
கிழக்குப் பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பழைய மாணவர் சங்கம் நடாத்திய, ஆய்வாளர் கமலநாதன் பத்திநாதன் அவர்களின் ‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ என்னும் நூலின் வெளியீட்டு விழாவானது, கடந்த யூலை மாதம், 20 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.00 மணியளவில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது வெளியீட்டு நிகழ்வும், கலந்துரையாடலும் என்ற வடிவில் அமைந்திருந்தது.
குறித்த நூலினது அறிமுக உரையினை நூலாசிரியர் கமலநாதன் பத்திநாதன் அவர்கள் ஆற்றியிருந்தார். தொடர்ந்து, நூலிற்கான மதிப்பீட்டு உரைகளினை வித்தகர் கு. சண்முகம், சிரேஸ்ட விரிவுரையாளர் க. மோகனதாசன், ஆய்வாளர் துலாஞ்சனன், ஆய்வாளர் இத்திரிஸ் மற்றும் எழுத்தாளர் நீலாவணை இந்திரா முதலியோர் நிகழ்த்தியிருந்தனர்.
மேலும், நூலின் முதற்பிரதியினை நூலாசிரியர் கமலநாதன் பத்திநாதன் அவர்களின் தாயார் பெற, ஏனைய பிரதிகளை நிகழ்வுக்கு வந்திருந்த விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர். குறித்த நிகழ்விற்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், துறைசார் ஆர்வலர்கள், மாணவர்கள், நண்பர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
