
எழுநாவினால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீதிக்காக நீண்ட காத்திருப்பு’ எனும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆவணப்படம் திரையிடலும் , செம்மணி தொடர்பான கவிதைகள் ‘வாசலிலே கிருஷாந்தி’ என்னும் நூலின் அறிமுக விழாவும் அச்சுவேலி தெற்கு, கலாநிதி சனசமூக நிலையத்தில் 27.09.2025 அன்று வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினரும் கலாநிதி சன சமூக நிலைய தலைவரும் ஆகிய பி.நேருஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிலையத்தின் செயலாளராகிய தர்ஷன் அவர்களால் நூல் பற்றிய மதிப்பீட்டுரை வழங்கப்பட்டது. புதுவை இரத்தினதுரையின் வரிகளாகிய
‘காலாலுதைத்து நிலம்பிளந்து புதைகுழியிருந்து வெளிவருக
பொய்யமைதி குலைந்து போகச்
சாமப்பொழுதில் ஓலக்குரலெடுத்துப் பாடுக.
செம்மணி வீதியில்
உத்தியோகப் பற்றற்ற ஊரடங்கொன்றைப்
பிரகடனம் செய்க.
வருவோர் போவோர் எவரெனினும் வழிமறித்து
குருதிவழிய மூக்குடைத்துப்பொருதுக.
பேயடிப்பதாய் ஊர்பேசிப் பதறட்டும்.
இது பேசாதிருக்கும் ஊருக்குப்
பொருத்தமான தண்டனை.’
இவ்வரிகள் தற்போது நடக்கும் புதைகுழி அகழ்வுகளை முற்கூட்டியே கணித்த வரிகளாக இருக்கின்றது எனக்குறிப்பிட்டிருந்தார். இந்நிகழ்விற்கு சனசமூக நிலைய உறுப்பினர்கள், கிராம மக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
