எழுநா மற்றும் திருகோணமலை தளம் அமைப்பின் ஏற்பாட்டில் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 27.04.2025 அன்று, சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் தளம் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
நிகழ்வில், நூல் அறிமுக உரையினை பீடாதிபதி, சித்த மருத்துவ பீடம், திருகோணமலை வளாகம், கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவர், வல்லிபுரம் அநவரதன் நிகழ்த்தியிருந்தார். நூலின் மதிப்பீட்டுரையினை விசேட வைத்திய நிபுணர் (சித்த மருத்துவம்), தள ஆயுர்வேத வைத்தியசாலை மருத்துவர் சி. துஷிதா ஆற்றியிருந்தார்.
நிகழ்வில் உரையாற்றிய மருத்துவர் வல்லிபுரம் அநவரதன்,“முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ஆழ்ந்த ஆய்வினால் உருவாகிய ‘இரசவர்க்கம்’ என்ற நூல் சாதாரணமான நூல் அல்ல; அது நம் மரபு சித்த மருத்துவ அறிவின் ஓர் அருமையான பொக்கிஷம் ஆகும். இன்றைய வேகமான உலகில், பலர் பாரம்பரியத்தை மறந்து, சுதந்திரமான அறிவியலை மட்டுமே போற்றிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மை அறிவு என்பது புதிய கண்டுபிடிப்புகளும், பழைய ஞானங்களும் ஒன்றிணையும் இடத்தில்தான் பிறக்கிறது. அத்தகைய ஒரு சிறந்த முயற்சியாக இந்நூலை நாம் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், அவர் ‘எழுநா’ குறித்துக் கூறுகையில், “எழுநா குழுமத்தினர் பழங்கால அறிவை நவீன உலகிற்கு உரிய வடிவத்தில் கொண்டு சேர்க்கும் ஓர் அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பதிப்புகள் எப்போதும் தரமானவை, ஆழமானவை மற்றும் சமூக நலனைக் குறிவைக்கும் தன்மையுடையவை” என தனது உரையை ஆற்றியிருந்தார்.
இந்நிகழ்வில் அறிவார்ந்த நபர்கள், கல்வி ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ நூலானது எளிமையான வடிவில் பாரம்பரிய மூலிகைகள் தொடர்பில் ஏட்டுச்சுவடியில் இருந்த விடயங்களைக் கொண்டு எழுதப்பட்டதாகும். இந்நூல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும் மருந்துப் பொருட்களின் குணங்களை எடுத்துரைக்கும் வெண்பாக்களாலானது.