எமது சுற்றாடல் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இக் கூறுகளின் ஒருங்கிணைந்த மற்றும் ஒழுங்கமைந்த செயற்பாடுகளே சுற்றாடலின் நிலைபேறான அபிவிருத்தியில் பங்காற்றுகின்றன. மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் சுற்றாடல் பற்றி சரிவர அறிந்துகொள்ளுதலும், அதனைப் பேணிப் பாதுகாத்தலும், அதற்காகச் சிறப்பான வழிமுறைகளைப் பயன்படுத்தலும் முக்கியமானவை. அந்தவகையில், இலங்கையின் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களின் அபிவிருத்தியில் உயிர்ப்பல்வகைமையின் பங்களிப்புப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பயனுள்ள கருத்துக்களைத் தாங்கி ‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ எனும் இந்நூல் வெளிவருகின்றது.
கலாநிதி அரசசேரி அவர்களால் 'வடக்கு - கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் திருப்தியும் மகிழ்ச்சியுமடைகிறேன். இது அவரின் கன்னி முயற்சியானாலும் பாராட்டாமல் இருக்கமுடியாது.
கலாநிதி அரசகேசரி அவர்களுடன் நான் கடந்த 33 வருடங்களாக நெருக்கமாகப் பழகி அவரின் முன்னேற்றத்தைப் பார்த்து மகிழ்ந்தவன் என்ற வகையில் அவரைப் பற்றிப் பதிவிடாமல் இருக்கமுடியாது. இவர் விவசாயத் திணைக்களத்தில் ஆராய்ச்சி உத்தியோகத்தராகத் தன்னை இணைத்துக் கொண்டு பயிர்ப்பிறப்பாக்கத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். கலப்புப் பிறப்பாக்கம் மற்றும் தேர்வுமூலம் பல புதிய இனங்களைப் பிறப்பாக்கம் செய்து அறிமுகப்படுத்தியுள்ளார். இலங்கையின் விவசாய அபிவிருத்திக்குத் திடகாத்திரமான பங்களிப்பை வழங்கிய விவசாய ஆராய்ச்சியாளர்களுள் இவரும் குறிப்பிடத்தக்க ஒருவராவார். தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார்.
இந்நூலில் இவர் சங்ககால இலக்கியங்களில் குறிப்பிட்ட குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து வகை நிலங்களையும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இனங்கண்டுள்ளார். வயலும் வயல் சார்ந்த நிலமும், காடும் காடு சார்ந்த நிலமும், கடலும் கடல் சார்ந்த நிலமும், மலைக்குன்றுகள், வறட்சியான நிலவகைகள் போன்றவற்றை இவற்றுள் அடக்கியுள்ளார். அழகான இலங்கைத் தீவின் உயிர்ப்பல்வகைமையுடன் ஒப்பிடும்போது வடக்கு- கிழக்கின் ஐந்து வகை நிலங்களின் உயிர்ப்பல்வகைமை சிறப்பாக இருக்கிறது என்பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.
இந்நூலில் இவர் வடக்கு - கிழக்கின் கடற்கரையோரப் பல்வகைமை மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் கடல்சார் பல்வகைமையின் பங்களிப்புப் பற்றி சிறப்பாக விளக்கியுள்ளார். வடக்கு கிழக்கின் இயற்கைக் காடுகள், அங்குள்ள உயிர்ப்பல்வகைமை பற்றியும் சிறப்பாக விளக்கியுள்ளதோடு, இவ்வகைக் காடுகளின் பொருளாதார முக்கியத்துவம் பற்றியும் ஆராய்ந்துள்ளார். பல்வகைமையின் நிலைபேறான தன்மைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல்களையும் சிறப்பாக இனங்கண்டுள்ளார்.
வடக்கு - கிழக்கின் நிலப்பயன்பாடு, நன்னீர்நிலைகளின் பல்வகைமையும் பயிர்ச்செய்கையும், பயிர்ச்செய்கையில் உள்ள வேறுபட்ட நிலைமைகள், அவற்றின் பொருளாதார முக்கியத்துவம் போன்றவற்றையும் இந்நூல் விளக்குகிறது. சுருக்கமாகக் கூறின், இந்நூல் இலங்கையின் வடக்கு -கிழக்கு மாகாணங்களின் உயிர்ப் பல்வகைமையையும் அவற்றின் பொருளாதார முக்கியத்துவத்தையும், இத்தகைய பல்வகைமையின் நிலைபேறான தன்மைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல்களையும் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது. அரசகேசரி அவர்களின் இம்முயற்சி பாராட்டத்தக்கது.
