யாழ்ப்பாணத்தின் சாதிமுறையின் வரலாறு, சாதிக்கட்டமைப்பு, சாதிய உறவுகள், குடும்பம், திருமணம், சமயம், சடங்குகள், சமூக – பொருளாதார – அரசியல் மாற்றங்கள், முரண்பாடுகளும் மோதல்களும், ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சிகள் ஆகியன பற்றிய பன்முக நோக்கிலான ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மானிடவியலாளர்களான மைக்கல் பாங்ஸ், கென்னத் டேவிட், பிறையன் பவ்வன்பேர்ஜர் றொபேர்ட், எஸ். பேரின்பநாயகம; வரலாற்றாசிரியர்களான சி. அரசரத்தினம், B.J.E.S பஸ்தியாம்பிள்ளை, க. அருமை நாயகம்; அரசியல் விஞ்ஞானத்துறை ஆய்வறிஞர் ஏ.ஜே வில்சன் ஆகிய புலமையாளர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுகளை இந்நூல் தமிழில் அறிமுகம் செய்கிறது.
தமிழில் மானிடவியல், சமூகவியல் கல்வித்துறைகளைச் சார்ந்த அறிவிலக்கியத்திற்கு இந்நூல் ஒரு புதுவரவு.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையின் சாதிமுறை பற்றிய ஆய்வுகளில் சமூக விஞ்ஞானிகளின் கவனம் திரும்பியது. சிங்கள மக்களின் சாதி முறைமை பற்றி பிறைஸ் றையன் (Bryce Ryan) Caste in Modern Ceylon: the Sinhalese System in Transition ( சாதி மாற்றமுறும் சிங்களவரின் சாதி முறைமை) என்னும் நூலை எழுதினார். இந்நூல், 1953 இல் வெளியிடப்பட்டது. இவரது ஆய்வினைத் தொடர்ந்து மானிடவியல், சமூகவியல் கோட்பாடுகளில் புலமைமிக்கவர்களான ஆய்வாளர்கள் பலரது நூல்கள் ஆங்கில மொழியில் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டன. இவ்வாய்வுகள் இலங்கை முழுமைக்கும் (Homogeneous System of Caste) இல்லை என்பதையும் சிங்களவர், தமிழர் என்னும் இரு இனத்துவக் குழுமங்களுக்கிடையிலும் வெவ்வேறு முறைமைகள் (Systems) உள்ளன என்பதனையும் வெளிப்படுத்தின.
இலங்கையில் மொழியடிப்படையில் இருவேறு சாதி முறைமைகள் (Caste Systems) இருந்து வந்துள்ளன. இவ்விரு முறைமைகளையும்
1. சிங்கள மக்களின் சாதி முறைமை
2. தமிழ் மக்களின் சாதி முறைமை
எனப் பெயரிட்டு அழைக்கலாம். பிறைஸ் றையன் "மாற்றமுறும் சிங்களவரின் சாதி முறைமை " எனத் தம் நூலுக்கு பெயரிட்டுள்ளமையில் இருந்து அவர் சிங்களவரின் சாதி முறைமை தனித்துவமானது என்பதனைக் கோடிட்டுக் காட்டியுள்ளார். இது போன்றே இலங்கைத் தமிழர்களின் சாதி முறைமையும் தனித்துவமானது. இலங்கைத் தமிழர்களின் சாதி முறைமையில் மூன்று உப முறைமைகள் உள்ளன. அவை பின்வருமாறு:
1. யாழ்ப்பாணத்துச் சாதி முறைமை
2. மட்டக்களப்புச் சாதி முறைமை
3. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சாதி முறைமை
இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒன்பது கட்டுரைகளும் யாழ்ப்பாணத்துச் சாதி முறைமையைப் பல கோணங்களில் ஆராய்வனவாக அமைந்துள்ளன.
இலங்கைத் தமிழர்களிடையே வெவ்வேறு மூன்று சாதி முறைமைகள் இருப்பதும், இலங்கையின் தென்பகுதியில் சிங்களவரின் சாதி முறைமையும், பாக்குநீரிணைக்கு அப்பால் தமிழகத்தின் சாதி முறைமை இருப்பதும், சாதி முறைமையின் ஒப்பீட்டு ஆய்வினைச் சாத்தியமாக்கியுள்ளது. யாழ்ப்பாணத்துச் சாதி முறைமை குறித்த நான்கு வகை ஒப்பீடுகள் சாத்தியமாகி உள்ளன. அவையாவன:
1. யாழ்ப்பாணத்துச் சாதி முறைமை x சிங்கள மக்களின் சாதி முறைமை
2. யாழ்ப்பாணத்துச் சாதி முறைமை X தமிழகத்தின் சாதி முறைமை
3. யாழ்ப்பாணத்துச் சாதி முறைமை X மட்டக்களப்புத் தமிழர்களின் சாதி முறைமை
4. யாழ்ப்பாணத்துச் சாதி முறைமை X மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் சாதி முறைமை
மேற்குறித்த வகையான ஒப்பீடுகள் மேலோட்டமான முறையில் செய்யப்பட்டுவரும் நிலை இன்று உள்ளது. 'யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்' என்னும் இந்நூல் சாதி முறைமைகளின் ஒப்பீடு பற்றிய கோட்பாட்டுப் புரிதலை வளர்ப்பதன்மூலம் ஆழமான ஒப்பீட்டாய்வுகளுக்கான அடித்தளத்தை அமைக்கும் என்பது எமது நம்பிக்கை.
