கி.மு 6 ஆம் நூற்றாண்டு முதல், மூன்று நூற்றாண்டுகளாய் வேறுபடும் நான்கு திணைகளில் வாழ்ந்து வந்த தமிழர் சமூகத்தில் சமத்துவ ஊடாட்டத்துடன் கூடிய வணிக விருத்தி சாத்தியப்பட்டு இருந்தது. அந்தச் சமத்துவ வாழ்வியலை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட படைப்பு திருக்குறள். சமத்துவத் திணை வாழ்வியல் தகர்ந்துபோய்ச் சாதிச் சமூகம் மேலெழுந்தது. சமத்துவ நோக்கை நிலைமறுத்த ஆதிக்கசாதி தன்னளவில் எட்டியிருந்த மேலாதிக்கத்தின் உச்சக்கட்டத்தை அடைந்த கி.பி 13 ஆம் நூற்றாண்டில் அதன் படைப்பாக சைவசித்தாந்தம் வெளிப்பட்டது.
இவ்வகையில், சமத்துவ வாழ்வியலை நிலைமறுத்து மேலெழுந்த சைவசித்தாந்தத்தின் பதி எனும் பரம்பொருள் கோட்பாட்டை நிலைமறுப்பதற்கு இந்தியத் தொன்மமாக அமைந்த வேதம் நோக்கிச் செல்ல நேர்ந்தது. தமிழ்ப் பண்பாட்டில் உறுதியுடன் காலூன்றி நின்ற சுப்பிரமணிய பாரதி ‘பச்சை வேதத்துக்குத் திரும்புதல்’ என்பதை முன்வைத்தார்.
புதிய உலகு பூரண சமத்துவத்தை வெற்றிகொள்ள வழிப்படுத்தும் மார்க்கமாக மார்க்சிஸம் – லெனினிஸம் – மா ஓ சேதுங் சிந்தனை வெளிப்பட்டுள்ளது. அதனைக் கையேற்றுச் சாதியச் சமூகத்துக்கு அமைவான பிரயோகமாக வடிவப்படுத்திய ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம், தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றுச் செல்நெறியில் இயக்கம் கொண்டிருந்த திணை அரசியலைக் கண்டுகாட்டுவதற்கு ஆற்றுப்படுத்தியுள்ளது. இத்தகைய வரலாற்று ஓட்டத்தை இந்த நூல் வெளிப்படுத்தி நிற்கின்றது!