பேராசிரியர் (ஓய்வுநிலை) எஸ். இராசதுரை
"எழுநா" பதிப்பகத்தினர் என்னை அணுகியபோது, எமது பிரதேசத்தைப் பற்றிய ஆக்கங்களை முன்வைக்க வேண்டிய தேவையை உணர்ந்தேன். எனது துறையுடன் தொடர்புடைய, உயிர்ப்பல்வகைமை பற்றிய விவரங்களைத் தொகுப்பதே மிகப் பொருத்தமானது என்று கருதினேன். இக்கருத்தே இப்புத்தகத்தை உருவாக்கியதற்கான முதன்மைக் காரணமாகும்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தனித்துவமான தரைத்தோற்றங்களைக் கொண்ட அழகான மற்றும் வளமிக்க நிலப்பரப்புகளாகும். இப்பிரதேசங்களில் காணப்படு பல்லின உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் I பற்றிய தகவல்களும், அவற்றின் பல்வகைமையும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பிரதேச அபிவிருத்தியில் இப்பல்வகைமைகளின் மகத்தான பங்கு, அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கின் அரிதான வளங்களும் பல்வகைமைகளும் இன்று அழிந்துவரும் நிலைமைக்கு உள்ளாகியுள்ளன. எனவே, அவற்றுக்கு எதிரான ஆபத்துகள், அவற்றை வெற்றிகரமாகச் சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இந்நூல் குறிப்பிடுகின்றது. எமது பிரதேசத்தை தொடர்ச்சியான அபிவிருத்திப்போக்கில் எடுத்துச்செல்ல, இந்த வளங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இந்நூலில் பகிர்ந்திருக்கிறேன்.
பொது வாசகர்களுக்கு இது பயன்படக்கூடும் என நம்புகிறேன். இப்புத்தகத்தை எழுதுவதற்கு ஆதரவாயிருந்த அனைத்து உள்ளங்களுக்கும் உறவுகளுக்கும், விஷேடமாக இக்கட்டுரைத் தொடரை எழுத்து வடிவமாக்கிய சகோதரி பவதாரணிக்கும், 'வடக்கு - கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்' என்ற இந்நூலைப் பிரசுரிக்க முன்வந்த ''எழுநா' பதிப்பகத்தாருக்கும், ஆசியுரை வழங்கிய வண. பிதா யோசுவாவிற்கும், அணிந்துரை வழங்கிய பேராசிரியர் (ஓய்வுநிலை) இராசதுரை அவர்களுக்கும் எனது நன்றிகள். I
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
கலாநிதி சி. அரசகேசரி
உயிரியல் பல்வகைமை குறித்து உலகளாவிய நிலையில் மிக முக்கியமான கவன ஈர்ப்புகள் மற்றும் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நமது தேசத்தின் உயிரியல் பல்வகைமை குறித்த தகவல்களை எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சகோதரர் கலாநிதி அரசகேசரி அவர்கள் தமிழ்கூறும் நல்லுலகுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார்.
இலங்கை பொருளாதார நிலையில் வளர்ச்சி அடைந்து வருகிற ஒரு நாடாக இருக்கின்ற பொழுதிலும், உயிரியல் பல்வகைமையில் நமது நாடு மிகப்பெரிய செல்வங்களைக் கொண்டுள்ளது. என்பது நமக்கு மகிழ்ச்சியே. ஆனால் அவை குறித்த பரிபூரணமான அறிவியல், சமூகவியல் பார்வைகள் எம்மிடம் இல்லை. இந்நூலைப் போன்ற ஆய்வுசார் படைப்புகள் நமக்கு முன்பாக இதுவரை பரிபூரணமாக முன்வைக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் கலாநிதி அரசகேசரி அவர்கள் இந்தநூலை நமக்குத் தந்திருக்கின்றார்.
