
கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையின் ஆதரவுடன் எழுநா வெளியீடாகிய, அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் ‘வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ நூலின் வெளியீட்டு நிகழ்வு 03.06.2026 (புதன்கிழமை), பி.ப 2.00 மணிக்கு மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. த. குருகுலராஜா மற்றும் ஓய்வுநிலைப் பாடசாலை அதிபர் திரு. சி. பாலகிருஸ்ணன் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. ச. மோகனபவன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திரு. இ. த. ஜெயசீலன் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் திரு. தி. முகுந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்களின் தமிழ்மொழி வாழ்த்தோடு ஆரம்பமாகிய இந்நிகழ்விற்கு மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்கள் வரவேற்பு நடனத்தை வழங்கியிருந்தனர்.வரவேற்புரையினை கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட கலாசார அலுவலர் திருமதி மாலினி அவர்கள் வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து நூல் வெளியீட்டுரையினை சிரேஸ்ட விரிவுரையாளரும் முன்னாள் பொருளியற்றுறைத் தலைவருமாகிய திரு. எஸ். எஸ். உதயகுமார் வழங்க, மதிப்பீட்டுரையினை பேராசிரியரும் முன்னாள் அரசறிவியற்றுறைத் தலைவருமாகிய பேராசிரியர் த. கணேசலிங்கம் வழங்கியிருந்தார்.
நூலின் முதன்மைப் பிரதிகளை நிகழ்வின் அனுசரணையாளர்களும் சிறப்புப் பிரதிகளை விருந்தினர்களும் பெற்றுக்கொண்டனர்.
நூலாசிரியரின் ஏற்புரையை தொடர்ந்து, வைத்தியர் திவாரகா கேதீஸ்வரனின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், இலக்கிய செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
