
சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. சடகோபன் அவர்கள் எழுதிய, எழுநாவின் வெளியீடான, மலையக வரலாற்றைக் கூறும் ‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 04.10.2025 அன்று இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சின் பெருந்தோட்ட வீடமைப்பு பிரிவின் முன்னாள் செயலாளர் திரு.எம். வாமதேவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலாசார அலுவல்கள் மற்றும் புத்த சாசன அமைச்சர் கலாநிதி ஹினிதும செனவி அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி. ராஜலட்சுமி சேனாதிராஜா அவர்களும், செல்கொ கொன்டினெனாடல் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.எஸ். செல்வரட்ணம் அவர்களும், நாவல் நகர் கதிரேசன் கோவில் அறங்காவலர் முத்தையா பிள்ளை ஸ்ரீகாந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
வரவேற்புரையை திரு. ஹேமச்சந்திர பத்திரன நிகழ்த்த, நூல் அறிமுக உரையை கல்வி அமைச்சின் முன்னாள் கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் நாயகம் திரு.சு. முரளிதரன் நிகழத்தியிருந்தார். நூல் வெளியீட்டுக்கு இலக்கியப் புரவலர் திரு. ஹாஸிம் உமர் முன்னிலை வகிக்க, நூலின் முதற்பிரதியை திரு. முத்தையா பிள்ளை ஸ்ரீகாந்தன் பெற்றுக்கொண்டார்.
நூல் வெளியீட்டினைத் தொடர்ந்து, நூலாய்வுரையை பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பெ. சரவணகுமார் அவர்களும், கருத்துரைகளை மலையக ஆய்வாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமாகிய திரு.இ. தம்பையா அவர்களும், ஊடகவியலாளரும் கவிதாயினியுமாகிய செல்வி. நிவேதா ஜெகநாதன் அவர்களும் வழங்கி வைத்தனர்.
இறுதி நிகழ்வுகளாகிய ஏற்புரை மற்றும் நன்றியுரையினை நூலாசிரியர் இரா. சடகோபன் அவர்கள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
