இந்நூலின் பகுதி ஒன்றில் இடம்பெறும் 5 கட்டுரைகள் எனது ‘சுய ஆக்கங்கள்’ எனக் கூறத்தக்கவை. பகுதி இரண்டில் சேர்க்கப்பட்டுள்ள 8 கட்டுரைகளும் தழுவலாக்கம், மொழிபெயர்ப்பு எனும் வகையைச் சேர்ந்தவை. கித்சிறி மலல்கொட, நிர்மல் ரஞ்சித் தேவசிறி, கணநாத் ஒபயசேகர, ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன, ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா, எச்.எல். செனிவிரத்தின, ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம், சரத் அமுனுகம, குமாரி ஜயவர்த்தன ஆகிய அறிஞர்களின் கருத்துகள் இக்கட்டுரைகள் மூலமாகத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ‘சுய ஆக்கங்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ள கட்டுரைகளை நான் எழுதுவதற்கு மேற்குறித்த அறிஞர்களதும், இன்னும் சிலரது நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் பேருதவியாக அமைந்தன. இந்நூலிலுள்ள கட்டுரைகள் குறிப்பாக 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம்-பண்பாடு-அரசியல்-இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றிப் பேசுகின்றன.