இலங்கையின் வடக்கு - கிழக்குப் பிரதேசங்களின் உயிரியல் பல்வகைமை குறித்தும் அதன் பெருக்கம், அடர்த்தி, அதன் மரபுசார்ந்த வளர்ச்சி, அது இப்பிரதேச மனிதர்களின் கலாசார விழுமியங்களில் சடங்குசார் கடமைகளில் தொழில்முறைகளில் வழங்கும் பங்களிப்பு போன்றவற்றை இந்தநூலை வாசிக்கின்ற பொழுது புரிந்துகொள்ள முடிகிறது.
இயற்கைச் செல்வங்களின் நடுவில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், ஓர் செழிப்பற்ற தேசத்தில் வளங்களற்ற பூமியில் வாழ்கிறவர்களைப்போல நாடும் மக்களும் வறுமையில் உழல்வதற்கு அடிப்படைக் காரணமே, இந்தச் செல்வங்களை நாம் இதுவரை பரிபூரணமாய்ப் பொருளியல்சார், அறிவியல்சார், அழகியல்சார், பண்பாட்டுவியல்சார் நிலைநின்று உயிரியல் கண்களோடு அவற்றைத் தரிசிக்கவில்லை என்பதுதான்.
இந்தப் படைப்பு இலங்கைச் சமூகத்தில் தூண்டல்களை ஏற்படுத்தி, எமது நாட்டின் செல்வமும் செழிப்பும் உயிரியல் பல்வகைமைக்குள் உறங்கிக்கிடக்கிறது என்பதை உணரச் செய்யும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
வண. TS யோசுவா, இயக்குநர், காவேரி கலாமன்றம்
கிழக்குக்கரையின் அம்பாறை தொடங்கி வடமேற்குக் கரையின் புத்தளம்வரை கடற்கரையோரங்களை உள்ளடக்கிய நிலம், நீர்நிலைகள், காடு என்பன உள்ளடங்கலாக ஐவகை நிலங்களை உள்ளடக்கியதே வடக்கு - கிழக்குப் பிரதேசமாகும். பாரம்பரிய வரலாறுகள், நிகழ்வுகள், இடப்பெயர்வுகள், விவசாய அபிவிருத்திகள் என்பனவற்றை உள்ளடக்கி இலங்கையின் அபிவிருத்தியில் பெரும்பங்காற்றிவருகின்றது இந்தப் பிராந்தியம். பூகோள அமைப்பின்படி, கடலோரங்களையும் ஐவகை நிலங்களையும் கொண்ட இப்பாரம்பரியப் பிரதேசம் பலநூற்றாண்டுகாலமாக அழிவடையாமல் இருப்பது பெரும்பேறாகும். இயற்கை அனர்த்தங்கள், மனிதச் செயற்பாடுகள், காலநிலைமாற்றங்கள் போன்றனவற்றுக்கு தாங்கிப்பிடித்து தலைநிமிர்ந்து நிற்கிறது இப்பிரதேசம். குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்பவற்றில் இயைபோடு வாழும் இப்பிரதேச உயிரினங்களில் சில அழிவுக்குட்பட்டிருந்தாலும், பல உயிரினங்கள் சூழலுடன் ஒன்றுபட்டுக் காணப்படுதலே இப்பிரதேசத்தின் தனித்துவம். வடமாகாணத்திற்குரிய பூவானது வெண்தாமரை (Nymphaea lotus) ஆகும். இப்பிரதேசத்திற்குரிய மரமானது மருதமரம் (Terminalia elliptica) ஆகும். பல்வகைப்பட்ட விலங்கு வகைகள் காணப்பட்டாலும் இப்பிரதேசத்துக்குரிய விலங்காக கண்டறியப்பட்டது புள்ளிமான் ஆகும். சுற்றாடலில் காணப்படும் அழகான குட்டிப் பறவையான புளினியே (Turdoides striatus) இப்பிரதேசத்துக்குரிய பறவையாகும். இது ஆங்கிலத்தில் Seven sisters என அழைக்கப்படும். ஏனெனில் ஒரு கூட்டப் புளினியில் 7 பறவைகளைக் காணமுடியும். எண்ணற்ற அழகான வண்ணத்துப்பூச்சிகள் எமது பிரதேசத்தில் காணப்பட்டாலும் பெரிய கொய்யா நீல வண்ணத்துப்பூச்சிகள் (Virachola perse) எமது பிரதேசத்துக்குரியவை. இவை தனித்துவமானவை ஆகும்.
மன்னார், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் வடக்கு - கிழக்கு மாகாணத்தில் உள்ளடங்கும். பரந்துபட்ட இப்பிரதேசத்தில் கடற்றொழில், I விவசாயம், காடுசார் தொழிற்றுறைகள், குளங்களை அண்டிய குடியேற்றங்கள், ஆறுகளையொட்டிய அபிவிருத்தி என்பனவற்றில் பல்வகைத்தன்மையினைக் காணமுடியும். இம்மாவட்டங்களில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களிடையில் அநேக விடயங்களில் ஒற்றுமையுண்டு. இருப்பினும் தனித்துவமான வேறுபாடுகளும் உண்டு. உயிர்ப் பல்வகைமையில் மனித சமுதாயம் பெரும்பங்காற்றுகின்றது. இவ்வகையில் எம்மவர்க்கிடையே தனித்துவமான வேறுபாடுகள் நிலவுகின்றன. மொழிவழக்கு, உணவுப் பழக்கவழக்கங்கள், செயலாற்றும் திறன், அறிவாற்றல் போன்றனவற்றின் வேறுபாடுகள் தெளிவானவை. ஓரிடத்திலிருந்து பிரிந்துசென்று வாழ்ந்து, வெவ்வேறு இடங்களில் குடியேறியிருப்பதாக வரலாறுகள் காட்டிநிற்கின்றன. இதனால் அப்பிரதேசங்களில் வேறுபாடுகளையும் காணமுடியும். மனித சமுதாயத்தின் இவ்வகை வேறுபாடுகளை உதாரணமாக்கி பல்வகைமைக்குள் உள்நுழைவோம்.
பல்வகைமை
உயிரற்ற, உயிருள்ள எல்லாவற்றினுடைய பல்வகைமையும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அதிகளவிலேயே காணப்படுகின்றன. உயிரற்றவைகளின் பல்வகைமையான மண், கடல், நன்னீர், பாறைகள், கனிமங்கள், மற்றும் காற்றுப் போன்றனவற்றில் வேறுபடுகின்றன. சில ஆறுகளும் வடக்கு கிழக்கில் அமைந்துள்ளதால் இவற்றோடு அண்டிய பல்வகைமைத் தன்மைகளும் காணப்படுகின்றன. முருகைக்கற்பாறை மற்றும் கல்சியப் பாறை என்பவற்றை உள்ளடக்கிய பல்வேறுவகைப்பட்ட வாழ்விடங்கள் இப் பல்வகைமைத்தன்மையில் பெரும் பங்காற்றுகின்றன. மேடு பள்ளமுள்ள தரை, பழமையான கடற்கரை, ஆற்றோரத்தை அண்டிய நீர்நிலைகள், மணல்மேடுகள் மற்றும் சுண்ணக்கற்பாறைகள் என விரிந்து செல்கின்றது இப்பல்வகைமை. இவ் உயிரற்ற பொருட்களின் அல்லது உயிரற்ற அமைப்புகளின் சார்பாகவே உயிர்ப்பல்வகைமைகள் வேறுபடுகின்றன. உதாரணமாக, இப்பாறைகளிலிருந்து வழிந்தோடிச்சேரும் நீர்நிலைகளின் தன்மை வேறுபடுவதால் இந்நீர்நிலைகளில் காணப்படும் உயிரினங்களின் வேறுபாடும் கணிசமானதாகும்.