இந்நூலில் உள்ளடக்கப்பட்ட 09 கட்டுரைகளும் வரலாற்று நோக்குமுறை, மானிடவியல்/ சமூகவியல் நோக்குமுறை, அரசியல் விஞ்ஞான நோக்குமுறை என்ற மூன்று வெவ்வேறு நோக்குமுறைகளில் (Perspectives) யாழ்ப்பாணத்தின் சாதி முறைமையை ஆராய்வனவாக உள்ளன. இக்கட்டுரைகளை மூன்று பகுதிகளாகப் பிரித்து நிரற்படுத்தியுள்ளோம். இதற்கமைய க. அருமைநாயகம், சி. அரசரத்தினம், B.E.S.J. பஸ்தியாம்பிள்ளை ஆகிய மூன்று அறிஞர்களின் கட்டுரைகள் 'வரலாற்றுநோக்கு' எனும் பகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கென்னத் டேவிட் (இரு கட்டுரைகள்), மைக்கல் பாங்ஸ், றொபர்ட். எஸ். பேரின்பநாயகம் ஆகியோரின் ஆக்கங்களின் சுருக்க அறிமுகம் இந்நூலின் இரண்டாம் பகுதியை அலங்கரிக்கின்றது.
நவீன மானிடவியல், சமூகவியல் கோட்பாடுகளின் ஒளியில் யாழ்ப்பாணச் சமூக அமைப்பைப் புரிந்து கொள்வதற்கு இக்கட்டுரைகள் உதவுகின்றன.
அரசியல் விஞ்ஞான நோக்கில் அமைந்த ஆய்வுகளாக பிறையன் பவ்வன்பேர்ஜர், ஏ.ஜே. வில்சன் ஆகிய இருவரதும் ஆக்கங்களைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரைகள் இந்நூலின் மூன்றாம் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தின் சாதிமுறையின் வரலாறு, அதன் கட்டமைப்பு, சாதிய இடையுறவுகள், கருத்தியல், அரசியல் மாற்றங்கள் என்பன பற்றிய பன்முகப் பார்வையினை வழங்கும் இக்கட்டுரைத் தொகுப்பு தமிழிற்குப் புதியது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இவ்வாய்வுகள் இன்றுவரை கண்டு கொள்ளப்படாதவையாக இருந்துள்ளன. அவ்வகையில் இந்நூல் ஒரு புத்தாக்கமும் ஆகும்.
இந்நூலில் 9 ஆய்வுக் கட்டுரைகளின் தமிழாக்கம் இடம்பெறுகிறது. இக்கட்டுரைகள் யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பினையும், சமூக உறவுகளையும் பன்முக நோக்கில் ஆராய்வனவாக உள்ளன. இவை யாவும் போருக்கு முந்திய கால யாழ்ப்பாணத்தின் சமூகம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என்பன பற்றி நுண்ணாய்வுகளாக அமைந்துள்ளன. போருக்கு முந்தியகாலம் என நாம் குறிப்பிடுவது, ஏறக்குறைய 1981க்கு முற்பட்ட யாழ்ப்பாணம் எனலாம். 1952 ஆம் ஆண்டு மைக்கல் பாங்ஸ் (Michael Banks) என்னும் சமூகவியலாளர், யாழ்ப்பாணத்தின் சிறுப்பிட்டிக் கிராமத்தில் ஒரு வருட காலம் தங்கியிருந்து கள ஆய்வு செய்து யாழ்ப்பாணத்தின் சாதி முறைமையைப் பற்றிய அரியதொரு ஆய்வுநூலை எழுதி வெளியிட்டார். இவரைத் தொடர்ந்து 1960களின் பிற்பகுதியில் கென்னத் டேவிட் (Kenneth David) என்னும் மானிடவியலாளர் மயிலிட்டிக் கிராமத்தில் தங்கியிருந்து களஆய்வினைச் செய்தார். இவரின் ஆய்வின் பெறுபேறாக மயிலிட்டி வடக்கு மீன்பிடித் தொழிலாளர் கிராமம், மயிலிட்டி தெற்கு விவசாயக் கிராமம் என்பன பற்றிய உயர் தரமான ஆய்வுகள் வெளியாகின.
யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதிகள், குடாநாட்டின் சிறு நகரங்கள் என்பன தொடர்பான ஆய்வுகளையும் நிகழ்த்திய கென்னத் டேவிட் தமது ஆய்வு முடிவுகளையும் அவதானங்களையும் தமது ஆக்கங்களில் பதிவு செய்தார். இவரைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தவர் பிறையன் பவ்வன்பேர்ஜர் (Bryan Pfaffenberger). சாவகச்சேரியில் தங்கியிருந்து கள ஆய்வு நிகழ்த்திய இவரது ஆய்வு நூல் 1982 இல் வெளியானது.
இம்மூன்று ஆய்வாளர்களும் அன்றைய யாழ்ப்பாணத்தை உலகின் புகழ்பெற்ற சமூகவியல்/ மானிடவியல் அறிவாளிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். உலக அளவில் இம்மூன்று ஆய்வாளர்கள் பற்றிய கவனம் திரும்பியவேளையில், தமிழ் அறிவுலகம் இந்த ஆய்வுகளைக் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றது. இடையிலே போர் குறுக்கிட்டபடியால் மேற்குலகின் மானிடவியலாளர்கள் வடக்குநோக்கி வருவதைத் தவிர்த்துக் கொண்டனர். குறிப்பாக கென்னத் டேவிட், பிறையன் பவ்வன்பேர்ஜர் ஆகிய இருவரும் தமது கவனத்தை வேறு திசையில் திருப்பினர். பவ்வன்பேர்ஜர் தொடக்கிய ஆய்வுத்திட்டம் ஒன்று 1983 கறுப்பு ஜூலை நிகழ்வுகளின்பின் கைவிடப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
வெளி நாட்டவர்களான சமூகவியலாளர்களும், மானிடவியலாளர்களும் தொடக்கிய ஆய்வுப் பணிகளை இட்டு நிரப்பிய மானிடவியலாளர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒருவர் றொபர்ட் சித்தார்த்தன் பேரின்பநாயகம் ஆவார். இவர் மானிப்பாயில் பிறந்து வளர்ந்தவர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் H.S.C வகுப்புவரை கற்றபின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலைச் சிறப்புப் பாடமாகக் கற்றார். யாழ்ப்பாணத்தின் சமூகக் கட்டமைப்பு, சாதி உறவுகள், சமயம், கருத்தியல் என்பன பற்றி ஆராய்ந்து அரியதொரு நூலை இவர் எழுதியுள்ளார். நவாலிக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவரும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும், இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் கற்றவருமான சின்னப்பா அரசரத்தினம் யாழ்ப்பாணத்தின் சமூக பொருளாதார, வரலாறு, சாதி முறையின் வரலாறு என்பன குறித்த கருத்தாழம்மிக்க ஆய்வுகளை எழுதி வெளியிட்டுள்ளார். வரலாற்றுப் பேராசிரியரான பேர்ட்ரம் பஸ்தியாம்பிள்ளை 19 ஆம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்தின் சமூக வரலாற்றைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்து பல கட்டுரைகளை எழுதியவர். வரலாற்று ஆய்வாளரான க. அருமைநாயகம், யாழ்ப்பாணத்தின் சாதிமுறையின் வரலாறு பற்றி பெறுமதிமிக்க ஆய்வினை எழுதினார். அரசியல் விஞ்ஞானத் துறைப் பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் அவர்களும் இலங்கைத் தமிழர்களின் சாதிமுறை பற்றிய பெறுமதிமிக்க ஆய்வுரையை தமது நூல் ஒன்றில் ஓர் அத்தியாயமாகச் சேர்த்துள்ளார்.
மேற்குறித்த வெளிநாட்டவர்களான மூவரும், இலங்கையர்களும் தமிழர்களுமான ஐவரும் ஆங்கிலத்தில் எழுதிய ஆக்கங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும்முறையில் இந்நூல் அமைந்துள்ளது. 'யாழ்ப்பாணத்தில் சாதியும் சமூக உறவுகளும்' பற்றிய புரிதல் சார்ந்த கோட்பாட்டுப் பிரச்சினைகள் (Theoretical Issues) குறித்து மேற்குறிப்பிட்ட எட்டு ஆய்வாளர்களினதும் பங்களிப்பை மதிப்பீடு செய்யும் முறையில் இவ் அறிமுகம் எழுதப்பட்டுள்ளது.