யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மற்றும் எழுநா இணைந்து நடாத்திய, இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் எழுதிய யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 – 1948 ) என்னும் நூலின் வெளியீட்டு விழாவானது, கடந்த யூன் மாதம் 4 ஆம் திகதி, புதன்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். நூலின் அறிமுக உரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா நிகழ்த்தியிருந்தார். தொடர்ந்து, நகரப்புவியியல்சார் நோக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொன்னுத்துரை பாலசுந்தரம்பிள்ளை அவர்களும், கலை வரலாறு நோக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையைச் சேர்ந்த பேராசிரியர் தாமோதரம்பிள்ளை சனாதனன் அவர்களும், பல்பரிமாண நோக்கில் படைப்பாளியும் அரசியல் விமர்சகருமான திரு. மகாதேவா நிலாந்தன் அவர்களும் மதிப்பீட்டுரைகளை ஆற்றியிருந்தார்கள்.
நூலாசிரியரான கட்டடக்கலைஞர் இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்களது ஏற்புரையை அடுத்து இடம்பெற்ற நன்றியுரையோடு நூல் வெளியீட்டு விழா இனிதே நிறைவுற்றது. குறித்த நிகழ்விற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், துறைசார் ஆர்வலர்கள், மாணவர்கள், ஊடக நண்பர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.