எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, வவுனியாப் பல்கலைக்கழகத்தினுடைய சுற்றுச்சூழல் கழகத்தின் ஒழுங்கமைப்பில் 21.05.2025 அன்று, பிற்பகல் 2.00 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.
இத்திரையிடலில் பங்குபற்றிய மாணவர் ஒருவர், “வடக்கு – கிழக்குத் தமிழர் தாயகத்தில் கடல் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்ட கடலட்டைப் பண்ணைகள், தமிழ் மக்களின் நிலையான பொருளாதார வளங்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் எவ்வாறு குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்பது குறித்த விரிவான விசாரணையை இந்த ஆவணப்படம் வழங்குகிறது“ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
வடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும், கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது.