்கதை வடிவம், கார்ட்டூன் அமைப்பு என்பன இக்கதை வரலாற்றின் முழுமையை ஆவணப்படுத்துவதில் திருப்திநிலையைக் கண்டுள்ளன. மலையக மக்களின் சமூகப் பிரயோகத்தில் பொன்னர் – சங்கர் கதையின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே அதன் பயில்நிலை முறைமைகள் அமைகின்றன. மேலும், குறிப்பிட்ட முனைப்புகளை மட்டுமே எடுத்துக்காட்டி, அதனை தெய்வீகக்கலையாகவும், கதையாகவும் பார்க்கத் தூண்டும் நோக்கும் அதிகரித்துச் செல்கின்றது.
உசாத்துணைகள்
1. சக்திக்கனல் (2017) அண்ணன்மார் சுவாமி கதை, நர்மதா பதிப்பகம்.
2. சுந்தரம்பிள்ளை. செ (…) ஈழத்து மலையகக் கூத்துக்கள்.
3. அம்பிகை. வே (1998) அருச்சுனன் தபசு, குமரன் பப்ளிஸர்ஸ்.
4. சிவலிங்கம். மு (2007) மலையகதத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள், குறிஞ்சி தமிழ் இலக்கிய மன்றம்.
5. மகேஸ்வரன். வ, பாஸ்கரன். சு (2023) மலையகத்தில் அண்ணன்மார் சுவாமி கதை, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
6. சோதிமலர். இர (2004) காமன் கூத்தும் மலையகப் பாரம்பரியமும், சன் பிரின்ற்ஸ் பதிப்பகம்.
7. நேர்காணல்:
பேராசிரியர் பிருந்தா பெக் (கனடா).
அண்ணாவியார் க. குணசேகரன், கீழ் பிரிவு, டெஸ்போட் தோட்டம்.
திரு. சுப்பையா கணகலிங்கம், கீழ் பிரிவு, டெஸ்போட் தோட்டம்.