
எழுநாவின் வெளியீடாகிய, திரு. கந்தையா சண்முகலிங்கம் அவர்களின் ‘யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்’ என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் ஏற்பாட்டில், நவம்பர் 21 (2025) வெள்ளிக்கிழமை அன்று, மாலை 3 மணிக்கு கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
சமூகவியல் துறைத்தலைவர் கலாநிதி ச. சிறிகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். வரவேற்புரையினை செல்வி எம்.எச்.எவ். ஹசீபா (மாணவி, சமூகவியல் துறை) அவர்கள் வழங்க, நூல் வெளியீட்டுரையினை இ. இராஜேஸ்கண்ணன் (சிரேஷ்ட விரிவுரையாளர், சமூகவியல்துறை) அவர்கள் வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் நூலை வெளியிட்டு வைக்க, நூலின் முதற்பிரதியை மொழியியல் மற்றும் ஆங்கில மொழித் துறையின் தலைவர் கலாநிதி எம். திருவரங்கன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலுக்கான மதிப்பீட்டுரைகளை சட்டத்தரணியும் அரசியல் மற்றும் சமூக ஆய்வாளருமான திரு. சி.அ. யோதிலிங்கம் அவர்களும், திரு. ந. மயூரரூபன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாசார மத்திய நிலையம், பருத்தித்துறை) அவர்களும் வழங்கினர்.
மதிப்பீட்டுரையின் போது “அட்டைப்படம் யாழ்ப்பாண சாதியக் கட்டமைப்பை மிகவும் தத்ரூபமாக வெளிக்காட்டியுள்ளது” எனவும், “சாதியம் தொடர்பான பிற்கால ஆய்வுகளை இனிவருகின்ற ஆய்வாளர்கள் நடாத்த வேண்டும்” எனவும் திரு. யோதிலிங்கம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். நூலில் உள்ள விடயப்பரப்பை ஏனையோர் வாசிக்கத் தூண்டும் வகையில் திரு. மயூரரூபன் அவர்களின் மதிப்பீட்டுரை அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