உயிரியல் பல்வகைமை என்பது மக்கள், இயற்கையோடு ஒட்டிய உயிரினங்கள், காடுசார் உயிரினங்கள், அரிதான காடுகள் என்பவற்றில் வாழும் பல்வேறு வகைப்பட்ட உயிரினங்களின் கூட்டுத்தொகையைக் குறித்து நிற்கும். சர்வதேச உயிரியல் மற்றும் உயிர்ப்பல்வகைமை சம்பந்தமான வரைவிலக்கணத்தின்படி, கடல் மற்றும் நன்னீர் சூழல் தொகுதிகளில் காணப்படும் சிறிய அங்கிகளிலிருந்து பெரிய அங்கிகள் வரை, பரந்துபட்ட வேறுபாடுகளைக் காட்டும் சூழல் தொகுதிகளை உள்ளடக்கியதே உயிர்ப்பல்வகைமை எனப்படுகின்றது. பல்வேறுவகைப்பட்ட வரைவிலக்கணங்கள் உயிர்ப்பல்வகைமை தொடர்பில் உள்ளன. பரம்பரை அலகிலிருந்து இனம் மற்றும் சாகியம் என்பவற்றை உள்ளடக்கிய உயிரியற் தொகுதி பரம்பரையியல் வேறுபாடானது, நிறமூர்த்தங்களின் அடிப்படையில் வேறுபடுகிறது. இனங்களின் வேறுபாடு எனும்போது, குறித்த பிரதேசத்தில் வாழும் இனங்களுக்கிடையிலுள்ள வேறுபாட்டைச் சுட்டி நிற்கிறது. இவ்வினங்களின் எண்ணிக்கையின் தன்மையில் இப்பல்வகைமை அளக்கப்படுகிறது. இன்னொருவகையில் இப்பல்வகைமையின் வகையீட்டு வேறுபாடு மற்றும் அவற்றுக்கிடையிலான தொடர்புகள் என்பனவற்றையும் சுட்டிநிற்கிறது. உயிரற்ற சடப்பொருள்களுடன் தொடர்புபட்ட உயிரினங்களின் வாழ்வியல் தொகுதிகளில் உண்டாகியிருக்கும் பரம்பரை அலகுகளிடமிருந்தும் இனங்களிடமிருந்தும் மற்றும் கணங்களிலிருந்தும் வேறுபட்டு நிற்கும் உயிருள்ள பொருள்களின் எண்ணிக்கை, தொடர்பு, சமநிலை என்பன இத்தகைய பல்வேறு வகைப்பட்ட வரைவிலக்கணங்களுக்குள் அடக்கப்படுபவை ஆகும்.
இவ்வகையில் சுற்றாடலில் குறித்த வாழ்விடங்களில் காணப்படும் உயிரினங்களின் கூட்டுத்தொகை உயிர்ப்பல்வகைமை என்று கருதப்படுகிறது. பெருவிருட்சங்களிலிருந்து கண்ணுக்குத் தெரியா தாவரங்கள் வரை, மிருகங்களிலிருந்து மிகச்சிறிய பூச்சிகள் வரை கண்ணுக்கெட்டா அளவில் சிறிதாக வாழும் நுண்ணுயிர்கள் உட்பட அனைத்தும் இவ் உயிர்த் தொகுதிக்குள் உள்வாங்கப்படுகின்றது.
இப்பெரும் பரம்பலின் பரிணாமம் பற்றிய முழுமையான அறிவை இன்னும் பூரணமாக அறிந்துகொள்ள முடியவில்லை. மாறிக்கொண்டிருக்கும் இப்பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் அகப்படுவது உற்றுநோக்கப்பட வேண்டும். மிகப்பெரிய இரு பிரிவுகளாக இவ் உயிர்த்தொகுதி பிரிக்கப்பட்டுள்ளது. தாவரங்கள், விலங்குகள் என இப்பிரிவுகள் அறியப்பட்டுள்ளன. பச்சையம் உள்ளவை தாவரங்களென்றும் பச்சையம் அற்றவை விலங்குகள் என்றும் ஒரு வகைப்படுத்தலுண்டு. இவை இரு பிரிவுக்கும் உட்படாத நுண்ணுயிர்கள் என இன்னொருவகை உண்டு. தாவரங்களுக்குள்ளும் விலங்குகளுக்குள்ளும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் உணர்வுள்ள அங்கிகளும் உண்டு. ஆக எம்மைச்சுற்றி உயிர்வாழும் எல்லா ஜந்துக்களும் ஏதோவொரு வகைப்படுத்தலுக்குள் உள்வாங்கப்பட வேண்டும். இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தலைசிறந்த அதிக எண்ணிக்கையான உயிர்ப்பல்வகைமையைக் கொண்டிருக்கும் முதல் 25 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகின்றது. உயிர்ப்பல்வகைமை நிறைந்துள்ள இடங்களில் எமது வடக்கு- கிழக்குப் பிரதேசம் இலங்கையில் முன்நிற்கின்றது. அதிகளவில் கடற்கரையோரங்களை ஒட்டிய வாழ்விடங்களை வடக்கு - கிழக்குப் பிரதேசம் கொண்டிருப்பதால் இவ் உயிர்ப்பல்வகைமையின் நிலையற்றதன்மை குறித்துக்காட்டப்படவேண்டியது அவசியமாகும். உதாரணமாக வாடைக்காற்று, கொண்டல்காற்று மற்றும் சோளகக்காற்று என்பன திசைமாறி வீசுவதால் அவற்றின் தாக்கங்களால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் முக்கியமானவை. நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றம், காலநிலைக்கு ஏற்ப நிலத்தடி நீர் குறையும் தன்மை, பருவகாலங்களுக்கு ஏற்ப மாறுபடும் பயிர்களின் தன்மை, இப்பயிர் வளர்ச்சியோடு ஒட்டிய எதிர்ப்புப் பூச்சிகள் என்பனவற்றின் பரம்பல் பெரிதும் வேறுபடுகின்றன. மனிதருடைய செயற்பாடுகள் இவ் உயிர்ப்பரம்பலின் தன்மையை பெரிதும் பாதிக்கின்றன. ஏற்கனவே கூறப்பட்டதன் பிரகாரம் வடக்கு - கிழக்குப் பிரதேசங்களின் பல்வேறுவகைப்பட்ட பூகோளத் தரைத்தோற்றங்கள், அவற்றோடு அண்டிய விவசாயம்,கைத்தொழில், விலங்கு வேளாண்மை, மீன்பிடி, வர்த்தகம் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளும் உய்த்தறியப்பட வேண்டியவை. இவற்றின் விளக்கங்களே பல்வகைத்தன்மையினால் ஏற்படுத்தப்படும் அபிவிருத்திப் போக்கைக் கண்டறிய உதவும். இவ்வாறிருக்க இப்பல்வகைமையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி அவற்றை அழிந்துவிடாமல் பாதுகாப்பதோடு உச்சப்பயன்பாட்டைப் பெறும் பொறிமுறை ஒன்று எய்தப்படவேண்டும். கைத்தொழில் அபிவிருத்தி, அதிகரித்துவரும் வீதி அபிவிருத்தி, மின்னியல் மற்றும் மின்சாரம் சார் தொழிற்பாடுகள், மண்ணகழ்வு, காடழித்தல் என்பன போன்ற மனித சமுதாயத்தின் அபிவிருத்தியில் இன்றியமையாத செயற்பாடுகள் பல்வகைத்தன்மையைப் பாதிக்கக்கூடியன. அவற்றைச் சரியான முறையில் ஒழுங்குபடுத்தி சுற்றாடல் சிநேகமுள்ள தொழிற்பாடுகளாய் மாற்றியமைத்தல் சவாலானவைகளே. பல்வகைமை பற்றிய அறிவு ஒருபுறம் இருக்க, அவற்றால் ஏற்படும் பயன்பாடுகள் தனித்துஆய்ந்தறியப்பட வேண்டியவை. பாதுகாப்பு பொறிமுறைகளும் முக்கியமானவை. இதனால் இக்கட்டுரைத் தொடரானது வடக்கு - கிழக்குப் பகுதிகளிலுள்ள கடலும் கடல்சார்ந்த உயிர்ப்பல்வகைமை, காடும் காடுசார் உயிர்ப்பல்வகைமை, நிலமும் நிலம்சார் உயிர்ப்பல்வகைமை, நன்னீர் நிலைகள்சார் உயிர்ப்பல்வகைமை, வறள்நில உயிர்ப்பல்வகைமை, கண்டல்நில உயிர்ப்பல்வகைமை, சுற்றாடல்சார் உயிர்ப்பல்வகைமை என்பனவற்றை ஆராயவுள்ளது.