எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் பூநகரி, ஜெயபுரம் சமாசத்தில் 23.05.2025 அன்று, பிற்பகல் 12.30 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் பங்குபற்றிய நிரஞ்சன் பரிளா,“குறிப்பாக மீன்பிடி சிறுதொழிலாளர்கள் கடலட்டைப் பண்ணைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். எமது பூநகரியில் கடலட்டைப் பண்ணைகள் அமைப்பதற்கு எதிராகப் போராட்டங்கள் பல முன்னெடுத்திருந்தோம். நானும் அதில் கலந்துகொண்டிருந்தேன். இதுவரையிலும் எமக்கான நிரந்தர தீர்வு கிட்டவில்லை. இவ் ஆவணத்திரைப்படம் எமது பிரச்சினைகளை வெளிப்படுத்தியிருக்கின்றது“ என கருத்துத் தெரிவித்திருந்தார்.
வடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும், கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது