
எழுநாவின் வெளியீடாகிய, சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. சடகோபன் அவர்களின் ‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ நூலின் அறிமுக நிகழ்வு நிகர் சமூக – கலை – இலக்கிய அரங்கின் ஏற்பாட்டில் நாவலப்பிட்டி, கதிரேசன் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில், அமரர் எஸ். தர்மசீலன் அமர்வில் கடந்த 23.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.
கதிரேசன் மத்திய கல்லூரி அதிபர் திரு. எஸ். ரகு அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை கலைக்கழக குழுவின் அங்கத்தவரும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகமுமாகிய கவிஞர் சு. முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். வரவேற்புரையினை பஸ்பாகே கோரளை பிரதேச செயலக உத்தியோகத்தர் திரு. எஸ். சிவக்குமார் வழங்க, நூல் அறிமுக உரையினை சென். மேரிஸ் கல்லூரி ஆசிரியர் திருமதி. ஜெ.கே. சசிகாந்தன் வழங்கியிருந்தார். ஆய்வுரையினை ஆய்வாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமாகிய திரு. ஏ.சி.ஆர். ஜோன் வழங்க, ஏற்புரையினை நூலாசிரியர் இரா. சடகோபன் வழங்கியிருந்தார். நன்றியுரையினை புகைப்படக்கலைஞரும் ஊடகவியலாளருமான திரு. எஸ். ஹேமானந் வழங்கியிருந்தார். இந்நிகழ்வினை நிகர் சமூக – கலை – இலக்கிய அரங்கின் அமைப்பாளரான அருணாசலம் லெட்சுமணன் ஒருங்கமைக்க, நிகழ்ச்சித் தொகுப்பினை ஆசிரியர் திரு. வி.எம். ரமேஸ் வழங்கியிருந்தார்.
“கால அடிப்படையில், தேயிலைக்காலத்தில் சட்டம், இனவாதம், தோட்ட நிர்வாகம், தொழிற்சங்கங்கள் போன்றவற்றின் சதிகளில் இருந்தும் சூழ்ச்சிகளில் இருந்தும் மக்கள் எவ்வாறு மீண்டெழுந்துள்ளனர் என்பது பற்றி அனைவருக்கும் புரியக்கூடிய மொழிநடையில், பல புதிய விடயங்களை நூலாசிரியர் எழுதியுள்ளார்” என ஆய்வுரையின் போது திரு. ஜோன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் பாடசாலைச் சமூகத்தினர், வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நூலாசிரியரால் சிறப்புப்பிரதிகளும் வழங்கப்பட்டன.
