
எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் கடந்த யூன் மாதம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் திரையிடப்பட்டது. திரையிடலின் முதல் நிகழ்வாக, இவ் ஆவணத் திரைப்படத்தை உருவாக்கிய, அமரர் அ. இசைப்பிரியனுக்கு மலரஞ்சலிகள் செலுத்தப்பட்டன.
இவ் ஆவணப்படம் இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தத்தின் போதும், அதன் பின்னும், வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் கதைகளை ஆராய்கின்றது.அவர்களது உறவுகளது வலிமிகுந்த போராட்டங்களையும், கண்ணீரையும், கோபத்தையும், ஏக்கத்தையும் உலகிற்கு எடுத்துரைக்கின்றது. மேலும் இது, நடந்த அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதோடு, பொறுப்புக்கூற மறுக்கும் அதிகாரசக்திகளின் இயல்பாகிவிட்ட அலட்சியத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றது. இந்நிகழ்வில் காணாமலாக்கப்பட்டோரது உறவுகள், செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
